II


496திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



ஆற்றலால் என இயைத்துரைப்பாருமுளர். குருவி சேர்ந்தன்று என முடிக்க.
சேர்ந்தன்று - சேர்ந்தது : உடன்பாட்டு முற்று. (21)

இக்கரிக் குருவி தானோற் றெய்திய வரத்தைத் தன்போல்
ஒக்கலு மெளிதா வெய்தப் பெற்றதா லுலகின் மேன்மைத்
தக்கவ* னொருவன் வாழத் தன்கிளை வாழ்வ தென்ன
மிக்கவ ரெடுத்துக் கூறும் பழமொழி விளக்கிற் றன்றே.

     (இ - ள்.) இக்கரிக் குருவி - இந்தக் கரிக்குருவி, தான் நோற்று
எய்திய வரத்தை - தான் வருந்தி நோற்றுப் பெற்ற வரத்தினை, தன் போல்
ஒக்கலும் எளிதா எய்தப் பெற்றதால் - தன்னைப் போல் தன் இனமும்
எளிதாக அடையுமாறு வேண்டிப் பெற்ற அதனால், உலகில் மேன்மைத்
தக்கவன் ஒருவன் வாழ - உலகின்கண் மேலாகிய தகுதியுடையான் ஒருவன்
வாழ, தன் கிளை வாழ்வது என்ன - அவனது சுற்றம் வாழ்வதாகுமென்று,
மிக்கவர் எடுத்துக் கூறும் பழமொழி விளக்கிற்று - அறிவுடையோர்
எடுத்துக் கூறுகின்ற பழமொழியை விளக்கியது.

     தான் வருந்தி எய்திய வரத்தை ஒக்கல் எளிதாகத் தன் போல் எய்த
என்க. பெற்றதால் - பெற்ற அதனால். குருவி பெற்றவதனால் பழமொழி
விளக்கிற்று என முடிக்க. அன்று, ஏ : அசைகள். (22)

[- வேறு]
ஈச னடிக்கன் பில்லார்போ லெளியா ரில்லை யாவர்க்கும்
ஈச னடிக்கன் புடையார்போல் வலியா ரில்லை யாவர்க்கும்
ஈச னடிக்கன் பின்மையினா லெளிதாய்த் திரிந்த விக்கயவாய்
ஈச னடிக்கன் புடைமையினால் வலிதா யிற்றே யெவ்வுயிர்க்கும்.

     (இ - ள்.) ஈசன் அடிக்கு அன்பு இன்மையினால் - இறைவன்
திருவடியில் அன்பு இல்லாமையினால், எளிதாய்த் திரிந்த இக்கயவாய் -
வலியற்றுத் திரிந்த இந்தக் கரிக்குருவி, ஈசன் அடிக்கு அன்பு
உடைமையினால் - அவன் திருவடியில் அந்த அன்பு உண்டாகப்
பெற்றமையினால், எவ்வுயிர்க்கும் வலிது ஆயிற்று - பறவைகள்
எல்லாவற்றுக்கும் வலியையுடையதாயிற்று (ஆதலால்), ஈசன் அடிக்கு
அன்பு இல்லார் போல் - அவ்விறைவன் திருவடியில் அன்பில்லாதார்
போல, யாவர்க்கும் எளியார் இல்லை - அனைவர்க்கும் எளியார்
(பிறரொருவர்) இல்லை; ஈசன் அடிக்கு அன்புடையார் போல் - அவன்
திருவடியில் அன்புடையார் போல, யாவர்க்கும் வலியார் இல்லை -
அனைவருக்கும் வலியார் யாரும் இல்லை (என்பது தேற்றம்).

     உயிர் என்றது ஈண்டுப் பறவைகளை, அன்பிலார் போல்
எளியாரில்லை என்பதற்கும் அன்புடையார் போல் வலியாரில்லை
என்பதற்கும் இக்கயவாயொன்றே எடுத்துக் காட்டாயிற்றென்க. (23)

                      ஆகச் செய்யுள் - 2296.


     (பா - ம்.) * மேன்மை தக்கவன்.