I


வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்463



வண்டுகள் ஒலிக்கும் ஒலியும், மங்கல முழவின் ஓசை - மங்கலமாகிய மத்தள
ஒலியும், மந்திர வேத ஓசை - மந்திர ஒலியும் மறை ஒலியும், செங்கை ஆடு
எரியின் ஓசை - சிவந்த கையின்கண் அசைகின்ற தீயின் ஒலியும், திருவடிச்
சிலம்பின் ஓசை - திருவடியிலுள்ள சிலம்பின் ஒலியும் ஆகிய இவைகள்,
எங்கணும் நிரம்பி - எங்கும் பரவி, அன்பர் இரு செவிக்கு அமுதம் ஊற்ற -
அடியார்களின் இரண்டு செவிகளுக்கும் அமுதத்தைப் பொழியவும் எ - று.

     கங்கையொலி, வண்டொலி, எரியொலி, சிலம்பொலி என்னும் இவை
ஆடுதலால் நிகழ்வன. எரியினோசை - தீயிலுண்டாகும் சடுலவொலி.
செவிக்குமென்னும் முற்றும்மை தொக்கது. (16)

ஆடினா னமல மூர்த்தி யஞ்சலி முகிழ்த்துச் சென்னி
சூடினா ரடியில் வீழ்ந்தார் சுருதியா யிரநா வாரப்
பாடினார் பரமா னந்தப் பரவையிற் படிந்தா ரன்பு
நீடினார் நிருத்தா னந்தங் காண்பது நியமம் பூண்டார்.

     (இ - ள்.) அமல மூர்த்தி ஆடினான் - தூயனாகிய சோம சுந்தரக்
கடவுள் திருக்கூத்தாடியருளினான்; நிருத்தானந்தம் காண்பது நியமம் பூண்டார்
- ஆனந்தக் கூத்தைக் காண்பதையே நியமமாக மேற்கொண்ட
முனிவரிருவரும், அஞ்சலி முகிழ்த்துச் சென்னி சூடினார் - கைகளைக் கூப்பி
முடியின்கண் தரித்தார்கள்; அடியில் வீழ்ந்தார் - திருவடியில் வீழ்ந்து
வணங்கினார்கள்; நா ஆர ஆயிரம் சுருதி பாடினார் - நா நிரம்ப அளவற்ற
சுருதிகளைப் பாடினார்கள்; பரமானந்தப் பரவையில் படிந்தார் - பேரின்பக்
கடலில் மூழ்கினார்கள்; அன்பு நீடினார் - அன்பு விஞ்சினார்கள் எ - று.

     'அன்னதோர் தவிசினும்பர்' என்னுஞ் செய்யுண் முதல் இதில்
'ஆடினானமல மூர்த்தி' என்பது காறும் ஒரு தொடர். செயவெனெச்சமெல்லாம்
ஆடினான் என்னும் முற்றுவினை கொண்டு முடியும். பரமானந்தம்,
நிருத்தானந்தம் என்பன தீர்க்க சந்திகள். காண்பது : தொழிற்பெயர். (17)

முனிவர்கந் தருவுர் வானோர் தானவர் மோன யோகர்
புனிதகிம் புருட ராதிப் புலவரு மிறைஞ்சி யன்பின்
கனிதரு மின்பத் தாழ்ந்தார் திருமணங் காண வந்த
மனிதருங் காணப் பெற்றார் மாதவர் பொருட்டான் மன்னோ.

     (இ - ள்.) மாதவர் பொருட்டால் - அம் முனிவரிருவர் பொருட்டால், முனிவர் - முனிவர்களும், கந்தருவர் - கந்தருவர்களும், வானோர் -
தேவர்களும், தானவர் - அவுணர்களும், மோன யோகர் - மவுன
நிலையையுடைய யோகிகளும், புனித கிம்புருடர் ஆதிப்புலவரும் - தூய
கிம்புருடர் முதலிய தேவ கணங்களும், இறைஞ்சி - வணங்கி, அன்பின் கனி
தரும் இன்பத்து ஆழ்ந்தார் - அன்பின் முதிர்ந்த இன்பத்திலமிழ்ந்தினார்கள்;
திருமணம் காண வந்த மனிதரும் காணப் பெற்றார் - திருமணத்தைக்
காணுதற்கு வந்த மக்களும் அதனைக் காணப் பெற்றார்கள் எ - று.