II


408திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



"பரிபுரக் கம்பலை யிருசெவி யுண்ணும்
குடக்கோச் சேரன் கிடைத்திது காண்கென
மதிமலி புரிசைத் திருமுகங் கூறி
அன்புருத் தரித்த வின்பிசைப் பாணன்
பெறநிதி கொடுக்கென வுறவிடுத் தருளிய
மாதவர் வழுத்துங்கூடற் கிறைவன்"

     எனக் கல்லாடத்தும் இவ்வரலாறு குறிக்கப் பெற்றுள்ளது. (10)

[கலிவிருத்தம்]
வாங்கிய திருமுக மணிப்பட் டாடையிட்
டாங்கிறை யடிபணிந் தகன்று பத்திரன்
ஓங்கிய கோயிலை வலங்கொண் டொல்லென
நீங்கிமேல் வரைப்புல நெறிக்கொண் டேகுவான்.

     (இ - ள்.) வாங்கிய திருமுகம் - பெற்ற திருமுகத்தை, மணி - அழகிய,
பட்டு ஆடை இட்டு - பட்டாடையில் வைத்து, இறை அடி பணிந்து -
இறைவன் திருவடியை வணங்கி, ஆங்கு அகன்று - அங்கு நின்றும் நீங்கி,
பத்திரன் - பாணபத்திரன், ஓங்கிய கோயிலை வலம் கொண்டு - உயர்ந்த
திருக்கோயிலை வலம்வந்து, ஒல்லென நீங்கி - விரைந்து அகன்று,
மேல்வரைப் புலம் நெறிக்கொண்டு ஏகுவான் - மேற்றிசையிலுள்ள
மலைநாட்டிற்கு வழிக்கொண்டு செல்வானாயினன்.

     ஒல்லென : விரைவுக்குறிப்பு. வரைப்புலம் - மலைநாடு. (11)

கொல்லையுங் குறிஞ்சியுங் கொதிக்கும் வெம்பரற்
கல்லத ரத்தமுங் கடந்து முட்புறப்
பல்சுளைக் கனியடி யிடறப் பைப்பைய
நல்வளங் கெழுமலை நாடு நண்ணினான்.

     (இ - ள்.) கொல்லையும் குறிஞ்சியும் - முல்லைநிலத்தையும் குறிஞ்சி
நிலத்தையும், கொதிக்கும் வெம்பரல் கல் அதர் அத்தமும் கடந்து -
கொதிக்கின்ற வெய்ய பருக்கைக் கற்களையுடைய வழியினையுடைய பாலை
நிலத்தையும் கடந்து, முள்புறம் பல் சுளைக்கனி அடி இடற - புறத்தில்
முட்களையும் பல சுளைகளையுமுடைய பலாக்கனிகள் அடியில் இடற,
பைப்பைய - மெல்லமெல்ல, நலவளம்கெழு மலை நாடு நண்ணினான் - நல்ல
வளங்கள் நிறைந்த மலைநாட்டினை அடைந்தான்.

     மலைவளங் கூறுவார் ‘கனியடியிடற’ என்றார். பையப் பைய என்பது
முன் மொழியிறுதி அகரம் மெய்யொடுங் கெட்டுப் பைப்பைய என்றாயது.
(12)

அலைகட னெடுந்துகி லந்த நாடெனுந்
தலைமக டனக்குவான் றடவு குன்றுபூண்
முலையென விளங்கின முகத்திற் றீட்டிய
திலகமே யானது திருவஞ் சைக்களம்.