நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
| ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல் |
| 3323 | பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும் பெரிய பாரதம் கைசெய்து ஐவர்க்குத் திறங்கள் காட்டியிட்டுச் செய்து போன மாயங்களும் நிறம் தன் ஊடு புக்கு எனது ஆவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற இச் சிறந்த வான் சுடரே உன்னை என்றுகொல் சேர்வதுவே? (1) | |
|
| |
|
|
| 3324 | வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்ததும் மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும் அது இது உது என்னலாவன அல்ல என்னை உன் செய்கை நைவிக்கும் முது வைய முதல்வா உன்னை என்று தலைப்பெய்வனே? (2) | |
|
| |
|
|
| 3325 | பெய்யும் பூங் குழல் பேய் முலை உண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்து ஓர் சாடு இறச் செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறுச் சேவகமும் நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ உன் தாமரைக் கண்கள் நீர் மல்க பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே (3) | |
|
| |
|
|
| 3326 | கள்ள வேடத்தைக் கொண்டு போய் புரம் புக்க ஆறும் கலந்து அசுரரை உள்ளம் பேதம் செய்திட்டு உயிர் உண்ட உபாயங்களும் வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும் உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே (4) | |
|
| |
|
|
| 3327 | உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும் வண்ண மால் வரையை எடுத்து மழை காத்தலும் மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்து மணந்த மாயங்கள் எண்ணும்தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே (5) | |
|
| |
|
|
| 3328 | நின்ற ஆறும் இருந்த ஆறும் கிடந்த ஆறும் நினைப்பு அரியன ஒன்று அலா உருவு ஆய் அருவு ஆய நின் மாயங்கள் நின்று நின்று நினைக்கின்றேன் உன்னை எங்ஙனம் நினைகிற்பன்? பாவியேற்கு ஒன்று நன்கு உரையாய் உலகம் உண்ட ஒண் சுடரே (6) | |
|
| |
|
|
| 3329 | ஒண் சுடரோடு இருளுமாய் நின்ற ஆறும் உண்மையோடு இன்மையாய் வந்து என் கண் கொளாவகை நீ கரந்து என்னைச் செய்கின்றன எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே என் கண்கட்குத் திண் கொள்ள ஒரு நாள் அருளாய் உன் திரு உருவே (7) | |
|
| |
|
|
| 3330 | திரு உருவு கிடந்த ஆறும் கொப்பூழ்ச் செந்தாமரைமேல் திசைமுகன் கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும் பொரு இல் உன் தனி நாயகம் அவை கேட்கும்தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு அருவி சோரும் கண்ணீர் என் செய்கேன் அடியேனே? (8) | |
|
| |
|
|
| 3331 | அடியை மூன்றை இரந்த ஆறும் அங்கே நின்று ஆழ் கடலும் மண்ணும் விண்ணும் முடிய ஈர் அடியால் முடித்துக்கொண்ட முக்கியமும் நொடியுமாறு அவை கேட்கும்தோறும் என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்து உகும் கொடிய வல்வினையேன் உன்னை என்றுகொல் கூடுவதே? (9) | |
|
| |
|
|
| 3332 | கூடி நீரைக் கடைந்த ஆறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும் ஊடு புக்கு எனது ஆவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தன்னை நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகு அணையானே (10) | |
|
| |
|
|
| 3333 | நாகு அணைமிசை நம் பிரான் சரணே சரண் நமக்கு என்று நாள்தொறும் ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன் ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் மாக வைகுந்தத்து மகிழ்வு எய்துவர் வைகலுமே (11) |
|
|
| |
|
|