நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

எம்பெருமான் எல்லாத் தேவதைகளுக்கும் மேற்பட்டவன் (திருக்குருகூர்)
3213ஒன்றும் தேவும் உலகும் உயிரும்
      மற்றும் யாதும் இல்லா
அன்று நான்முகன் தன்னொடு தேவர்
      உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு
      திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே?             (1)
   
3214நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும்
      முன் படைத்தான்
வீடு இல் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன்
      மேவி உறை கோயில்
மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய
      திருக்குருகூர் அதனைப்
பாடி ஆடி பரவிச் செல்மின்கள்
      பல் உலகீர் பரந்தே             (2)
   
3215பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று
      உடனே விழுங்கி
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது
      கண்டும் தெளியகில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும்
      திருக்குருகூர் அதனுள்
பரன் திறம் அன்றி பல் உலகீர் தெய்வம்
      மற்று இல்லை பேசுமினே             (3)
   
3216பேச நின்ற சிவனுக்கும் பிரமன்
      தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நல் மோக்கத்துக்
      கண்டுகொண்மின்
தேச மா மதிள் சூழ்ந்து அழகு ஆய
      திருக்குருகூர் அதனுள்
ஈசன்பால் ஓர் அவம் பறைதல் என் ஆவது
      இலிங்கியர்க்கே?             (4)
   
3217இலிங்கத்து இட்ட புராணத்தீரும்
      சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்றும் நும்
      தெய்வமும் ஆகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும்
      திருக்குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும்
      பொய் இல்லை போற்றுமினே             (5)
   
3218போற்றி மற்று ஓர் தெய்வம் பேணப்
      புறத்திட்டு உம்மை இன்னே
தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால்
      உலகு இல்லை என்றே
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு
      திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது
      அறிந்து அறிந்து ஓடுமினே             (6)
   
3219ஓடி ஓடி பல பிறப்பும் பிறந்து
      மற்று ஓர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படிகால்
      வழி ஏறிக் கண்டீர்
கூடி வானவர் ஏத்த நின்ற
      திருக்குருகூர் அதனுள்
ஆடு புள் கொடி ஆதி மூர்த்திக்கு
      அடிமைபுகுவதுவே             (7)
   
3220புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட
      மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது
      நாராயணன் அருளே
கொக்கு அலர் தடம் தாழை வேலித்
      திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத்
      தெய்வம் விளம்புதிரே             (8)
   
3221விளம்பும் ஆறு சமயமும் அவைஆகியும்
      மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய
      ஆதிப்பிரான் அமரும்
      வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய
      திருக்குருகூர் அதனை
உளம் கொள் ஞானத்து வைம்மின் உம்மை
      உய்யக்கொண்டு போகுறிலே             (9)
   
3222உறுவது ஆவது எத் தேவும் எவ் உலகங்களும்
      மற்றும் தன்பால்
மறு இல் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும்
      நின்றவண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு
      திருக்குருகூர் அதனுள்
குறிய மாண் உரு ஆகிய நீள் குடக்
      கூத்தனுக்கு ஆள் செய்வதே             (10)
   
3223ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்
      வண் குருகூர்நகரான்
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன்
      மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள்
      இப் பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மாநகர்
      மற்றது கையதுவே             (11)