தேவகிரிப் படலம்
 
1532.
மாகவம் தங்கள் கூளி வாய்ப் பறை மிழற்ற ஆடும்
ஆக வந்து அங்கும் எல்லை அகன்று செம் கதிர் வேல்
                                      அண்ணல்
சோக வந் தங்கொண் டுள்ள சுரருடன் அனிகம் சுற்றி
ஏகவந்து அம் கண் நின்ற இமகிரி எல்லை தீர்ந்தான்.
1
   
1533.
அரி அயன் மகத்தின் தேவன் அமரர்கள் இலக்கத்து
                                      ஒன்பான்
பொரு திறல் வயவர் ஏனைப் பூதர்கள் யாரும் போற்றத்
திரு நெடு வேலோன் தென்பால் செவ்விதின் நடந்து
                                     மேல்பால்
இரவி யில் இரவி செல்ல இமையவர் சயிலம் சேர்ந்தான்.
2
   
1534.
ஒப்பறு சூர் பின்னோனை ஒருவன் வேல் அட்ட தன்மை
இப்புற உலகின் உள்ளார் யாவரும் உணர்வர் இன்னே
அப்புற உலகின் உள்ளார் அறிந்திட யானே சென்று
செப்புவன் என்பான் போலச் செங்கதிர் மறைந்து
                                   போனான்.
3
   
1535.
பானு என்று உரைக்கும் மேலோன் பகல் பொழுது
                       எலாம் கைக் கொண்டான்
ஏனைய மதியப் புத்தேள் இரவினுக்கு அரசன் ஆனான்
நான் இவற்றிடையே சென்று நண்ணுவன் என்று செம்தீ
வானவன் போந்தது என்ன வந்தது மாலைச் செக்கர்.
4
   
1536.
வம்பு அவிழ் குமுதம் எல்லா மலர்ந்திடு மாலை தன்னில்
வெம் படை பயிலத் தோன்றும் வேளுக்குத் தான் முன்
                                         வந்த
அம்புதி முரசம் ஆயிற்று ஆகையால் தானும் வெற்றிக்
கொம்பென விளங்கிற்று என்ன எழுந்தது குழவித்
                                       திங்கள்.
5
   
1537.
எற்று எதிர் மலைந்து நின்ற இகல் உடை அவுணர்
                                  தம்மேல்
காற்று எனத் தேர் கடாவிக் கடும் சமர் புரிந்த
                                வெய்யோன்
மாற்றரும் செம் பொன் மார்பில் வச்சிரப் பதக்கம் இற்று
மேல் திசை வீழ்ந்தது என்ன இளம் பிறை வழங்கிற்று
                                      அன்றே.
6
   
1538.
கானத்தின் ஏனம் ஒத்த கனை இருள் சூழல் மற்று அவ்
ஏனத்தின் எயிற்றை ஒத்த இளம் பிறை அதனைப் பூண்ட
கோன் ஒத்த தண்டம் அந்தக் கூர் எயிறு உகுத்த முத்தம்
தான் ஒத்து விளங்கு கின்ற தாரகா கணங்கள் எல்லாம்.
7
   
1539.
அல் இது போந்த காலை ஆரமா மாலை என்னக்
கல் என அருவி தூங்கும் கடவுள் வெற்பு ஒருசார்
                                      எய்தி
மெல் இதழ் வசைத் தேவும் விண்டுவும் விண்ணின்
                                     தேவும்
பல் இமை யோரும் செவ்வேள் பதமுறை தொழுது
                                  சொல்வார்.
8
   
1540.
வன்கணே உடைய சூர் பின் வருத்திட இந்நாள் காறும்
புன் கணே உழந்தேம் அன்னான் பொருப்பொடு முடியச்
                                       செற்றாய்
உன் கணே வழிபாடு ஆற்ற உன் இனம் இன்ன வெற்பின்
தன் கணே இறுத்தல் வேண்டும் தருதி இவ்வரம் அது
                                     என்றார்.
9
   
1541.
பசைந்திடும் ஆர்வம் கொண்ட பண்ணவர் இனைய
                                   தன்மை
இசைந்தனர் வேண்டும் எல்லை எஃகு உடை அண்ணல்
                                     அம் கண்
அசைந்திடும் தன்மை உன்னி அருள் செய்வது கண்டு
                                   அன்னோர்
தசைந்து மெய் பொடிப்பத் துள்ளித் தணப்பில் பேர்
                               உவகை பூத்தார்.
10
   
1542.
ஒண் நிலவு உமிழும் வேலோன் ஒலி கழல் தானை
                                   யோடும்
கண்ணனை முதலா உள்ள கடவுளர் குழுவினோடும்
பண்ணவர் கிரிமேல் சென்று பாங்கரில் தொழுது போந்த
விண்ணவர் புனைவன் தன்னை விளித்து இவை புகலல்
                                      உற்றான்.
11
   
1543.
புகல் உறும் சூழ்ச்சி மிக்கோய் புங்கவராய் உளோரும்
தொகல் உறு கணர்கள் யாரும் துணைவரும் யாமும்
                                       மேவ
அகல் உறும் இனைய வெற்பின் அரும் கடி நகரம்
                                     ஒன்றை
விகலமது இன்றி இன்னே விதித்தியால் விரைவின்
                                    என்றான்.
12
   
1544.
குழங்கல் வேட்டுவக் கோதையர் ஆடலும்
கழங்கு நோக்கிக் களிப்பவன் மற்று இது
வழங்கும் எல்லை வகுப்பன் என்று அன்னவன்
தழங்கு நூபுரத்தாள் பணிந்து ஏகினான்.
13
   
1545.
மகர தோரணம் வாரியின் மல்கிய
சிகர மாளிகை செம் பொனின் சூளிகை
நிகர் இல் பற் பல ஞெள்ளல்கள் ஈண்டிய
நகரம் ஒன்றினை ஆயிடை நல்கினான்.
14
   
1546.
அவ் வரைக் கண் அகன் பெரு நொச்சியுள்
கைவல் வித்தகக் கம்மியர் மேலவன்
எவ் எவர்க்கும் இறைவன் இருந்திடத்
தெய்வ தக்குலம் ஒன்று செய்தான் அரோ.
15
   
1547.
மாற்றரும் பொன் வரையுள் மணிக்கிரி
தோற்றி என்னச் சுடர் கெழு மாழையின்
ஏற்ற கோட்டத்து இழைத்தனன் கேசரி
ஆற்று கின்ற அரதனப் பீடிகை.
16
   
1548.
இனைய தன்மையும் ஏனவும் நல்கியே
மனுவின் தாதை வருதலும் மள்ளர் தம்
அனிக மோடும் அமரர்கள் தம் மொடும்
முனையின் வேல் படை மொய்ம்பன் அங்கு ஏகினான்.
17
   
1549.
அறு முகத்தவன் அந் நகர் ஏகியே
துறுமல் உற்றிடும் தொல் பெரும் தானையை
இறுதி அற்ற இருக்கை கொள் ஆவணம்
நிறுவலுற்று நிகேதனத்து எய்தினான்.
18
   
1550.
இரதம் விட்டு அங்கு இழிந்து பொன் பாதுகை
சரணம் வைத்துத் தணப்பரும் வீரரும்
சுரரும் உற்று உடன் சூழ்தரத் துங்கவேல்
ஒருவன் மற்று அவ் உறையுளின் ஏகினான்.
19
   
1551.
ஊறு இல் வெய்யவர் யாரும் ஒரோ வழிச்
சேறல் எய்திச் செறிந்து என வில் விடு
மாறு இல் செம் சுடர் மா மணிப் பீடமேல்
ஏறி வைகினன் யாரினும் மேலை யோன்.
20
   
1552.
பொழுது மற்றதிற் பூவினன் ஆதியாம்
விழுமை பெற்றிடும் விண்ணவர் யாவரும்
குழுமல் உற்றுக் குமரனை அவ்விடை
வழி படத் தம் மனத்திடை உன்னினார்.
21
   
1553.
புங்கவன் விழி பொத்திய அம்மை தன்
செம் கை தன்னில் சிறப்பொடு தோன்றிய
கங்கை தன்னைக் கடவுளர் உன்னலும்
அம் கண் வந்ததை அப்பெரு மா நதி.
22
   
1554.
சோதி மாண் கலன் தூயன பொன்துகில்
போது சாந்தம் புகை மணி பூம் சுடர்
ஆதி ஆக அருச்சனைக்கு ஏற்றன
ஏதும் ஆயிடை எய்து வித்தார் அரோ.
23
   
1555.
அண்டர் தொல்லை அமுதம் இருத்திய
குண்டம் உற்ற குடங்கர் கொணர்ந்திடா
மண்டு தெண் புனல் வானதி தன் இடை
நொண்டு கொண்டனர் வேதம் நுவன்றுளார்.
24
   
1556.
அந்த எல்லை அயன் முதல் தேவரும்
முந்து கின்ற முனிவரும் சண்முகத்து
எந்தை பாங்கரின் ஈண்டி அவன் பெயர்
மந்திரம் கொடு மஞ்சனம் ஆட்டினார்.
25
   
1557.
வெய்ய வேல் படை விண்ணவற்கு இன்னணம்
ஐய மஞ்சனம் ஆட்டி முன் சூழ்ந்திடும்
துய்ய பொன்னம் துகிலினை நீக்கியே
நொய்ய பல் துகில் நூதனம் சாத்தினார்.
26
   
1558.
வீற்று ஒர் சீய வியன் தவிசின் மிசை
ஏற்றி வேளை இருத்தி அவன் பெயர்
சாற்றி மா மலர் சாத்தித் தருவிடைத்
தோற்று பூவின் தொடையலும் சூட்டினார்.
27
   
1559.
செய்ய சந்தனத் தேய்வை முன் கொட்டினர்
ஐய பாளிதம் அப்பினர் நாவியும்
துய்ய நானமும் துன்னம் அட்டித்தனர்
மெய்யெலாம் அணி மேவரச் சாத்தினார்.
28
   
1560.
சந்து கார் அகில் தண் என் கருப்புரம்
குந்துருக்கம் ஒண் குக்குலு வப்புகை
செந் தழல் சுடர் சீர் மணி ஆர்ப் பொடு
தந்து பற்றித் தலைத் தலை சுற்றினார்.
29
   
1561.
இத் திறத்தவும் ஏனவும் எஃக வேல்
கைத் தலத்துக் கடவுட்கு நல்கியே
பத்திமைத் திறனால் பணிந்து ஏத்தினர்
சித்தி சங்கற்பம் செய்திடும் செய்கையோர்.
30
   
1562.
தேவு கொண்ட சிலம்பினில் பண்ணவர்
ஏவரும் குழீஇ இன்னணம் பூசனை
ஆவது ஆற்றுவது கொண்டு அமர்ந்தனன்
மூ இரண்டு முகனுடை மொய்ம்பினோன்.
31
   
1563.
அமரர் வெற்பில் அயிற் படை ஏந்திய
விமலன் உற்றது சொற்றனம் மேல் இனிச்
சமர் இடைப்படு தாரகன் தந்திடு
குமரன் உற்றது மற்ற அதும் கூறுகேம்.
32