அவை அடக்கம்
 
31.
இறை நிலம் எழுதும் முன் இளைய பாலகன்
முறைவரை வேன் என முயல்வது ஒக்கும் ஆல்
அறுமுகம் உடைய ஓர் அமலன் மாக் கதை
சிறியது ஓர் அறிவினேன் செப்ப நின்றதே.
31
   
                     வேறு  
32.
ஆன சொல் தமிழ் வல்ல வறிஞர் முன்
யானும் இக் கதை கூறுதற்கு எண்ணுதல்
வானகத்து எழும் வான் கதிரோன் புடை
மீன் இமைப்ப விரும்பிய போலும் ஆல்.
32
   
33.
முன் சொல்கின்ற முனி வட நூல் எரீஇத்
தென் சொலால் சிறியேன் உரை செய்தல் ஆன்
மென் சொல் ஏனும் வெளிற்று உரையேனும் வீண்
புன் சொல் ஏனும் இகழார் புலமையோர்.
33
   
34.
சிந்தும் என்பு சிரம் பிறை தாங்கினோன்
மைந்தன் ஆதலின் மற்று அவன் தானும் என்
சந்தம் இல் உரையும் தரிப்பான் எனாக்
கந்தனுக்கு உரைத்தேன் இக் கதையினை.
34
   
35.
வெற்றெனத் தொடுத்து ஈர்த்து வெளிற்றுரை
முற்றும் ஆக மொழிந்த என் பாடலில்
குற்றம் நாடினர் கூறுப தொல்லை நூல்
கற்று உணர்ந்த கலைஞர் அல்லோர்களே.
35
   
36.
குற்றமே தெரிவார் குறு மா முனி
சொற்ற பாவினும் ஓர் குறை சொல்வர் ஆல்
கற்று இலா என் கவி வழுவாயினும்
முற்றும் நாடி வல்லோர் உய்த்து உரைக்கவே.
36
   
37.
குறை பல மா மதி கொளினும் அன்னதால்
உறு பயன் நோக்கியே உலகம் போற்றல் போல்
சிறிய என் வெளிற்று உரை சிறப்பு இன்று ஆயினும்
அறுமுகன் கதை இது என்று அறிஞர் கொள்வரே.
37
   
38.
நாதனார் அருள் பெறு நந்தி தந்திடக்
கோது இலாது உணர் சனற் குமரன் கூறிட
வாதராயண முனி வகுப்ப ஓர்ந்து உணர்
சூதன் ஓதியது மூ வாறு தொல் கதை.
38
   
39.
சொல்லிய புராணம் ஆம் தொகையுள் ஈசனை
அல்லவர் காதைகள் அனையர் செய்கையுள்
நல்லன விரித்திடும் நவை கண் மாற்றிடும்
இல்லது முகமனால் எடுத்துக் கூறுமே.
39
   
40.
பிறை அணி சடை முடிப் பிரான் தன் காதைகள்
இறையும் ஓர் மறு இல யாவும் மேன்மையே
மறை பல சான்று உள வாய்மையேஅவை
அறிஞர் கண் ஆடியே அவற்றைக் காண்கவே.
40
   
41.
புவியினர் ஏனையர் புராணம் தேரினும்
சிவ கதை உணர்கிலர் என்னில் தீருமோ
அவர் மயல் அரசனை அடைந் திடார் எனில்
எவர் எவர் அக்கமும் இனிது போலும் ஆல்.
41
   
42.
மங்கை ஓர் பாங்கு உடை வான நாயகற்கு
இங்கு உள பல புராணத்துள் எஃக வேல்
புங்கவன் சீர்புகழ் புராணம் ஒன்று உளது
அங்கு அதில் ஒரு சில அடைவில் கூறுகேன்.
42
   
43.
புது மயில் ஊர்பரன் புராணத்து உற்றிடாக்
கதை இலை அன்னது கணிதம் இன்று அரோ
அது முழுது அறைய எனக்கு அமைதல் பாலதோ
துதி உறு புலமை சேர் சூதற்கு அல்லதே.
43
   
44.
காந்தம் ஆகிய பெரும் கடலுள் கந்த வேள்
போந்திடும் நிமித்தமும் புனிதன் கண் இடை
ஏந்தல் வந்து அவுணர்கள் யாரும் அவ்வழி
மாய்ந்திட அடர்த்தது மற்றும் கூறுகேன்.
44
   
45.
ஏது இலாக் கற்பம் எண் இல சென்றன
ஆதலால் இக் கதையும் அனந்தம் ஆம்
பேதம் ஆகும் அப் பேதத்தின் உள் விரித்து
ஓது காந்தத்தின் உண்மையைக் கூறுகேன்.
45
   
46.
முன்பு சூதன் மொழி வட நூல் கதை
பின்பு யான் தமிழ்ப் பெற்றியில் செப்பு கேன்
என் பயன் எனில் இன் தமிழ்த் தேசிகர்
நன் புலத்து அவை காட்டு நயப்பினால்.
46
   
47.
தோற்றம் ஈறு இன்றித் தோற்றிய சூர்ப்பகைக்கு
ஏற்ற காதைக் எவன் பெயர் என்று இடின்
ஆற்றும் ஐம் புலத்து ஆறு சென் மேலையோர்
போற்று கந்த புராணம் என்பதே.
47
   
48.
பகுதி கொண்டிடு பாக்கள் இனத்தின் உண்
மிகுதி கொண்ட விருத்தத் தொகைகளால்
தொகுதி கொண்டிடு சூர்கிளை சாய்த்தவன்
தகுதி கொண்ட தனிக் கதை சாற்றுகேன்.
48
   
49.
செந்தமிழ்க்கு வரம்பு எனச் செப்பிய
முந்து காஞ்சியின் முற்று உணர் மேலவர்
கந்தன் எந்தை கதையினை நூல் முறை
தந்திடு என்னத் தமியன் இயம்புகேன்.
49
   
50.
வெம்பு சூர் முதல் வீட்டிய வேல் படை
நம்பி காதையை நல் தமிழ்ப் பாடலால்
உம்பர் போற்ற உமையுடன் மேவிய
கம்பர் காஞ்சியில் கட்டுரைத்தேன் இனியான்.
50