I


வெள்ளையானைச் சாபந்தீர்த்த படலம்265



இன்புற் றருச்சனைசெய் தேத்துவா னவ்வேலை
அன்புக் கெளிய னருளாற் றிருமுடிமேன்
மின்பொற் கடிக்கமலப் போதொன்று வீழ்த்திடலுந்
தன்பொற் கரகமலப் போதலர்த்தித் தாங்கினான்.

     (இ - ள்.) இன்புற்று - மகிழ்ந்து, அருச்சனை செய்து - அருச்சித்து,
ஏத்துவான் - துதிப்பானாகிய முனிவன், அவ்வேலை - அப்போது, அன்புக்கு
எளியன் - அடியார்களின் அன்புக்கு எளியவனாகிய இறைவன். அருளால் -
தனது திருவருளால், திருமுடிமேல் மின் பொன் கடிகமலப் போது ஒன்று
வீழ்த்திடலும் - திருமுடியினின்றும் ஒளியையுடைய பொன்னிறம் வாய்ந்த
மணம் பொருந்திய தாமரை மலர் ஒன்றை வீழச்செய்த வளவில், தன் பொன்
கர கமலப்போது அலர்த்தித் தாங்கினான் - தனது அழகிய தாமரை மலரை
விரித்துத் தாங்கினான் எ - று.

     ஏத்துவான் : பெயர்; தாங்கினான் என்பது கொண்டு முடியும். இறைவன்
அன்புக் கெளியனாதலை,

"பத்திவலையிற் படுவோன் காண்க"
"யாவ ராயினு மன்ப ரன்றி யறியொ ணாமலர்ச் சோதியான்"

என்றும் மணிவாசகங்களா னறிக. வீழ்ந்திடலும் என்பது பாடமாயின்,
எளியனதருளால் என விரிக்க. கரகமலம் : வடநூன் முடிபு. (3)

தாங்கிக்கண் சென்னி தடமார் பணைத்துடலம்
வீங்கித் தலைசிறந்த மெய்யுவகை மேற்கொள்ள
நீங்கிக் கழிந்த கருணை நிதியனையான்
பூங்கற் பகநாட்டிற் போகின்றா னவ்வேலை.

     (இ - ள்) தாங்கி - அங்ஙனம் ஏந்தி, கண் சென்னி தடம் மார்பு
அணைத்து - கண்களிலும் முடியிலும் பெரிய மார்பிலும் ஒற்றி, உடலம் வீங்கி
- மெய் பூரித்து, தலை சிறந்த மெய் உவகை மேற்கொள்ள - மிக ஓங்கிய
உண்மை மகிழ்ச்சி மீதூர. நீங்கி - அவ்விடத்தினின்றும் நீங்கி, கழிந்த -
சென்ற, கருணை நிதி அனையான் - அருணிதியை ஒத்த துருவாசமுனிவன்,
பூங்கற்பக நாட்டில் - பொலிவினையுடைய கற்பகத் தருப் பொருந்திய துறக்க
நாட்டில், போகின்றான் - செல்வானாயினான்; அவ் வேலை - அப்பொழுது
எ - று.

     தாங்கி யென்பது பணிவைக் குறிப்பிடுகின்றது. உடலம், அம் : சாரியை.
வீங்கி என்னும் சினைவினை முதல் வினையோடு முடிந்தது. தலைசிறந்த -
மிக்க : ஒரு சொல். கழிந்த - மிக்க எனலுமாம், கருணையை யுடைய
நிதியனையான் என்னலுமாம். அவ்வேலை என்பதனை வரும் பாட்டுடன்
கூட்டுக. (4)


     (பா - ம்.) * வீழ்ந்திடலும், வீழ்த்திடவும்.