நரி பரியாக்கிய படலம்269



துன்னு மின்னிய முழக்கமுந் துரகத வொலியும்
அன்ன வீரர்வா யரவமுந் திசைசெவி டடைப்பக்
கன்னி மாமதில் சூழ்கடி நகர்க்கரைக் காதம்
என்ன வெய்தினான் மறைப்பரிப் பாகனல் வெல்லை.

     (இ - ள்.) துன்னும் இன் இயமுழக்கமும் - நெருங்கிய இயங்களின்
பேரொலியும், துரகத ஒலியும் - குதிரைகளின் கனைப்பொலியும், அன்ன
வீரர்வாய் அரவமும் - அக்குதிரை வீரர்களின் வாய் ஒலியும், திசை செவிடு
அடைப்ப - திக்குகளைச் செவிடாக்க, மறைப்பரிப்பாகன் - வேதப் புரவியின்
பாகனாகிய இறைவன், கன்னி மாமதில் சூழ் கடிநகர்க்கு - அழியாத பெரிய
மதில் சூழந்த காவலையுடைய அம் மதுரைக்கு, அரைக்காதம் என்ன
எய்தினான் - அரைக்காத தூரம் உளதென்னு மாறு வந்தனன்; அவ்வெல்லை
- அப்பொழுது.

     கன்னி - அழிவின்மை. (60)

          [கொச்சக் கலிப்பா.]
கண்டவர் கடிதோடிக் கடிநகர் குறுகிக்கார்
விண்டவழ் மணிமாடத் தடுசிறை மிடைகின்ற
கொண்டலி னனையார்முன் குறுகினர் மலர்செவ்வி
முண்டக வதனத்தார் முகிழ்நகை யினர்சொல்வார்.

     (இ - ள்.) கண்டவர் - பார்த்தவர்கள், கடிது ஓடி - விரைந்துஓடி,
கடிநகர் குறுகி - காவலையுடைய நகரினை அடைந்து, விண்கார் தவழ் மணி
மாடத்து - வானின்கண் உள்ள முகில்கள் தவழும் அழகிய மாடத்தையுடைய,
அடுசிறை மிடைகின்ற - வருத்துஞ் சிறையின்கண் காவலாளரால்
நெருக்கப்பட்டிருக்கின்ற, கொண்டலின் அனையார் முன் குறுகினர் -
முகிலை ஒத்த வாதவூரகளின் திரு முன் சென்று, மலர் செவ்வி
முண்டகவதனத்தார் - மலர்ந்த செவ்வியை யுடைய தாமரை மலர் போன்ற
முகமுடையராய், முகிழ் நகையினர் சொல்வார் - அரும்பிய
நகையினையுடையராய் (இதனைக்) கூறுவாராயினர்.

     பேரின்பப் பயன் விளைக்கும் திருவாசக மழையைக் கைம்மாறு
கருதாது பொழிவாராகலின் ‘கொண்டலினனையார்’ என்றார். கொண்டலின்,
சாரியை நிற்கு உருவு தொக்கது. மலர் செவ்வி - அப்பொழுதலர்ந்த செவ்வி.
குறுகினர், வதனத்தார், நகையினர் முற்றெச்சங்கள். (61)

மன்னவ னெறிகோடா மந்திர ரடலேறே
பன்னிற வெழுமுந்நீர்ப் பரவைகள் வருமாபோற்
றுன்னின வருகின்ற துரகத முளவெல்லாம்
பொன்னெயின் மணிவாயில் புகுவன விதுபோதில்.