I


மாணிக்கம் விற்ற படலம்675



சௌகந்திகமும் கோவாங்கமும் என்று சொல்வப்படும் இப்பெயர்களாற்
சிறந்து நான்கு வகைப்படும்; இ நான்கிற்கும் சொன்ன ஒளி - இந்த நான்கு
வகைக்கும் நூலிற் கூறிய ஒளி, இ அடைவே - இந்த முறையே, பத்து இரு
நான்கு இரு மூன்று நான்கு - பத்தும் எட்டும் ஆறும் நான்கு மாகும்;
அவையும் சொல்லக் கேண்மின் - அவற்றையும் சொல்லக் கேளுங்கள் எ-று.

     மேலே மாணிக்கத்தின் பொதுநிறங்களைக் கூறிப் பின் நாற் சாதிக்கும்
உரிய நிறங்களைக் கூறுகின்றார். சாதரங்கம் பதுமராகமெனவும், குருவிந்தம்
இரத்த விந்து எனவும், சௌகந்திகம் நீலகந்தியெனவும், கோவாங்கம்
படிதமெனவும் பெயர் கூறப்படுதலுமுண்டு;

"பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும்
விதிமுறை பிழையா விளங்கிய சாதியும்"

என்று சிலப்பதிகாரம் கூறுவது காண்க. சாதுரங்கம், சௌகந்தி, கோவாங்கு
என்றும் சிறிது உருவு திரிந்து காணப்படுகின்றன. தன் : சாரியை. (38)

சாதரங்க நிறங்கமலங் கருநெய்த
     லிரவியொளி தழல்கச் சோதம்
மாதுளம்போ ததன்வித்துக் கார்விளக்குக்
     கோபமென வகுத்த பத்தும்
மேதகைய குருவிந்த நிறங்குன்றி
     முயற்குருதி வெள்ள லோத்தம்
போதுபலா சலர் திலகஞ் செவ்வரத்தம்
     விதாரமெரி பொன்போ லெட்டு.

     (இ - ள்.) சாதரங்க நிறம் - சாதரங்கத்தின் நிறம், கமலம் - தாமரை
மலரும், கரு நெய்தல் - கருநெய்தல் மலரும், இரவி ஒளி - சூரியனொளியும்.
தழல் - நெருப்பும், கச்சோதம் - மின்மினியும், மாதுளம் போது - மாதுள
மலரும், அதன் வித்து - மாதுள வித்தும், கார் - முகிலும், விளக்கு - தீபமும்,
கோபம் - இந்திர கோபமும், என வகுத்த பத்தும் - எனப் பாகுபாடு செய்த
பத்துமாகும்; மேதகைய குருவிந்த நிறம் - சிறந்த தன்மையையுடைய
குருவிந்தத்தின் நிறம், குன்றி - குன்றி மணியும், முயற் குருதி -
முயலிரத்தமும் வெள்ள லோத்தம் போது - வெள்ள லோத்த மலரும், பலாசு
அலர் - முண் முருக்க மலரும், திலகம் - மஞ்சாடி மலரும், செவ்வரத்தம் -
செவ்வரத்த மலரும்; விதாரம் - முள்ளிலவ மலரும், எரி பொன் போல் -
விளங்கும் பொன்னும் ஆகிய இவைகளைப் போல, எட்டு - எட்டு
வகையாகும் எ - று.

"தாமரை கழுநீர் சாதகப் புட்கண்
கோப மின்மினி கொடுங்கதிர் விளக்கு
மாதுளைப் பூவிதை வன்னியீ ரைந்தும்
ஓதுசா துரங்க வொளியா கும்மே"

என்னும் பழைய நூற்பாவிலும்,