II


80திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     (இ - ள்.) என்பு பூண்டு இடுகாட்டில் பொடி ஆடும் உருத்திரனுக்கு
- என்பினை அணிந்து புறங்காட்டிலே சாம்பலைப் பூசி ஆடுகின்ற
உருத்திரனுக்கு, இடையறாத அன்பு பூண்டான் - மகவுக்கு அன்பு உடையாய்
- நீங்காத அன்பினை யுடையவன் மகவுக்கு அன்புடையவளே, நீயும் எமக்கு
ஆகாய் என்னா - நீயும் எங்களுக்கு ஆகமாட்டாய் என்று, வன்புபூண்டு
ஒழுகு - கொடுமையை மேற்கொண்டு ஒழுகாநின்ற, வைணவம் பூண்டு -
வைணவ நெறியைக் கைக்கொண்டு, பொறை இரக்கம் மானம் நீத்தார் -
பொறுமையையும் கருணையையும் மானத்தையும் அறவே கைவிட்ட
அவர்கள், துன்புபூண்டு அயர்வாளை - துன்பத்தை மேற்கொண்டு
சோருகின்ற கௌரியை, மகவையும் கொண்டு அகத்தைவிடத்
துரத்தினார்கள் - அக்குழவியையும் கைக் கொண்டு மனையினின்று
புறம்போக ஓட்டினார்கள்.

      உருத்திரனுக்கு அன்பு பூண்டான் மகவுக்கு அன்புடையாய் என்றது
அவர்கள் பொறாமை யென்னும் சிறுமைக் குணத்தைக் காட்டுகின்றது.
நீயும் என்னும் உம்மை, அவர்கள் எமக்கு ஆகாதவராதலே யன்றி என்னும்
பொருள் தருதலால் எச்சவும்மை. ஆகாமை - பொருந்தாமை; பகைமை.
முதலில் அவள் உறுந் துன்பத்தையும் நோக்காது, மருகி யென்றும்
எண்ணாது, இளங் குழந்தையின் அழுகையையும் கருதாது துரத்தினமையால்
‘பொறையிரக்க மான நீத்தார்’ என்றார். ஒழுகு என்னும் பெயரெச்ச
முதனிலை நீத்தார் என்பதன் விகுதியைக் கொள்ளும். (31)

தாயிலாப் பிள்ளைமுகந் தனைநோக்கித் தெருவிளிடைத்
                              தளர்வா ளுள்ளங்
கோயிலாக் கொண்டுறையுங் கூடனா யகனைமனக்
                              குறிப்பிற் கண்டு
வேயிலாக் கியதடந்தோட் கௌரிதிரு மந்திரத்தை
                              விளம்ப லோடுஞ்
சேயிலாக் கிடந்தழுத குழவிவிசும் பிடைவிடைமேற்
                              றெரியக் கண்டாள்.

     (இ - ள்.) தாய் இலாப் பிள்ளை முகம்தனை நோக்கித்
தெருவினிடைத் தளர்வாள் - தாயில்லாத அப்பிள்ளையின் திருமுகத்தை
நோக்கித் தெருவின்கண் வருந்தும் அக்கௌரியானவன், உள்ளம் கோயிலாக்
கொண்டு உறையும் கூடல் நாயகனை - தனது உள்ளத்தைக் கோயிலாகக்
கொண்டு எழுந்தருளி யிருக்கும் மதுரை நாயகனாகிய சோமசுந்தரக் கடவுளை,
மனக் குறிப்பில் கண்டு - மனத்தின் தியானத்தாலே தரிசித்து, வேயில்
ஆக்கிய தடம் தோள் கௌரி திருமந்திரத்தை விளம்பலோடும் - மூங்கிலால்
அமைத்தா லொத்த பெரிய திருத்தோள்களை யுடைய உமா தேவியின்
திருமந்திரத்தை ஓதியவளவில், சேயிலாக் கிடந்து அழுத குழவி - சேய்மை
யில்லையாகக் (அண்மையிற்) கிடந்து அழுத அம்மகவு, விசும்பிடை
விடைமேல் தெரியக் கண்டாள் - வானிலே இடப வூர்தியின்மேல் விளங்கத்
தரிசித்தாள்.