வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்217



     (இ - ள்.) பார்த்த பார்வையால் - நோக்கிய திருவருள்
நோக்கத்தினாலே இரும்பு உண்ட நீர் எனப்பருகும் - காய்ச்சிய இரும்பி
நீரினைப் பருகினாற்போலப் பருகிய, தீர்த்தன் தன்னையும் - தூயவனாகிய
அவ்வாசிரியனையும், குருமொழி செய்ததும் - அக்குரவன் உபதேசமொழி
அருளியதையும், தம்மைப் போர்த்த பாசமும் - தம்மை மறைத்த
பாசத்தையும், தம்மையும் மறந்து - தம்மையும் மறந்து விட்டு, மெய்ப்போத
மூர்த்தியாய் - மெய்ஞ்ஞான வடிவினராய், ஒன்றும் அறிந்திலர் வாதவூர்
முனிவர் - ஒன்றனையும் அறியாதவராயினர் வாதவூர் முனிவர்.

     பருகும் - அத்துவிதமாகத் தம்முள் அடக்கிய; மும்மலங்களையும்
சுவற்றிய என்பாருமுளர். பாசத்தை மறத்தலாவது பாசமொழிந்து நிற்றல்.
தீர்த்தனையும் குருமொழிசெய்ததனையும் தம்மையும் மறத்தலாவது ஞேயம்
ஞானம் ஞாதுரு என்னும் மூறும் நழுவாமல் நழுவி நிற்றல். ஊமைத் தசும்புள்
நீர் நிறைந்தாற்போல ஞானவொளி நிறைந்திருந்தன ரென்பார் ‘மெய்ப்போத
மூர்த்தியாய்’ என்றார் ‘முனிவர்’ என உடம்பொடு புணர்த்தும் அவரது ஞான
நிட்டை நிலை விளக்கினார். (47)

தேனும் பாலுந்தீங் கன்னுலு மமுதுமாய்த் தித்தித்
தூனு முள்ளமு முருக்கவுள் ளொளியுணர்ந் தின்பம்
ஆன வாறு*தேக் கிப்புறங் கசிவதொத் தழியா
ஞான வாணிவந் திறுத்தன ளன்பர்தந் நாவில்.

     (இ - ள்.) தேனும் பாலும் தீங்கன்னலும் அமுதுமாய்த் தித்தித்து -
தேனும் பாலும் இனிய கருப்பஞ்சாறும் அமிழ்துமாகத் தித்தித்து, ஊனும்
உள்ளமும் உருக்க - உடலையும் உள்ளத்தையும் உருக்க, உள் ஒளி
உணர்ந்து - அகத்திற்றோன்றிய அருளொளியை உணர்ந்து, இன்பம் ஆன
ஆறு தேக்கி - இன்பமாகிய ஆறு தேக்கப்பட்டு, புறம் கசிவது ஒத்து -
புறத்திற் கசிவதுபோல, அழியா ஞானவாணி வந்து அன்பர் தம் நாவில்
இறுத்தனள் - அழியாத ஞானக் கலைமகள் தானேவந்து அவ்வன்பருடைய
நாவின்கண் தங்கினள்.

     தேனும் பாலுந் தீங்கன்னலு மமுதுமாய்த் தித்தித்தமை,

"ஊனா யுயிரா யுணர்வாயென் னுட்கலந்து
தேனா யமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்
வானோ ரறியா வழியெமக்குத் தந்தருளும்
தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார்"

எனவும், உள்ளொளி யுணர்ந்தென்பது,

"சீரார் பெருந்துறையில்
எளிவந் திருந்திரங்கி யெண்ணரிய வின்னருளால்
ஒளிவந்தெ னுள்ளத்தி னுள்ளே யொளிதிகழ
அளிவந்த வந்தணனை"


     (பா - ம்.) * தேக்கிய புறம்.