இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| குழமணிதூரம் |
| 1867 | ஏத்துகின்றோம் நாத் தழும்ப இராமன் திருநாமம் சோத்தம் நம்பீ சுக்கிரீவா உம்மைத் தொழுகின்றோம் வார்த்தை பேசீர் எம்மை உங்கள் வானரம் கொல்லாமே கூத்தர் போல ஆடுகின்றோம்-குழமணிதூரமே (1) | |
|
| |
|
|
| 1868 | எம்பிரானே என்னை ஆள்வாய் என்று என்று அலற்றாதே அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்திரசித்து அழிந்தான் நம்பி அநுமா சுக்கிரீவா அங்கதனே நளனே கும்பகர்ணன் பட்டுப்போனான்_-குழமணிதூரமே (2) | |
|
| |
|
|
| 1869 | ஞாலம் ஆளும் உங்கள் கோமான் எங்கள் இராவணற்குக் காலன் ஆகி வந்தவா கண்டு அஞ்சி கரு முகில்போல் நீலன் வாழ்க சுடேணன் வாழ்க அங்கதன் வாழ்க என்று கோலம் ஆக ஆடுகின்றோம்-குழமணிதூரமே (3) | |
|
| |
|
|
| 1870 | மணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதரத்தைப் புணர்ந்த சிந்தைப் புன்மையாளன் பொன்ற வரி சிலையால் கணங்கள் உண்ண வாளி ஆண்ட காவலனுக்கு இளையோன் குணங்கள் பாடி ஆடுகின்றோம்-குழமணிதூரமே (4) | |
|
| |
|
|
| 1871 | வென்றி தந்தோம் மானம் வேண்டோம் தானம் எமக்கு ஆக இன்று தம்மின் எங்கள் வாழ்நாள் எம் பெருமான்-தமர்காள் நின்று காணீர் கண்கள் ஆர நீர் எம்மைக் கொல்லாதே குன்று போல ஆடுகின்றோம்-குழமணிதூரமே (5) | |
|
| |
|
|
| 1872 | கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து இலங்கை அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்க்களத்து வெல்லகில்லாது அஞ்சினோம்காண் வெம் கதிரோன் சிறுவா கொல்லவேண்டா ஆடுகின்றோம்-குழமணிதூரமே (6) | |
|
| |
|
|
| 1873 | மாற்றம் ஆவது இத்தனையே வம்மின் அரக்கர் உள்ளீர் சீற்றம் நும்மேல் தீர வேண்டின் சேவகம் பேசாதே ஆற்றல் சான்ற தொல் பிறப்பின் அநுமனை வாழ்க என்று கூற்றம் அன்னார் காண ஆடீர்-குழமணிதூரமே (7) | |
|
| |
|
|
| 1874 | கவள யானை பாய் புரவி தேரொடு அரக்கர் எல்லாம் துவள வென்ற வென்றியாளன்-தன் தமர் கொல்லாமே தவள மாடம் நீடு அயோத்தி காவலன்-தன் சிறுவன் குவளை வண்ணன் காண ஆடீர்-குழமணிதூரமே (8) | |
|
| |
|
|
| 1875 | ஏடு ஒத்து ஏந்தும் நீள் இலை வேல் எங்கள் இராவணனார் ஓடிப்போனார் நாங்கள் எய்த்தோம் உய்வது ஓர் காரணத்தால் சூடிப் போந்தோம் உங்கள் கோமான் ஆணை தொடரேல்மின் கூடிக் கூடி ஆடுகின்றோம்-குழமணிதூரமே (9) | |
|
| |
|
|
| 1876 | வென்ற தொல் சீர்த் தென் இலங்கை வெம் சமத்து அன்று அரக்கர் குன்றம் அன்னார் ஆடி உய்ந்த குழமணிதூரத்தைக் கன்றி நெய்ந் நீர் நின்ற வேல் கைக் கலியன் ஒலிமாலை ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் பாடிநின்று ஆடுமினே (10) | |
|
| |
|
|