102திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



ஏன்ற வேந்த னிலாக்குடி யீட்டமு மின்கதிர்
கான்ற நாயக மாமணி போகிய கண்டியும்
ஆன்ற ஞானமி லாதவர் கல்வியு மானதே
சான்ற கீரனி லாதவை கூடிய சங்கமே.

     (இ - ள்.) சான்ற கீரன் இலாது அவை கூடிய சங்கம் - புலமை
சான்ற நக்கீரன் இல்லாது பிற புலவர் கூடிய இச்சங்கமானது, ஏன்ற வேந்தன்
இலாக்குடி ஈட்டமும் - பொருந்திய மன்னனில்லாத குடியின் கூட்டத்தையும்,
இன் கதிர் கான்ற நாயகம் மாமணி போகிய கண்டியும் - இனிய ஒளி வீசும்
நடுநாயகமாகிய பெரிய மணியை இழந்த கண்டிகையையும், ஆன்ற ஞானம்
இலாதவர் கல்வியும் ஆனது - நிறைந்த மெய்யுணர்வில்லாதவர் கல்வியையும்
போன்றது.

     கவற்சியும், விளக்கமின்மையும், பயனின்மையும் உவமைகளாற் கொள்க.
இது பலபொருளுவமையணி. (3)

ஐய சொற்பொரு டன்வடி வானவ ராலவாய்
மைத ழைத்த மிடற்றினர் தம்மொடும் வாதுதான்
செய்த விப்பிழை யோபெரி தெப்படி தீருமோ
உய்வ தற்புத மேயென யாவரு முன்னினார்.

     (இ - ள்.) சொல் பொருள் வடிவு ஆனவர் - சொல்லும் பொருளும்
தனது வடிவமாயுள்ளவரும், ஆலவாய் மைதழைத்த மிடற்றினர் தம்மொடும் -
திருவால வாயின்கண் வீற்றிருக்கும் இருள்மிக்க திருமிடற்றினையுடைய
வருமாகிய சோமசுந்தரக் கடவுளுடன், வாதுசெய்த இப்பிழையோ பெரிது -
வாதஞ்செய்த இந்தப் பிழை மிகப்பெரியது (ஆகலின்), எப்படி தீருமோ -
(இஃது) எங்ஙனம் நீங்குமோ, உய்வது அற்புதமே என - இனி பிழைத்தல்
அரிதே என்று, யாவரும் உன்னினார் - அனைவருங் கருதினர்.

     ஐய, அசைநிலை; குறிப்புப்பெயரெச்சமாகக் கொண்டு, அழகிய
என்றுரைத்தலுமாம். சொற்பொருள் - சொல்லின் பொருள் என்றுமாம்.
சொற்பொருள் வடிவானவருடன் சொற்பொருள்பற்றி வாதுசெய்யப் பிறர்
எங்ஙனம் வல்லுநராவர் என்பது தோன்றச் 'சொற்பொருள் தன்வடிவானவர்'
என்றார். தான் என்பதும் அசை. (4)

எய்தி வெள்ளி மலைபெயர்த் தானு மிறுத்ததன்
கையில் வீணைதொட் டின்னிசை பாடக் கனிந்தவன்
செய்த தீங்கு பொறுத்தது மன்றித்திண் டேரொடும்
மொய்கொள் வாளுங் கொடுத்தனன் புண்ணிய மூர்த்தியே.

     (இ - ள்.) எய்தி வெள்ளிமலை பெயர்த்தானும் - வெள்ளிமலைக்குச்
சென்று (அதனைப்) பெயர்த்த இராவணனும், இறுத்த தன் கையில்
வீணைதொட்டு - (அம் மலையைப்) பறித்த தனது கையில் வீணையைத்