சுரம்புகு படலம்
 
1726.
புற்று இடம் கொண்ட புத்தேள் புரந்தரற்கு அருள்
                                 செய்திட்ட
நல் தலம் தன்னைச் சேர்ந்த நகரம் உள்ளனவும்
                                 காணூஉக்
கொற்ற வெம் கதிர் வேல் அண்ணல் கொல் உலை
                            அழலில் செக்கர்
பற்றிய இரும்பு போலும் பாலை அம் கானத்து உற்றான்.
1
   
1727.
ஏழு நேமியும் பெரும் புறக் கடலும் எண் திசையும்
சூழ அன்னதால் அழி வின்றித் தொன்மை போல் ஆகி
ஆழி உள்ளுறும் வடவையின் அவற்றினைப் பருகி
ஊழி தன்னினும் இருப்பது அவ் உயர் பெரும் பாலை.
2
   
1728.
அண்டர் நாயகன் உலகு அடும் மகம் தனக்கு ஆகும்
பண்டமே செறி பல் வளம் ஆருயிர் பசுக்கள்
மண்டு நேமி நெய் நிலங்கலமாய் உற மலர் தீக்
குண்டமாய் அது கள்ளி சூழ் கொடிய வெம்பாலை.
3
   
1729.
வண்ண ஒண் சுதை மெய்யுடை வர நதி கேள்வன்
நண்ணு தொல் உலகு ஆகியே நரலை உற்று என்னத்
தண்ணிலா எழு நாத்தலை இரண்டு உடைத் தழலின்
பண்ணவற்கு உலகாயது முது பெரும் பாலை.
4
   
1730.
உடைய தொல்குலக் கேண்மையால் அவ்வனத்து உறையும்
கொடிய வன்னிபால் சென்றதோ வெப்பம் மேல் கொண்டு
நடு நடுங்கி வெம் புகை உமிழ்ந்து அரற்றி நா உலர்ந்து
கடல் படிந்து நீர்பருகுமால் வடவை அம் கனலே.
5
   
1731.
கற்றை அம் கதிர்ப் பரிதியும் மதியும் அக் கானகம்
சுற்றியேகுவது அல்லது மிசை புகார் சுரரும்
மற்று உளார்களும் அனையரே எழிலியும் மருத்தும்
எற்றை வைகலும் அதன் புடை போகவும் இசையா.
6
   
1732.
சேனம் வெம் பணி ஒண் புறா விரலை மான் செந்நாய்
ஆனை ஆதிகள் அவ்வனத்து இருக்கவும் ஆவி
போனது இல்லையால் அங்கி இற்று ஓங்கிய பொருள்கள்
மேனி கன்றுவது அன்றியே விளியுமோ அதனால்.
7
   
1733.
எண்ணினும் சுடும் பாலை அம் கானிடை எழுந்த
கண்ணகன் புகை அழல் படுகின்ற காட்சியவே
விண்ணின் நீலமும் செக்கரும் அவற்றினால் வெடித்த
புண்ணும் மொக்குளும் கதிர்களும் உடுக்களும் போலாம்.
8
   
1734.
வேக வெய்யவன் புடை உறாத அவ்வன மிசையே
போக ஓர் இறை எழுந்தழல் சுட்டது போலும்
ஏகு தேர் ஒரு கால் இலா இழந்ததால் இருகால்
பாகிழந்தனன் அவன் கதிர் அங்கி பட்டனவே.
9
   
1735.
தங்கள் தொல்பவம் அகன்றிலா விண்ணவர் தம்மைத்
துங்க முத்தியின் பொருட்டினால் அடைபவர்
                                தொகைபோல்
அங்கம் நொந்து தம் போலவே வெப்பம் உற்று அயரும்
கங்கம் நாடியே நீழலுக்கு அடைவன கலைகள்.
10
   
1736.
கோல வெம் கதிர் மதி இவர் வைகலும் கொடிய
பாலை வெம் சுரத்து ஆர் அழல் வெம்மை பட்டனரோ
காலை தன்னினும் மாலை அம் பொழுதினும் கங்குல்
வேலை தன்னினும் பிறவினும் வேலை நீர் படிவார்.
11
   
1737.
தொடரும் வானவர் யாவரும் ஐயை தாள் தொழுவார்
கொடிய பாலை முன் உணர்கிலாது அணுகினர்
                                  கொல்லோ
அடி சிவந்து அகம் வெம்பியே அமுதம் உண்டதற்காப்
படியின் மேல் என்றும் செல்கிலர் விண்மிசைப் படர்வார்.
12
   
1738.
ஒள்ளிது ஆகிய தலைமையில் பிறந்துளோர் உலகம்
எள்ளும் நல்குரவு எய்தலால் இழிந்தவர் கண்ணும்
கொள்ளும் மாறு ஒரு பயன் குறித்து ஏகல் போல்
                                  கொடிய
கள்ளி தன் புடை நீழலுக்கு ஒதுங்குவ கரிகள்.
13
   
1739.
இரவி கம்மியன் சுட்டுறு கோல் கதிர் எரிதீ
மருவு செம் தரை பொறி மணி கொள் கலம் வறுங் கான்
கரிகளே கரிகால் குழல் துதிக்கை நீர் கானல்
புரிதரும் பணி வெந்திடும் பணிக்குலம் போலும்.
14
   
1740.
ஆன்ற வான் புவி நதிப்புனல் பாதலம் அதன்கண்
தோன்று நீத்த நீர் யாவையும் ஒருங்கு உறத் துற்றுச்
சான்ற பாலை அம் செம்தழல் அப்புனல் தன்னைக்
கான்ற வாறு எனக் கிளர்வன அந்நிலக் கானல்.
15
   
1741.
விஞ்சு கானல் வெண் தேரினை ஆறுஎன விரும்பி
நெஞ்சில் உன்னியே இரலை மான் மடப்பிடி நெடும்
                                      தாள்
குஞ்சரம் திரிந்து உலைவன கொடிய வெம் பணிகால்
நஞ்சு தன்னையும் அருந்துவ ஞமலி நீர் நசையால்.
16
   
1742.
செய்ய மண் மகள் உலப்புறா உந்தி அம் தீயாய்
வெய்யவன் செலற்கு அரிய அப்பாலை மேவுதலான்
மொய் அயில் வெம் பணிபுகை அழல் உமிழ்வன
                                   முரணும்
மை உறும் கொடு நஞ்சொடு கான்ற செம் மணிகள்.
17
   
1743.
முளையின் அம் சொரி முத்தமும் முந்து செம் பரலும்
அளவு இல் பாந்தளின் மணிகளும் ஈண்டியே அமர்தல்
விளிவில் அவ்வனத்து தீச்சுடத் தனது மெய் வெடித்தே
உளையும் மண் மகள் மொக்குள் உற்றிடும் திறன் ஒக்கும்.
18
   
1744.
கள்ளிபட்டன பாலையும் தீந்தன கரிந்து
முள்ளி பட்டன எரிந்தன குராமரம் முளிந்து
கொள்ளிபட்டன கார் அகில் அன்னதால் கொடும்தீப்
புள்ளி பட்டது போன்றது பாலை அம் புவியே.
19
   
1745.
இன்னது ஆகிய பாலை அம் சுரத்திடை இறைவன்
தன்னது ஆகிய தானைகள் ஒடும் தலைப் படலும்
மின்னு மாமுகில் பொழிந்த பின் தண் அளிமிக்கு
மன்னுகின்ற பூம் குறிஞ்சி போல் ஆயது அவ்வனமே.
20
   
1746.
ஆற்ற ருந்திறல் அங்கி தன் அரசியல் முறையை
மாற்றி எம்பிரான் வருணற்கு வழங்கினான் என்ன
ஏற்றம் ஆகிய வெம்மைபோய் நீங்கியே எவரும்
போற்று நீரொடு தண்ணளி பெற்றது அப் புவியே.
21
   
1747.
காதல் நீங்கலாது அலமரும் ஆருயிர்க் கரணம்
ஆதி ஈசனது அருளினால் அவனது ஆகிய போல்
ஏது நீரிலா தழல் படு வெய்யகான் இளையோன்
போதலால் குளிர் கொண்டது நறுமலர்ப் பொழிலாய்.
22
   
1748.
புற நெறிக் கணே வீழ்ந்துளோர் சிவன் அருள் புகுங்கால்
அறிவும் ஆற்றலும் குறிகளும் வேறு பட்டன போல்
வறிய செம் தழல் வெவ்வனம் வேலவன் வரவால்
நறிய தண்மலர்ச் சோலையாய் உவகை நல்கியதே.
23
   
1749.
நீர் அறு முரம்பின் தன்மை நீங்கும் அச் சுரத்தின்
                                  தன்பால்
ஈர் அறு புயத்தன் செல்ல எழில் கெழு பரங்குன்றத்தில்
பார் அறு தம் பூண்டு உள்ள பராசரன் சிறார்கள் ஆய
ஓர் அறு வகைமையோரும் ஓதியால் அதனைக் கண்டார்.
24
   
1750.
தத்தனே அனந்தன் நந்தி சதுர் முகன் பரிதிப் பாணி
மெய்த்தவ மாலி என்ன மேவுமூ இருவர் தாமும்
அத்தனது அருளை முன்னி அடுக்கலின் இருக்கை நீக்கி
உத்தர நடவை எய்தி ஒய்யெனப் படர்தல் உற்றார்.
25
   
1751.
ஆர் வலர் ஆகும் மைந்தர் அறுவரும் அளகை நேடிப்
பார்வல் வந்து அணையும் மா போல் பாலை என்று
                             உரைக்கும் எல்லை
நேர் வருகின்ற காலை நெடும் படை நீத்தம் சூழச்
சூர் வினை முடிப்பான் செல்லும் தோன்றல் வந்து
                            அணியன் ஆனான்.
26
   
1752.
அணிமையில் சேயோன் நண்ண ஆறுமா முகமும்
                                      பன்னீர்
இணை தவிர் புயமும் கையும் ஏந்து எழில் படையின்
                                       சீரும்
மணி அணி மார்பும் செம்கேழ் வான் துகின் மருங்கும்
                                        பாதத்
துணையும் அத் துணையில் கண்டு தொழுது கண்
                           களிப்புக் கொண்டார்.
27
   
1753.
மூவிரு திறத்தினோரும் முற்று ஒருங்கு உணர்ந்த வள்ளல்
பூ வடி வணங்கி தேனீப் புது நறா அருந்தி ஆர்த்து
மேவரும் தன்மைத்து என்ன வியப்பொடு வழுத்தி நின்று
தேவர்கள் தேவ எம்பால் திருவருள் செய்தி என்றார்.
28
   
1754.
என்று இவை இருமூ வோரும் இசைத்து உழி உயிர்கட்கு
                                       எல்லாம்
ஒன்றிய உயிரும் ஆகி உணர்வுமாய் இருந்த மூர்த்தி
தன் திரு மலர்த்தாள் முன்னம் தலை அளியோடு
                                      தாழ்ந்து
நின்று கைதொழுதிட்டு அன்னோர் நிலைமையை
                                மகவான் கூறும்.
29
   
1755.
மறு வறு பராசரன் தன் மதலைகள் ஆகு மின்னோர்
அறுவறும் சிறாரே ஆகி ஆடுறு செவ்வி தன்னில்
நிறை தரு சரவணத்து நெடும் தடம் புனலில் பாய்ந்து
முறை முறை புக்கு மூழ்கி முகேரென அலைக்கல்
                                     உற்றார்.
30
   
1756.
உலைத்தலை உணர்ச்சி கொள்ள உள் உயிர்
                              திரியுமாபோல்
நிலைத்தலை இன்றி யார்க்கும் நீந்தல் செய் குண்டு
                                    நீத்தம்
அலைத்தலை அடையும் எல்லை ஆயிடை வதிந்த
                                   மீன்கள்
தலைத் தலை இரிய இன்னோர் தன்மை அங்கு
                         அதனைக் கண்டார்.
31
   
1757.
அங்கு அது தெரிந்து நின்றோர் ஆண்டு உறும் மீன்கள்
                                         பற்றி
துங்கம் அது உடைய கோட்டின் சூழல் உய்த்து உலவும்
                                      எல்லைச்
செங்கதிர் உச்சி வேலைச் செய் கடன் நிரப்ப உன்னிப்
பங்கம் இல் நோன்மை பூண்ட பராசரன் அங்கண்
                                      வந்தான்.
32
   
1758.
வள்ளுறை கொண்ட தெய்வ வான் சரவணத்து வந்தோன்
பிள்ளைகள் ஆகும் இன்னோர் பிடித்த புன் தொழிலை
                                     நோக்கித்
தள்ளரும் சினம் மேல் கொண்டு தனயர் காள் நீவிர்
                                      ஈண்டே
துள் உறு மீனம் ஆகிச் சுலவுதிர் என்று சொற்றான்.
33
   
1759.
அவ்வுரை இறுக்கு முன்னர் அறுவரும் மேல் நாள்
                                    ஆற்றும்
வெவ்வினை ஊழின் பாலால் மீன் உரு வாகி அஞ்சி
எவ்வம் இது அகலுகின்றத எப்பகல் உணர்த்தி என்னச்
செவ்விதின் உணர்ந்து மேலைத் திரு முனி புகலல்
                                     உற்றான்.
34
   
1760.
இத் தடம் தன்னில் மேல் நாள் இராறு தோள் உடைய
                                    அண்ணல்
அத்தனது அருளால் வைக அனையனை எடுக்கும்
                                  அம்மை
மெய்த்தனம் உகுக்கும் தீம்பால் வெள்ளமாம் அதனை
                                        நீவிர்
துய்த்திடும் எல்லை தன்னில் தொல் உருவாதிர் என்றான்.
35
   
1761.
என்று இவை முனிவன் கூறி இரும் பகல் கடனை
                                  ஆற்றிச்
சென்றனன் அதன் பின் மீனின் திரு உரு அமைந்த
                                  இன்னோர்
அன்று தொட்டு அளப்பு இல் காலம் அலமரும்
                             உணர்ச்சி எய்தி
மன்றல் அம் சரவணத்து மாண் பெரும் தடாகத்து
                                  உற்றார்.
36
   
1762.
ஐயநீ அனைய பொய்கை அமர்தலும் அவ்வை கண்டு
                                     ஆங்கு
கொய் என எடுப்பக் கொங்கை உகள நின்று இழிந்த
                                     தீம்பால்
துய்ய தோர் நீத்தம் ஆகித் துறுமலும் அதனைத்
                                     துய்த்து
மையல் நீங்கு உற்றுத் தொல்லை வாலிய வடிவம்
                                    பெற்றார்.
37
   
1763.
தொல் உரு அடைந்த இன்னோர் தூமதி வேணி
                               அண்ணல்
நல் அருள் அதனால் வந்து நவை அகல்
                          பரங்குன்றத்தின்
எல்லையில் விரதம் பூண்டு ஆங்கு இருந்தனர் எந்தை
                                      ஈண்டுச்
செல்வது உணர்ந்து போந்தார் என்றனன் தேவர்
                                     செம்மல்.
38
   
1764.
தம் மகவு உரைக்கும் கூற்றம் தாதையர் வினவு மா
                                    போல்
அம் மகபதி சொல் கேளா அருள் செய்து பராசரன் தன்
செம்மல்கள் தம்மை நோக்கிச் செயிர் அறு குணத்து
                                         நீவிர்
எம்மொடு செல்வீர் என்றான் யாவையும் உணர்ந்த
                                     பெம்மான்.
39
   
1765.
பராசரன் மைந்தர் அன்ன பான்மையை வினவிச்
                                செவ்வேல்
கரா சரண் அடைந்தேம் என்று கட்டு உரைத்து
                        இறைஞ்சிச் செல்லச்
சராசரம் யாவும் தந்த சண்முகன் தழல்கட் கெல்லாம்
இராசர் தம் தன்மை எய்தும் இரும் சுரம் கடந்து
                                  போனான்.
40