II


70திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     உண்மாசு - ஆணவம் முதலியன. உபநிடதம் - மறைமுடி. திருநீற்றின்
பெருமையை விளக்குவது பஸ்ம ஜாபால உபநிடதம் என்ப. திருநீறு மாசு
போக்குவதனையும், வேதத்தாற் கூறப்படுவதனையும், திருநீற்றுப் பதிகத்தால்
அறிக. மண் - திருமண் என்பது. மாசு கழிய - அனாதியே பந்தித்துள்ள
பாசவழுக்கு ஒழிய; தீயாருடன் சம்பந்தித்த குற்றம் நீங்க வென்றுமாம்.
ஒருவரையேனும் காணப் பெறுதல் வேண்டுமென்பார் ‘ஒரு சிவனடியார்
என்றார். காணப் பெறாமல் என்றது சிவனடியார் அங்குவரும் வழக்க
மின்மையைக் குறிக்கின்றது, காண்டற்குத் தடையில்லாத இன்றும்
காணப்பெறாமல் என்பார் ‘இன்று’ என்றார். கண் மாசுபடுவது - கண்
குருடாகின்றது. தலை யன்பு - தீவிர தரமான அன்பு. (16)

சிவனடியார்க் கன்பிலாச் சிந்தையே யிரும்பேவல்
                              செய்து நாளும்
அவனடியார் திறத்தொழுகா வாக்கையே மரஞ்செவிக
                              னாதி யைந்தும்
பவனடியா ரிடைச்செலுத்தாப் படிவமே பாவைமறை
                              பரவுஞ் சைவ
தவநெறியல் லாநெறிய பவநெறியென் றளியளாய்த்
                         தளர்வாள் பின்னும்.

     (இ - ள்.) சிவன் அடியார்க்கு அன்பு இலாச் சிந்தையே இரும்பு -
சிவனடியார்க்கு அன்பில்லாத மனமே இரும்பாகும், அவன் அடியார்
திறத்து நாளும் ஏவல்செய்து ஒழுகா ஆக்கையே மரம் - அவ்விறைவனது
அடியார் பக்கத்து எந்நாளும் பணிசெய்து ஒழுகாத உடலே மரமாகும், பவன்
அடியாரிடை செவி கண் ஆதி ஐந்தும் செலுத்தாப் படிவமே பாவை -
அச்சிவபெருமான் அடியாரிடத்துக் காது கண் முதலிய ஐம் பொறிகளையும்
செலுத்தாத வடிவமே பாவையாகும், மறை பரவும் சைவ தவநெறியல்லாத பிற
நெறிகளே - வேதந் துதிக்கும் சைவமாகிய தவநெறியல்லாத பிற நெறிகளே
பிறவிக்கேதுவாகிய நெறிகளாம், என்று அளியளாய்த் தளர்வாள் - என்று
அன்புடையளாய்த் தளர்கின்றாள்; பின்னும் - பின்னரும்.

     சிந்தை இரும்பே, ஆக்கை மரமே, படிவம் பாவையே, அல்லாநெறி பவ
நெறியே என ஏகாரங்களைப் பிரித்துக் கூட்டலுமாம். பவன் - சிவ பெருமான்.
அவ நெறி என்று பாடமாயின் வீண்நெறி என்க.

"ஈசனுக்கன் பில்லா ரடியவர்க்கள் பில்லார்
     எவ்வுயிர்க்கு மன்பில்லார் தமக்குமன் பில்லார்
பேசுவதென் னறிவிலாப் பிணங்களைநா மிணங்கிற்
     பிறப்பினொடு மிறப்பினொடும் பிணங்கிடுவர் விடுநீ
ஆசையொடு மரனடியா ரடியாரை யடைந்திட்
     டவர்கரும முன்கரும மாகச் செய்து
கூசிமொழிந் தருண்ஞானக் குறியி னின்று
     கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே"

என்னும் சிவஞான சித்தியார் திருவிருத்தம் இங்கு நோக்கற்பாலது. (17)