II


இரசவாதஞ்செய்த படலம்287



குறிப்பிட்டவாறாயிற்று. அது வருஞ் செய்யுளிற் பெறப்படும். மெலிவின்
காரணம் மெலிவு எனப்பட்டது. (18)

எங்க ணாயகர் திருவுரு க்காண்பதற் கிதயந்
தங்கு மாசையாற் கருவுருச் சமைத்தனன் முடிப்பேற்
கிங்கு நாடொறு மென்கையில் வருபொரு ளெல்லாம்
உங்கள் பூசைக்கே யல்லதை யொழிந்தில வென்றாள்.

     (இ - ள்.) எங்கள் நாயகர் - எங்கள் தலைவராகிய சிவபெருமானுடைய, திரு உருக் காண்பதற்கு - திருவுருவத்தை ஆக்குவதற்கு. இதயம் தங்கும்
ஆசையால் - உள்ளத்தில் நிலைபெற்ற விருப்பத்தினால், கரு உருச்
சமைத்தனன் - மெழுகினாற் கருக்கட்டி வைத்தேன்; முடிப் பேற்கு -
அதனைப் பொன்னினால் (செய்து) முடிக்கக் கருதிய எனக்கு, இங்கு
நாள்தொறும் என்கையில் வருபொருள் எல்லாம் - இங்கு நாள் தோறும் என்
கையில் வருகின்ற பொருள் முழுதும், உங்கள் பூசைக்கே அல்லது -
அடியார்களாகிய உங்கள் பூசனைக்கே சரியாவதல்லாமல், ஒழிந்தில என்றாள் -
எஞ்சவில்லை என்று கூறினாள்.

     சிவபெருமானாகிய சித்த மூர்த்திகளைச் சிவனடியாராகக் கருதி ‘உங்கள்
பூசைக்கே’ என்றாளென்க. அல்லதை, ஐ : சாரியை. (19)

அருந்து நல்லமு தனையவ ளன்புதித் திக்கத்*
திருந்து தேனென விரங்குசொற் செவிமடுத் தையர்
முருந்து மூரலாய் செல்வமெய் யிளமைநீர் மொக்குள்
இருந்த வெல்லையு நிலையில வென்பது துணிந்தாய்.

     (இ - ள்.) அருந்து நல் அமுது அனையவள் - உண்ணுதற்குரிய இனிய
அமிழ்தம்போன்ற பொன்னனையாள், அன்பு - அன்போடு, தித்திக்க -
இனிமை பொருந்த, திருந்து தேன் என - இனிமை திருந்திய தேன்போல,
இரங்குசொல் - கூறுஞ் சொற்களை, ஐயர் செவிமடுத்து - சித்தமூர்த்திகள்
கேட்டு, முருந்து மூரலாய் - மயிலிறகினடி போன்ற பற்களையுடையவளே,
செல்வம் மெய் இளமை - செல்வமும் யாக்கையும் இளமையம், நீர்மொக்குள்
இருந்த எல்லையும் நிலை இல என்பது துணிந்தாய் - நீரிற் றோன்றுங் குமிழி
இருந்த அளவும் நிலைபெறுவன அல்லவென்பதனை நன்கு உணர்ந்தாய்.

     சித்திக்க என்னும் பாடத்திற்கு அன்பு கைகூட என்றுரைக்க. இரங்கு
சொல் - இரக்கந் தோன்றக் கூறுஞ்சொல் எனலுமாம். (20)

அதிக நல்லற நிற்பதென் றறிந்தனை யறத்துள்
அதிக மாஞ்சிவ புண்ணியஞ் சிவார்ச்சனை யவற்றுள்
அதிக மாஞ்சிவ பூசையு ளடியவர் பூசை
அதிக மென்றறிந் தன்பரை யருச்சனை செய்வாய்.

     (பா - ம்.) * அன்பு சித்திக்க.