வள்ளியம்மை திருமணப் படலம்
 
10079.
வெள்ளி அம் கிரியின் ஓர் சார் விளங்கிய கந்த
                                      வெற்பின்
நள்ளுறு நகரம் தன்னில் நங்கையோடு இனிது மேவும்
அள் இலை வேல் கை நம்பி அம்புவி எயினர் போற்றும்
வள்ளியை வதுவை செய்த மரபினை வழாது சொல்வாம்.
1
   
10080.
அயன் படைத்திடும் அண்டத்துக்கு ஆவியாய்ப்
பயன் படைத்த பழம் பதி என்பர் ஆல்
நயன் படைத்திடு அல் தெண்டை நாட்டினுள்
வியன் படைத்து விளங்கும் மேற்பாடியே.
2
   
10081.
ஆய தொல்லை அணிநகர் ஞாங்கரின்
மீ உயர்ந்த ஒர் வெற்பு நிற்கின்றது ஆல்
பாய தெண் கடல் பாரளவு இட்டிடும்
மாயவன் தன் வடிவு என நீண்டதே.
3
   
10082.
அரவும் திங்களும் ஆறு மெல் ஆரமும்
குரவும் கொன்றையும் கூவிளமும் மிசை
விரவும் தன்மையின் வெற்பு விண்ணோர் எலாம்
பரவும் கண் நுதல் பண்ணவன் போன்றது ஆல்.
4
   
10083.
வாலிது ஆகிய வான் அருவித் திரள்
நீல மேக நிரையொடு தாழ்தலில்
தோலும் நூலும் துயல் வரு மார்புடை
நாலு மா முகன் போலும் அந்நாகமே.
5
   
10084.
குமரவேள் குற மங்கையொடு இவ் இடை
அமரும் மால் அது காண்பன் என்று ஆசையால்
தமர வானதி தான் அணுகு உற்றிட
நிமிரு கின்றது நீள்கிரி அன்னதே.
6
   
10085.
கள் இறைத்திடு பூம் தண் தார்க் கடம்பு அணி காளை                             பல் நாள்
பிள்ளைமைத் தொழின் மேல் கொண்டு பெட்புடன்                             ஒழுகும் வண்ணம்
வள்ளியைத் தன்பால் வைத்து வள்ளிவெற்பு என்னும்                             நாமம்
உள்ள அக்கிரியின் மேன்மை உரைத்திடும் அளவிற்று                             ஆமோ.
7
   
10086.
செய்ய வெண் குன்றி வித்தும் சீர் திகழ் கழை வீழ்                                 முத்தும்
பை அரவு இனங்கள் ஈன்ற பருமணித் தொகையும்                                 ஈண்டிச்
சையம் அது எங்கும் சேர்தல் தாரகா கணங்கள்
                                எல்லாம்
வெய்யவன் அழற்கு ஆற்றாது வீழ்ந்து என                                 விளங்குகின்ற.
8
   
10087.
கான் உறு தளவம் பூத்த காட்சியால் கழைகள் எல்லாம்
தூ நகை முத்தம் ஈன்ற தோற்றத்தால் பொதும்பர்                               தன்னில்
தேன் அமர் தொடையல் தூங்கும் செய்கையால்
                              சிலம்பின் சாரன்
மீனமும் மதியும் பூத்த விண் என விளங்கிற்று அம்மா.
9
   
10088.
கூட்ட அளி முரலும் நீலக் குண்டு நீர்ச் சுனைகள்                                       யாண்டும்
காட்டிய பிறங்கல் யாரும் காண் ஒணா வள்ளல் ஈண்டே
வேட்டுவர் சிறுமிக்கு ஆக மேவுதல் காண்பன் என்னா
நாட்டம் மெய் முழுதும் பெற்று நண்ணிய தன்மை போல்                                       ஆம்.
10
   
10089.
விண் உயர் பிறங்கல் மீது விரிகின்ற சுனைகள் மிக்குத்
துண் என விளங்கும் பெற்றி சூரியன் முதலோர் காண
மண் எனும் மடந்தை ஆங்கு ஓர் மதலையில் வரம்பு                                       இலாத
கண்ணடி நிரைத்து வைத்த காட்சி போன்று இருந்த                                       மாதோ.
11
   
10090.
ஒள்ளிணர்க் அணியின் கொம்பர் உலவியே அசோகில்                                       வாவி
வெள்ளியில் பாய்ந்து மந்திவியன் கடு உறைப்ப மீள்வ
வள்ளியர் இடத்துச் சென்றோர் மான அப் பண்பிலோர்                                       பால்
பொள் என இரப்பான் புக்குப் புலம் பொடு மீண்டவா                                       போல்.
12
   
10091.
தொகை உறு குலைச் செம்காந்தள் துடுப்பு எடுத்து                                அமரும் சூழ்வில்
சிகை உறு தோகை மஞ்ஞை செறிந்து உலா உற்ற                                தன்மை
அகை உறு கழை கொன்று உண்டவார் அழல் சிதற                                ஆங்கே
புகை உறுகின்ற தன்மை போலவே பொலிந்தது அம்மா.
13
   
10092.
கண்டு தம் கேளிர் தம்மைக் கைகொடு புல்லி இல்லம்
கொண்டுசெல் பான்மை உன்னி விலக்கு உறு                            கொளகைத்து என்ன
விண் தொடர் செலவிற்று ஆகும் வெம் சுடர்க் கதிரை                            வெற்பில்
தண்டலை கணியின் கொம்பால் தழீஇக் கொடு தடுக்கல்                            உற்ற.
14
   
10093.
நிறை அழி கடமால் யானை நெடு வரைச் சிகரம்
                                      பாய்ந்து
விறலொடு முழங்க ஆங்கு ஓர் விடர் அளை மடங்கல்                                       கேளாக்
கறுவு கொள் சினத்தினார்க்கும் கம்பலை கனகன் எற்றுந்
தறியிடை இருந்த சீயத் தழங்குரல் என்னல் ஆம் ஆல்.
15
   
10094.
பறை அடிப்பதனால் சேணில் பயன் விரிப் பார் போல்                                      மாறாய்
அறை அடிப் பாந்தள் ஆர்ப்ப அகல் இரு விசும்பே                                     ஆர்ப்பக்
கறை அடித் தொகுதி ஆர்ப்பக் கடும்திறல் அரிமான்                                     ஆர்ப்பச்
சிறை அடிக் கொண்டு சிம்புள் ஆர்த்திடத் திங்கள்                                      செல்லும்.
16
   
10095.
இன்ன பல் வளமை சான்ற கிரிதனில் எயினர் ஈண்டி
மன்னியது ஆங்கு ஓர் சீறூர் வதனம் ஆறு உடைய                              வள்ளல்
பின்னரே தன்பால் மேவப் பெரும் தவம் தன்னை                              ஆற்றிப்
பொன்னகர் இருந்த வா போல் புன்மை அற்று
                             இருந்தது அம்மா.
17
   
10096.
ஆயது ஓர் குறிச்சி தன்னில் அமர் தரும் கிராதர்க்கு                                    எல்லாம்
நாயகன் நுகம்பூண்டு உள்ளோன் நாம வேல் நம்பி                                    என்போன்
மாயிரும் தவமுன் செய்தோன் மைந்தர்கள் சிலரைத்
                                   தந்து
சேய் இழை மகட்பேறு உன்னித் தெய்வதம் பராவி                                    உற்றான்.
18
   
10097.
அவ்வரை மருங்கு தன்னில் ஐம்புலன் ஒருங்கு செல்லச்
செவ்விதின் நடாத்தும் தொன்மைச் சிவமுனி என்னும்                                      மேலோன்
எவ் எவர் தமக்கும் எய்தா ஈசனை உளத்துள் கொண்டு
சைவ நல் விரதம் பூண்டு தவம் புரிந்து இருத்தல்                                      உற்றான்.
19
   
10098.
சிறப்பு உறு பெரிய பைங்கண் சிறுதலைச் சிலைக்கும்                                 புல்வாய்
நெறிப் பொடு நிமிர் உற்று ஆன்ற நெடும் செவிக்
                                குறிய தோகைப்
பொறிப் படு புனித யாக்கைப் புன்மயிர்க் குளம்பு                                 மென்கால்
மறிப்பிணை ஒன்று கண்டு ஓர் மருள வந்து உலாவிற்று                                 அங்கண்.
20
   
10099.
போர்த் தொழில் கடந்த வைவேல் புங்கவன் அருளால்                                        வந்த
சீர்த்திடும் நவ்வி தன்னைச் சிவமுனி என்னும் தூயோன்
பார்த்தலும் இளைமைச் செவ்வி படைத்திடும் பிறனில்                                        கண்ட
தூர்த்தனின் மையல் எய்திக் காமத்தால் சுழலல் உற்றான்.
21
   
10100.
ஏமத்தின் வடிவம் சான்ற இலங்கு எழில் பிணையின்                                      மாட்டே
காமத்தின் வேட்கை வைத்துக் கவலையாய் அவலம்                                      எய்தி
மா மத்தம் அன்புக்கு என்ன மனக்கருத்து உடைந்து                                      வேறாய்
ஊமத்தம் பயன் துய்த்தால் போல் உன்மத்தன் ஆகி                                      உற்றான்.
22
   
10101.
பட அரவு அனைய அல்குல் பைந்தொடி நல்லார்                                      தம்பால்
கடவுளர் புணர்ச்சி என்னக் காட்சியின் இன்பம் துய்த்து
விடல் அருல் ஆர்வ நீங்கி மெய் உணர்வு எய்தப்                                      பெற்றுத்
திடமொடு முந்து போலச் சிவமுனி இருந்து நோற்றான்.
23
   
10102.
நற்றவன் காட்சி தன்னால் நவ்வி பால் கருப்பம் சேரத்
தெற்று என அறிதல் தேற்றிச் செம்கண்மால் உதவும்                                      பாவை
மற்று அதன் இடத்தில் புக்காள் வரை பக எறிந்த வை                                      வேல்
கொற்றவன் முன்னம் சொற்ற குறி வழிப் படரும் நீராள்.
24
   
10103.
மானிடத்தின் வரு மைந்தன் முந்து நீ
மானிடத்தின் வருக என்ற வாய்மையான்
மானிடத்தின் வயின் அடைந்தாள் மரு
மானிடத்தின் மான் ஆகும் அம்மான் மகள்.
25
   
10104.
அனைய காலையில் ஆயிடை நீங்கியே
புனித நவ்வி புனம் எங்கணும் உலாய்ச்
சுனையின் நீர் உண்டு ஒர் சூழலின் வைகியே
இனிய மால் வரை ஏறி நடந்ததே.
26
   
10105.
நடந்த நவ்வி நலத்தகு வெற்பினில்
இடந்தொறும் செறி ஏனல் புனம் எலாம்
கடந்து போயது காவல் கொள் வேட்டுவர்
மடந்தை மார்கள் வரிவிழி என்னவே.
27
   
10106.
பிள்ளை ஈற்றுப் பிணா எயின் சேரியின்
உள்ள மாதர் உளித் தலைக் கோல் கொடு
வள்ளி கீழ் புகு மா முதல் வௌவியே
பொள்ளல் செய்திடு புன் புலம் புக்கதே.
28
   
10107.
தோன்றலுக்குத் துணைவியைத் தொல் பிணை
தான் தரித்துத் தளர்ந்து தளர்ந்து போய்
மான்ற அரற்றி உயிர்த்து வயிறு நொந்து
ஈன்று வள்ளி இரும் குழி இட்டது ஆல்.
29
   
10108.
குழை குறும் தொடி கோல் வளையே முதல்
பழை பூண்கள் பலவுடன் தாங்கு உறாத்
தழை புனைந்து தனது உணர்வு இன்றியே
உழை வயின் வந்து உதித்தனள் ஒப்பு இலாள்.
30
   
10109.
கோல் தொடிக் கைக் குழவியை நோக்கியே
ஈற்று மான் பிணை எம் இனத்து அன்று இது
வேற்று உருக் கொடு மேவியது ஈண்டு எனா
ஆற்றவே மருண்டு அஞ்சி அகன்றதே.
31
   
10110.
அன்னை என ஈன்ற அரிண மருண்டு ஓடியபின்
தன் இணை இலாத தலைவி தனித் தனள் ஆய்
கின்னர நல் யாழ் ஒலியோ கேடு இல் சீர் பாரதி தன்
இன்னிசையோ என்று அயிர்க்க ஏங்கி அழுதிட்டனளே.
32
   
10111.
அந்த அளவை தனில் ஆறு இரண்டு மொய்ம்பு
                                     உடைய
எந்தை அருள் உய்ப்ப எயினர் குலக் கொற்றவனும்
பைந்தொடி நல்லாளும் பரிசனங்கள் பாங்கு எய்தச்
செம் தினையின் பைங் கூழ் செறி புனத்துப் புக்கனரே.
33
   
10112.
கொல்லை புகுந்த கொடிச்சி யோடு கானவர் கோன்
அல்லை நிகர் குழலாள் அம் மென் குரல் கேளா
எல்லை அதனில் எழும் ஒலி அங்கு ஏது என்னா
வல்லை தனில் அவ் அறும் புனத்தில் வந்தனனே.
34
   
10113.
வந்தான் முதல் எடுத்த வள்ளிக் குழியில் வைகும்
நந்தா விளக்கு அனைய நங்கை தனை நோக்கி
இந்தா இஃது ஓர் இளம் குழவி என்று எடுத்துச்
சிந்தை ஆகுவம் தீரத் தேவிகையில் ஈந்தனனே.
35
   
10114.
ஈந்தான் சிலை நிலத்தில் இட்டான் எழுந்து ஓங்கிப்
பாய்ந்தான் தொழிந்தான் உவகைப் படு கடலில்
தோய்ந்தான் முறுவலித்தான் தோள் புடைத்தான் தொல்                                   பிறப்பின்
நாந்தாம் இயற்று தவம் நன்று ஆம் கொல் என்று                                   உரைத்தான்.
36
   
10115.
கொற்றக் கொடிச்சி குழவியைத் தன் கை வாங்கி
மற்று அப் பொழுதில் வயாவும் வருத்தமும் ஆய்ப்
பெற்றுக் கொள்வாள் போலப் பேணிப் பெரிது மகிழ்
உற்றுக் கனதனத்தில் ஊறும் அமிர்து ஊட்டினள் ஆல்.
37
   
10116.
வென்றிச் சிலை எடுத்து மேலைப் புனம் அகன்று
குன்றக் குறவன் குதலை வாய்க் கொம்பின் உடன்
மன்றல் துணைவி தனை வல்லை கொடு சீறூரில்
சென்று அக் கணத்தில் சிறு குடிலில் புக்கனனே.
38
   
10117.
அண்டர் அமுதம் அனைய மகள் பெற்றிடலான்
மண்டு பெரு மகிழ்வாய் மாத்தாள் கொழு விடையைக்
கெண்டி ஒருதன் கிளையோடு இனிது அருந்தித்
தொண்டகம் அது ஆர்ப்பக் குரவை முறை                                 தூங்குவித்தான்.
39
   
10118.
காலை அதன்பின் கடவுள் பலி செலுத்தி
வால் அரிசி மஞ்சள் மலர் சிந்தி மறி அறுத்துக்
கோல நெடுவேல் குமரன் விழா கொண்டாடி
வேலனை முன் கொண்டு வெறியாட்டு நேர் வித்தான்.
40
   
10119.
இன்ன பலவும் இயற்றி இரும் குறவர்
மன்னன் மனைவி வட மீன் தனை அனையாள்
கன்னி மட மகட்குக் காப்பு இட்டுக் கான மயில்
பொன் அம் சிறை படுத்த பூம் தொட்டில் ஏற்றினளே.
41
   
10120.
நாத் தளர்ந்து சோர்ந்து நடுக்கம் உற்றுப் பல் கழன்று
மூத்து நரை முதிர்ந்த மூதாளர் வந்து ஈண்டிப்
பாத்தி படு வள்ளிப் படு குழியில் வந்திடலால்
வாய்த்த இவள் நாமம் வள்ளி எனக் கூறினரே.
42
   
10121.
தம் மரபில் உள்ள தமர் ஆகிய முதுவர்
இம் முறையால் ஆராய்ந்து இயல் பேர் புனைந்து                                     உரைப்பக்
கொம்மை முலையாள் கொடிச்சியொடு குன்றவர் கோன்
அம் மனையை நம்மகள் என்றன் பால் வளர்த்தனனே.
43
   
10122.
முல்லைப் புறவ முதல்வன் திரு மடந்தை
கொல்லைக் குறிஞ்சிக் குறவன் மகள் ஆகிச்
சில்லைப் புன் கூரைச் சிறு குடிலில் சேர்ந்தனள் ஆல்
தொல்லைத் தனித் தந்தை தோன்றி அமர் உற்றது
                                       போல்.
44
   
10123.
மூவா முகுந்தன் முதநாள் பெறும் அமுதைத்
தேவாதி தேவன் திருமைந்தன் தேவிதனை
மா வாழ் சுரத்தில் தம் மா மகளாப் போற்று கையால்
ஆவா குறவர் தவம் ஆர் அளக்க வல்லாரே.
45
   
10124.
பொன் தொட்டில் விட்டுப் புவியின் மிசை தவழக்
கற்றுத் தளர் நடையும் காட்டிக் கணி நீழல்
முற்றத்து இடை உலாவி முறத்தின் மணி கொழித்துச்
சிற்றில் புனைந்து சிறு சோறு இட்டு ஆடினளே.
46
   
10125.
முந்தை உணர்வு முழுதும் இன்றி இம் முறையால்
புந்தி மகிழ் வண்டல் புரிந்து வளர் செவ்விக் கண்
எந்தை புயம் புல்லுவதற்கு இப் பருவம் ஏற்கும் எனப்
பைந் தொடியினுக்கு யாண்டு பன்னிரண்டு சென்றனவே.
47
   
10126.
ஆன பருவம் கண்டு அம்மனையும் அம்மனையில்
கோனும் ஒரு தம் குலத்தின் முறை நோக்கி
மானின் வயிற்று உதித்த வள்ளி தனைப் பைம்
                                 புனத்தில்
ஏனல் விளையுள் இனிது அளிக்க வைத்தனரே.
48
   
10127.
காட்டில் எளிது உற்ற கடவுள் மணியைக் கொணர்ந்து
கூட்டில் இருள் ஓட்டக் குருகு உய்த்தவாறு அன்றோ
தீட்டும் சுடர் வேல் குமரன் தேவி ஆம் தெள்
                                   அமுதைப்
பூட்டு சிலைக் கையார் புனம் காப்ப வைத்ததுவே.
49
   
10128.
சுத்த மெழுகு இட்டுச் சுடர் கொளுவிப் பல் மணியின்
பத்தி குயின்றிட்ட பழுப் பேணியில் பாதம்
வைத்து மகிழ்ந்து ஏறி மகடூஉத் தினைப்புனத்தில்
எத்திசையும் காணும் இதணத்து இருந்தனளே.
50
   
10129.
கிள்ளை யொடு கேகயமே அன்றிப் பிற நிலத்தில்
உள்ள பறவை ஒருசார் விலங்கினொடும்
வள்ளி மலைப் புனத்தில் வந்து உற்றன மாவும்
புள்ளும் மயங்கல் பொருள் நூல் துணிபு அன்றோ.
51
   
10130.
கட்டு வரிவில் கரும் குறவர் கைத் தொழிலால்
இட்ட இதணத்து இருந்து எம் பெருமாட்டி
தட்டை குளிர் தழலைத் தாங்கித் தினைப் புனத்தைக்
கிட்டல் உறா வண்ணம் கிளி முதல் புள் ஓட்டினளே.
52
   
10131.
எய் ஆனவையும் இரலை மரை மான் பிறவும்
கொய்யாத ஏனல் குரல் கவர்ந்து கொள்ளாமல்
மையார் விழியாள் மணிக்கல் கவண் இட்டுக்
கையால் எடுத்துக் கடிது ஓச்சி வீசினளே.
53
   
10132.
பூவைகாள் செம் கண் புறவம்காள் ஆலோலம்
தூவிமா மஞ்சைகாள் சொல் கிளிகாள் ஆலோலம்
கூவல் சேர் உற்ற குயில் இனங்காள் ஆலோலம்
சேவல்காள் ஆலோலம் என்றாள் திருந்து இழையாள்.
54
   
10133.
இந்த முறையில் இவள் ஏனல் புனம் காப்ப
அந்த வளவில் அவளுக்கு அருள் புரியக்
கந்த வரை நீங்கிக் கதிர் வேலவன் தனியே
வந்து தணிகை மலை இடத்து வைகினனே.
55
   
10134.
சூரல் பம்பிய தணிகை மால் வரை தனில் சுடர் வேல்
வீரன் வீற்று இருந்திடுதலும் வேலை அங்கு அதனில்
வாரியும் வடித்து உந்தியும் வரிசையால் உறழ்ந்தும்
சீரியாழ் வல்ல நாரதன் புவிதனில் சேர்ந்தான்.
56
   
10135.
வளவிது ஆகிய வள்ளி மால் வரை தனில் வந்து
விளையுள் ஆகிய தினைப் புனம் பேற்றி வீற்று இருந்த
புளினர் பாவையைக் கண்டு கை தொழுது புந்தியினில்
அளவு இலாத ஓர் அற் புதத்துடன் இவை அறைவான்.
57
   
10136.
அன்னை ஆகி இங்கு இருப்பவர் பேர் அழகு                                    அனைத்தும்
உன்னி யான் புனைந்து உரைக்கினும் உலவுமோ உலவா
என்னை ஆளுடை அறுமுகன் துணைவியாய் இருப்ப
முன்னர் மா தவம் புரிந்தவர் இவர் என மொழிந்தான்.
58
   
10137.
கார்த் தினைப் புனம் காவல் கன்னியைப்
பார்த்து மற்று இவை பகர்ந்து போற்றிப் போய்
மூர்த்தம் ஒன்றினில் மூன்று பூ மலர்
தீர்த்தி கைச் சுனைச் சிகரம் நண்ணினான்.
59
   
10138.
தணிகை அம் கிரி தன்னில் வைகிய
இணை இல் கந்தனை எய்தி அன்னவன்
துணை மெல் சீறடி தொழுது பல் முறை
பணிதல் செய்து இவை பகர்தல் மேயினான்.
60
   
10139.
மோன நல் தவ முனிவன் தன் மகள்
மானின் உற்று உளாள் வள்ளி வெற்பினில்
கானவக் குலக் கன்னி ஆகியே
ஏனலைப்புரம் திதணில் மேயினாள்.
61
   
10140.
ஐயனே அவள் ஆகம் நல் எழில்
செய்ய பங்கயத் திருவிற்கும் இலை
பொய் அது அன்று இது போந்து காண்டி நீ
கையனேன் இவண் கண்டு வந்தனன்.
62
   
10141.
தாய் அது ஆகும் அத் தையல் முன்னரே
மாயவன் மகள் மற்று உன் மொய்ம்பினைத்
தோய நோற்றனள் சொற்ற எல்லையில்
போய் அவட்கு அருள் புரிதி ஆல் என்றான்.
63
   
10142.
என்ற வேலையில் எஃக வேலினான்
நன்று நன்று இது நவை இல் காட்சியோய்
சென்றி நீ எனச் செப்பித் தூண்டியே
கன்று காம நோய்க் கவலை உள் வைத்தான்.
64
   
10143.
எய்யும் வார் சிலை எயினர் மாதராள்
உய்யுமாறு தன் உருவம் நீத்து எழீஇச்
செய்ய பேர் அருள் செய்து சேவகன்
மையல் மானுட வடிவம் தாங்கினான்.
65
   
10144.
காலில் கட்டிய கழலன் கச்சினன்
மாலைத் தோளினன் வரிவில் வாளியன்
நீலக் குஞ்சியன் நெடியன் வேட்டுவக்
கோலத்தைக் கொடு குமரன் தோன்றினான்.
66
   
10145.
கிள்ளை அன்னது ஓர் கிளவி மங்கை மாட்டு
உள்ள மோகம் தன் உள் உள்ள கந்தனைத்
தள்ள எம்பிரான் தணிகை வெற்பு ஒரீஇ
வள்ளி அம் கிரி வயின் வந்து எய்தினான்.
67
   
10146.
மண்டலம் புகழும் தொல்சீர் வள்ளி அம் சிலம்பின்
                            மேல் போய்ப்
பிண்டி அம் தினையின் பைம் கூழ்ப் பெரும் புனத்து                             இறைவி தன்னைக்
கண்டனன் குமரன் அம்மா கருதிய எல்லை தன்னில்
பண்டு ஒரு புடையில் வைத்த பழம் பொருள்
                            கிடைத்தவா போல்.
68
   
10147.
பூமஞ் சார் மின் கொல் என்னப் பெருப்பினில்                                  ஏனல்காக்கும்
காமஞ் சால் இளைமையாளைக் கடம்பு அமர் காளை                                  நோக்கித்
தூமஞ் சால் விரகச் செந்தீச் சுட்டிடச் சோர்ந்து வெம்பி
ஏமஞ் சால்கின்ற நெஞ்சன் இதணினுக்கு அணியன்                                  சென்றான்.
69
   
10148.
நாந்தகம் அனைய உண்கண் நங்கை கேள் ஞாலம்                                தன்னில்
ஏந்திழையார் கட்கு எல்லாம் இறைவியாய் இருக்கும்                                நின்னைப்
பூந்தினை காக்க வைத்துப் போயினார் புளினர்                                ஆனோர்க்கு
ஆய்ந்திடும் உணர்ச்சி ஒன்றும் அயன் படைத்திலன்                                கொல் என்றான்.
70
   
10149.
வார் இரும் கூந்தல் நல்லாய் மதி தளர் வேனுக்கு                                     உன்றன்
பேரினை உரைத்தி மற்று உன் பேரினை உரையாய்                                     என்னின்
ஊரினை உரைத்தி ஊரும் உரைத்திட முடியாது
                                    என்னில்
சீரிய நின் சீறுர்க்குச் செல்வழி உரைத்தி என்றான்.
71
   
10150.
மொழி ஒன்று புகலாய் ஆயின் முறுவலும் புரியாய்                                 ஆயின்
விழி ஒன்று நோக்காய் ஆயின் விரகம் மிக்கு உழல்                                 வேன் உய்யும்
வழி ஒன்று காட்டாய் ஆயின் மனமும் சற்று உருகாய்                                 ஆயின்
பழி ஒன்று நின்பால் சூழும் பராமுகம் தவிர்தி என்றான்.
72
   
10151.
உலைப்படு மெழுகது என்ன உருகியே ஒருத்தி காதல்
வலைப்படு கின்றான் போல வருந்தியே இரங்கா
                                    நின்றான்
கலைப்படு மதியப் புத்தேள் கலம் கலம் புனலில்
                                    தோன்றி
அலைப்படு தன்மைத்து அன்றோ அறுமுகன் ஆடல்                                     எல்லாம்.
73
   
10152.
செய்யவன் குமரி முன்னம் திரு நெடும் குமரன் நின்று
மையலின் மிகுதி காட்டி மற்று இவை பகரும் எல்லை
எய்யுடன் உளியம் வேழம் இரிதர இரலை ஊத
ஒய் என எயினர் சூழ ஒரு தனித் தாதை வந்தான்.
74
   
10153.
ஆங்கு அது காலை தன்னின் அடி முதல் மறைகள் ஆக
ஓங்கிய நடுவண் எல்லாம் உயர் சிவ நூல் அது ஆகப்
பாங்கு அமர் கவடு முற்றும் பல் கலை ஆகத் தான் ஓர்
வேங்கையின் உருவம் ஆகி வேல் படை வீரன் நின்றான்.
75
   
10154.
கானவர் முதல்வன் ஆங்கே கதும் என வந்து தங்கள்
மானினி தன்னைக் கண்டு வள்ளி அம் கிழங்கு மாவும்
தேனொடு கடமான் பாலும் திற்றிகள் பிறவும் நல்கி
ஏனல் அம் புனத்தில் நின்ற யாணர் வேங்கையினைக்                                     கண்டான்.
76
   
10155.
ஆங்கு அவன் அயலாய் நின்ற அடுதொழில் மறவர்                                     ஆனோர்
வேங்கையின் நிலைமை நோக்கி விம்மித நீரர் ஆகி
ஈங்கு இது முன் உற்று அன்றால் இத்துணை புகுந்த                                     ஆற்றால்
தீங்கு வந்திடுதல் திண்ணம் என்றனர் வெகுளித் தீயார்.
77
   
10156.
எறித்தரு கதிரை மாற்றும் இரு நிழல் கணியை இன்னே
முறித்திடு வீர்கள் என்பார் முதலொடு வீழச் சூழப்
பறித்திடுவீர்கள் என்பார் பராரையைக் கணிச்சி தன்னால்
தறித்திடுவீர்கள் என்பார் தாழ்க்கலீர் சற்றும் என்பார்.
78
   
10157.
இங்கு இவை உரைக்கும் தீயோர் யாரையும் விலக்கி                                     மன்னன்
நங்கை தன் வதனம் பாரா நறு மலர் வேங்கை ஒன்று
செம் குரல் ஏனல் பைங்கூழ் செறிதரு புனத்தின் மாடே
தங்கியது என்னை கொல்லோ சாற்றுதி சரதம் என்றான்.
79
   
10158.
தந்தை ஆங்கு உரைத்தல் கேளாத்தையலும் வெருவி ஈது
வந்தவாறு உணர்கிலேன் யான் மாயம்போல் தோன்றிற்று                                       ஐயா
முந்தை நாள் இல்லாது ஒன்று புதுவதாய் முளைத்தது                                       என்னாச்
சிந்தை மேல் நடுக்கம் எய்தி இருந்தனன் செயல் இது                                       என்றாள்.
80
   
10159.
என்று இவை சொற்றபின் ஏந்திழை அஞ்சேல்
நன்று இவண் வைகுதி நாள்மலர் வேங்கை
இன் துணை ஆய் இவண் எய்தியது என்னாக்
குன்று வன் வேடர் குழாத்தொடு போனான்.
81
   
10160.
போனது கண்டு புனத்து இடை வேங்கை
ஆனது ஒர் தன்மையை ஐயன் அகன்று
கானவர் தம் மகள் காண் வகை தொல்லை
மானுட நல் வடிவம் கொடு நின்றான்.
82
   
10161.
தொல்லையின் உருக்கொடு தோன்றி நின்ற வேள்
எல்லை இல் மையல் உற்று இரங்குவான் என
அல் இவர் கூந்தலாள் அருகு நிற்புறீஇ
நல் அருளால் இவை நவிறல் மேயினான்.
83
   
10162.
கோங்கு என வளர் முலைக் குறவர் பாவையே
ஈங்கு உனை அடைந்தனன் எனக்கு நின் இரு
பூம் கழல் அல்லது புகல் ஒன்று இல்லை ஆல்
நீங்கலன் நீங்கலன் நின்னை என்றுமே.
84
   
10163.
மா இயல் கரும் கணாய் மற்று நின் தனைப்
பாவியன் நீங்கியே படர வல்லனோ
ஆவியை அகன்று மெய் அறிவு கொண்டு எழீஇப்
போவது கொல் இது புகல வேண்டுமே.
85
   
10164.
மை திகழ் கரும் கணின் வலைப் பட்டேற்கு அருள்
செய்திடல் அன்றியே சிறைக்க அணித்தனை
உய் திறம் வேறு எனக்கு உள கொல் ஈண்டுநின்
கை தனில் இவ் உயிர் காத்துக் கோடி ஆல்.
86
   
10165.
கோடு இவர் நெடு வரைக் குறவர் மாது நீ
ஆடிய சுனை அதாய் அணியும் சாந்தம் ஆய்ச்
சூடிய மலர்களாய்த் தோயப் பெற்று இலேன்
வாடினன் இனிச் செயும் வண்ணம் ஆவதே.
87
   
10166.
புல்லிது புல்லிது புனத்தைக் காத்திடல்
மெல் இயல் வருதி ஆல் விண்ணின் பால் வரும்
வல்லியர் யாவரும் வணங்கி வாழ்த்திடத்
தொல் இயல் வழ நவளம் துய்ப்ப நல்குவேன்.
88
   
10167.
என்று இவை பல பல இசைத்து நிற்றலும்
குன்றுவர் மடக் கொடி குமரன் சிந்தையில்
ஒன்றிய கருத்தினை உற்று நோக்கியே
நன்று இவர் திறம் என நாணிக் கூறுவாள்.
89
   
10168.
இழி குலம் ஆகிய எயினர் பாவை நான்
முழுது உலகு அருள் புரி முதல்வர் நீர் எனைத்
தழுவுதல் உன்னியே தாழ்ச்சி செப்புதல்
பழி அதுவே அலால் பான்மைத்து ஆகுமோ.
90
   
10169.
இலை முதிர் ஏனல் காத்து இருக்கும் பேதை யான்
உலகு அருள் இறைவர் நீர் உளம் மயங்கி என்
கலவியை விரும்புதல் கடன் அது அன்று அரோ
புலியது பசி உறில் புல்லும் துய்க்குமோ.
91
   
10170.
என்று இவை பலப் பலவும் ஏந்திழை இயம்பா
நின்ற பொழுதத்தில் அவன் நெஞ்சம் வெருக் கொள்ள
வென்றி கெழு தொண்டகம் வியன் துடி இயம்பக்
குன்று இறைவன் வேட்டுவர் குழாத்தினொடும் வந்தான்.
92
   
10171.
வந்தபடி கண்டு மட மான் நடு நடுங்கிச்
சிந்தை வெருவிக் கடவுள் செய்ய முகம் நோக்கி
வெம் திறல் கொள் வேடுவர்கள் வெய்யர் இவண்                                      நில்லாது
உய்ந்திட நினைந்து கடிது ஓடும் இனி என்றாள்.
93
   
10172.
ஓடும் இனி என்றவள் உரைத்த மொழி கேளா
நீடு மகிழ்வு எய்தி அவண் நின்ற குமரேசன்
நாடு புகழ் சைவ நெறி நல் தவ விருத்த
வேடம் அது கொண்டு வரும் வேடர் எதிர் சென்றான்.
94
   
10173.
சென்று கிழவோன் குறவர் செம்மல் எதிர் நண்ணி
நின்று பரிவோடு திருநீறு தனை நல்கி
வன் திறல் மிகுத்திடுக வாகை பெரிது ஆக
இன்றி அமையாத வளன் எய்திடுக என்றான்.
95
   
10174.
பூதியினை அன்பொடு புரிந்த குரவன் தன்
பாத மலர் கைகொடு பணிந்து குற மன்னன்
மேதகு இவ் வெற்பினில் விருத்தர் என வந்தீர்
ஓதிடுதிர் வேண்டியதை ஒல்லைதனில் என்றான்.
96
   
10175.
ஆண் தொழிலின் மே தகைய அண்ணல் இது
                                  கேண்மோ
நீண்ட தனி மூப்பு அகல நெஞ்சம் மருள் நீங்க
ஈண்டு நும் வரைக் குமரி எய்தி இனிது ஆட
வேண்டி வருகின்றனன் மெலிந்து கடிது என்றான்.
97
   
10176.
நற்றவன் மொழியைக் கேளா நன்று நீர் நவின்ற தீர்த்தம்
நிற்றலும் ஆடி எங்கள் நேரிழை தமியள் ஆகி
உற்றனள் அவளுக்கு எந்தை ஒரு தனித் துணையது
                                     ஆகி
மற்று இவண் இருத்திர் என்ன அழகு இதாம் மன்ன                                      என்றான்.
98
   
10177.
இனையது ஓர் பொழுதில் தந்தை ஏந்திழை தன்பால்                                    ஏகித்
தினையொடு கிழங்கு மாவும் தீம் கனி பிறவும் நல்கி
அனையவள் துணையது ஆக அரும் தவன் தன்னை                                    வைத்து
வனை கழல் எயின ரோடும் வல்லையின் மீண்டு                                    போனான்.
99
   
10178.
போனது முதியோன் கண்டு புனை இழை தன்னை                         நோக்கி
நான் இனிச் செய்வது என்கொல் நலிவது பசி நோய்                         என்னத்
தேனொடு கனியும் மாவும் செம்கையில் கொடுப்பக்                         கொண்டு
வேனிலும் முடுகிற்று உண்ணீர் விடாய் பெரிது                         உடையேன் என்றான்.
100
   
10179.
செப்புறும் அனைய மாற்றம் சேய் இழைக் கிழத்தி கேளா
இப்புற வரைக்கும் அப்பால் எழுவரை கடந்து அதன்பின்
உப்புறம் இருந்தது எந்தாய் ஒரு சுனை ஆங்கண் ஏகி
வெப்பு உறல் இன்றித் தெண்ணீர் மிசைந்து பின்வருதிர்                                       என்றாள்.
101
   
10180.
பூட்டுவார் சிலைக்கை வேடர் பூவையே புலந்து                                    தெண்ணீர்
வேட்டனன் விருத்தன் வெற்பில் வியன் நெறி சிறிதும்                                    தேரேன்
தாள் துணை வருந்தும் என்று தாழ்ந்திடாது ஒல்லை                                    ஏகிக்
காட்டுதி சுனை நீர் என்றான் அறுமுகம் கரந்த கள்வன்.
102
   
10181.
முருகனது உரையை அந்த மொய் குழல் வினவி எந்தாய்
வருக என அழைத்து முன் போய் வரை எலாம் கடந்து                                       சென்று
விரை கமழ் சுனை நீர் காட்ட வேனிலால் வெதும்பினான்                                       போல்
பருகினன் பருகிப் பின்னர் இஃது ஒன்று பகர்தல்
                                      உற்றான்.
103
   
10182.
ஆகத்தை வருத்து கின்ற அரும்பசி அவித்தாய்                                 தெள்நீர்த்
தாகத்தை அவித்தாய் இன்னும் தவிர்ந்தில தளர்ச்சி                                 மன்னோ
மேகத்தை அனைய கூந்தல் மெல் இயல் வினையேன்                                 கொண்ட
மோகத்தைத் தணித்தியாயின் முடிந்தது என் குறை
                                அது என்றான்.
104
   
10183.
ஈறு இல் முதியோன் இரங்கி இரந்து குறை
கூறி மதி மயங்கிக் கும்பிட்டு நின்ற அளவில்
நாறு மலர்க் கூந்தல் நங்கை நகைத்து உயிர்த்துச்
சீறி நடுநடுங்கி இவ்வாறு செப்புகின்றாள்.
105
   
10184.
மேல் ஆகிய தவத்தோர் வேடம் தனைப் பூண்டு இங்கு
ஏலா தனவே இயற்றினீர் யார் விழிக்கும்
பால் ஆகித் தோன்றிப் பருகினார் ஆவி கொள்ளும்
ஆலால நீர்மைத்தோ ஐயர் இயற்கை அதே.
106
   
10185.
கொய் தினைகள் காப்பேனைக் கோது இலா மா தவத்தீர்
மெய் தழுவ உன்னி விளம்பாதன விளம்பிக்
கை தொழுது நிற்றல் கடன் அன்று கானவரிச்
செய்கை தனை அறியின் தீதாய் முடிந்திடுமே.
107
   
10186.
நத்துப் புரை முடியீர் நல் உணர்வு சற்றும் இலீர்
எத்துக்கு மூத்தீர் இழி குலத்தேன் தன்னை வெஃகிப்
பித்துக் கொண்டார் போல் பிதற்றுவீர் இவ் வேடர்
கொத்துக் கொல் ஆம் ஓர் கொடும் பழியைச் செய்தீரே.
108
   
10187.
சேவலாய் வைகும் தினைப் புனத்தில் புள்ளின் உடன்
மா எலாம் கூடி வளர் பைங் குரல் கவரும்
நாவலோய் நீரும் நடந்து அருளும் நான் முந்திப்
போவன் ஆல் என்று புனை இழையால் போந்தனளே.
109
   
10188.
பொன்னே அனையாள் முன் போகும் திறல் நோக்கி
என்னே இனிச் செய்வது என்று இரங்கி எம்பெருமான்
தன் நேர் இலாது அமரும் தந்தி முகத்து எந்தை தனை
முன்னே வருவாய் முதல்வா என நினைந்தான்.
110
   
10189.
அந்தப் பொழுதில் அறுமா முகற்கு இரங்கி
முந்திப் படர்கின்ற மொய் குழலாள் முன் ஆகத்
தந்திக் கடவுள் தனி வாரணப் பொருப்பு
வந்து உற்றது அம்மா மறிகடலே போல் முழங்கி.
111
   
10190.
அவ் வேலையில் வள்ளி அச்சமொடு மீண்டு உதவப்
பொய் வேடம் கொண்டு நின்ற புங்கவன் தன் பால்                                 அணுகி
இவ்வேழம் காத்து அருள்க எந்தை நீர் சொற்றபடி
செய்வேன் என ஒருபால் சேர்ந்து தழீஇக்
                                கொண்டனளே.
112
   
10191.
அன்னது ஒரு காலை அறுமா முகக் கடவுள்
முன் ஒரு சார் வந்து முது களிற்றின் கோடு ஒற்றப்
பின் ஒரு சார் வந்து பிடியின் மருப்பு ஊன்ற
இந் நடுவே நின்றான் எறுழ் வயிரத் தூணே போல்.
113
   
10192.
கந்தன் முருகன் கடவுள் களிறு தனை
வந்தனைகள் செய்து வழுத்தி நீ வந்திடலால்
புந்தி மயல் தீர்ந்தேன் புனை இழையும் சேர்ந்தனள்
                                      ஆல்
எந்தை பெருமான் எழுந்து அருள்க மீண்டு என்றான்.
114
   
10193.
என்னும் அளவில் இனிது என்றி யானை முக
முன் இளவல் ஏக முகம் ஆறு உடைய பிரான்
கன்னிதனை ஓர் கடி காவினில் கலந்து
துன் அரு கருணை செய்து தொல் உருவம் காட்டினனே.
115
   
10194.
முந் நான்கு தோளும் முகங்கள் மூ இரண்டும்
கொன்னார் வை வேலும் குலிசமும் ஏனைப் படையும்
பொன்னார் மணி மயிலும் மாகப் புனக் குறவர்
மின்னாள் கண் காண வெளி நின்றனன் விறலோன்.
116
   
10195.
கூர் ஆர் நெடுவேல் குமரன் திரு உருவைப்
பாரா வணங்காப் பரவல் உறா விம்மிதமும்
சேரா நடு நடுங்காச் செம் கை குவியா வியரா
ஆராத கதல் உறா அம்மை இது ஓதுகின்றாள்.
117
   
10196.
மின்னே அனைய சுடர் வேலவரே இவ் உருவம்
முன்னே நீர் காட்டி முயங்காமல் இத்துணையும்
கொன்னே கழித்தீர் கொடியேன் செய் குற்றம் எலாம்
இன்னே தணித்தே எனை ஆண்டு கொள்ளும் என்றாள்.
118
   
10197.
உம்மை அதனில் உலகம் உண்டோன் தன் மகள் நீ
நம்மை அணையும் வகை நல் தவம் செய்தாய் அதனால்
இம்மை தனில் உன்னை எய்தினோம் என்று எங்கள்
அம்மை தனைத் தழுவி ஐயன் அருள் புரிந்தான்.
119
   
10198.
எங்கள் முதல்வன் இறைவி தனை நோக்கி
உங்கள் புனம் தன்னில் உறைந்திட முன் ஏகுதி ஆல்
மங்கை நல் ஆயமும் வருவோம் என உரைப்ப
அங்கண் விடை கொண்டு அடி பணிந்து போயினளே.
120
   
10199.
வாங்கிய சிலை நுதல் வள்ளி என்பவள்
பூங் குரல் ஏனல் அம் புனத்துள் ஏகியே
ஆங்கனம் இருத்தலும் அயல் புனத்து அமர்
பாங்கி வந்து அடி முறை பணிந்து நண்ணினாள்.
121
   
10200.
நாற்றமும் தோற்றமும் நவில் ஒழுக்கமும்
மாற்றமும் செய்கையும் மனமும் மற்றதும்
வேற்றுமை ஆதலும் விளைவு நோக்கியே
தேற்றமொடு இகுளை அங்கு இனைய செப்புவாள்.
122
   
10201.
இப்புனம் அழிதர எங்ஙன் ஏகினை
செப்புதி நீ எனத் தெரிவை நாண் உறா
அப்புறம் மென் சுனை ஆடப் போந்தனன்
வெப்பு உறும் வேனிலால் மெலிந்தி யான் என்றாள்.
123
   
10202.
மை விழி சிவப்பவும் வாய் வெளுப்பவும்
மெய் வியர்வு அடையவும் நகிலம் விம்மவும்
கை வளை நெகிழவும் காட்டும் தண் சுனை
எவ்விடை இருந்து உளது இயம்புவாய் என்றாள்.
124
   
10203.
சொற்றிடும் இகுளையைச் சுளித்து நோக்கியே
உற்றிடும் துணையதா உனை உட்கொண்டு யான்
மற்று இவண் இருந்தனன் வந்து எனக்கு ஓர்
குற்றம் அது உரைத்தனை கொடியை நீ என்றாள்.
125
   
10204.
பாங்கியும் தலைவியும் பகர்ந்து மற்று இவை
யாங்கனம் இருத்தலும் அதனை நோக்கியே
ஈங்கு இது செவ்வி என்று எய்தச் சென்றனன்
வேங்கை அது ஆகி முன் நின்ற மேலையோன்.
126
   
10205.
கோட்டிய சிலையினன் குறிக் கொள் வாளியான்
தீட்டிய குறியவாள் செறித்த கச்சினன்
வேட்டம் அது அழுங்கிய வினைவலோன் எனத்
தாள் துணை சிவந்திடத் தமியன் ஏகினான்.
127
   
10206.
காந்தள் போலிய கரத்தினீர் யான் எய்த கணையால்
பாய்ந்த சோரியும் பெரு முழக்கு உறு பகு வாயும்
ஓய்ந்த புண் படு மேனியும் ஆகி ஓர் ஒருத்தல்
போந்த தோ இவண் புகலுதிர் புகலுதிர் என்றான்.
128
   
10207.
வேழமே முதல் உள்ளன கெடுதிகள் வினவி
ஊழி நாயகன் நிற்றலும் உமக்கு நேர் ஒத்து
வாழும் நீரருக்கு உரைப்பதே அன்றி நும் வன்மை
ஏழை யேங்களுக்கு இசைப்பது என் என்றனள் இகுளை.
129
   
10208.
ஐயர் வேட்டை வந்து இடுவதும் தினைப் புனத்து                                    அமர்ந்து
தையல் காத்திடு கின்றதும் சரதமோ பறவை
எய்யும் வேட்டுவர் கோலமே போன்றன இருவர்
மையல் தன்னையும் உரைத்திடும் விழி என மதித்தாள்.
130
   
10209.
மனத்தில் இங்கு இவை உன்னியே துணைவியும் மற்றைப்
புனத்தில் ஏகி வீற்று இருந்தனள் அன்னது ஓர்                                    பொழுதில்
சினத்திடும் கரி எய்தனம் என்ற சேவகன் போய்க்
கனத்தை நேர் தரு கூந்தலாய் கேள் எனக் கழறும்.
131
   
10210.
உற்ற கேளிரும் நீங்களே தமியனுக்கு உமக்குப்
பற்றது ஆய் உள பொருள் எலாம் தருவன் நும்
                                  பணிகள்
முற்றும் நாடியே புரிகுவன் முனிவு கொள்ளாது
சற்று நீர் அருள் செய்திடும் என்றனன் தலைவன்.
132
   
10211.
அண்ணல் கூறியது இகுளை தேர்ந்திடு தலும் ஐயர்
எண்ணம் ஈது கொல் எம் பெரும் கிளைக்கு ஓர்                                     இழுக்கை
மண்ணின் நாட்டவோ வந்தது மறவர் தம் பேதைப்
பெண்ணை ஆதரித்து இடுவரோ பெரியவர் என்றாள்.
133
   
10212.
சீதரன் தரும் அமிர்தினை எயினர்கள் செய்த
மா தவம் தனைப் பெண்ணினுக்கு அரசை மற்று
                                  எனக்குக்
காதல் நல்கியே நல் அருள் புரிந்த காரிகையைப்
பேதை என்பதே பேதைமை என்றனன் பெரியோன்.
134
   
10213.
என்று எம் கோன் உரை செய்தலும் மட மகள் இங்ஙன்
குன்றம் காவலர் வருகுவர் அவர் மிகக் கொடியோர்
ஒன்றும் தேர் கிலர் காண்பரேல் எம் உயிர் ஒறுப்பார்
நின்று இங்கு ஆவது என் போம் என நெறிப்படுத்து                                  உரைத்தாள்.
135
   
10214.
தோட்டின் மீது செல் விழியினாய் தோகையோடு                                   என்னைக்
கூட்டிடாய் எனில் கிழிதனில் ஆங்கு அவள் கோலம்
தீட்டி மா மடல் ஏறி நும் ஊர்த் தெரு அதனில்
ஓட்டுவேன் இது நாளை யான் செய்வது என்று                                   உரைத்தான்.
136
   
10215.
ஆதி தன் மொழி துணைவி கேட்டு அஞ்சி ஐயர்க்கு
நீதி அன்று தண் பனை மடல் ஏறுதல் நீர் இம்
மாதவித் தருச் சூழலில் மறைந்து இரும் மற்று என்
காதல் மங்கையைத் தருவன் என்று ஏகினள் கடிதின்.
137
   
10216.
அங்கு அவ் எல்லையில் அக மகிழ்ச்சி யாய்
எங்கள் தம்பிரான் இனிதின் ஏகியே
மங்குல் வந்து கண் வளரும் மாதவிப்
பொங்கர் தன் இடைப் புக்கு வைகினான்.
138
   
10217.
பொள் என அத் தினைப் புனத்தில் பாங்கி போய்
வள்ளி தன் பதம் வணங்கி மான வேல்
பிள்ளை காதலும் பிறவும் செப்பியே
உள்ளம் தேற்றியே ஒருப் படுத்தினாள்.
139
   
10218.
இளைய மங்கையை இகுளை ஏனலின்
விளை தரும் புனம் மெல்ல நீங்கியே
அளவு இல் மஞ்ஞைகள் அகவும் மாதவிக்
குளிர் பொதும் பரில் கொண்டு போயினாள்.
140
   
10219.
பற்றின் மிக்கது ஓர் பாவை இவ்வரை
சுற்றி ஏகி நீ சூடும் கோடல் கள்
குற்று வந்து நின் குழற்கு நல்குவான்
நிற்றி ஈண்டு என நிறுவிப் போயினாள்.
141
   
10220.
கோல் தொடி இகுளை தன் குறிப்பினால் வகை
சாற்றினள் அகன்றிடத் தையல் நிற்றலும்
ஆற்றவும் மகிழ் சிறந்து ஆறு மா முகன்
தோற்றினன் எதிர்ந்தனன் தொன்மை போலவே.
142
   
10221.
வடுத்துணை நிகர் விழி வள்ளி எம்பிரான்
அடித்துணை வணங்கலும் அவளை அம் கையால்
எடுத்தனன் புல்லினன் இன்பம் எய்தினான்
சுடர்த் தொடி கேட்டி என்று இதனைச் சொல்லினான்.
143
   
10222.
உந்தையும் பிறரும் வந்து உன்னை நாடுவர்
செம் தினை விளைபுனம் சேவல் போற்றிடப்
பைந்தொடி அணங்கொடு படர்தி நாளை யாம்
வந்திடு வோம் என மறைந்து போயினான்.
144
   
10223.
போந்தபின் இரங்கி அப் பொதும்பர் நீங்கியே
ஏந்திழை வருதலும் இகுளை நேர்கொடு
காந்தளின் மலர் சில காட்டி அன்னவள்
கூந்தலில் சூடியே கொடு சென்று ஏகினாள்.
145
   
10224.
இவ்வகை வழிபடும் இகுளை தன்னொடு
நை வளமே என நவிலும் தீம் சொலாள்
கொய் வரு தினைப் புனம் குறுகிப் போற்றியே
அவ்விடை இருந்தனள் அகம் புலர்ந்து உளாள்.
146
   
10225.
வளம் தரு புனம் தனில் வள்ளி நாயகி
தளர்ந்தனள் இருத்தலும் தலை அளித்திடும்
இளம் தினையின் குரல் என்று முற்றியே
விளைந்தன குறவர்கள் விரைந்து கூடினார்.
147
   
10226.
குன்ற வாணர்கள் யாவரும் கொடிச்சியை நோக்கித்
துன்றும் ஏனல்கள் விளைந்தன கணிகளும் சொற்ற
இன்று காறிது போற்றியே வருந்தினை இனி நீ
சென்றிடு அம்ம உன் சிறு குடிக்கு என உரை செய்தார்.
148
   
10227.
குறவர் இவ் வைகை சொற்றன செவிப் புலம் கொண்டு                                       ஆங்கு
எறியும் வேல் படு புண் இடை எரி நுழைந்து என்ன
மறுகு உள்ளத்தள் ஆகியே மற்று அவண் நீங்கிச்
சிறு குடிக்கு நல் இகுளையும் தானுமாய்ச் சென்றாள்.
149
   
10228.
மான் இனங்களை மயில்களைக் கிளியை மாண் புறவை
ஏனை உள்ளவை தங்களை நோக்கியே யாங்கள்
போன செய்கையைப் புகலுதிர் புங்கவர்க்கு என்னாத்
தான் இரங்கியே போயினள் ஒருதனித் தலைவி.
150
   
10229.
பூவை அன்னது ஓர் மொழியினாள் சிறு குடிப் புகுந்து
கோவில் வைப்பினுள் குறுகியே கொள்கை வேறு ஆகிப்
பாவை ஒண் கழங்கு ஆடலள் பண்டு போல் மடவார்
ஏவர் தம்மொடும் பேசலள் புலம்பி வீற்று இருந்தாள்.
151
   
10230.
மற்ற எல்லையில் செவிலியும் அன்னையும் மகளை
உற்று நோக்கியே மேனி வேறு ஆகியது உனக்குக்
குற்றம் வந்தவாறு என் என வற் புறக் கூறிச்
செற்றம் எய்தியே அன்னவள் தன்னை இல் செறித்தார்.
152
   
10231.
ஓவியம் அனைய நீராள் உடம்பிடித் தடக்கை யோனை
மேவினள் பிரிதலாலே மெய் பரிந்து உள்ளம் வெம்பி
ஆவியது இல்லாள் என்ன அவசமாய் அங்கண் வீழப்
பாவையர் எடுத்துப் புல்லிப் பருவரல் உற்றுச் சூழ்ந்தார்.
153
   
10232.
ஏர்கொள் மெய் நுடங்குமாறும் இறை வளை கழலு
                          
    மாறும்
கூர் கொள் கண் பனிக்கு மாறும் குணங்கள் வேறு
                              ஆய வாறும்
பீர் கொளுமாறும் நோக்கிப் பெண்ணினைப் பிறங்கல்                               சாரல்
சூர் கொலாம் தீண்டிற்று என்றார் சூர்ப் பகை
                              தொட்டது ஓரார்.
154
   
10233.
தந்தையும் குறவர் தாமும் தமர்களும் பிறரும் ஈண்டிச்
சிந்தையுள் அயர்வு கொண்டு தெரிவை தன் செயலை                                     நோக்கி
முந்தையின் முதியாளோடு முருகனை முறையில் கூவி
வெம் திறல் வேலினாற்கு வெறி அயர் வித்தார் அன்றே.
155
   
10234.
வெறி அயர் கின்ற காலை வேலன் மேல் வந்து                                     தோன்றிப்
பிறிது ஒரு திறமும் அன்றால் பெய் வளை தமியள்
                                    ஆகி
உறை தரு புனத்தில் தொட்டாம் உளம் மகிழ் சிறப்பு                                     நேரில்
குறை இது நீங்கும் என்றே குமரவேள் குறிப்பில்                                     சொற்றான்.
156
   
10235.
குறிப்பொடு நெடுவேல் அண்ணல் கூறிய கன்ன மூல
நெறிப்பட வருதலோடும் நேர் இழை அவசம் நீங்கி
முறைப்பட எழுந்து வைக முருகனை முன்னி ஆங்கே
சிறப்பினை நேர்தும் என்று செவிலித் தாய் பராவல்                                     செய்தாள்.
157
   
10236.
மனை இடை அம்மை வைக வனசரர் முதிர்ந்த செவ்வித்
தினையினை அரிந்து கொண்டு சிறு குடி அதனில்                                       சென்றார்
இனையது நோக்கிச் செவ்வேள் இருவியம் புனத்தில்                                       புக்குப்
புனை இழை தன்னைக் காணான் புலம்பியே திரிதல்                                       உற்றான்.
158
   
10237.
கனம் தனை வினவும் மஞ்ஞைக் கணம் தனை வினவும்                                      ஏனல்
புனம் தனை வினவும் அம் மென் பூவையை வினவும்                                      கிள்ளை
இனம் தனை வினவும் யானை இரலையை வினவும்
                                     தண் கா
வனம்தனை வினவும் மற்றை வரைகளை வினவும்
                                     மாதோ.
159
   
10238.
வாடினான் தளர்ந்தான் நெஞ்சம் வருந்தினான் மையற்கு                                      எல்லை
கூடினான் வெய்து உயிர்த்தான் குற்றடிச் சுவடு தன்னை
நாடினான் திகைத்தான் நின்று நடுங்கினான் நங்கை                                      தன்னைத்
தேடினான் குமரற்கு ஈது திரு விளையாடல் போலாம்.
160
   
10239.
வல்லியை நாடுவான் போல் மாண் பகல் கழித்து வாடிக்
கொல்லை அம் புனத்தில் சுற்றிக் குமர வேள் நடு நாள்                                      யாமம்
செல் உறும் எல்லை வேடர் சிறு குடி தன்னில் புக்குப்
புல்லிய குறவர் செம்மல் குரம்பையின் புறம் போய்                                      நின்றான்.
161
   
10240.
பாங்கி செவ் வேளைக் கண்டு பணிந்து நீர் கங்குல்                                      போதில்
ஈங்கு வந்திடுவது ஒல்லாது இறைவியும் பிரியின்
                                     உய்யாள்
நீங்கள் இவ்விடத்தில் கூட நேர்ந்தது ஓர் இடமும்                                      இல்லை
ஆங்கு அவள் தன்னைக் கொண்டே அகலுதிர் அடிகள்                                      என்றாள்.
162
   
10241.
என்று இவை கூறிப் பாங்கி இறைவனை நிறுவி ஏகித்
தன் துணை ஆகி வைகும் தையலை அடைந்து
                                    கேள்வர்
உன் தனை வவ்விச் செல்வான் உள்ளத்தில் துணியா                                     இங்ஙன்
சென்றனர் வருதி என்னச் சீரிது என்று ஒருப்பாடு                                     உற்றாள்.
163
   
10242.
தாய் துயில் அறிந்து தங்கள் தமர் துயில் அறிந்து
                             துஞ்சா
நாய் துயில் அறிந்து மற்ற அந் நகர் துயில் அறிந்து                              வெய்ய
பேய் துயில் கொள்ளும் யாமப் பெரும் பொழுது
                             அதனில் பாங்கி
வாய்தலில் கதவை நீக்கி வள்ளியைக் கொடு சென்று                              உய்த்தாள்.
164
   
10243.
அறுமுக ஒருவன் தன்னை ஆய் இழை எதிர்ந்து
                                    தாழ்ந்து
சிறுதொழில் எயினர் ஊரில் தீயனேன் பொருட்டால்
                                    இந்த
நறு மலர்ப் பாதம் கன்ற நாள் இருள் யாமம் தன்னில்
இறைவ நீர் நடப்பதே என்று இரங்கியே தொழுது                                     நின்றாள்.
165
   
10244.
மாத்தவ மடந்தை நிற்ப வள்ளலை இகுளை நோக்கித்
தீத் தொழில் எயினர் காணில் தீமையாய் விளையும்                                இன்னே
ஏத் தரும் சிறப்பின் நும் ஊர்க்கு இங்கு அவள் தனை                                கொண்டு ஏகிக்
காத்து அருள் புரியும் என்றே கையடை யாக
                               நேர்ந்தாள்.
166
   
10245.
முத்து உறு முறுவலாளை மூ இரு முகத்தினன் தன்
கைத் தலம் தன்னில் ஈந்து கை தொழுது இகுளை நிற்ப
மெய்த்தகு கருணை செய்து விளங்கு இழாய் நீ                              எம்பாலின்
வைத்திடு கருணை தன்னை மறக்கலம் கண்டாய்                           
      என்றான்.
167
   
10246.
மை உறு தடங்கண் நல்லாள் வள்ளியை வணக்கம்                                         செய்து
மெய் உறப் புல்லி அன்னாய் விரைந்தனை சேறி என்னா
ஐயனோடு இனிது கூட்டி ஆங்கு அவர் விடுப்ப மீண்டு
கொய்யுறு கவரி மேய்ந்த குரம்பையின் கூரை புக்காள்.
168
   
10247.
விடை பெற்றே இகுளை ஏக வேல் உடைக் கடவுள்                                     அன்ன
நடை பெற்ற மடந்தையோடு நள் இருள் இடையே
                                   
 சென்று
கடை பெற்ற சீறூர் நீங்கிக் காப்பு எலாம் கடந்து
                                   
 காமன்
படை பெற்றுக் குலவும் ஆங்கு ஓர் பசுமரக் காவுள்                                  சேர்ந்தான்.
169
   
10248.
செம் சுடர் நெடுவேல் அண்ணல் செழுமலர்க் காவில்                                        புக்கு
வஞ்சியொடு இருந்த காலை வை கறை விடியல் செல்ல
எஞ்சல் இல் சீறூர் தன்னில் இறையவன் தனது தேவி
துஞ்சலை அகன்று வல்லே துணுக்கம் உற்று எழுந்தாள்                                       அன்றே.
170
   
10249.
சங்கு அலைகின்ற செம் கைத் தனிமகள் காணாள்
                           
         ஆகி
எங்கணும் நாடிப் பின்னர் இகுளையை வந்து கேட்பக்
கங்குலின் அவளும் நானும் கண்படை கொண்டது
                            
  உண்டு ஆல்
அங்கு அவள் அதன் பின் செய்தது அறிகிலேன்                             அன்னாய் என்றாள்.
171
   
10250.
தம் மகள் காணா வண்ணம் தாய் வந்து புகலக் கேட்டுத்
தெம்முனைக் குறவர் செம்மல் தெருமந்து செயிர்த்துப்                                      பொங்கி
நம்மனைக் காவல் நீங்கி நல்நுதல் பேதை தன்னை
இம் எனக் கொண்டு போந்தான் யாவனோ ஒருவன்                                      என்றான்.
172
   
10251.
மற்று இவை புகன்று தாதை வாள் படை மருங்கில்                                       கட்டிக்
கொற்ற வில் வாளி ஏந்திக் குமரியைக் கவர்ந்த கள்வன்
உற்றிடு நெறியை நாட ஒல்லையில் போவன் என்னாச்
செற்றமொடு எழுந்து செல்லச் சிறுகுடி எயினர் தேர்ந்தார்.
173
   
10252.
எள்ளுதற்கு அரிய சீறூர் இடைதனில் யாமத்து ஏகி
வள்ளியைக் கவர்ந்து கொண்டு மாயையால் மீண்டு                            
        போன
கள்வனைத் தொடர்தும் என்றே கானவர் பலரும் கூடிப்
பொள் எனச் சிலை கோல் பற்றிப் போர்த்தொழில்                              கமைந்து போனார்.
174
   
10253.
வேடுவர் யாரும் ஈண்டி விரைந்து போய் வேந்தனோடு
கூடினர் இரலை தன்னைக் குறித்தனர் நெறிகள் தோறும்
ஓடினர் பொதும்பர் எல்லாம் உலாவினர் புலங்கள் புக்கு
நாடினர் சுவடு நோக்கி நடந்தனர் இடங்கள் எங்கும்.
175
   
10254.
ஈங்கனம் மறவரோடும் இறையவன் தேடிச் செல்லப்
பாங்கரில் ஒருதண் காவில் பட்டிமை நெறியால் உற்றாள்
ஆங்கனம் தெரியா அஞ்சி ஆறுமா முகத்து வள்ளல்
பூங்கழல் அடியில் வீழ்ந்து பொருமியே புகலல் உற்றாள்.
176
   
10255.
கோலொடு சிலையும் வாளும் குந்தமும் மழுவும் பிண்டி
பாலமும் பற்றி வேடர் பலருமாய்த் துருவிச் சென்று
சோலையின் மருங்கு வந்தார் துணுக்கம் உற்று உளது                             என் சிந்தை
மேல் இனிச் செய்வது என்கொல் அறிகிலேன்
                            விளம்பாய் என்றாள்.
177
   
10256.
வருந்தலை வாழி நல்லாய் மால் வரையோடு சூரன்
உரம் தனை முன்பு கீண்ட உடம் பிடி இருந்த நும்
                                   மோர்
விரைந்து அமர் புரியச் சூழின் வீட்டுதும் அதனை                                    நோக்கி
இருந்து அருள் நம்பின் என்னா இறை மகட்கு எந்தை                                    சொற்றான்.
178
   
10257.
குறத் திரு மடந்தை இன்ன கூற்றினை வினவிச்                                    செவ்வேள்
புறத்தினில் வருதலோடும் பொள் எனக் குறுகி அந்தத்
திறத்தினை உற்று நோக்கிச் சீறி வெய்துயிர்த்துப்
                                   பொங்கி
மறத்தொழில் எயினர் காவை மருங்கு உற வளைந்து                                    கொண்டார்.
179
   
10258.
தாதை அங்கு அதனைக் கண்டு தண்டலை குறுகி
                                    நம்தம்
பேதையைக் கவர்ந்த கள்வன் பெயர்கிலன் எமது                                     வன்மை
ஏதையும் மதியான் அம்மா இவன் விறல் எரி பாய்ந்து                                     உண்ணும்
ஊதை அம் கானம் என்ன முடிக்குதும் ஒல்லை
                                    என்றான்.
180
   
10259.
குறவர்கள் முதல்வன் தானும் கொடும் தொழில் எயினர்                                      யாரும்
மறிகடல் என்ன வார்த்து வார்சிலை முழுதும் வாங்கி
எறி சுடர்ப் பரிதித் தேவை எழிலிகள் மறைத்தால் என்ன
முறை முறை அம்பு வீசி முருகனை வளைந்து கொண்டார்.
181
   
10260.
ஒட்டலர் ஆகிச் சூழ்ந்து ஆங்கு உடன்று போர் புரிந்து                                      வெய்யோர்
விட்ட வெம் பகழி எல்லாம் மென் மலர் நீர ஆகிக்
கட்டழகு உடைய செவ்வேல் கருணை அம் கடலின் மீது
பட்டன பட்டலோடும் பைந்தொடி பதைத்துச் சொல்வாள்.
182
   
10261.
நெட்டிலை வாளி தன்னை ஞெரேல் என நும் மேல்                                       செல்லத்
தொட்டிடும் கையர் தம்மைச் சுடர் உடை நெடுவேல்
                                      ஏவி
அட்டிடல் வேண்டும் சீயம் அடுதொழில் குறியாது                                       என்னில்
கிட்டுமே மரையும் மானும் கேழலும் வேழம் தானும்.
183
   
10262.
என்று இவை குமரி செப்ப எம்பிரான் அருளால் பாங்கர்
நின்றது ஓர் கொடி மாண் சேவல் நிமிர்ந்து எழுந்து                              ஆர்ப்புக் கொள்ளக்
குன்றவர் முதல்வன் தானும் குமரரும் தமரும் யாரும்
பொன்றினர் ஆகி மாண்டு பொள் எனப் புவியில்                           
            வீழ்ந்தார்.
184
   
10263.
தந்தையும் முன்னை யோரும் தமரும் வீழ்ந்து இறந்த                                    தன்மை
பைந்தொடி வள்ளி நோக்கிப் பதைபதைத்து இரங்கிச்                                    சோரக்
கந்தனத் துணைவி அன்பு காணுவான் கடிகா நீங்கிச்
சிந்தையில் அருளோடு ஏக அனையளும் தொடர்ந்து                                    சென்றாள்.
185
   
10264.
செல்ல நாரதப் பேர் பெற்ற சீர் கெழு முனிநேர் வந்து
வல்லியோடு இறைவன் தன்னை வணங்கி நின் செய்கை                                    எல்லாம்
சொல்லுதி என்ன அன்னான் தோகையைக் காண்டல்                                    தொட்டு
மல்லல் வேட்டுவரை அட்டு வந்திடும் அளவும்                                    சொற்றான்.
186
   
10265.
பெற்றிடு தந்தை தன்னைப் பிற உள சுற்றத் தோரைச்
செற்றம் ஒடு அட்டு நீக்கிச் சிறந்த நல் அருள் செயாமல்
பொன் தொடி தன்னைக் கொண்டு போன் திடத் தகுமோ                                         என்னா
மற்று இவை முனிவன் கூற வள்ளலும் அஃதாம் என்றான்.
187
   
10266.
விழுப்பம் உள தண் காவில் விசாகன் மீண்டு அருளித்                                   தன்பால்
முழுப்பரிவு உடைய நங்கை முகத்தினை நோக்கி                                   நம்மேல்
பழிப்படு வெம்போர் ஆற்றிப் பட்ட நும் கிளையை                                   எல்லாம்
எழுப்புதி என்னலோடும் இனிது என இறைஞ்சிச்                                   சொல்வாள்.
188
   
10267.
விழுமிய உயிர்கள் சிந்தி வீழ்ந்த நம் கேளிர் யாரும்
எழுதிர் என்று அருளலோடும் இரு நிலத்து                                உறங்குகின்றோர்
பழைய நல் உணர்வு தோன்றப் பதை பதைத்துத்                                எழுதற்கு ஒப்பக்
குழுவுறு தமர்களோடும் குறவர் கோன் எழுந்தான்                                அன்றே.
189
   
10268.
எழுந்திடுகின்ற காலை எம்பிரான் கருணை வெள்ளம்
பொழுந்திடும் வதனம் ஆறும் புயங்கள் பன்னிரண்டும்                                  வேலும்
ஒழிந்திடு படையும் ஆகி உருவினை அவர்குக் காட்ட
விழுந்தனர் பணிந்து போற்றி விம்மிதர் ஆகிச்                                  சொல்வார்.
190
   
10269.
அடும்திறல் எயினர் சேரி அளித்திடு நீயே எங்கள்
மடந்தையைக் கரவில் வௌவி வரம்பினை அழித்துத்                                    தீரா
நெடும் தனிப் பழியது ஒன்று நிறுவினை புதல்வர்                                    கொள்ள
விடம்தனை அன்னை ஊட்டின் விலக்கிடு கின்றார்                                    உண்டோ.
191
   
10270.
ஆங்கு அது நிற்க எங்கள் அரிவையை நசையால்                                 வௌவி
நாங்களும் உணரா வண்ணம் நம் பெரும் காவல் நீங்கி
ஈங்கு இவள் கொணர்ந்தாய் எந்தாய் இன்னினிச்
                                சீறூர்க்கு ஏகித்
தீங்கனல் சான்றா வேட்டுச் செல்லுதி நின் ஊர்க்கு                                 என்றார்.
192
   
10271.
மாதுலன் முதலோர் சொற்ற மண மொழிக்கு இசைவு                                      கொண்டு
மேதகு கருணை செய்து மெல்லியல் தனையும் கொண்டு
கோது இலா முனிவனோடும் குளிர் மலர்க் காவு நீங்கிப்
பாத பங்கயங்கள் நோவப் பருப்பதச் சீறூர் புக்கான்.
193
   
10272.
தந்தையும் சுற்றத்தோறும் சண்முகன் பாங்கர் ஏகிச்
சிந்தையின் மகிழ்ச்சியோடு சிறு குடியோரை நோக்கிக்
கந்தனே நமது மாதைக் கவர்ந்தனன் நமது சொல்லால்
வந்தனன் மணமும் செய்ய மற்று இது நிகழ்ச்சி என்றார்.
194
   
10273.
சங்கரன் மதலை தானே தையலைக் கவர்ந்தான் என்றும்
மங்கல வதுவை செய்ய வந்தனன் இங்ஙன் என்றும்
தங்கள் சுற்றத்தோர் கூறச் சிறு குடி தன்னில் உற்றோர்
பொங்கு வெம் சினமும் நாணும் மகிழ்ச்சியும் பொடிப்ப                                       நின்றார்.
195
   
10274.
குன்றவர் தமது செம்மல் குறிச்சியில் தலைமைத்து ஆன
தன் திரு மனையின் ஊடே சரவண முதல்வன் தன்னை
மன்றல் அம் குழலியோடு மரபுளி உய்த்து வேங்கைப்
பொன் திகழ் அதளின் மீது பொலிஉற இருத்தினானே.
196
   
10275.
அன்னது ஓர் வேலை தன்னில் அறுமுகம் உடைய                                       வள்ளல்
தன் உழை இருந்த நங்கை தனை அருளோடு நோக்கக்
கொன்ன வில் குறவர் மாதர் குயிற்றிய கோலம் நீங்கி
முன் உறு தெய்வக் கோல முழுது ஒருங்கு உற்ற தன்றே.
197
   
10276.
கவலை தீர் தந்தை தானும் கணிப்பு இலாச் சுற்றத்தாரும்
செவிலியும் அன்னை தானும் இகுளையும் தெரிவை                                     மாரும்
தவல் அரும் கற்பின் மிக்க தம் மகள் கோலம் நோக்கி
இவள் எமது இடத்தில் வந்தது எம் பெரும் தவமே                                     என்றார்.
198
   
10277.
அந்த நல் வேலை தன்னில் அன்புடைக் குறவர்                                      கோமான்
கந்தவேள் பாணி தன்னில் கன்னிகை கரத்தை நல்கி
நம் தவம் ஆகி வந்த நங்கையை நயப்பால் இன்று
தந்தனன் கொள்க என்று தண் புனல் தாரை உய்த்தான்.
199
   
10278.
நல்தவம் இயற்றும் தொல்சீர் நாரதன் அனைய காலைக்
கொற்றம் அது உடைய வேலோன் குறிப்பினால்                                    அங்கியோடு
மற்றுள கலனும் தந்து வதுவையின் சடங்கு நாடி
அற்றம் அது அடையா வண்ணம் அரு மறை விதியால்                                    செய்தான்.
200
   
10279.
ஆவது ஓர் காலை தன்னில் அரியும் நான் முகனும்                                    வானோர்
கோவொடு பிறரும் சூழக் குலவரை மடந்தை யோடும்
தேவர்கள் தேவன் வந்து சேண் மிசை நின்று செவ்வேள்
பாவையை வதுவை செய்யும் பரிசினை முழுதும்
                                   கண்டான்.
201
   
10280.
கண் நுதல் ஒருவன் தானும் கவுரியும் கண்ணால் கண்டு
தண்ணளி புரிந்து நிற்பத் தண் துழாய் முடியோன்
                                 ஆதிப்
பண்ணவர் உவகை நீடிப் பனிமலர் மாரிவீசி
அண்ணலை வழி பட்டு ஏத்தி அஞ்சலி புரிந்திட்டு                                  ஆர்த்தார்.
202
   
10281.
அறுமுகம் உடைய வள்ளல் அன்னது நோக்கிச் சீறூர்
இறையதும் உணரா வண்ணம் இமையமேல்                               அணங்கினோடும்
கறை அமர் கண்டன் தன்னைக் கை தொழுது ஏனை                               யோர்க்கு
முறை முறை உவகை யோடு முழுது அருள் புரிந்தான்                               அன்றே.
203
   
10282.
அங்கு அவ் வேலையின் அலரின் மேலவன்
செம் கண் மாயவன் தேவர் கோ மகன்
சங்கை தீர் தரும் தவத்தர் தம்மொடு
மங்கை பாதியன் மறைந்து போயினான்.
204
   
10283.
போன எல்லையில் பொருவில் நாரதன்
தான் இயற்றிய சடங்கு முற்றலும்
கான வேடுவர் கன்னி தன்னொடு
மான வேலவனை வணங்கிப் போற்றினான்.
205
   
10284.
மற்ற அது காலை தன்னில் மாதுலன் வள்ளி தன்னைக்
கொற்றவேல் உடைய நம்பி வதுவை செய் கோலம்                                       நோக்கி
உற்ற இவ் விழிகள் தம்மால் உறுபயன் ஒருங்கே இன்று
பெற்றனன் என்றான் அன்னான் உவகையார் பேசல்                                       பாலார்.
206
   
10285.
மெல் இடை கொம்பு என்று உன்ன விரைமலர் தழை                                மேல் கொண்ட
புல்லிய குறவர் மாதர் பொருவில் சீர் மருகன் தானும்
வல்லியும் இன்னே போல வைகலும் வாழ்க என்று
சொல் இயல் ஆசி கூறித் தூமலர் அறுகு தூர்த்தார்.
207
   
10286.
செந்தினை இடியும் தேனும் தீம் பல கனியும் காயும்
கந்தமும் பிறவும் ஆக இலை பொலி கலத்தில் இட்டுப்
பைந் தொடி அணங்கு நீயும் பரிவுடன் நுகர்திர் என்ன
வெம் திறல் எயினர் கூற வியன் அருள் புரிந்தான்                                     மேலோன்.
208
   
10287.
கிராதர் மங்கையும் பராபரன் மதலையும் கெழுமி
விராவு சில் உணா மிசைந்தனர் மிசைந்திடு தன்மை
முராரி ஆதி ஆம் தேவர் பால் முனிவர்பால் மற்றைச்
சராசரங்கள் பால் எங்கணும் சார்ந்து உளது அன்றே.
209
   
10288.
அனைய காலையில் அறுமுகன் எழுந்து நின்று ஆங்கே
குனியும் வில் உடைக் குறவர் தம் குரிசிலை நோக்கி
வனிதை தன்னுடன் சென்றி யாம் செருத் தணி வரையில்
இனிது வைகுதும் என்றலும் நன்று என இசைத்தான்.
210
   
10289.
தாயும் பாங்கியும் செவிலியும் தையலை நோக்கி
நாயகன் பின்னர் நடத்தியோ நன்று எனப் புல்லி
நேயமோடு பல் ஆசிகள் புகன்றிட நெடுவேல்
சேயுடன் கடிது ஏகவே சிந்தையுள் கொண்டாள்.
211
   
10290.
பாவை தன்னுடன் பன்னிரு புயம் உடைப் பகவன்
கோவில் நீங்கியே குறவர் தம் குரிசிலை விளித்துத்
தேவரும் தொழச் சிறுகுடி அரசியல் செலுத்தி
மேவுக என்று அவண் நிறுவியே போயினன் விரைவில்.
212
   
10291.
இன்ன தன்மை சேர் வள்ளியும் சிலம்பினை இகந்து
பன்னிரண்டு மொய்ம்பு உடையவன் பாவையும் தானும்
மின்னும் வெம் சுடர்ப் பரிதியும் போல விண்படர்ந்து
தன்னையே நிகர் தணிகை மால் வரையினைச் சார்ந்தான்.
213
   
10292.
செச்சை மௌலியான் செருத்தணி வரை மிசைத்
                                   தெய்வத்
தச்சன் முன்னரே இயற்றிய தனிநகர் புகுந்து
பச்சிளம் கொங்கை வனசரர் பாவை யோடு ஒன்றி
இச் சகத்து உயிர் யாவையும் உய்ய வீற்று இருந்தான்.
214
   
10293.
அந்த வேலையில் வள்ளி நாயகி அயில் வேல் கைக்
கந்த வேள் பதம் வணங்கியே கை தொழுது ஐய
இந்த மால் வரை இயற்கையை இயம்புதி என்னச்
சிந்தை நீடு பேர் அருளினால் இன்ன செப்பும்.
215
   
10294.
செம் கண் வெய்யச் சூர்ச் செருத் தொழிலினும் சிலை                                        வேடர்
தங்களில் செயும் செருத் தொழிலினும் தணிந் திட்டே
இங்கு வந்து யாம் இருத்தலால் செருத்தணி என்று ஓர்
மங்கலம் தரு பெயரினைப் பெற்றது இவ் வரையே.
216
   
10295.
முல்லை வாள் நகை உமையவள் முலை வளை
                                   அதனான்
மல்லல் மா நிழல் இறை வரை வடுப் படுத்து அமரும்
எல்லை நீர் வயல் காஞ்சியின் அணுக நின்றிடலால்
சொல்லல் ஆம் தகைத்து அன்றி இந்த மால்வரைத்                                     தூய்மை.
217
   
10296.
விரை இடம் கொளும் போதினுள் மிக்க பங்கயம்
                                     போல்
திரை இடம் கொளும் நதிகளில் சிறந்த கங்கையைப்                                      போல்
தரை இடம் கொளும் பதிகளில் காஞ்சி அம் தலம்
                                     போல்
வரை இடங்களில் சிறந்தது இத் தணிகை மால் வரையே.
218
   
10297.
கோடி அம்பியும் வேய்ங்குழல் ஊதியும் குரலால்
நீடு தந்திரி இயக்கியும் ஏழிசை நிறுத்துப்
பாடியும் சிறு பல்லியத்து இன்னிசை படுத்தும்
ஆடுதும் விளையாடுதும் இவ்வரை அதன் கண்.
219
   
10298.
மந்தரத்தினும் மேரு மால் வரையினும் மணிதோய்
கந்தரத் தவன் கயிலையே காதலித்தது போல்
சுந்தரக் கிரி தொல் புவிதனில் பல எனினும்
இந்த வெற்பினில் ஆற்றவும் மகிழ்ச்சி உண்டு எமக்கே.
220
   
10299.
வான் திகழ்ந்திடும் இரு நில வரை பல அவற்றுள்
ஆன்ற காதலால் இங்ஙனம் மேவுதும் அதற்குச்
சான்று வாசவன் வைகலும் சாத்துதல் பொருட்டால்
மூன்று காவி இச் சுனை தனில் எமக்கு முன் வைத்தான்.
221
   
10300.
காலைப் போதினில் ஒருமலர் கதிர் முதிர் உச்சி
வேலைப் போதினில் ஒரு மலர் விண் எலாம் இருள்
                                       சூழ்
மாலைப் போதினில் ஒரு மலராக இவ் வரை மேல்
நீலப் போது மூன்று ஒழிவின்றி நிற்றலும் மலரும்.
222
   
10301.
ஆழி நீர் அரசு உலகு எலாம் உண்ணினும் அளிப்போர்
ஊழி பேரினும் ஒருபகல் உற்பலம் மூன்றாய்த்
தாழ் இரும் சுனை தன் இடை மலர்ந்திடும் தவிரா
மாழை ஒண் கணாய் இவ்வரைப் பெருமை யார்
                                    வகுப்பார்.
223
   
10302.
இந்த வெற்பினைத் தொழுது உளார் பவம் எலாம் ஏகும்
சிந்தை அன்புடன் இவ்வரையின் கணே சென்று
முந்த நின்ற இச் சுனை தனில் விதி முறை மூழ்கி
வந்து நம் தமைத் தொழுது உளார் நம் பதம் வாழ்வார்.
224
   
10303.
அஞ்சு வைகல் இவ் அகன் கிரி நண்ணி எம் அடிகள்
தஞ்சம் என்று உளத்து உன்னியே வழிபடும் தவத்தோர்
நெஞ்சகம் தனில் வெஃகிய போகங்கள் நிரப்பி
எஞ்சல் இல்லது ஓர் வீடு பேறு அடைந்து இனிது                                     இருப்பார்.
225
   
10304.
தேவர் ஆயினும் முனிவர் ஆயினும் சிறந்தோர்
ஏவர் ஆயினும் பிறந்த பின் இவ் வரை தொழா தார்
தாவர் ஆதிகள் தம்மினும் கடையரே தமது
பாவ ராசிகள் அகலுமோ பார் வலம் செயினும்.
226
   
10305.
பாதகம் பல செய்தவர் ஆயினும் பவங்கள்
ஏதும் வைகலும் புரிபவர் ஆயினும் எம்பால்
ஆதரம் கொடு தணிகை வெற்பு அடைவரேல் அவரே
வேதன் மாலினும் விழுமியர் எவற்றினும் மிக்கார்.
227
   
10306.
உற்பல வரையின் வாழ்வோர் ஓர் ஒரு தருமம் செய்யில்
பலபல ஆகி ஓங்கும் பவங்களில் பல செய்தாலும்
சிற்பம் அது ஆகி ஒன்றாய்த் தேய்ந்திடும் இதுவே
                                      அன்றி
அற்புதம் ஆக இங்ஙன் அநந்த கோடிகள் உண்டு                                       அன்றே.
228
   
10307.
என்று இவை குமரன் கூற எயினர் தம் பாவை கேளா
நன்று என உவகை எய்தி நால் நில வரைப்பில் உள்ள
குன்று இடைச் சிறந்த இந்தத் தணிகை மால் வரையின்                                     கொள்கை
உன் திரு அருளால் தேர்ந்தே உய்ந்தனன் தமியன்                                     என்றாள்.
229
   
10308.
இவ் வரை ஒரு சார் தன்னில் இராறு தோள் உடைய                                    எந்தை
மை விழி அணங்கும் தானும் மால் அயன் உணரா                                    வள்ளல்
ஐ வகை உருவில் ஒன்றை ஆகம விதியால் உய்த்து
மெய் வழிபாடு செய்து வேண்டியாங்கு அருளும்                                    பெற்றான்.
230
   
10309.
கருத்து இடை மகிழ்வும் அன்பும் காதலும் கடவ
                                   முக்கண்
ஒருத்தனை வழிபட்டு ஏத்தி ஒப்பு இலா நெடுவேல்                                    அண்ணல்
மருத் தொடை செறிந்த கூந்தல் வள்ளி நாயகியும்
                                   தானும்
செருத் தணி வரையில் வைகிச் சில பகல் அமர்ந்தான்                                    அன்றே.
231
   
10310.
தள் அரும் விழைவின் மிக்க தணிகையின் நின்றும்
                        
           ஓர் நாள்
வள்ளியும் தானும் ஆக மானம் ஒன்று அதனில் புக்கு
வெள்ளி அம் கிரியின் பாங்கர் மேவிய கந்த வெற்பில்
ஒள் இணர்க் கடப்பம் தாரோன் உலகு எலாம்
                           வணங்கப் போனான்.
232
   
10311.
கந்த வெற்பு அதனில் சென்று கடி கெழு மானம் நீங்கி
அந்தம் இல் பூதர் போற்றும் அம் பொன் ஆலயத்தின்                                          ஏகி
இந்திரன் மகடூஉ ஆகும் ஏந்திழை இனிது வாழும்
மந்திரம் அதனில் புக்கான் வள்ளியும் தானும் வள்ளல்.
233
   
10312.
ஆரணம் தெரிதல் தேற்றா அறுமுகன் வரவு நோக்கி
வாரண மடந்தை வந்து வந்தனை புரிய அன்னாள்
பூரண முலையும் மார்பும் பொருந்து மாறு எடுத்துப்                                      புல்லித்
தாரணி தன்னில் தீர்ந்த தனிமையின் துயரம் தீர்த்தான்.
234
   
10313.
ஆங்கு அது காலை வள்ளி அமரர் கோன் அளித்த                                      பாவை
பூங் கழல் வணக்கம் செய்யப் பொருக் கென எடுத்துப்                                      புல்லி
ஈங்கு ஒரு தமியள் ஆகி இருந்திடுவேனுக்கு இன்று ஓர்
பாங்கி வந்து உற்றவாறு நன்று எனப் பரிவு கூர்ந்தாள்.
235
   
10314.
சூர்க் கடல் பருகும் வேலோன் துணைவியர்                               இருவரோடும்
போர்க்கடல் கொண்ட சீயப் பொலன் மணி
                        அணைமேல் சேர்ந்தான்
பால் கடல் அமளி தன்னில் பாவையர் புறத்து வைகக்
கார்க் கடல் பவள வண்ணன் கருணையோடு அமரு
                                   மா போல்.
236
   
10315.
செம் கனல் வடவை போலத் திரைக் கடல் பருகும்                                     வேலோன்
மங்கையர் இருவரோடு மடங்கலம் பீட மீதில்
அங்கு இனிது இருந்த காலை அரமகள் அவனை
                                    நோக்கி
இங்கு இவள் வரவு தன்னை இயம்புதி எந்தை என்றாள்.
237
   
10316.
கிள்ளை அன்ன சொல் கிஞ்சுகச் செய்ய வாய்
வள்ளி தன்மையை வாரணத்தின் பிணாப்
பிள்ளை கேட்பப் பெரும்தகை மேலையோன்
உள்ளம் மா மகிழ்வால் இவை ஓதுவான்.
238
   
10317.
நீண்ட கோலத்து நேமி அம் செல்வர் பால்
ஈண்டை நீவிர் இருவரும் தோன்றினீர்
ஆண்டு பன்னிரண்டாம் அளவு வெம் புயம்
வேண்டி நின்று விழுத்தவம் ஆற்றினீர்.
239
   
10318.
நோற்று நின்றிடு நுங்களை எய்தி யாம்
ஆற்றவும் மகிழ்ந்து அன்பொடு சேருதும்
வீற்று வீற்று விசும்பினும் பாரினும்
தோற்று வீர் என்று சொற்றனம் தொல்லையில்.
240
   
10319.
சொன்னது ஓர் முறை தூக்கி இருவருள்
முன்னம் மேவிய நீ முகில் ஊர் தரு
மன்னன் மா மகள் ஆகி வளர்ந்தனை
அன்ன போது உனை அன்பொடு வேட்டனம்.
241
   
10320.
பிளவு கொண்ட பிறை நுதல் பேதை நின்
இளையளாய் வரும் இங்கு இவள் யாம் பகர்
விளைவு நாடி வியன் தழல் மூழ்கியே
வளவிதாம் தொல் வடிவினை நீக்கினாள்.
242
   
10321.
பொள் எனத் தன் புறவுடல் பொன்றலும்
உள்ளின் உற்ற உருவத்துடன் எழீஇ
வள்ளி வெற்பின் மரம் பயில் சூழல் போய்த்
தெள்ளிதில் தவம் செய்து இருந்தாள் அரோ.
243
   
10322.
அன்ன சாரல் அதனில் சிவ முனி
என்னும் மாதவன் எல்லை இல் காலமாய்
மன்னி நோற்புழி மாயத்தின் நீரதாய்ப்
பொன்னின் மான் ஒன்று போந்து உலவு உற்றதே.
244
   
10323.
வந்து உலாவும் மறிதனை மாதவன்
புந்தி மாலொடு பொள் என நோக்கலும்
அந்த வேலை அது கருப்பம் கொள
இந்த மாது அக் கருவினுள் எய்தினாள்.
245
   
10324.
மான் இவள் தன்னை வயிற்றிடை தாங்கி
ஆனதொர் வள்ளி அகழ்ந்த பயம்பில்
தான் அருள் செய்து தணந்திட அங்கண்
கானவன் மாதொடு கண்டனன் அன்றே.
246
   
10325.
அவ் இரு வோர்களும் ஆங்கு இவள் தன்னைக்
கை வகையில் கொடு காதலொடு ஏகி
எவ்வம் இல் வள்ளி எனப் பெயர் நல்கிச்
செவ்விது போற்றினர் சீர் மகளாக.
247
   
10326.
திருந்திய கானவர் சீர் மகளாகி
இருந்திடும் எல்லையில் யாம் இவள் பால் போய்ப்
பொருந்தியும் வேட்கை புகன்றும் அகன்றும்
வருந்தியும் வாழ்த்தியும் மாயைகள் செய்தேம்.
248
   
10327.
அந்தம் இல் மாயைகள் ஆற்றியதன் பின்
முந்தை உணர்ச்சியை முற்று உற நல்கித்
தந்தையுடன் தமர் தந்திட நென்னல்
இந்த மடந்தையை யாம் மணம் செய்தேம்.
249
   
10328.
அவ்விடை மா மணம் ஆற்றி அகன்றே
இவ் இவள் தன்னுடன் இம் என ஏகித்
தெய்வ வரைக்கண் ஒர் சில் பகல் வைகி
மை விழியாய் இவண் வந்தனம் என்றான்.
250
   
10329.
என்று இவை வள்ளி இயற்கை அனைத்தும்
வென்றிடு வேல் படை வீரன் இயம்ப
வன் திறல் வாரண மங்கை வினாவி
நன்று என ஒன்று நவின்றிடு கின்றாள்.
251
   
10330.
தொல்லையின் முராரி தன்பால் தோன்றிய இவளும்                                      யானும்
எல்லை இல் காலம் நீங்கி இருந்தனம் இருந்திட்டேம்                                      எமை
ஒல்லை இல் இங்ஙன் கூட்டி உடன் உறுவித்த உன் தன்
வல்லபம் தனக்கு யாம் செய் மாறு மற்று இல்லை                                      என்றாள்.
252
   
10331.
மேதகும் எயினர் பாவை விண் உலகு உடைய நங்கை
ஓது சொல் வினவி மேல் நாள் உனக்கு யான் தங்கை                                      ஆகும்
ஈது ஒரு தன்மை அன்றி இம்மையும் இளையள்
                                     ஆனேன்
ஆதலின் உய்ந்தேன் நின்னை அடைந்தனன் அளித்தி                                      என்றாள்.
253
   
10332.
வன் திறல் குறவர் பாவை மற்று இது புகன்று தௌவை
தன் திருப்பதங்கள் தம்மைத் தாழ்தலும் எடுத்துப் புல்லி
இன்று உனைத் துணையாப் பெற்றேன் எம்பிரான்                              அருளும் பெற்றேன்
ஒன்று எனக்கு அரியது உண்டோ உளம் தனில்
                             சிறந்தது என்றாள்.
254
   
10333.
இந்திரன் அருளும் மாதும் எயினர் தம் மாதும் இவ்வாறு
அந்தரம் சிறிதும் இன்றி அன்புடன் அள வளாவிச்
சிந்தையும் உயிரும் செய்யும் செயற்கையும் சிறப்பும்                                        ஒன்றாக்
கந்தமும் மலரும் போலக் கலந்து வேறு இன்றி உற்றார்.
255
   
10334.
இங்கு இவர் இருவர் தாமும் யாக்கையும் உயிரும்                                         போலத்
தங்களில் வேறு இன்று ஆகிச் சரவண தடத்தில் வந்த
புங்கவன் தன்னைச் சேர்ந்து போற்றியே ஒழுகல் உற்றார்
கங்கையும் யமுனை தானும் கனை கடலுடன் சேர்ந்து                                         என்ன.
256
   
10335.
கற்றை அம் கதிர் வெண் திங்கள் இருந்துழிக் கனலிப்                                   புத்தேள்
உற்றிடு தன்மைத்து என்ன உம்பர் கோன் உதவு மானும்
மற்றை வில் வேடர் மானும் வழிபடல் புரிந்து போற்ற
வெற்றி அம் தனி வேல் அண்ணல் வீற்று இருந்து                                   அருளினானே.
257
   
10336.
கல் அகம் குடைந்த செவ்வேல் கந்தன் ஓர் தருவது                                       ஆகி
வல்லியர் கிரியை ஞான வல்லியின் கிளையாய்ச் சூழப்
பல் உயிர்க்கு அருளைப் பூத்துப் பவநெறி காய்த்திட்டு                                       அன்பர்
எல்லவர் தமக்கு முத்தி இரும் கனி உதவும் என்றும்.
258
   
10337.
பெண் ஒரு பாகம் கொண்ட பிஞ்ஞகன் வதனம் ஒன்றில்
கண் ஒரு மூன்று வைகும் காட்சிபோல் எயினர் மாதும்
விண் உலகு உடைய மாதும் வியன் புடை தன்னின்
                             மேவ
அண்ணல் அம் குமரன் அன்னார்க்கு அருள் புரிந்து                              இருந்தான் அங்கண்.
259
   
10338.
சேவலும் கொடி மான் தேரும் சிறை மணி மயிலும்
                                   தொல் நாள்
மேவரும் தகரும் வேலும் வேறு உள படைகள் யாவும்
மூ இரு முகத்து வள்ளல் மொழிந்திடு பணிகள் ஆற்றிக்
கோவிலின் மருங்கு முன்னும் குறுகி வீற்று இருந்த                                    மன்னோ.
260
   
10339.
ஆறு இரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க                                   வெற்பைக்
கூறு செய் தனி வேல் வாழ்க குக்குடம் வாழ்க                                   செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்.
261
   
10340.
புன் நெறி அதனில் செல்லும் போக்கினை விலக்கி
                                   மேல் ஆம்
நன்நெறி ஒழுகச் செய்து நவை அறு காட்சி நல்கி
என்னையும் அடியன் ஆக்கி இருவினை நீக்கி ஆண்ட
பன்னிரு தடந்தோள் வள்ளல் பாத பங்கயங்கள்
                                   போற்றி.
262
   
10341.
வேல் சேர்ந்த செம்கைக் குமரன் வியன் காதை தன்னை
மால் சேர்ந்து உரைத்தேன் தமிழ்ப் பா வழு உற்றது                                          ஏனும்
நூல் சேர்ந்த சான்றீர் குணமேன்மை நுவன்று கொள்மின்
பால் சேந்ததனால் புனலும் பயன் ஆவது அன்றே.
263
   
10342.
பொய் அற்ற கீரன் முதலாம் புலவோர் புகழ்ந்த
ஐயற்கு எனது சிறு சொல்லும் ஒப்பாகும் இப்பார்
செய் உற்றவன் மால் உமை பூசை கொள் தேவ தேவன்
வையத்தவர் செய் வழிபாடு மகிழும் அன்றே.
264
   
10343.
என் நாயகன் விண்ணவர் நாயகன் யானை நாமம்
மின் நாயகனான் மறை நாயகன் வேடர் நங்கை
தன் நாயகன் வேல் தனி நாயகன் தன் புராணம்
நல் நாயகம் ஆம் எனக் கொள்க இஞ் ஞாலம்
                                எல்லாம்.
265
   
10344.
வற்றா அருள் சேர் குமரேசன் வண் காதை தன்னைச்
சொற்றாரும் ஆராய்ந்திடுவாரும் துகள் உறாமே
கற்றாரும் கற்பான் முயல்வாரும் கசிந்து கேட்கல்
உற்றாரும் வீடு நெறிப் பாலின் உறுவர் அன்றே.
266
   
10345.
பார் ஆகி ஏனைப் பொருளாய் உயிர்ப் பன்மை ஆகிப்
பேரா உயிர்கட்கு உயிராய்ப் பிறவற்றும் ஆகி
நேர் ஆகித் தோன்றல் இலது ஆகி நின்றான் கழற்கே
ஆராத காதலொடு போற்றி அடைதும் அன்றே.
267