424திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     பண்டு - காலத்தின் சேய்மையைக் குறியாது சிறிது முன் என்னும்
பொருளில் வந்தது. விண்மணி - ஆதித்தன்; ஆதித்தனிலும் சிறந்து
விளங்கினான் என்பார ‘மாசறக் கடைந்த விண்மணி’ என்றார். (67)

       [அறுசீரடியாசிரிய விருத்தம்]
அன்னதொரு காரணத்தாற் சவுந்தரிய
     பாண்டியனென் றாகி யன்ன
தென்னவர்கோன் கவுணியர்கோன் றிருநோக்காற்
     பரிசத்தாற் றெருட்டும் வாக்காற்
பொன்னடிதாழ்ந் தைந்தெழுத்து முபதேசப்
     பேறடைந்த பொலிவால் வஞ்சந்
துன்னமணர் நெறியிகழ்ந்து தொல்வேத
     நெறியடைந்து தூய னானான்.

     (இ - ள்.) அன்னதென்னவர் கோன் - அந்தப் பாண்டியர் பெருமான்,
அன்னது ஒரு காரணத்தால் - அந்தக் கூன் நீங்கிய ஒரு காரணத்தினால்,
சவுந்தரிய பாண்டியன் என்று ஆகி - சவுந்தரிய வழுதி என்னும்
பெயருடையனாய், கவுணியர் கோன் திருநோக்கால் பரிசத்தால் - கவுணியர்
பெருமானது திருப் பார்வையினாலும் தொடுதலினாலும், தெருட்டும் வாக்கால்
- மெய்ப்பொருளைத் தெளிவிக்குந் திருவார்த்தையினாலும் பொன் அடி
தாழ்ந்து - அவர் பொன்போலுந் திருவடியில் வீழ்ந்து வணங்கி,
ஐந்தெழுத்தும் உபதேசப் பேறு அடைந்த பொலிவால் - திரு
வைந்தெழுத்தையும் உபதேசிக்கப் பெறுதலை யடைந்த விளக்கத்தாலும்,
வஞ்சம் துன் அமணர் நெறி இகழ்ந்து - வஞ்சஞ் செறிந்த சமணர்கள் பொய்
நெறியை இகழ்ந்து, தொல் வேதநெறி அடைந்து தூயன் ஆனான் - பழைய
வேதநெறியினை அடைந்து புனிதனானான்.

     திருஞானசம்பந்தப் பெருமானின் திரு நோக்கம் முதலாயின வெல்லாம்
பாண்டி வேந்தன் பாசத்தைப் போக்கும் தீக்கைகளாயின என்பார் ‘கவுணியர்
கோன் திருநோக்கால் பரிசத்தால் தெருட்டும் வாக்கால்’ என்றார்.

"பலவிதமா சான்பாச மோசனந்தான் பண்ணும்
படிநயனத் தருள்பரிசம் வாசகமா னதமும்
அலகில்சாத் திரம்யோக மவுத்தி ராதி
                        அநேகமுள"

     என்னும் சிவஞான சித்தியால் நயனதீக்கை, பரிச தீக்கை, வாசக தீக்கை
என்பவற்றின் உண்மை காண்க. பொன்னடி தாழ்ந்து வாக்கினாலே உபதேசப்
பேறடைந்த பொலிவால் என்று இயைத் துரைத்தலுமாம். ‘தொல்’ என்பது
வேதத்திற்கும் வேத நெறியாகிய சைவத்திற்கும் அடையாதலே யன்றி,
அவனும் அவன் குலத்தினரும் தொன்று தொட்டுக் கைக்கொண்டு ஒழுகிய
வேதநெறி என்னும் பொருடுமாம். (68)

                       ஆகச் செய்யுள் 3173.