சுக்கிரன் உபதேசப் படலம்
 
2455.
அற்று ஆகின்ற வேலையின் முன்னோர் அரணம் போல்
சுற்றா நிற்கும் தானவர் தம் கோன் தொலைவில் சீர்
பெற்றான் என்னும் தன்மையை உன்னிப் பெரு வன்மை
உற்றார் ஒல் என்று ஆர்த்தனர் ஆற்ற உவப் பெற்றார்.
1
   
2456.
ஊழியில் வேதன் கண் துயில் வேலை உலகம் சூழ்
ஆழிகள் ஏழும் ஆணையின் நிற்றல் அது நீங்கி
மாழை கொள் மேருச் சுற்றியது என்ன மகத்து எல்லை
சூழ் அறல் நீங்கிச் சூர் முதல் தன்பால் துன்னுற்றார்.
2
   
2457.
கண்டார் ஆர்த்தார் கான் மிசை வீழ்ந்தார் கமழ் வேரி
கொண்டார் ஒத்தார் கைத் தொழுகின்றார் குப்புற்றார்
அண்டா ஓகை பெற்றனர் தொன்னாள் அயர்வு எல்லாம்
விண்டார் வெம் சூர் தன் புடை ஆகி விரவு உற்றார்.
3
   
2458.
முன் ஆகு உற்றோரில் சிலர் தம்மை முகம் நோக்கி
இந் நாள் காறும் நீர் வலியீர் கொல் என ஓதி
மன் ஆகு உற்றோன் அல் அருள் செய்ய மகிழ்வு எய்தி
அன்னார் யாரும் இன்னதொர் மாற்றம் அறைகுற்றார்.
4
   
2459.
தீ உண்டாகும் கண் நுதல் கொண்ட சிவன் உண்டு
நீ உண்டு எங்கட்கு ஓர் குறை உண்டோ நிலை ஆகி
ஏயும் செல்வம் சீர் ஒடு பெற்றோம் இடர் அற்றோம்
தாய் உண்டாயின் மைந்தர் தமக்கு ஓர் தளர்வு உண்டோ.
5
   
2460.
என்பார் தம்பால் அன்பினன் ஆகி இறை பின்னோர்
தன்பால் ஆக நிற்புழி இந்தத் தகுவன் தான்
வன் பால் ஆனான் செய்வது என் என்னா வானோர்கள்
துன்பாய் அச்சு உற்று ஏங்கினர் ஆவி தொலைவார்
                                     போல்.
6
   
2461.
சேனை நள்ளிடைச் சீர் கெழு வன்மையான்
மேன தன்மை விருப்பினில் கண் உறீஇ
மானம் மேல் சென்று மன் ஒடும் தானவர்
சோனை மாரியில் தூமலர் தூவினார்.
7
   
2462.
தூசு வீசினர் சூர் முதல் வாழி என்று
ஆசி கூறினர் ஆடினர் பாடினர்
பேசல் ஆத பெரும் மகிழ்வு எய்தினார்
வாசவன் தன் மனத்துயர் நோக்கினார்.
8
   
2463.
அண்ணலார் அருளால் அழல் வேதியின்
கண்ணில் வந்த கணிப்பில் படைக்கு எலாம்
எண்ணிலோரை இறைவயர் ஆக்கினான்
நண்ணி நாளும் நவை அறப் போற்றவே.
9
   
2464.
கண்ணகன் புயக் காவலன் தானைகள்
மண்ணும் வானமும் மாதிர எல்லையும்
தண் அறச் செலத் தம்பியர் தம்மொடும்
எண்ணி வேள்வி இரும் களம் நீங்கினான்.
10
   
2465.
நீங்கி மீண்டு நெடும் தவத் தந்தை தன்
பாங்கர் எய்தி பணிந்து பரமனால்
வாங்கல் உற்ற வரத்து இயல் கூறியே
யாங்கள் செய்வகை என் இனி என்னவே.
11
   
2466.
தந்தை கேட்டுச் சதமகன் வாழ்வினுக்கு
அந்தம் ஆகியதோ அண்டருக்கு இடர்
வந்ததோ வெம் மறை நெறி போனதோ
எந்தையார் அருள் இத்திறமோ எனா.
12
   
2467.
உன்னி உள்ளத்து உணர் உறு காசிபன்
தன்னின் வந்த தனயரை நோக்கியே
முன்னை நும் கண் முதல் குருப் பார்க்கவன்
அன்னவன் கண் அடைகுதிர் அன்பினீர்.
13
   
2468.
அடைதிரே எனின் அன்னவன் உங்களுக்கு
இடை அறா வகைக் இத்திரு மல்குற
நடை கொள் புந்தி நவின்றிடும் நன்று எனா
விடை புரிந்து விடுத்தனன் மேலையோன்.
14
   
2469.
விட்ட காலை விடை கொண்டு வெய்யவன்
மட்டு இலாத வயப் படையோடு எழா
இட்டமான இயல் புகரோனிடம்
கிட்டினான் அது கேட்டனன் ஆங்கு அவன்.
15
   
2470.
கேட்டு உணர்ந்திடும் கேழ் கிளர் தேசிகன்
வாட்டம் நீங்கி மகிழ் நறை மாந்தியே
வேட்டம் எய்தி விரைந்து தன் சீடர் தம்
கூட்ட மோடு எதிர் கொண்டு குறுகவே.
16
   
2471.
கண்ட சூரன் கதும் எனத் தன் பெரும்
தண்ட முன் சென்று தம்பியர் தம்மொடு
மண்டு காதலின் மன்னிய தேசிகன்
புண்டரீகம் என் பொன் அடி தாழ்ந்து எழ.
17
   
2472.
நன்று வாழிய நாளும் என்று ஆசிகள்
நின்று கூறி நிருதர்க்கு இறைவனைத்
தன் துணைக் கரத்தால் தழுவிப் புகர்
என்றும் வாழ் தன் இருக்கை கொண்டு ஏகினான்.
18
   
2473.
ஏகும் எல்லை இளவற்கு இளவலை
வாகு சேர்ந்த நம் மாப்படை போற்று என
ஊக மொடு நிறீஇ உரவோன் ஒடும்
போகல் மேயினன் புந்தியில் சூரனே.
19
   
2474.
ஆர் உயிர்த் துணை ஆன அரிமுகன்
வாரமுற்று உடன் வந்திட வந்திடும்
சூரபன்மனைச் சுக்கிரன் தன் இடம்
சேர உய்த்துச் செயல் முறை நாடியே.
20
   
2475.
ஆசனம் கொடுத்து அங்கண் இருத்தியே
நேச நெஞ்சொடு நீடவும் நல்லன
பேசி நீர் வரும் பெற்றி என்னோ எனாத்
தேசிகன் சொலச் செம்மல் உரை செய்வான்.
21
   
2476.
ஓங்கு வேள்வி உலப்புறச் செய்ததும்
ஆங்கனம் வந்து அரன் அருள் செய்ததும்
தாங்கரும் வளம் தந்ததும் காசிபன்
பாங்கர் வந்த பரிசும் பகர்ந்து மேல்.
22
   
2477.
தாதை கூறிய தன்மையும் முற்றுற
ஓதி யாம் இனி ஊக்கிம் இயற்றிடும்
நீதி யாது நிகழ்த்துதி நீ எனத்
தீது சால் மனத் தேசிகன் கூறுவான்.
23
   
2478.
பாசம் என்றும் பசு என்றும் மேதகும்
ஈசன் என்றும் இசைப்பர் தளை எனப்
பேசல் மித்தைப் பிறிது இலை ஆவியும்
தேசு மேவும் சிவனும் ஒன்று ஆகுமே.
24
   
2479.
தீய நல்லனவே எனச் செய்வினை
ஆய் இரண்டு என்பர் அன்னவற்று ஏதுவால்
ஏயும் ஆல் பிறப்பு என்பர் இன்பக் கடல்
தோயும் என்பர் துயர் உறும் என்பர் ஆல்.
25
   
2480.
ஒருமையே அன்றி ஊழின் முறை விராய்
இருமையும் துய்க்கும் என்பர் அவ் எல்லையில்
அரிய தொல்வினை ஆனவை ஈட்டு மேல்
வருவதற்கு என்பர் மன் உயிர் யாவையும்.
26
   
2481.
ஈட்டுகின்ற இருவினை ஆற்றலான்
மீட்டு மீட்டும் விரைவின் உதித்திடும்
பாட்டின் மேவும் பரிசு உணர்ந்து அன்னவை
கூட்டும் என்பர் குறிப்பு அரிதாம் சிவன்.
27
   
2482.
சொற்ற ஆதியும் தோமுறுவான் தளை
உற்ற ஆவியும் ஒன்று அல ஒன்று எனில்
குற்றம் ஆகும் அக் கோ முதற்கு என்பர் ஆல்
மற்று அதற்கு வரன் முறை கேட்டி நீ.
28
   
2483.
ஆதி அந்தம் இன்று ஆகி அமலம் ஆம்
சோதியாய் அமர் தொல் சிவன் ஆடலின்
காதல் ஆகிக் கருதுதல் மாயை ஆல்
பூதம் யாவும் பிறவும் புரிவனால்.
29
   
2484.
இடம் கொள் மாயையின் யாக்கைகள் ஆயின
அடங்கவும் நல்கி அன்னவற்று ஊடு தான்
கடம் கொள் வானில் கலந்து மற்று அவ் வுடல்
மடங்கும் எல்லையின் மன்னுவன் தொன்மை போல்.
30
   
2485.
இத் திறத்தின் எஞ்ஞான்றும் அவ் எல்லை தீர்
நித்தன் ஆடல் நிலைமை புரிந்திடும்
மித்தை அகும் வினைகளும் யாவையும்
முத்தி தானும் முயல்வதும் அன்னதே.
31
   
2486.
பொய் அது ஆகும் பொறி புலம் என்றிடின்
மெய்யதோ அவை காணும் விழுப் பொருள்
மை இல் புந்தியும் வாக்கும் வடிவமும்
செய்ய நின்ற செயல்களும் அன்னதே.
32
   
2487.
அன்ன செய்கைகள் அன்மையது ஆகும் மேல்
பின்னர் அங்கு அதன் பெற்றியின் வந்திடும்
இன்னல் இன்பம் இரண்டும் மெய் ஆகுமோ
சொன்ன முன்னைத் துணிபின ஆகுமே.
33
   
2488.
மித்தை தன்னையும் மெய் எனக் கொள்ளினும்
அத்தகும் துயர் ஆனதும் இன்பமும்
நித்தம் ஆகும் நிமலனை எய்துமோ
பொத்தில் ஆன பொதி உடற்கு ஆகுமே.
34
   
2489.
தோன்று கின்றதும் துண் என மாய்வதும்
ஏன்று செய்வினை ஆவதும் செய்வதும்
ஆன்ற தற்பரற்க்கு இல்லை அனை அதை
ஊன்றி நாடின் உடற்குறு பெற்றியே.
35
   
2490.
போவதும் வருகின்றதும் பொற்பு உடன்
ஆவதும் பின் அழிவதும் செய்வினை
ஏவதும் எண் இலாத கடம் தொறும்
மேவு கின்றது ஒர் விண்ணினுக்கு ஆகுமோ.
36
   
2491.
அன்ன போல் எங்கும் ஆவி ஒன்று ஆகியே
துன்னி நின்றிடும் தொல் பரன் வேறுபாடு
என்னதும் இலன் என்றும் ஒர் பெற்றியான்
மன்னும் அங்கு அது வாய்மை என்று ஓர்தி நீ.
37
   
2492.
தஞ்சம் ஆகும் தருமம் நன்றால் என
நெஞ்சகத்து நினைந்து புரிவதும்
விஞ்சு கின்ற வியன் பவம் தீது என
அஞ்சு கின்றது மாம் அறிவு இன்மையே.
38
   
2493.
யாது யாது வந்து எய்திய தன்னதைத்
தீது நன்று எனச் சிந்தை கொள்ளாதவை
ஆதி மாயை என்று ஆய்ந்து அவை ஆற்றுதல்
நீதி ஆன நெறிமையது ஆகுமே.
39
   
2494.
தருமம் செய்க தவறு உள பாவம் ஆம்
கருமம் செய்யற்க என்பர் கருத்து இலார்
இருமை தன்னையும் யாவர் செய்தாலும் மேல்
வருவது ஒன்று இலை மாயம் வித்து ஆகுமோ.
40
   
2495.
கனவின் எல்லையில் காமுறு நீரவும்
இனைய வந்தவும் ஏனை இயற்கையும்
நனவு வந்துழி நாம் கண்டது இல்லை ஆல்
அனையவாம் இவண் ஆற்றும் செயல் எலாம்.
41
   
2496.
இம்மை ஆற்றும் இரு வினையின் பயன்
அம்மை எய்தின் அன்றோ அடையப் படும்
பொய்ம்மையே அது பொய்யில் பிறப்பது
மெய்ம்மை ஆகும் அதோ சுடர் வேலினோய்.
42
   
2497.
நெறி அது ஆகும் இந் நீர்மை எலாம் பிறர்
அறிவரே எனின் அன்னது ஒர் வேலையே
பெறுவர் யாம் உறும் பெற்றி எலாம் அவை
உறுதி உண்டு எனின் உண்மையது ஆகுமே.
43
   
2498.
சிறியர் என்றும் சிலரைச் சிலரை மேல்
நெறியர் என்றும் நினைவது நீர்மையோ
இறுதியில் உயிர் யாவும் ஒன்றே எனா
அறிதல் வேண்டும் அஃது உண்மையது ஆகுமே.
44
   
2499.
உண்மையே இவை ஓதியினார் உணர்
நுண்மை யாம் இனி நுங்களுக்கு ஆகிய
வண்மையும் தொல் வழக்கமும் மற்றவும்
திண்மையோடு உரை செய்திடக் கேட்டி நீ.
45
   
2500.
தேவர் தம்மினும் சீதரன் ஆதியோர்
ஏவர் தம்மினும் ஏற்றம் அது ஆகிய
கோ இயற்கையும் கொற்றமும் ஆணையும்
ஓவில் செல்வமும் உன்னிடை உற்றவே.
46
   
2501.
உற்றது ஓர் மேன்மை நாடி உன்னை நீ பிரமம் என்றே
தெற்று எனத் தெளிதி மற்று அத்திசைமுகன் முதலோர்
                                     தம்மைப்
பற்றலை மேலோர் என்று பணியலை இமையோர் உங்கள்
செற்றலர் அவரை வல்லே செறுமதி திருவும் சிந்தி.
47
   
2502.
இந்திரன் என்போன் வானோர்க்கு இறையவன் அவனே
                                     நென்னல்
அந்தம் இல் அவுணர் தங்கள் ஆருயிர் கொண்டான்
                                    அன்னான்
உய்ந்தனன் போகா வண்ணம் ஒல்லையில் அவனைப்
                                        பற்றி
மைந்துறு நிகளம் சேர்த்தி வன் சிறை புரிதி மாதோ.
48
   
2503.
சிறையினை இழைத்துச் செய்யும் தீயன பலவும் செய்து
மறை புகல் முனிவர் தம்மை வானவர் தம்மைத் திக்கின்
இறையவர் தம்மை நாளும் ஏவல் கொண்டிடுதி அன்னார்
உறை தரு பதங்கள் எல்லாம் உதவுதி அவுணர்க்கு
                                       அம்மா.
49
   
2504.
கொலையொடு களவு காமம் குறித்திடும் வஞ்சம் எல்லாம்
நிலை எனப் புரிதி அற்றால் நினக்குமேல் வரும் தீது
                                    ஒன்றும்
இலை அவை செய்திடாயேல் இறைவ நீ விரும்பிற்று
                                    எல்லாம்
உலகு இடை ஒருங்கு நண்ணா உனக்கு எவர் வெருவும்
                                         நீரார்.
50
   
2505.
வண்துழாய் மிலைச்சும் சென்னி மால் விடைப்
                              பாகன் தந்த
அண்டம் ஆயிரம் மேல் எட்டும் அணிகமோடு
                            இன்னே ஏகிக்
கண்டு கண்டு அவண் நீ செய்யும் கடன் முறை
                          இறைமை ஆற்றி
எண் திசை புகழ மீண்டே ஈண்டு வீற்று இருத்தி
                                என்றான்.
51