I


திருநகரங்கண்ட படலம்293



தளாவிய என நின்றது; அளவளாவுதல் - சிந்தை கலத்தல்; கலந்து
சூழ்தல்.(32)

மெய்ய ரன்புதோய் சேவடி வியனிலந் தீண்டப்
பொய்ய கன்றவெண் ணீறணி மேனியர் பூதிப்
பையர் நள்ளிருட் கனவில்வந் தருளிய படியே
ஐயர் வல்லைவந் தருளினா ரரசுளங் களிப்ப.

     (இ - ள்.) ஐயர் - முதல்வராகிய சோமசுந்தரக் கடவுள், மெய்யர்
அன்பு தோய் சே அடி - உண்மை அடியார்களின் அன்பிலே தோய்ந்த
சிவந்த திருவடிகள், வியன் நிலம் தீண்ட - அகன்ற நிலத்திலே பொருந்த,
பொய் அகன்ற - உண்மையாகிய, வெள் நீறு அணி மேனியர் - வெள்ளிய
திருநீற்றினைப் பூசிய திருமேனியராய், பூதிப்பையர் - திருநீற்றுப்
பையையுடையவராய், நள் இருள் கனவில் வந்தருளிய படியே - நடு நிசியில்
கனவில் எழுந்தருளியவண்ணமே, அரசு உளம் களிப்ப - மன்னன் மனம்
மகிழ்ச்சியடைய, வல்லை வந்தருளினார் - விரைந்து (நனவில்)
தோன்றியருளினார் எ - று.

     மெய்யர் - சலமில்லாதவர் அடியை நிலந் தீண்டுமாறு என்னலுமாம்.
‘சத்தியமாவது நீறு’ ‘ஆகலின் பொய்யகன்ற வெண்ணீறு’ என்றார்; பொய்யை
யொழிக்கும் எனினுமாம். (33)

கனவி லும்பெருங் கடவுளர் காண்பதற் கரியார்
நனவி லும்வெளி வந்தவர் தமையெதிர் நண்ணி
நினைவி னின்றதா ளிறைஞ்சிநேர் நின்றுநல் வரவு
வினவி யாதனங் கொடுத்தனன் மெய்யுணர் வேந்தன்.

     (இ - ள்.) மெய் உணர் வேந்தன் - உண்மைப் பொருளை உணர்ந்த
மன்னன், பெருங் கடவுளர் - பெரிய தேவர்களாகிய அரி அயன் முதலியோர்,
கனவிலும் காண்பதற்கு அரியார் - கனவிலும் காணுதற்கு அரியராய்,
நனவிலும் வெளிவந்தவர் தமை - தனக்கு நனவிலும் எளியராய் வெளிவந்த
சித்திரை, எதிர் நண்ணி - எதிர் சென்று, நினைவில் நின்ற தாள் இறைஞ்சி -
மனத்தில் நின்ற திருவடிகளை வணங்கி, நேர் நின்று - திருமுன் நின்று,
நல்வரவு வினவி - நல்வரவு கேட்டு, ஆதனம் கொடுத்தனன் - (எழுந்தருள)
ஆசனம் கொடுத்தான் எ - று.

     கடவுளரும் என உம்மை விரிக்க. அரியரா யிருந்தே வெளிவந்
தவரென்க;

"கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி
நனவிலு நாயேற் கருளினை போற்றி"

என்னும் திருவாசகம் சிந்திக்கற் பாலது. தன்னால் இடைவிடாது
நினைக்கப்படுகின்ற தாள், கனவிற் றோன்றியது முதல் மனத்தில் நிலைபெற்ற
தாள் என்றுமாம். மெய்யுணர் - மெய்யுணர்வு தலைப் பட்ட எனலுமாம். (34)