திருவாலவாயான படலம்3



"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார்"

என்னும் மறைமொழிகள் இங்கே கருதற் பாலன. (2)

               [- வேறு]
ஓலவாய் மறைக டேறா வொருவன்றன் னுலகந் தன்னைச்
சேலவா யுழலு நாரைக் கருளிய செயலீ தம்ம
நீலவாய் மணிசேர் கண்ட னெடியநான் மாடக் கூடல்
ஆலவா யாகச் செய்த வருட்டிற மெடுத்துச் சொல்வாம்.

     (இ - ள்.) வாய் ஓலம் மறைகள் தேறா ஒருவன் - வாய்திறந்து
ஓலமிடும் மறைகளும் தெளியாத இறைவன், தன் உலகம்தன்னை - தனது
சிவலோகத்தை, சேல் அவாய் உழலும் நாரைக் கருளிய செயல் ஈது -
சேல்மீனை விரும்பிச் சுழன்று திரியும் நாரைக்கு அருளிய திருவிளையாடல்
இதுவாகும்; நீலம் வாய்மணி நேர் கண்டன் - நீலநிறம் வாய்ந்த மணியினை
ஒத்த திருமிடற்றையுடைய அவ்விறைவன், நெடிய நான்மாடக்கூடல் - நீண்ட
நான்மாடக்கூடலை, ஆலவாயாகச்செய்த அருள் திறம் - திருவாலவாயாகச்
செய்த திருவிளையாடலை, எடுத்துச் சொல்வாம் - (இனி) எடுத்துக்
கூறுவாம்.

     ஓலமிடுதல் - முறையிடுதல்;

"அருமறை முறையிட் டின்னு மறிவதற் கரியான்"

எனவும்,

"மயக்கறு மறையோ லிட்டு மாலயன் றேட நின்றான்"

எனவும் திருத்தொண்டர் புராணம் கூறுதல் காண்க. ஓலம், நீலம் என்பன
ஈறு கெட்டன. அம்ம : இடைச்சொல். (3)

சித்திர மேரு வென்ற திரண்டதோட் சுகுணன் பின்பு
சித்திர விரதன் சித்ர பூடணன் றிண்டேர் வல்ல
சித்திர துவசன் வென்றிச் சித்திர வருமன் வன்றோட்
சித்திர சேனன் சீர்சால் சித்ரவிக் கிரம னென்போன்.

     (இ - ள்.) சித்திரம் மேரு வென்ற திரண்டதோள் சுகுணன் பின்பு -
அழகிய மேருமலையை வென்ற திரண்ட தோள்களையுடைய சுகுண
பாண்டியனுக்குப் பின், சித்திர விரதன் - சித்திர விரதனும், சித்திர பூடணன்
- சித்திர பூடணனும், திண்தேர்வல்ல சித்திரதுவசன் - வலியதேர்ப்போரில்
வல்ல சித்திரதுவசனும், வென்றிச் சித்திர வருமன் - வெற்றி பொருந்திய
சித்திரவருமனும், வன்தோள் சித்திரசேனன் - வலிய தோள்களையுடைய
சித்திரசேனனும், சீர்சால் சித்ரவிக்கிரமன் என்போன் - சிறப்பு அமைந்த
சித்திரவிக்கிரமன் எனப்படுவானும்.

     சித்ர என்பது தமிழியற்கு மாறாயினும் சீர்நோக்கித் திரியாது நின்றது;
பின்வரும் பராக்ரம என்பதும் அது. (4)