428திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     எம்மனோர் - எமர்; எம் அடியார். அம்மத முடையார் - அந்தத்
தருக்கினை யுடையார் என்றுமாம். (6)

எம்மொழி தேறி னீர்போ யிறைமக னவையத் தெய்திச்*
செம்மையி லாரை வாது செய்திர்நீ ரனையார் தோற்று
வெம்முனைக் கழுவி லேறி விளிகுவ ரென்னக் கேட்டு
மைம்மலி களத்தான் மைந்தர் தொழுதுதம் மடத்திற் போந்தார்.

     (இ - ள்.) எம்மொழி தேறினீர் - எமது மொழியாகிய
வேதாகமங்களைத் தெளிந்தவர்களே, நீர் போய் - நீவிர் சென்று, இறைமகன்
அவையத்து எய்தி - பாண்டி மன்னன் அவையினை அடைந்து,
செம்மையிலாரை வாது செய்திர் - ஒழுக்கமில்லாத அச்சமணருடன் வாதம்
புரிமின்; அனையார் தோற்று - அவர் தோல்வியுற்று, வெம்முனைக் கழுவில்
ஏறி விளிகுவர் - கூரிய முனையையுடைய கழுவில் ஏறி இறந்து படுவர்;
என்ன - என்று கூறியருள, கேட்டு - அதனைக் கேட்டு, மைம்மலிகளத்தான்
மைந்தர் - கருமை நிறைந்த திருமிடற்றினையுடைய இறைவனது புதல்வராகிய
ஆளுடைய பிள்ளையார், தொழுது - வணங்கி, தம்மடத்தில் புக்கார் - தமது
மடத்திற் புகுந்தருளினார்.

     விசும்பிற் சொல்வார் விளிகுவர் என்று சொல்ல என இயைக்க. (7)

இருவரு மீண்டு தத்த மிருக்கையிற் போகி யற்றைப்
பருவமங் ககலப் பின்னாட் பாண்டிமா தேவி யாரும்
பெருமதி யமைச்ச ரேறும் பிள்ளையார் மடத்திற் போகி
அருகரை வெல்லுஞ் சூழ்ச்சி யாதென வளந்து தேர்வார்.

     (இ - ள்.) இருவரும் மீண்டும் தத்தம் இருக்கையில் போகி - மற்றை
இருவரும் திரும்பித் தங்கள் தங்கள் இருப்பிடஞ் சென்று, அற்றைப் பருவம்
அங்கு அகல - அற்றைப் பொழுது அங்கு நீங்க, பின்னாள் - மறு நாள்,
பாண்டி மாதேவி யாரும் - மங்கையர்க்கரசியாரும், பெருமதி அமைச்சர்
ஏறும் - கூர்த்த மதியினை யுடைய அமைச்சருள் ஏறுபோல்வாராகிய குலச்
சிறையாரும், பிள்ளையார் மடத்தில் போகி - ஆளுடைய பிள்ளையார்
திருமடத்திற்குப் போய், அருகரை வெல்லும் சூழ்ச்சி யாது என - சமணரை
வெல்லுதற்குரிய வழியாது என்று, அளந்து தேர் வார் - ஆராய்ந்து
தெளிவாராயினர்.

     தேவியாரும் அமைச்சரேறும் ஆகிய இருவரும் எனக் கூட்டி,
இருவரும் இருக்கையிற் போகிப் பின்னாள் மடத்திற் போகி அளந்துதேர்வார்
என முடிக்க.

பேரரு ணிறைந்த காழிப் பெருந்தகை யுடன்போய்த் தங்கோன்
சீரவை குறுகி யீது செப்புவார் செய்ய கோலாய்
காரமண் காடே யெங்குங் கழியவு மிடைந்த வின்ன +
வேரொடுங் களைந்தாற் சைவ விளைபயி ரோங்கு மென்றார்.

     (பா - ம்.) * அவையத் தேறி. +மிடைந்ததின்ன.