பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 277

              163
இருவகை வழங்குங் காரண மின்றி
     யியைவினை யின்றிநா ளின்றி
வருவகை காட்டு மாத்திரை யின்றி
     வரும்பொரு ளெண்ணள வின்றித்
திருவகை பொறித்த வீற்றுவீற் றனைத்துஞ்
     செய்தளித் தழிப்பவல் லொருவ
னருவகை வயத்தோர் காரண முதலா
     யாதியா யந்தமாய் நின்றோன்.
 

''இரு வகை வழங்கும் காரணம் இன்றி, இயை வினை இன்றி, நாள்
                              இன்றி,
வரு வகை காட்டும் மாத்திரை இன்றி, வரும் பொருள் எண் அளவு
                              இன்றி,
திரு வகை பொறித்த வீற்று வீற்று அனைத்தும் செய்து அளித்து
                              அழிப்ப வல் ஒருவன்,
அரு வகை வயத்து ஓர் காரண முதலாய், ஆதியாய், அந்தமாய்,
                              நின்றோன்.


     ''முதற் காரணம் துணைக் காரணம் என வழங்கும் எக்காரணமும்
தன்னை ஆக்குவதற்கு இல்லாமலும், ஆக்குவதற்கு இயைந்த செயல்
இல்லாமலும், ஆக்கிய காலம் இல்லாமலும், தான் வந்த வகையைக் காட்டும்
அளவு இல்லாமலும், தன்னால் வரும் பொருள்களுக்கு எண்ணிக்கையும்
இல்லாது, அழகு வகையில் எழுதப்பட்ட அனைத்தையும் வேறுவேறாகப்
படைத்துக் காத்து அழிக்க வல்ல ஒருவன் தானேயாகி, அரிய வகையில்
அமைந்த வல்லமையோடுதான் ஒருவனே முதற் காரணமாய்,
எல்லாவற்றிற்கும் முதலும் முடிவுமாய் நின்றவனே மெய்க்கடவுள் ஆவான்.

     'அனைத்தும் பிறப்பித்த காரணனாதல்' என்ற ஆறாம் இலக்கணம்
இது.

 
                    164
சீரிய சவிய மிக்கன வமான
     சிறப்பன தூயன யாவு
நீரிய முறையி லுளனவன் றேவ
     னீங்கிலொன் றவனல னாகிக்