36திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



அவற்றின் தன்மையாயே நிற்குமென்பது சான்றோர்க் கெல்லாம் ஒப்ப
முடிந்தது’ என நச்சினார்க்கினியர் கூறியிருப்பதும்,

"அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு"

என்னும் முதற் குறளும்,

"அகர வுயிர்போல் அறிவாகி யெங்கும்
நிகரிலிறை நிற்கும் நிறைந்து"

என்னும் திருவருட்பயன் முதற் செய்யுளும் இங்கு நோக்கற்பாலன. மன்னும்
ஓவும் அசைகள். (9)

தாமொரு புலவ ராகித் திருவுருத் தரித்துச் சங்க
மாமணிப் பீடத் தேறி வைகியே நாற்பத் தொன்ப
தாமவ ராகி யுண்ணின் றவரவர்க் கறிவு தோற்றி
ஏமுறப் புலமை காப்பா ரென்றனன் கமலப் புத்தேள்.

     (இ - ள்.) தாம் ஒரு புலவர் ஆகித் திரு உருத் தரித்து - தாமும்
ஒரு புலவராகத் திருமேனி தாங்கி, சங்கம் மாமணிப் பீடத்து ஏறி -
சங்கத்தின் பெருமை பொருந்திய மணிகள் அழுத்திய தவிசில் ஏறி, வைகி -
ஒரு சேர வீற்றிருந்து, நாற்பத்தொன்பதாம் அவராகி - நாற்பத்தொன்பதாவது
புலவர் என்னும் எண்ணை யுடையராய், உள் நின்று அவர் அவர்க்கு அறிவு
தோற்றி - அகத்தின்கண் நின்று அந்நாற்பத்தெண்மருக்கும் அறிவை
விளக்கி, ஏமுறப் புலமை காப்பார் என்றனன் கமலப்புத்தேள் - அரணாகப்
புலமையைக் காத்தருளுவர் என்று பிரமன் கூறினன்.

     சங்கப்பீடம் - சங்கப்பலகை. (10)

அக்கர நாற்பத் தெட்டு மவ்வழி வேறு வேறு
*மக்களாய்ப் பிறந்து பன்மாண் கலைகளின் வகைமை தேர்ந்து
தொக்கவா ரியமு மேனைச் சொற்பதி னெட்டு மாய்ந்து
தக்கதென் கலைநுண் டேர்ச்சிப் புலமையிற் றலைமை சார்ந்தார்.

     (இ - ள்.) அக்கரம் நாற்பத்து எட்டும் - நாற்பத்தெட்டு
எழுத்துக்களும் அவ்வழி வேறுவேறு மக்களாய்ப் பிறந்து - அங்ஙனமே
வெவ்வேறு மக்களாகத் தோன்ற, பல் மாண் கலைகளின் வகைமை தேர்ந்து
- (அவர்கள்) பல மாட்சிமைப்பட்ட கலைகளின் வகைகளைத் தெளிந்து,
ஆரியமும் ஏனை தொக்க சொல்பதினெட்டும் ஆய்ந்து - ஆரிய
மொழியையும் மற்றைய பதினெட்டாகத் தொகுக்கப்பட்ட மொழிகளையும்
ஆராய்ந்து, தக்க தென்


     * அக்கரங்கள் மக்களாய்ப் பிறந்தனவாகக்கூறியதன்கருத்து, கபிலர் என்னும் உரை நூலில் விளக்கப் பெற்றுளது.