திருவிளையாட்டுப் படலம்
 
1052.
அனந்தரம தாக உமை அம்மை யொடு பெம்மான்
நனந் தலையில் வைகிய நலம் கொள் குமரேசன்
இனம் கொடு தொடர்ந்த இளையாரொடும் எழுந்தே
மனம் கொள் அருள் நீர்மைதனின் ஆடலை மதித்தான்.
1
   
1053.
தட்டை ஞெகிழ அம் கழல் சதங்கைகள் சிலம்பக்
கட்டழகு மேய அரை ஞாண் மணி கறங்க
வட்ட மணி குண்டல மதாணி நுதல் வீர
பட்டிகைமி னக் குமரன் ஆடல் பயில் கின்றான்.
2
   
1054.
மன்று தொறும் உலாவு மலர் வாவி தொறும் உலாவும்
துன்று சிறு தென்றல் தவழ் சோலை தொறும் உலாவும்
என்றும் உலவாது உலவும் ஆறு தொறும் உலாவும்
குன்று தொறும் உலாவும் உறையும் குமர வேளே.
3
   
1055.
குளத்தின் உலவும் குறைந்திடு துருத்திக்
களத்தின் உலவும் நிரை கொள் கந்துடை நிலைத்தாம்
தளத்தின் உலவும் பனவர் சாலை உலவும் என்
உளத்தின் உலவும் சிவன் உமைக்கு இனிய மைந்தன்.
4
   
1056.
இந்து முடி முன்னவன் இடம் தொறும் உலாவும்
தந்தையுடன் ஆய் அமர் தலங்களின் உலாவும்
கந்த மலர் நீபம் உறை கண் தொறும் உலாவும்
செந்தமிழ் வடாது கலை சேர்ந்துழி யுலாவும்.
5
   
1057.
மண் இடை உலாவும் நெடு மாதிரம் உலாவும்
எண் இடை உறாத கடல் எங்கணும் உலாவும்
விண் இடை உலாவும் மதி வெய்யவன் உடுக்கோள்
கண் இடை உலாவும் இறை கண்ணில் வரும் அண்ணல்.
6
   
1058.
கந்தருவர் சித்தர் கருடத் தொகையர் ஏனோர்
தந்தம் உலகாதிய தலம் தொறும் உலாவும்
இந்திரன் இருந்த தொல் இடம் தனில் உலாவும்
உந்து தவர் வைகும் உலகம் தொறும் உலாவும்.
7
   
1059.
அங்கமல நான்முகன் அரும் பதம் உலாவும்
மங்கலம் நிறைந்த திருமால் பதம் உலாவும்
எங்கள் பெருமாட்டி தன் இரும் பதம் உலாவும்
திங்கள் முடிமேல் புனை சிவன் பதம் உலாவும்.
8
   
1060.
இப்புவியில் அண்ட நிரை எங்கணும் உலாவும்
அப்பு அழல் ஊதை வெளி அண்டமும் உலாவும்
ஒப்பு இல் புவனங்கள் பிற உள்ளவும் உலாவும்
செப்பரிய ஒர் பரசிவன் தனது மைந்தன்.
9
   
1061.
இரு மூவகை வதனத் தொடும் இளையோன் எனத்
                                    திரியும்
ஒரு மா முகனொடு சென்றிடும் உயர் காளையின்
                                    உலவும்
பெருமா மறையவரே என முனிவோர் எனப் பெயரும்
தெரிவார் கணை மற வீரரில் திரி தந்திடும் செவ்வேள்.
10
   
1062.
காலில் செலும் பரியில் செலும் கரியில் செலும் கடுந்தேர்
மேலில் செலும் தனி ஆளியின் மிசையில் செலும் தகரின்
பாலில் செலும் மானத்திடை பரிவில் செலும் விண்ணின்
மாலில் செலும் பொரு சூரொடு மலையச் செலும்
                                      வலியோன்.
11
   
1063.
பாடின் படு மணி ஆர்த்திடும் பணை மென் குழல்                                    இசைக்கும்
கோடு அங்கு ஒலி புரிவித்திடும் குரல் வீணைகள்
                                   பயிலும்
ஈடு ஒன்றிய சிறு பல்லியம் எறியும் எவர் எவரும்
நாடும் படி பாடும் களி நடனம் செயும் முருகன்.
12
   
1064.
இன்னே பல உருவம் கொடி ஆண்டும் குமரேசன்
நல் நேயமோடு ஆடு உற்றுழி நனி நாடினள் வியவா
முன்னே உலகினை ஈன்றவள் முடிவின்று உறை
                                    முதல்வன்
பொன்னேர் கழல் இணை தாழ்ந்தனள் போற்றிப் புகல்
                                    கின்றாள்.
13
   
1065.
கூடு உற்ற நம் குமரன் சிறு குழவிப் பருவத்தே
ஆடல் தொழில் எனக்கு அற்புதம் ஆகும் அவன்
                                   போல்வார்
நேடில் பிறர் இலை மாயையின் நினை நேர் தரு
                                   மனையான்
பீடு உற்றிடு நெறி தன்னை எம் பெருமான் மொழிக
                                   என்றாள்.
14
   
1066.
அல்லார் குழல் அவள் இன்னணம் அறியார்களின்
                                    வினவ
ஒல்லார் புரம் அடு கண் நுதல் உன்றன் மகன்
                                    இயல்பை
எல்லா உயிர்களும் உய்ந்திட எமை நீ கட வினையால்
நல்லாய் இது கேண் மோ என அருளால் இவை
                                   நவில்வான்.
15
   
1067.
ஈங்கனம் நமது கண்ணின் எய்திய குமரன் கங்கை
தாங்கினள் கொண்டு சென்று சரவணத்து இடுதலாலே
காங்கெயன் எனப் பேர் பெற்றான் காமர்பூம்
                                   சரவணத்தின்
பாங்கரில் வருதலாலே சரவண பவன் என்று ஆனான்.
16
   
1068.
தாய் என ஆரல் போந்து தனம் கொள் பால்                                   அருத்தலாலே
ஏயது ஓர் கார்த்திகேயன் என்று ஒரு தொல் பேர்
                                  பெற்றான்
சேய் அவன் வடிவம் ஆறும் திரட்டி நீ ஒன்றாச்
                                   செய்தாய்
ஆய அதனாலே கந்தனாம் எனும் நாமம் பெற்றான்.
17
   
1069.
நன் முகம் இருமூன்று உண்டால் நமக்கு அவை தாமே                                    கந்தன்
தன் முகம் ஆகி உற்ற தாரகப் பிரமம் ஆகி
முன் மொழிகின்ற நம்தம் மூ விரண்டு எழுத்தும்
                                    ஒன்றாய்
உன்மகன் நாமத்து ஓர் ஆறு எழுத்து என உற்ற
                                    அன்றே.
18
   
1070.
ஆதலின் நமது சத்தி அறுமுகன் அவனும் யாமும்
பேதகம் அன்றால் நம்போல் பிரிவிலன் யாண்டும்
                                   நின்றான்
ஏதம் இல் குழவி போல்வான் யாவையும் உணர்ந்தான்
                                   சீரும்
போதமும் அழிவில் வீடும் போற்றினர்க்கு அருள
                                   வல்லான்.
19
   
1071.
மேல் இனி அனைய செவ்வேள் விரிஞ்சனைச் சுருதிக்கு                                    எல்லாம்
மூலம் அது ஆகி நின்ற மொழிப் பொருள் வினவி
                                   அன்னான்
மால் உறச் சென்னி தாக்கி வன்சிறைப் படுத்தித் தானே
ஞால மன் உயிரை எல்லாம் நல்கியே நண்ணும்
                                    பன்னாள்.
20
   
1072.
தாரகன் தன்னைச் சீயத் தடம் பெரு முகத்தினானைச்
சூரபன் மாவை ஏனை அவுணரைத் தொலைவு செய்தே
ஆரணன் மகவான் ஏனை அமரர்கள் இடுக்கண் நீக்கிப்
பேர் அருள் புரிவன் நின் சேய் பின்னர் நீ காண்டி
                                      என்றான்.
21
   
1073.
என்றலும் இளையோன் செய்கை எம் பெருமாட்டி
                                   கேளா
நன்று என மகிழ்ச்சி கொண்டு நணுகலும் உலகம்
                                   எல்லாம்
சென்று அருள் ஆடல் செய்யும் திருத்தகு குமரன்
                                   பின்னர்
ஒன்று ஒரு விளையாட்டு உள்ளத்து உன்னியே புரிதல்
                                   உற்றான்.
22
   
1074.
குலகிரி அனைத்தும் ஓர் பால் கூட்டிடும் அவற்றைப்                                    பின்னர்த்
தலை தடு மாற்றம் ஆகத் தரை இடை நிறுவும் எல்லா
அலை கடல் தனையும் ஒன்றா ஆக்குறும் ஆழி
                                   வெற்பைப்
பிலன் உற அழுத்தும் கங்கைப் பெரு நதி அடைக்கும்
                                   மன்னோ.
23
   
1075.
இருள் கெழு பிலத்துள் வைகும் எண் தொகைப் பணியும்                                    பற்றிப்
பொருள் கெழு மேரு ஆதி அடுக்கலில் பூட்டி வீக்கி
அருள் கெழு குமர வள்ளல் ஆவிகள் கூறு இன்றாக
உருள் கெழு சிறு தேராக் கொண்டு ஒல்லென உருட்டிச்
                                   செல்லும்.
24
   
1076.
ஆசை அம் கரிகள் தம்மை அம் கை கொண்டு
                                ஒன்றோடு ஒன்று
பூசல் செய்விக்கும் வானில் போந்திடும் கங்கை நீரால்
காய்சின வடவை மாற்றும் கவின் சிறைக் கலுழனோடு
வாசுகி தன்னைப் பற்றி மாறு இகல் விளைக்கும் அன்றே.
25
   
1077.
பாதல நிலயது உள்ள புயங்கரைப் படியில் சேர்த்திப்
பூதல நேமி எல்லாம் புகுந்திடப் பிலத்தின் உய்க்கும்
ஆதவ முதல்வன் தன்னை அவிர் மதிப் பதத்தில் ஓச்சும்
சீதள மதியை வெய்யோன் செல்நெறிப் படுத்துச் செல்லும்.
26
   
1078.
எண் திசை புரந்த தேவர் இருந்த தொல் பதங்கள்                                    எல்லாம்
பண்டு உள திறத்தின் நீங்கப் பறித்தனன் பிறழ வைக்கும்
கொண்டலின் இருந்த மின்னின் குழுவுடன் உருமுப் பற்றி
வண்டு இனம் உறாத செம் தண் மாலை செய்து அணியும்
                                   அன்றே.
27
   
1079.
வெய்யவர் மதிகோள் ஏனோர் விண்படர் விமானம்                                    தேர்கள்
மெய் உறப் பிணித்த பாசம் முழுவதும் துருவன்
                                   என்போன்
கையுறும் அவற்றில் வேண்டும் கயிற்றினை இடைக் கண்
                                   ஈர்ந்து
வையகம் திசை மீச் செல்ல வானியில் விடுக்கு மைந்தன்.
28
   
1080.
வடுத்தவிர் விசும்பில் செல்லும் வார்சிலை இரண்டும்
                                    பற்றி
உடுத்திரள் பலகோள் இன்ன உண்டையாக் கொண்டு
                                   வானோர்
முடித்தலை உரந்தோள் கண்ட முகம் படக் குறியா
                                   வெய்தே
அடல் தனு விஞ்சை காட்டும் ஆறு இரு தடந்தோன்
                                   அண்ணல்.
29
   
1081.
இத்திறம் உலகம் தன்னில் இம்பரோடு உம்பர் அஞ்சிச்
சித்த மெய் தளர்தல் அன்றிச் சிதை உறா வகைமை
                                       தேர்ந்து
வித்தக வெண்ணில் ஆடல் வியப்பொடு புரிந்தான் ஆவி
முத்தர் தம் விழியின் அன்றி முன்னுறா நிமல மூர்த்தி.
30
   
1082.
ஆயது காலை ஞாலத்து அவுணர்கள் அதனை நோக்கி
ஏயிது செய்தார் யாரே என்று விம்மிதராய் எங்கள்
நாயகன் வடிவம் தன்னை நனி பெரும் பவத்துள் தங்கும்
தீயவர் ஆதலாலே கண்டிலர் தியக்கம் உற்றார்.
31
   
1083.
சிலபகல் பின்னும் வைகும் திறத்து இயல் ஆயுள்                                   கொண்டே
உலகினில் அவுணர் யாரும் உறைதலின் அவர்க்குத்
                                  தன்மெய்
நிலைமை காட்டாது செவ்வேள் நிலாவலும் நேடி
                                 அன்னோர்
மலர் அயன் தெரியா அண்ணல் மாயமே இனையது
                                  என்றார்.
32
   
1084.
ஆயது ஓர் குமரன் செய்கை அவனியின் மக்கள்
                                    காணாத்
தீயன முறையால் வெங்கோல் செலுத்திய அவுணர்
                                    எல்லாம்
மாய்வது திண்ணம் போலும் மற்ற அதற்கு ஏதுவாக
மேயின விம்மிதம் கொல் இது வென வெருவல் உற்றார்.
33
   
1085.
புவனியின் மாக்கள் இன்ன புகறலும் திசைகாப்பாளர்
தவனனே மதியம் ஏனோர் சண்முகன் செய்கை நாடி
அவன் உரு அதனைக் காணார் அவுணர் தம் வினையும்
                                   அன்றால்
எவர் இது செய்தார் கொல் என்று இரங்கினர் யாரும்
                                    கூடி.
34
   
1086.
தேர் உறும் அனைய தேவர் தேவர் கோன் சிலவரோடு
மேருவில் இருந்தான் போலும் வேதனும் அங்கண்
                                   வைகும்
ஆரும் அங்கு அவர் பால் ஏகி அறைகுதும் என்று
                                   தேறிச்
சூரர் கோன் தனக்கும் அஞ்சித் துயரொடு பெயர்தல்
                                   உற்றார்.
35
   
1087.
வடவரை உம்பர் தன்னில் வானவரானோர் ஏகி
அடைதரு கின்ற காலை ஆறுமா முகம் கொண்டு
                                    உள்ள
கடவுள் செய் ஆடல் நோக்கி அவன் உருக் காணான்
                                   ஆகி
இடர் உறு மனத்தினோடும் இருந்த இந்திரனைக்
                                    கண்டார்.
36
   
1088.
அரி திரு முன்னர் எய்தி அடிதொழுது அங்கண் வைகி
விரிகடல் உலகின் வானின் மேவு தொல் நிலைமை
                                    யாவும்
திரிபுற வெரோ செய்தார் தெரிந்திலம் அவரை ஈது
புரிகலர் அவுணர் போலும் புகுந்த இப்புணர்ப்பு என்ன
                                    என்றார்.
37
   
1089.
வானவர் இறைவன் அன்னோர் மாற்றம் அங்கு
                             அதனைக் கேளா
யானும் இப்பரிசு நாடி இருந்தனன் இறையும் தேரேன்
ஆனதை உணர வேண்டின் அனைவரும் ஏகி
                                   அம்பொன்
மேனி கொள் கமலத்தோனை வினவுதும் எழுதிர்
                                    என்றான்.
38
   
1090.
எழுதிர் என்று உரைத்த லோடும் இந்திரன் முதலா                                    உள்ளோர்
விழியிடைத் தெரிய அன்னோர் மெய்த்தவம் புரிந்த
                                    நீரால்
அழிவற உலகில் ஆடும் அறுமுகன் வதனம் ஒன்றில்
குழவியது என்ன அன்ன குன்றிடைத் தோன்றினான்
                                    ஆல்.
39
   
1091.
வாட்ட மொடு அமரர் கொண்ட மயக்கு அறத் தனாது                                    செய்கை
காட்டிய வந்தோன் மேருக் கனவரை அசைத்துக் கஞ்சத்
தோட்டிதழ் கொய்து சிந்தும் துணை யென உயர்ந்த
                                   செம்பொன்
கோட்டினைப் பறித்து வீசிக் குலவினன் குழவியே போல்.
40
   
1092.
தோன்றிய குமரன் தன்னைச் சுரபதி சுரர் ஆய்
                                    உள்ளோர்
ஆன்ற தோர் திசை காப்பாளர் அனைவரும் தெரி
                                    குற்றன்னோ
வான் தரை திரிபு செய்தோன் மற்று இவன் ஆகும்
                                    என்னாக்
கான் திரி அரியை நேரும் விலங்கு எனக் கலங்கிச்
                                    சொல்வார்.
41
   
1093.
நொய்தாம் குழவி எனக் கொள்கிலம் நோன்மை நாடின்
வெய்தாம் அவுணக் குழுவோரினும் வெய்யன் யாரும்
எய்தாத மாயம் உளனால் இவன் தன்னை வெம் போர்
செய்து ஆடல் கொள்வம் இவண் என்று தெரிந்து
                                      சூழ்ந்தார்.
42
   
1094.
சூழ் உற்ற எல்லை இமையோர்க்கு இறை தொல்லை                                        நாளில்
காழ் உற்ற தம் தம் அற வேகி வெண் காட்டில் ஈசன்
கேழ் உற்ற தாள் அர்ச்சனை செய்து கிடைத்து வைகும்
வேழத்தை உன்ன அது வந்தது மேருவின்பால்.
43
   
1095.
தந்தங்கள் பெற்று வருகின்ற தனிக் களிற்றின்
கந்தம் தனில் போந்து அடல் வச்சிரம் காமர் ஒள்வாள்
குந்தம் சிலை கொண்டு இகல் வெம் சமர்க் கோலம்
                                        எய்தி
மைந்தன் தனை வானவரோடும் வளைந்து கொண்டான்.
44
   
1096.
வன்னிச் சுடர் கால் விசையொடு மரீஇய பாங்கில்
பன்னற் படு குன்றவை சூழ் தரு பான்மையே போல்
உன்னற்கு அரிய குமரேசனை உம்பர் கோனும்
இன்னல் படு வானவரும் மிகல் செய்ய உற்றார்.
45
   
1097.
தண்ணார் கமலத் துணை மாதரைத் தன் இரண்டு
கண்ணா உடைய உமையாள் தரு கந்தன் வானோர்
நண்ணார் எனச் சூழ்வது நோக்கி நகைத்தி யாதும்
எண்ணாது முன்போல் தனது ஆடல் இழைத்த வேலை.
46
   
1098.
எட்டே ஒரு பான் படை தம்முள் எறிவ எல்லாம்
தொட்டே கடவுள் படை தன்னொடும் தூர்த்த லோடும்
மட்டு ஏறு போதில் படுகின்றுழி வச்சிரத்தை
விட்டே தெழித்தான் குமரன் மிசை வேள்வி வேந்தன்.
47
   
1099.
வயிரத்தனி வெம் படை எந்தை தன் மார்பு நண்ணி
அயிரில் துகளாய் விளிவாக அதனை நோக்கித்
துயரத்து அழுங்க இமையோர் இறை தொல்லை வேழம்
செயிர் உற்று இயம்பி முருகேசன் முன் சென்றது அன்றே.
48
   
1100.
செல்லும் கரி கண்டு உமையாள் மகன் சிந்தையால் ஓர்
வில்லும் கணைகள் பலவும் விரைவோடு நல்கி
ஒல் என்றிட நாண் ஒலி செய்துயர் சாபம் வாங்கி
எல் ஒன்று கோல் ஒன்று அதன் நெற்றி உள் ஏக                                     உய்த்தான்.
49
   
1101.
அக்காலையில் வேள் செலுத்தும் கணை அண்டர்
                                     தம்மின்
மிக்கான் அயிராவத நெற்றியுள் மேவி வல்லே
புக்கு ஆவி கொண்டு புறம் போதப் புலம்பி வீழா
மைக் கார் முகில் அச்சுறவே அது மாண்டது அன்றே.
50
   
1102.
தன் ஓர் களிறு மடி எய்தலும் தான வேந்தன்
அன்னோ எனவே இரங்கா அயல் போகி நின்று
மின்னோடு உறழ் தன் சிலை தன்னை வெகுண்டு வாங்க
முன்னோன் மதலை ஒரு கோவலன் மொய்ம்பில்
                                       எய்தான்.
51
   
1103.
கோல் ஒன்று விண்ணோர்க்கு இறைமேல் குமரேசன்                                        உய்ப்ப
மால் ஒன்று நெஞ்சன் வருந்திப் பெரு வன்மை சிந்திக்
கால் ஒன்று சாபத் தொழில் நீத்தனன் கையில் உற்ற
வேல் ஒன்று அதனைக் கடிது ஏகுகன் மீது விட்டான்.
52
   
1104.
குந்தப் படை ஓர் சிறு புல் படு கொள்கையே போல்
வந்து உற்றிட அற்புதம் எய்தினர் மற்றை வானோர்
கந்தக் கடவுள் சிலையில் கணை ஒன்று பூட்டித்
தந்திக்கு இறைவன் தடம் பொன் முடி தள்ளி ஆர்த்தான்.
53
   
1105.
துவசம் தனை ஓர் கணை கொண்டு துணித்து மார்பில்
கவசம் தனை ஓர் கணையால் துகள் கண்டு விண்ணோன்
அவசம் பட ஏழ் கணை தூண்டினன் ஆழி வேண்டிச்
சிவ சங்கர என்று அரிபோற்றிய செம்மல் மைந்தன்.
54
   
1106.
தீங்கு ஆகிய ஓர் எழு வாளியும் செல்ல மார்பின்
ஆங்கார மிக்க மகவான் அயர்வாகி வீழ்ந்தான்
ஓங்கார மேலைப் பொருள் மைந்தனை உம்பர் ஏனோர்
பாங்காய் வளைந்து பொருதார் படுகின்றது ஓரார்.
55
   
1107.
இவ்வாறு அமரர் பொரும் எல்லையில் ஈசன் மைந்தன்
கைவார் சிலையைக் குனித்தே கணை நான்கு தூண்டி
மெய் வாரிதி கட்கு இறைவன் தனை வீட்டி மற்றும்
ஐ வாளியினால் சமன் ஆற்றல் அடக்கினான் ஆல்.
56
   
1108.
ஓர் அம்பு அதனால் மதி தன்னையும் ஒன்று இரண்டு
கூர் அம்பு அதனால் கதிர் தன்னையும் கோதில்
                                     மைந்தன்
ஈர் அம்பு அதனால் அனிலத்தையும் மேவு மூன்றால்
வீரம் பகர்ந்த கனலோனையும் வீட்டி நின்றான்.
57
   
1109.
நின்றார் எவரும் குமரேசன் நிலைமை நோக்கி
இன்றாரையும் மற்று இவனே அடும் என்று தேறி
ஒன்றான சிம்புள் விறல் கண்டு அரி உட்கி ஓடிச்
சென்றால் எனவே இரிந்து ஓடினர் சிந்தை விம்மி.
58
   
1110.
ஓடும் சுரர்கள் திறநோக்கி உதிக்கும் வெய்யோன்
நீடும் கதிர்கள் நிலவைத் துரக் கின்றதே போல்
ஆடும் குமரன் அவரைத் துரந்து அண்டர் முன்னர்
வீடும் களத்தின் இடையே தனி மேவி நின்றான்.
59
   
1111.
ஒல்லா தவரில் பொருதே சில உம்பர் வீழ
நில்லாது உடைந்து சில தேவர்கள் நீங்க நேரில்
வில்லாளி ஆகித் தனி நின்ற விசாகன் மேல் நாள்
எல்லாரையும் அட்டு உலவும் தனி ஈசன் ஒத்தான்.
60
   
1112.
சுரர்கள் யாரும் தொலைந்திட வென்று தான்
ஒருவன் ஆகி உமை மகன் மேவுழி
அருளின் நாரதன் அச்செயல் கண்டு வான்
குருவை எய்திப் புகுந்தன கூறினான்.
61
   
1113.
நல்தவம் புரி நாரதன் கூற்றினை
அற்றம் இல் உணர் அந்தணன் கேட்டு எழீஇ
இற்றதே கொல் இமையவர் வாழ்வு எனாச்
சொற்று வல்லை துயர் உழந்து ஏகினான்.
62
   
1114.
ஆத பன்மதி அண்டர் தமக்கு இறை
மாதிரத்தவர் மால் கரி தன்னுடன்
சாதல் கொண்ட சமர்க் களம் தன் இடைப்
போதல் மேயினன் பொன் எனும் பேரினான்.
63
   
1115.
ஆவி இன்றி அவர் மரி குற்றது
தேவர் ஆசான் தெரிந்து படர் உறாத்
தாவில் ஏர் கெழு சண்முகன் அவ்விடை
மேவி ஆடும் வியப்பினை நோக்கினான்.
64
   
1116.
முழுது உணர்ந்திடு மொய் சுடர்ப் பொன்னவன்
எழுத ஒணாத எழில் நலம் தாங்கி ஓர்
குழவிதன் உருக் கொண்ட குமரனைத்
தொழுது நின்று துதித்து இது சொல்லுவான்.
65
   
1117.
கரி அரி முகத்தினன் கடிய சூரன் என்று
உரைபெறு தானவர் ஒறுப்ப அல்கலும்
பருவரல் உழந்து தன்பதி விட்டு இப் பெரு
வரை இடை மகபதி மறைந்து வைகினான்.
66
   
1118.
அன்னவன் நின் அடி அடைந்து நிற்கொடே
துன்னலர் தமது உயிர் தொலைத்துத் தொன்மை போல்
தன் அரசு எய்தவும் தலைவன் ஆகவும்
உன்னினன் பிறது வேறு ஒன்றும் உன்னலான்.
67
   
1119.
பற் பகல் அரும் தவம் பயின்று வாடினன்
தற்பர சரவணத் தடத்தில் போந்த உன்
உற்பவம் நோக்கியே உவகை பூத்தனன்
சொற்படு துயர் எலாம் தொலைத்து உளான் என.
68
   
1120.
கோடலும் மராத்தொடு குரவும் செச்சையும்
சூடிய குமர நின் தொழும்பு செய்திட
நேடு உறும் இந்திரன் நீ இத் தன்மையின்
ஆடல் செய்திடுவதை அறிகிலான் அரோ.
69
   
1121.
நாரணன் முதலினோர் நாடிக் காண் ஒணா
ஆரண முதல்வனும் உமையும் அன்னவர்
சீர் அருள் அடைந்தனர் சிலரும் அல்லதை
யார் உனது ஆடலை அறியும் நீரினார்.
70
   
1122.
பற்றிய தொடர்பையும் உயிரையும் பகுத்து
இற்றென உணர்கிலம் ஏதம் தீர்கிலம்
சிற்றுணர் உடையது ஓர் சிறியம் யாம் எலாம்
உற்று உனது ஆடலை உணர வல்லமோ.
71
   
1123.
ஆதலால் வானவர்க்கு அரசன் ஆற்றவும்
ஓதி தான் இன்மையால் உன்தன் ஆடலைத்
தீது எனா உன்னி வெம் செருவி ழைத்தனன்
நீதி சேர் தண்டமே நீ புரிந்தனை.
72
   
1124.
மற்று உள தேவரும் மலைந்து தம் உயிர்
அற்றனர் அவர்களும் அறிவு இலாமையால்
பெற்றிடும் குரவரே பிழைத்த மைந்தரைச்
செற்றிடின் எவர் அருள் செய்யற் பாலினோர்.
73
   
1125.
சின் மயம் ஆகிய செம்மல் சிம்புளாம்
பொன் மலி சிறை உடைப் புள்ளின் நாயகன்
வன்மை கொள் விலங்கினை மாற்றல் அல்லது
மின் மினி தனை அடல் விசயம் ஆகுமோ.
74
   
1126.
ஒறுத்திடும் அவுணர்கள் ஒழிய வேர் ஒடும்
அறுத்து அருள் உணர்விலா அளியர் உன் அடி
மறுத்தலில் அன்பினர் மற்று இன்னோர் பிழை
பொறுத்து அருள் கருணையால் புணரி போன்று உளாய்.
75
   
1127.
பரம் உற வணிகரைப் பரித்துப் பல்வளம்
தரும் கலம் கவிழ்ந்திடச் சாய்த்து மற்று அவர்
ஒருதலை விளிதல் போல் உன்னில் பெற்றிடும்
திருவினர் பொருதுனைச் செருவில் துஞ்சினார்.
76
   
1128.
தொழுதகு நின்னடித் தொண்டர் ஆற்றிய
பிழை அது கொள்ளலை பெரும சிந்தையுள்
அழி தரும் இனையவர் அறிவு பெற்று இவண்
எழுவகை அருள் என இறைஞ்சிக் கூறினான்.
77
   
1129.
பொன்னவன் இன்னை புகன்று வேண்டிட
முன்னவர் முன்னவன் முறுவல் செய்து வான்
மன்னவன் ஆதியர் மால் களிற்றொடும்
அந் நிலை எழும் வகை அருள் செய்தான் அரோ.
78
   
1130.
அந்தியின் வனப்பு உடைய மெய்க் குகன் எழுப்புதலும்                               அன்ன பொழுதே
இந்திரனும் மாதிர வரைப் பினரும் வானவரும் யாவரும்                                      எழாஅச்
சிந்தை தனில் மெய் உணர்வு தோன்றுதலும் முன்புரி
                             செயற்கை உணராக்
கந்தனொடு கொல் சமர் புரிந்தது என உன்னினர்
                                கலங்கி எவரும்.
79
   
1131.
கலங்கினர் இரங்கினர் கலுழ்ந்தனர் புலர்ந்தனர்
                               கவன்றனர் உளம்
மலங்கினர் விடந்தனை அயின்றவர் எனும் படி
                               மயர்ந்தனலி சேர்
உலங் கென உலைந்தனர் ஒடுங்கினர் நடுங்கினர் உரம்
                                  தனை இழந்து
இலங்கு எழில் முகம் பொலி விகந்தனர் பொருந்தமை
                                இகழ்ந்தனர்களே.
80
   
1132.
துஞ்சி எழும் அன்னவர்கள் ஏழ் உலகு முன் உதவு
                                   சுந்தரி தரும்
மஞ்சன் அருளோடு விளையாடுவது காண்டலும் வணங்கி
                                    அனையான்
செம் சரண் இரண்டினையும் உச்சிகொடு மோயினர்
                           சிறந்து அலர் துணைக்
கஞ்ச மலரில் பல நிறம் கொள் அரியின் தொகை
                             கவை இயது எனவே.
81
   
1133.
கந்தநம ஐந்து முகர் தந்த முருகேசநம கங்கை உமை
                                         தன்
மைந்த நம பன்னிரு புயத்த நம நீப மலர் மாலை
                                     புனையும்
தந்தை நம ஆறுமுக ஆதி நம சோதி நம தற்பரமதாம்
எந்தை நம என்றும் இளையோய் நம குமார நம என்று
                                     தொழுதார்.
82
   
1134.
பொருந்துதலை அன்புடன் எழுந்தவர்கள் இவ்வகை                               புகழ்ந்து மன மேல்
அரந்தை கொடு மெய்ந்நடு நடுங்குதலும் அன்னதை
                                 அறிந்து குமரன்
வருந்தலிர் வருந்தலிர் எனக் கருணை செய்திடலும்
                                மற்றவர்கள் தாம்
பெருந்துயரும் அச்சமும் அகன்று தொழுதே இனைய
                                  பேசினர்களால்.
83
   
1135.
ஆய அமுதத்தினொடு நஞ்சு அளவி உண்கு நரை                                அவ்விடம் அலால்
தூய அமுதோ உயிர் தொலைக்கும் அது போலும் உனது
                               தொல் அருளினால்
ஏய திரு எய்திட இருந்தனம் உன்னோடு அமர் இயற்றி
                                       அதனால்
நீ எமை முடித்தியலை அன்னதவறு எம் உயிரை
                                 நீக்கியது அரோ.
84
   
1136.
பண்டு பரமன் தனை இகழ்ந்தவன் மகத்தில் இடு பாக                                        மதியாம்
உண்ட பவம் இன்னமும் முடிந்தில அதன்றியும் உனைப்
                                  பொருது நேர்
கொண்டு இகல் புரிந்தனம் அளப்பில் பவம் வந்த
                               குமரேச எமை நீ
தண்ட முறை செய்தவை தொலைத்தனை உளத்துடைய
                               தண் அளியினால்.
85
   
1137.
ஆதலின் எமக்கு அடிகள் செய்த அருளுக்கு நிகர்                                ஆற்றுவது தான்
ஏது உளது மற்று எமை உனக்கு அடியராக இவண்
                                ஈதும் எனினும்
ஆதிபரம் ஆகிய உனக்கு அடியம் யாம் புதிது
                            அளிப்பது எவனோ
தாதையர் பெறச் சிறுவர் தங்களை அவர்க்கு அருள்கை
                                 தக்க பரிசோ.
86
   
1138.
அன்னது எனினும் தெளிவில் பேதை அடியேம் பிழை                             அனைத்தும் உளமேல்
உன்னலை பொறுத்தி எனவே குமர வேள் அவை
                              உணர்ந்து நமை நீர்
முன்னம் ஒரு சேய் என நினைந்து பொருதீர் நமது
                             மொய்ம்பும் உயர்வும்
இன்னும் உணரும் படி தெரித்தும் என ஓர் உருவம்
                                எய்தினன் அரோ.
87
   
1139.
எண் திசையும் ஈர் எழு திறத்து உலகும் எண் கிரியும்
                                    ஏழு கடலும்
தெண் திரையும் நேமிவரையும் பிறவும் வேறு திரிபாகி
                                       உள சீர்
அண்ட நிரை ஆனவும் அனைத்து உயிரும்
                      எப்பொருளும் ஆகி அயனும்
விண்டும் அரனும் செறிய ஓர் உருவு கொண்டனன்
                                  விறல் குமரனே.
88
   
1140.
மண் அளவு பாதலம் எலாம் சரணம் மாதிர வரைப்பும்                                      மிகுதோள்
விண் அளவு எலாம் முடிகள் பேரொளி எலாம் நயனம்
                              மெய்ந் நடுவெலாம்
பண் அளவு வேத மணி வாய் உணர் வெலாம் செவிகள்
                             பக்கம் அயன் மால்
எண் அளவு சிந்தை உமை ஐந்தொழிலும் நல்கி அருள்
                                   ஈசன் உயிரே.
89
   
1141.
ஆனது ஒரு பேர் உருவு கொண்டு குமரேசன் உற                                 அண்டர் பதியும்
ஏனையரும் அற்புதம் இது அற்புதம் இது என்று
                        தொழுது எல்லவரும் ஆய்
வானமிசை நோக்கினர்கள் மெய்வடிவம் யாவையும்
                              வனப்பும் உணரார்
சானு வளவா அரிது கண்டனர் புகழ்ந்து இனைய
                                சாற்றினர்களால்.
90
   
1142.
சேணலம் வந்த சோதிச் சிற்பர முதல்வ எம்முன்
மாண் நலம் உற நீகொண்ட வான் பெரும் கோலம்
                                     தன்னைக்
காணலம் அடியேம் காணக் காட்டிடல் வேண்டும் என்ன
நீள் நலம் கொண்டு நின்ற நெடும் தகை அதனைக்
                                     கேளா.
91
   
1143.
கருணை செய்து ஒளிகள் மிக்க கண்ணவர்க்கு அருளிச்                                      செவ்வேள்
அருண் அமார் பரிதிப் புத்தேள் அந்த கோடிகள்
                                சேர்ந்து என்னத்
தருண் அவில் வீசி நின்ற தனது உரு முற்றும் காட்ட
இரணிய வரைக் கண் நின்ற இந்திரன் முதலோர்
                                      கண்டார்.
92
   
1144.
அடி முதல் முடியின் காறும் அறு முகன் உருவம்
                                     எல்லாம்
கடிது அவன் அருளால் நோக்கிக் கணிப்பு இலா
                             அண்டம் முற்றும்
முடிவறும் உயிர்கள் யாவும் மூவரும் தேவர் யாரும்
வடிவினில் இருப்பக் கண்டு வணங்கியே வழுத்திச்
                                   சொல்வார்.
93
   
1145.
அம்புவி முதலாம் பல் பேர் அண்டமும் அங்கு அங்கு                                      உள்ள
உம்பரும் உயிர்கள் யாவும் உயிர் அலாப் பொருளும்
                                     மாலும்
செம்பது மத்தினோனும் சிவனொடும் செறிதல்
                                     கண்டோம்
எம் பெருமானின் மெய்யோ அகிலமும் இருப்பதம்மா.
94
   
1146.
அறிகிலம் இந்நாள் காறும் அகிலமும் நீயே யாகி
உறைதரு தன்மை நீவந்து உணர்த்தலின் உணர்ந்தாம்
                                     அன்றே
பிறவொரு பொருளும் காணேம் பெரும நின் வடிவம்
                                     அன்றிச்
சிறயம் யாம் உனது தோற்றம் தெரிந்திட வல்லமோ
                                      தான்.
95
   
1147.
முண்டகன் ஒருவன் துஞ்ச முராரி பேர் உருவாய்
                                      நேமிக்
கண் துயில் அகந்தை நீங்கக் கண் நுதல் பகவன்
                                      எல்லா
அண்டமும் அணிப்பூண் ஆர மாகவே ஆங்கோர்
                                      மேனி
கொண்டனன் என்னும் தன்மை குமர நின் வடிவில்
                                      கண்டேம்.
96
   
1148.
நாரணன் மலரோன் பன்னாள் நாடவும் தெரிவின்று
                                      ஆகிப்
பேர் அழல் உருவாய் நின்ற பிரான் திருவடிவே போல்
                                       உன்
சீர் உரு உற்ற தம்மா தெளிகிலர் அவரும் எந்தை
யார் அருள் எய்தின் நம்போல் அடிமுடி தெரிந்திடாரோ.
97
   
1149.
அரியொடு கமலத்தேவும் ஆடல் செய் அகிலம்
                                     தன்னோடு
ஒருவரை ஒருவர் நுங்கி உந்தியால் முகத்தால் நல்கி
இருவரும் இகலும் எல்லை எடுத்த பேர் உரு நீ
                                     கொண்ட
திரு உரு இதனுக்கு ஆற்றச் சிறியன போலும் அன்றே.
98
   
1150.
ஆகையால் எம்பிரான் நீ அரு உரு ஆகி நின்ற
வேக நாயகனே யாகும் எமது மாதவத்தால் எங்கள்
சோகம் ஆனவற்றை நீக்கிச் சூர் முதல் தடிந்தே
                                      எம்மை
நாக மேல் இருத்து மாற்றால் நண்ணினை குமரனே
                                      போல்.
99
   
1151.
எவ் உருவினுக்கும் ஆங்கோர் இடனது ஆய் உற்ற
                                     உன் தன்
செவ் உருவத்தினைக் கண்டு சிறந்தனம் அறம்
                                    பாவத்தின்
அவ் உருவத்தின் துப்பும் அகலுதும் இன்னும் யாங்கள்
எவ் உருவத்தில் செல்லேம் வீடு பேறு அடைதும்
                                      அன்றே.
100
   
1152.
இனையன வழுத்திக் கூறி இலங்கு எழில் குமர மூர்த்தி
தனது பேர் உருவை நோக்கிச் சதமகன் முதலா
                                     உள்ளோர்
தினகரன் மலர்ச்சி கண்ட சில் உணர் உயிர்கள் என்ன
மனமிக வெருவக் கண்கள் அலமர மயங்கிச் சொல்வார்.
101
   
1153.
எல்லையில் ஒளி பெற்றன்றால் எந்தை நின் உருவம்                                      இன்னும்
ஒல்லுவது அன்றால் காண ஒளி இழந்து உலைந்த
                                     கண்கள்
அல்லதும் பெருமை நோக்கி அஞ்சுதும் அடியம் உய்யத்
தொல்லையின் உருவம் கொண்டு தோன்றியே அளித்தி
                                     என்றார்.
102
   
1154.
என்று இவை புகன்று வேண்ட எம்பிரான் அருளால்                                      வான்போய்
நின்ற பேர் உருவம் தன்னை நீத்து அறுமுகத் தோன்
                                     ஆகித்
தொன்று உள வடிவத்தோடு தோன்றலும் தொழுது
                                     போற்றிக்
குன்று இரும் சிறைகள் ஈர்ந்த கொற்றவன் கூறல்
                                      உற்றான்.
103
   
1155.
தொல் நிலை தவாது வைகும் சூரனே முதலா உள்ள
ஒன்னலர் உயிரை மாற்றி உம்பரும் யானும் பாங்கர்
மன்னி நின்று ஏவல் செய்ய வான் உயர் துறக்கம்
                                      நண்ணி
என் அரசு இயற்றி எந்தாய் இருத்தி என் குறை ஈது
                                     என்றான்.
104
   
1156.
இகமொடு பரமும் வீடும் ஏத்தினர்க் குலப்பு உறாமல்
அகன் அமர் அருளால் நல்கும் அறுமுகத் தவற்குத்
                                      தன் சீர்
மகபதி அளிப்பான் சொற்ற வாசகம் சுடர் ஒன்று
                                      அங்கிப்
பகவனுக்கு ஒருவன் நல்கப் பராவிய போலு மாதோ.
105
   
1157.
வானவர் கோனை நோக்கி வறிதுற நகைத்துச் செவ்வேள்
நீ நமக்கு அளித்த தொல் சீர் நினக்கு நாம் அளித்தும்
                                     நீவிர்
சேனைகளாக நாமே சேனை அம் தலைவன் ஆகித்
தானவர் கிளையை எல்லாம் வீட்டுதும் தளரேல்
                                     என்றான்.
106
   
1158.
கோடல் அம் கண்ணி வேய்ந்த குமரவேள் இனைய கூற
ஆடியல் கடவுள் வெள்ளை அடல் களிற்று அண்ணல்
                                     கேளா
வீடு உற அவுணர் எல்லாம் வியன் முடி திருவினோடும்
சூடினன் என்னப் போற்றிச் சுரரொடு மகிழ்ச்சி
                                    கொண்டான்.
107
   
1159.
அறுமுகத் தேவை நோக்கி அமரர் கோன் இந்த
                                      அண்டத்
துறை தரு வரைகள் நேமி உலகு உயிர்பிறவும் நின்னால்
முறை பிறழ்ந்தனவால் இந்நாள் முன்புபோல் அவற்றை
                                     எல்லாம்
நிறுவுதி என்ன லோடும் நகைத்து இவை நிகழ்த்தல்
                                     உற்றான்.
108
   
1160.
இன்னதோர் அண்டம் தன்னில் எம்மில் வேறு உற்ற                                      எல்லாம்
தொன் நெறி ஆக என்றோர் தூமொழி குமரன் கூற
முன் உறு பெற்றித்தான முறை இறந்து இருந்தது எல்லாம்
அந்நிலை எவரும் நோக்கி அற்புதம் அடைந்து நின்றார்.
109
   
1161.
நிற்கும் எல்லையின் நிலத்திடை ஆகிப்
பொற்கெனத் திகழ் பொருப்பிடை மேவும்
சில் குணக் குரிசில் சேவடி தாழூஉச்
சொற்க நாடுள சுரேசன் உரைப்பான்.
110
   
1162.
ஆண்தகை பகவ ஆரண மெய்ந்நூல்
பூண்ட நின்னடிகள் பூசனை ஆற்ற
வேண்டுகின்றும் வினையேம் அது செய்ய
ஈண்டு நின்னருளை ஈகுதி என்றான்.
111
   
1163.
என்னலும் குகன் இசைந்து நடந்தே
பொன்னினால் உயர் பொருப்பினை நீங்கித்
தன்ன தொண் கயிலை சார்ந்திடு ஞாங்கர்
மன்னி நின்றது ஒரு மால்வரை புக்கான்.
112
   
1164.
குன்று இரும் சிறை குறைத்தவன் ஏனோர்
ஒன்றியே தொழுது உவப்பு உளம் எய்தி
என்றும் நல் இளையன் ஆகிய எம்கோன்
பின் தொடர்ந்தனர் பிறங்கலில் வந்தார்.
113
   
1165.
சூரல் பம்பு துறு கல் முழை கொண்ட
சாரல் வெற்பினிடை சண்முகன் மேவ
ஆரும் விண்ணவர் அவன் கழல் தன்னைச்
சீரி தர்ச்சனை செயற்கு முயன்றார்.
114
   
1166.
அந்த வேலை அமரர்க்கு இறை தம்கண்
முந்து கம்மியனை முன்னுற அன்னான்
வந்து கை தொழலும் மந்திரம் ஒன்று
நந்த மாநகரின் நல்கிவண் என்றான்.
115
   
1167.
அருக்கர் தம் தொகை அனைத்தையும் ஒன்றா
உருக்கி ஆற்றி யென ஒண்மணி தன்னால்
திருக்கிளர்ந்து உலவு செய்யதொர் கோயில்
பொருக்கு எனப் புனைவர் கோன் புரிகுற்றான்.
116
   
1168.
குடங்கர் போல் மகுடம் கெழு உற்ற
இடம்கொள் கோபுர இருக்கையின் நாப்பண்
கடம் கலுந்திடும் கரிக்குருகு உண்ணும்
மடங்கல் கொண்டது ஓர் மணித் தவிசு ஈந்தாள்.
117
   
1169.
ஈந்த எல்லை தனில் இந்திரன் ஏவப்
போந்து வான் நெறி புகுந்திடு தூநீர்
சாந்த மாமலர் அழல் புகை ஆதி
ஆய்ந்து தந்தனர்கள் அண்டர்கள் பல்லோர்.
118
   
1170.
அன்ன காலையில் அண்டர்கள் மேலையோன்
சென்னி ஆறு உடைத் தேவனை வந்தியா
உன்ன தாளருச் சித்தியாம் உய்ந்திட
இந் நிகேதனம் ஏகுதி நீ என்றான்.
119
   
1171.
கூற்றம் அன்னது உட்கொண்டு விண்ணோர் எலாம்
போற்ற மந்திரம் புக்கு நனந்தலை
ஏற்ற ரித்தொகை ஏந்து எழில் பீட மேல்
வீற்று இருந்தனன் வேதத்தின் மேலை யோன்.
120
   
1172.
ஆன காலை அமரர்கள் வாசவன்
ஞான நாயக நாங்கள் உனக்கு ஒரு
தானை ஆகும் தலைவனை நீ எனா
வான நீத்தத்து மஞ்சனம் ஆட்டினார்.
121
   
1173.
நொதுமல் பெற்றிடு நுண்துகில் சூழ்ந்தனர்
முதிய சந்தம் முதலம் அட்டித்தனர்
கதிரும் நல் பொன் கலன் வகை சாத்தினர்
மது மலர்த் தொகை மாலிகை சூட்டினார்.
122
   
1174.
ஐ வகைப்படும் ஆவியும் பாளிதம்
மெய் விளக்கமும் வேறு உள பான்மையும்
எவ் எவர்க்கும் இறைவற்கு நல்கியே
செவ்விது அர்ச்சனை செய்தனர் என்பவே.
123
   
1175.
புரந்தரன் முதல் புங்கவர் தம் உளத்து
அரந்தை நீங்க அர்ச்சனை செய்து பின்
பரிந்து தாழ்ந்து பரவலும் ஆயிடைக்
கரந்து வள்ளல் கயிலையில் போயினான்.
124
   
1176.
வெற்பின் மிக்கு உயர் வெள்ளி அம் பொற்றையில்
சிற்பரன் மறைந்து ஏகலும் தேவரும்
பொற்பின் மேதகு பொன் நகர் அண்ணலும்
அற்புதத்துடன் அவ்வரை நீங்கினார்.
125
   
1177.
ஈசன் மைந்தன் இளையன் இமையவர்
பூசை செய்யப் பொருந்தலின் அவ்வரை
மாசு இல் கந்த வரை என யாவரும்
பேச ஆங்கு ஒர் பெயரினைப் பெற்றதே.
126
   
1178.
ஆன கந்த வடுக்கலைத் தீர்ந்து போய்
வான மன்னன் மனோவதி நண்ணினான்
ஏனை வானவர் யாவரும் அவ் அவர்
தானம் எய்தினர் தொன்மையில் தங்கினார்.
127
   
1179.
உயவல் ஊர்தி கொண்டு ஒய் என முன்னரே
கயிலை அம் கிரி ஏகிய கந்தவேள்
பயிலும் வீரரும் பார் இடமள்ளரும்
அயலின் மேவர ஆயிடை வைகினான்.
128