I


4திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



"செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறுஞ்
     சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதவா
யொற்றைச்சேர் முற்றற்கொம் புடைத்தடக்கை முக்கண்மிக்
     கோவாதேவாய் மாதானத் துறுபுகர் முகவிறையைப்
பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க துக்கமும்
     பேராநோய்தா மேயாமை பிரிவுசெய்த வனதிடங்
கற்றிட்டே யெட்டெட்டுக் கலைத்துறைக் கரைச்செலக்
     காணாதாரே சேராமெய்க் கழுமல வளநகரே"

என்னும் ஆளுடைய பிள்ளையார் அருளிச் செயல்களானறிக. மதுரை
யம்பித சத்தி பீடம் அறுபத்து நான்கனுள் முதன்மையதாகலானும், அருளாகிய
சத்தியை யுணர்ந்தே சிவத்தை யுணரவேண்டு மென்ப வாகலானும்,
இந்நூலாசிரியர்க்குப் பராசத்தியார் காட்சி தந்து இதனைப் பாடுமாறு
அருள்புரிந்தனராகலானும் ‘சத்தியாய்’ என்று தொடங்கப்பெற்றது. பரமுத்தி -
எல்லா முத்திகளினும் மேலாய முத்தி; திருவடியிற் கலத்தலாகிய முத்தி. வீடு
பேற்றுக்கு ஆதாரமாகிய இறைவனை வீடுபேறெனவே உபசரித்துக் கூறுவர்
ஆன்றோர். சொல்லும் பொருளும் வடிவமான சத்தியும் சிவமுமாம்
முதற்பொருளைத் துதித்தற்குச் சொல்லும் பொருளும் அருளப்பெறுதல்
ஒருதலை யென்பார் ‘சுத்தியாகிய சொற்பொரு ணல்குவ’ என்றார். (1)


வாழ்த்து

[அறுசீரடியாசிரிய விருத்தம்]

மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்
பல்குக வளங்க ளெங்கும் பரவுக வறங்க ளின்பம்
நல்குக வுயிர்கட் கெல்லா நான்மறைச் சைவ மோங்கிப்
புல்குக வுலக மெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க.

     (இ - ள்.) வேத வேள்வி - வேதத்திற் கூறப்பட்ட வேள்விகள்,
மல்குக - நிரம்புக; வானம் - முகில்கள், சுரந்து வழங்குக - நீரினைச் சுரந்து
பொழிக; எங்கும் - எவ்விடத்தும், வளங்கள் பல்குக - செல்வங்கள்
பெருகுக; அறங்கள் பரவுக - தருமங்கள் பரவுக; உயிர்கட்கு எல்லாம் -
எல்லா வுயிர்கட்கும், இன்பம் நல்குக - இன்பம் அளிக்கப்படுக; உலகம்
எல்லாம் - உலக முழுதும், நான்மறைச் சைவம் - நான்கு வேதங்களின்
துணி பொருளாகிய சைவ சமயமானது, ஓங்கிப் புல்குக - தழைத்தோங்கி
நிலைபெறுக; புரவலன் - அரசனது, செங்கோல் வாழ்க - செவ்விய கோல்
வாழ்க எ - று.

     வேள்வி வேதத்திற் கூறப்பட்டதாகலின் ‘வேத வேள்வி’ எனப்பட்டது.
‘வேத வேள்வியை’ என்பது தமிழ் மறை. வேள்வியால் மழையும், மழையால்
வளமும், வளத்தால் அறமும் இன்பமும் உளவாகலின் அம்முறை வைத்து,
உலகியலின் வேறாகிய ஈறிலின்பம் எய்துதற்குரிய சைவ நெறியை அவற்றின்