II


254திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     (இ - ள்.) எண்ணிய எண்ணியாங்கே யான் பெற முடித்தாய் போற்றி
- எண்ணியவற்றை எண்ணியவண்ணமே யான் பெறுமாறு முடித்தவனே
வணக்கம்; பண் இயல் மறைகள் தேறா - பண் அமைந்த மறைகளால்
அறியப்படாத, பால் மொழி மணாள போற்றி - பால்போலும் இனிய
மொழிகளையுடைய அங்கயற்கணம்மையின் தலைவனே வணக்கம்; புண்ணியர்
தமக்கு வேதப் பொருள் உரை பொருளே போற்றி - கண்ணுவர் முதலிய
முனிவர்கட்கு வேதத்தின் பொருளை அருளிச்செய்த மெய்ப்பொருளே
வணக்கம்; விண்இழி விமானம் மேய சுந்தர விடங்க போற்றி - வானினின்றும்
இறங்கிய விமானத்தின்கண் எழுந்தருளிய சோமசுந்தரரென்னும்
பேரழகுடையவனே வணக்கம்.

‘எண்ணிய வெண்ணியாங் கெய்துப’

என்னும் திருக்குறட்டொடர் இங்கே கருதற்பாலது. தேறா மணாள என்க.
பான்மொழி. அன்மொழித்தொகை. உரை பொருள் - உரைத்த மெய்ப்பொருள் :
வினைத்தொகை. (15)

எவ்விட லெடுத்தேன் மேனா ளெண்ணிலாப் பிறவி தோறும்
அவ்வுட லெல்லாம் பாவ மறம்பொருட் டாக வன்றோ
தெவ்வுடல் பொடித்தா யுன்றன் சேவடிக் கடிமை பூண்ட
இவ்வுட லொன்றே யன்றோ வெனக்குட லான தையா.

     (இ - ள்.) மேல்நாள் எண் இலாப் பிறவிதோறும் - முன்னாளில்
எண்ணிறந்த பிறவிகள்தோறும், எவ்வுடல் எடுத்தேன் - எவ்வெவ்வுடல்கள்
எடுத்தேனோ, அவ்வுடல் எல்லாம் - அவ்வுடல்களனைத்தும், பாவம் அறம்
பொருட்டாக அன்றோ - தீவினையும் நல்வினையுமாகிய அவ்விரண்டின்
பொருட்டாக அல்லவா, தெவ் உடல் பொடித்தாய் - பகைவனாகிய
மதவெளின் உடலைநீறாக்கியவனே, உன்றன் சேவடிக்கு அடிமைபூண்ட
இவ்வுடல் ஒன்றே அன்றோ - உனது சிவந்த திருவடிக்கு அடிமைபூண்ட
இந்த உடல் ஒன்றுமட்டுமல்லவா, ஐயா - ஐயனே, எனக்கு உடல் ஆனது -
எனக்கு உடலாய்நின்று பயன் தந்தது.

     பிறவி எண்ணிலாதன என்பதை,

"தொல்லைநம் பிறவி யெண்ணிற் றொடுகடல் மணலுமாற்றா எல்லைய"

என்னும் சிந்தாமணிச் செய்யுளாலும், பல்வகை உடலெடுத்தலை,

"புல்லாகிப் பூடாய்ப் புழுவாகி மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்தினைத்தே னெம்பெருமான்"