"பொன்னின் பீடிகை யென்னும் பொன்னாரமேல்
துன்னு நாவலர் சூழ்மணி யாகவே
மன்னி னார்நடு நாயக மாமணி
என்ன வீற்றிருந் தார்மது ரேசரே" |
|
"நதிய ணிந்தவர் தம்மொடு நாற்பத்தொன்
பதின்ம ரென்னப் படும்புல வோரெலாம்
முதிய வான்றமிழ் பின்னு முறைமுறை
மதிவி ளங்கத் தொடுத்தவண் வாழுநாள்" |
என வருதலானும், நம்பி
திருவிளையாடற் புராணத்தானு மறிக. சேக்கிழார்
குரிசிலும் திருத்தொண்டர் புராணத்தில்,
"சென்றணைந்து மதுரையினிற் றிருந்தியநூற் சங்கத்துள்
அன்றிருந்து தமிழாராய்ந் தருளிய வங்கணர்" |
எனவும்,
"திருவாலவாயில்,
எம்மைப் பவந்தீர்ப்பவர் சங்கமிருந்தது" |
எனவும் கூறியருளினார்.
கழகமோடு
- கழகத்தில் : உருவுமயக்கம், புலவர்களோடு எனினும்
ஆம். பசுந் தமிழ் என்றது, என்றும் இளமைச் செவ்வி குன்றாத கன்னித்தமிழ்
என்றவாறு. ஏனைமண் இவையென்பதனை,
"சிங்களஞ் சோனகஞ் சாகஞ் சீனந் துளுக்குடகம்
கொங்கணங் கன்னடங் கொல்லந்தெ லுங்கங்க லிங்கம்வங்கம்
கங்க மகதங் கடாரங் கவுடங் கடுங்குசலம்
தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே" |
என்னுஞ் செய்யுளாலறிக.
சில என்றதும் மொழிகளின் எளிமை தோன்ற
நின்றது. எண்ணிடைப் படுதலாவது அவற்றை யெண்ணுங் கால் அவற்றுடன்
ஒன்றாகச் சேர்த்து எண்ணப்படுவது. எண்ணிடப் பட என்பது பாடமாயின்
எண்ணப்பட எனப் பொருளுரைக்க.கடவுளும் பண்ணுறத் தெரிந்தாய்ந்ததும்,
பசுமையும், இலக்கண வரம்புமுடையதுமாகிய தமிழை, அவற்றுள் ஒன்றேனும்
பெறாத ஏனைமொழிகளுடன் சேர்த்தெண்ணுதல் தகுதியன்றென்பதாம். இவ்
வியல்பு வடமொழிக்கு மின்றாகலின், பொதுப்பட மொழிபோல் என்றார்.
எண்ணவும் படுமோ என்றதனால் சொல்லுதல் கூடாதென்பது
கூறவேண்டாதாயிற்று. கடவுளும் என்றதில் உம்மை : உயர்வு சிறப்பு. இகரச்
சுட்டு இதன் பெருமை யாவரானும் அறியப்பட்ட தென்பதனைக் காட்ட
வந்தது. (57)
தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்தது முதலை
உண்ட பாலனை யழைத்தது மெலும்புபெண் ணுருவாக்
கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித்
தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர். |
|