I


92திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     (இ - ள்.) மாதரார் - மகளிரின், சிறு அடி தோய் - சிறிய
அடிகளில் ஊட்டிய, பஞ்சு சுவடு - செம்பஞ்சிக் குழம்பின் சுவட்டினை,
மாடம் மாலையும் - மாடவரிசைகளும், மேடையும் மாளிகை நிரையும் -
மேடைவரிசைகளும் மாளிகை வரிசைகளும், ஆடு அரங்கமும் - நடன
சாலை வரிசைகளும், அன்றி - (சூடுவதே) அல்லாமல், வேள் அன்னவர் -
மன்மதனை ஒத்த ஆடவர்களின், முடியும் - முடிகளும், ஏடு அவிழ்ந்த
தார் அகலமும் - இதழ்கள் விரிந்த மாலையை யணிந்த மார்புகளும்,
இணைத்தடம் தோளும் - பெரிய இரண்டு தோள்களும், சூடும் - சூடா
நிற்கும் எ - று.

     பஞ்சுதோய் சீறடிச் சுவடு என்றியைத்துரைத்தலும் ஆம். மகளிர்
திரிந்து விளையாடுதலால் மாட முதலியவற்றிலும், அவர் கலவியிடத்
தூடியபொழுது ஊடல் தீர்த்தற்கு வணங்கிய தலைவரை உதைத்தலால்
அவர் அகலம் முதலியவற்றிலும் சுவடு பொருந்து மென்க. தலைவன்
பணிதலும், தலைவி பணியாமையும் உண்டென்பதனை,

"மனைவி யுயர்வுங் கிழவோன் பணிவும்
நினையுங் காலைப் புலவியு ளுரிய"

என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தாலறிக.

"சிலைமலி வாணுத லெங்கைய தாகமெனச் செழும்பூண்
மலைமலி மார்பி னுதைப்பத்தந் தான்றலை மன்னர்தில்லை
உலைமலி வேற்படை யூரனிற் கள்வரி லென்னவுன்னிக்
கலைமலி காரிகை கண்முத்த மாலை கலுழ்ந்தனவே"

என்னும் திருக்கோவையார்ச் செய்யுளின் நயத்தினையும் நோக்குக. (35)

மருமச் செம்புன லாறிட மாறடு கோட்டுப்
பருமச் செங்கண்மால் யானையின் பனைக்கையு மறைநூல்
அருமைச் செம்பொரு ளாய்ந்தவர்க் கரும்பொரு ளீவோர்
தருமச் செங்கையு மொழுகுவ தானநீ ராறு.

     (இ - ள்.) மருமம் - மார்பினின்றும், செம்புனல் ஆறு இட - குருதி
வெள்ளம் தோன்ற, மாறு அடு கோட்டு - பகைவரைக் கொல்லுகின்ற
கொம்பினையுடைய, பருமம் - கவசத்தை யணிந்த, செம்கண் சிவந்த
கண்களையும், மால் - மத மயக்கத்தையும் உடைய, யானையின் பனைக்
கையும் - யானையினது பனைபோன்ற துதிக்கையினின்றும், தானம் நீர்
ஆறு - மதநீராகிய வெள்ளம், ஒழுகுவ - ஒழுகுவன; மறைநூல் - வேத
நூலின், அருமைச் செம்பொருள் - அரிய உண்மைப் பொருளை,
ஆய்ந்தவர்க்கு - ஆராய்ந்தவர்க்கு, அரும்பொருள் - கொடுத்தற் கரிய
பொருளை, ஈவோர் தருமச்செங்கையும் - கொடுப்போர்களின் அறத்தை
யுடைய சிவந்த கைகளினின்றும், தானம் நீர் ஆறு - தானஞ் செய்யும்
நீர்ப்பெருக்கு, ஒழுகுவ - ஒழுகுவன எ - று.

     செம்புனல் - குருதி. பருமம் - யானைமேற் போர்க்குங் கவசம்.
செம்பொருள் - கடவுள்;

"பிறப்பென்றும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு"