I


448திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



இணரெரித் தேவுந் தானே யெரிவளர்ப் பவனுந் தானே உணவுகொள் பவனுந் தானே யாகிய வொருவன் வையம் புணர்வுறு போக மூழ்கப் புருடனும் பெண்ணு மாகி மணவினை முடித்தா னன்னான் புணர்ப்பையார் மதிக்க வல்லார்.

     (இ - ள்.) இணர் எரித் தேவும் தானே - பல சுடரையுடைய தீக்
கடவுளுந்தானே, எரி வளர்ப்பவனும் தானே - அத்தீயை வளர்க்கின்றவனும்
தானே, உணவு கொள்பவனும் தானே - அத் தீ முகமாக அவியைக்
கொள்ளுபவனும் தானே, ஆகிய ஒருவன் - ஆகிய இறைவன் ஒருவனே,
வையம் புணர்வுறு போகம் மூழ்க - உயிர்கள் புணர்தல் பொருந்திய
போகத்தில் அழுந்த, புருடனும் பெண்ணுமாகி - ஆணும் பெண்ணுமாகி,
மணவினை முடித்தான் - மணச் செயலை முடித்தருளினான்; அன்னான்
புணர்ப்பை மதிக்க வல்லார் யார் - அவ்விறைவனது செயலை அளந்தறிய
வல்லவர் யாவர் (ஒருவருமில்லை என்றபடி) எ - று.

     இப்புராணத்தில் முன் வந்துள்ள,

"பூசையும் பூசைக் கேற்ற பொருள்களும் பூசை செய்யு
நேசனும் பூசை கொண்டு நியதியிற் பேறு நல்கும்
ஈசனு மாகிப் பூசை யான்செய்தே னெனுமென் போத
வாசனை யதுவு மான மறைமுத லடிகள் போற்றி"

என்னுஞ் செய்யுட் பொருள் இதனொடு ஒத்து நோக்கற்பாலது. இதன்
முன்னிரண்டடியிற் கூறிய பொருள்,

"வேதமும் வேள்வியு மாயினார்க்கு"

எனத் திருவாசகத்துள் சுருங்க வுரைக்கப்பட்டது.

"வேள்வியுந் தானே வேள்விப் பொருள்களுந் தானே வெய்ய
வேள்விவேட் பவனுந்தானே வேள்விகொ ளிறையுந் தானே
வேள்வியின் பயனுந் தானே யென்பது விளக்கி யெம்மான்
வேள்விசெய் தீக்கை யுற்றான் விளங்கருட் சத்தி யோடும்"

எனக் காஞ்சிப்புராணத்துள் இது விரித்துரைக்கப்பட்டது. இறைவன்
இங்ஙனம் மணம் புரிந்தது உயிர்களுக்குப் போகம் அருளுதற் பொருட்டன்றித்
தனக்கொரு பயன் கருதியன்றென்பார் 'வையம் போக மூழ்க மணவினை
முடித்தான்' என்றார்.

"போகமா யிருந்துயிர்க்குப் போகத்தைப் புரித லோரார்"

எனச் சித்தியார் கூறுவதுங் காண்க. புணர்ப்பு - சூழ்ச்சி. (186)

பபின்புதன் பன்னி யோடு பிறைமுடிப் பெருமான் கையில்
நன்பொரி வாங்கிச் செந்தீ நாமடுத் தெனைத்து மான
தன்படி வுணர்ந்த வேத முனிவர்க்குத் தக்க தானம்
இன்பகந் ததும்ப நல்கி யெரிவல முறையால் வந்து.