திருமணப் படலம்
 
 
416ஓசை எழு புகழ் ஓதல் எழு கடல்
  ஓதம் எழும் என, வேதியார்
பூசை எழு துதி தூபம் எழு புகை
  போதும் எழு வெறி போழ்து இலாச்
சூசை எழும் ஒளி கோதை எழும் ஒளி
  சோதி இணை என வேய்தலால்,
ஆசை எழு நயம் ஆய எழு திரை
  ஆழ, அரு மணம் ஆயதே.
123
   
 
417“கன்னி முறையொடு நாயகனை ஒளி
  காலும் உடு என ஈனுதல்
என் இனிய முறை சூடும் இவள்.“ என
  ஏக பரன் இடும் ஏவலால்
துன்னி, இவள் துணை ஆக மணம் அமை
  போதில் இவன் உள தூய கற்பு
உன்னி மருவிய வானம் உளர் துதி
  ஓத, அரு மணம் ஆயதே.
124
   
 
418பாட மடவரர், பாட விறலியர்,
  பாகு நனி செவி மேயலால்
நாட, நய நலம் நாடும் அளவுடன்
  ஆகி நகரொடு நாடு எழா,
கூட ஒளி விரி வான உலகினர்
  கூரு களி இசை கூறி இன்பு
ஆட,இரு உலகு ஆக அளவு அற
  வாழ, அரு மணம் ஆயதே.
125
   
 
419ஓய வினை இனி ஓவல் இல நிலம்
  ஓகை எழு கடல் ஊடு உலாய்,
மாய இருள் தவிர் வான நிலையினர்,
  வாழி! என என, வாசம் ஆர்
தூய மலர் மழை தூவி, இசை மழை
  தூவி ஒளி மழை தூவலாய்,
ஆய இரு உலகு ஆக அளவு அற
  வாழ, அரு மணம் ஆயதே.
126
   
 
420ஒல்லை உளியவை உள்ளும் முறை செயும்
  உண்மை உள பரன் ஆசி தந்து,
எல்லை இல நயம் உள்ளும் அமரரும்
  எண்ணி அறைவன ஆசியோடு,
அல்லை அறும் நெறி உள்ள முனி முதல்
  அன்னவரும் இடும் ஆசியால்,
வல்லை இரு உலகு ஆக அளவு அற
  வாழ, அரு மணம் ஆயதே.
127
   
சூசையும் மரியும்நகரேத்துக்குச்செல்லுதல்
குருவை வணங்குதல்
 
421உரைத்த விதம் கொடு ஆய முறை
  உவப்பில் நடந்த நாள் பலவும்
விரைத் தகவு உண்ட வாகையனை
  விளித்து, அகலும் தன் ஊரில் உற,
திரைத் தகவு உண்ட ஆர்வமொடு
  திளைத்து, அருள் உண்ட ஆசி அறை
புரைத் தணிவு இன்றி வாழும் முனி,
  புயத்தை அணிந்து, கூறினன் ஆல்.
128
   
 
422அளிப்பட வந்த ஏவல் உணர்
  அளிப் பட விண்ட வாகை வளன்,
ஒளிப்பட மன்றல் ஆய வரம்
  உவப்பில் இணங்கல் ஆகும் முறை
வெளிப்பட அன்று வேணும் என,
  விழுப்படை அன்பு உலாவி உறு
களிப்பட நின்ற ஈசன் அடி
  கருத்தில் அணிந்து தாழுவனே.
129
   
சீமையோனின் அறிவுரை
 
423உடுத்த அனந்த ஞான முறை
  உரைத்து உமிழ்கின்ற மான முனி,
கொடுத்த வரங்களால் உயரு
  குணத்து வணங்கும் மா வரனை
எடுத்த பின், உண்ட ஓகை எழ,
  எடுத்த முதிர்ந்த வேத முறை
அடுத்த அனந்த நீதி பல
  அவிழ்த்தனன்பின்பு, கூறுவன் ஆல்:
130
   
 
424“இருத்தி அகன்ற கேணி அறல்
  இறைத்த அளவு உந்தி ஊறும் என,
பொருத்தி அமைந்த தேவ அருள்
  புணர்த்த அறம் கொடு ஏறும்; அது
கருத்தில் ஒளித்த போது, பசுங்
  கலத்தில் ஒளித்த நீர்; அது அறிந்து,
அருத்தி எழும்ப வாழி.“ என
  அணைத்து விரும்பி ஏவினன் ஆல்.
131
   
மரியாளின்பிரிவுத்துயர்
 
425இடித்து முழங்கும் ஏறு அனைய
  இவற்றை அறிந்த கோதை, உளம்
வெடித்து வருந்தி, மாறும் இல,
  “விதிக் குரு மன்னு பாதம் இல,
நெடித்து வதிந்த கோயில் இல,
  நெறித் துணை நின்ற மாதர் இல,
பிடித்து நடந்த வீதி இல
  பெயர்க்குவன்.“ என்று வாடினளே.
132
   
 
426உடைத் தனம் நின்று பேரும் என,
  உயிர்த்தன மைந்தர் பேரும் என,
குடைத்து அழல் புண் துழாவல் என,
  குறைத்து உடல் ஒன்று பேரும் என,
பெடைத் தணர் அன்றில் வாடும் என,
  பெயர்த்து உயிர் நின்ற தேகம் என,
அடைத்த அரந்தை காலும் என
  அரற்றி வருந்தி வாடினளே.
133
   
 
427இருத்திய தந்தை தேவ உளம்
  எனத் தெருள் உண்டு தேறி, உயர்
கருத்தில் அணிந்த மாண முனி
  கழற்கள் பணிந்து, காதல் எழப்
பொருத்திய அன்பின் ஓகையொடு
  புடைத் துணை நின்ற பேதையரை
அருத்தி கலந்த நீர் இரிய
  அரற்றி அணைந்து தாழுவளே.
134
   
மரியும்சூசையும் கோவிலுக்குச்செல்லுதல்
 
428கனத்தில் எழுந்த ஓதையொடு
  கனத்தில் எழுந்த கூரலினர்,
வனத்தில் எழுந்த தீ அனைய
  மனத்தில் எழுந்த பீடை உறீஇ,
இனத்தில் எழுந்த ஆர்வம் மிக,
  இதயத்தில் எழுந்த தேறலொடு,
தனத்தில் எழுந்த கோயில் அது
  தலத்தில் எழுந்து போயினரே.
135
   
சீமையோன்அறிவுரை கூறி அனுப்புதல்
 
429உடுக் குலம் உண்டு சூடினளும்,
  உருக் கொடு மன்று வாகையனும்,
அடுக்கு நெருங்க யாரும், முறை
  அணிக் குலம் மண்டு கோயில் உறீஇ,
எடுக்கும் நலம் கொள் நாயகனை
  இரட்டி இறைஞ்சல் ஆயின பின்
வடுக் குலம் ஒன்று இலாத முனி
  மனத்தில் உவந்து கூறுவன் ஆல்;
136
   
 
430“கனத்தில் இழிந்து சாய, வரை
  கரத்தில் விழுந்து பேர, அரும்
வனத்தில் வளர்ந்து போக, வயல்
  வயத்தில் மெலிந்து பாய, அலை
இனத்தில் இரிந்து, பேரும் இல
  இனிப் பட வந்த வாரி என,
தனத்தில் இருந்த வாழ்வு இனிமை
  தவிர்க்கல் நிறைந்த ஞானம் அதே.“
137
   
 
431“அறத் துணை அன்றி, ஆய துணை
  அது அற்றம் அறிந்து உறாமை என,
திறத் துணை நம்பு வீரர் பிறர்
  திறத்தில் மெலிந்து மாள்வர் என,
மறத் துணை தந்த தீது தரும்
  மடத்து இழிவு என்று, தேவ அருள்
உற, துணை தந்த பாதம் அது
  உயிர்க்கு ஓர் அநந்த வீடு எனவே.“
138
   
 
432இவற்றை இயம்பி, மீள மறை
  இயல்படு மண்டு நீதி பல.
தவத்தை அணிந்த தேவ முனி,
  தரத் தயை தந்த ஆசி தர,
அவற்றை உணர்ந்த போது, இருவர்,
  அகத்தில் உயர்ந்து, பாத மலர்
உவத்தை உவந்து தாழுகுவர்,
  உகத்தில் உதிர்ந்த மீன் அனையார்.
139
   
 
433இசைப் பட ஒன்றி ஈர் அறமும்
  எவர்க்கும் இலங்கும் ஆடியினர்,
நசைப் பட நின்ற ஈசன் அடி
  நயப்பில் வணங்க வீழும் முறை,
சுசைப்பு அவன் முன் தன் ஈர் அடிகள்
  துடைத்து வணங்கவே கனவில்,
விசைப் படு திங்கள் மாலியொடு
  விழத் தகை கண்ட ஆறு எனவே.
140
   
 
434“அணித் தக எந்தை கூற, இனிது
  அளித் தக மன்றல் ஆதலொடும்,
பிணித்த மனங்கள் வேறும் இல,
  பிரித்த இரண்டு தேகம் இடை
கணித்த விதங்கள் மாறும் முறை
  களித்து, உயிர் ஒன்றி, வாழ்க!“ எனப்
பணித்தனர், அங்கு யாரும் அறை
  பழிச்சல் கடந்த ஓகையிலே.
141
   
 
435மிகுத்தனர் அங்கண் யாரும் அருள்
  விருப்பில் அருந்தி ஆசிகளை
வகுத்தனர். அங்கண் ஆய திரு
  மணத்தில் மிகுந்த சீர் அமைதி
தொகுத்தனர் எங்கும் யாரும் இல,
  துணைப் பட ஒன்றி, ஏகு அணிகள்
பகுத்தனர், அங்கு ஞான ஒளி
  பரப்பி நடந்து போயினரே.
142
   
மக்கள்வீதிகளில்நின்று வழியனுப்புதல்
 
436ஆங்கு, வம்மின், வம்மின்! என, “ஆரணம் புனைந்த வடிவு
  ஆக வந்த மைந்தர்,அகலாது
ஈங்கு நின்மின், நின்மின்! என, ஆகம் உண்ட இன்பம் மிக
  யாரும் வந்து அருந்த வரவே,
தாங்கள் வம்மின், வம்மின்! என, யாரும் வந்து மண்டலொடு,
  தாவி முன்பு பின்பு வரலால்,
“நீங்கள் நின்மின், நின்மின்!“என, மீ முழங்கு எழுந்த நகர்
  நீடு நின்று நின்று பெயர்வார்.
143
   
 
437காவி விண்ட மன்றல் இதழ் காலும் இன்பம் ஒன்றும் உரை
  காலுகின்ற நன்றி இயலால்,
பூவில் இன்பு உமிழ்ந்த உயிர் போகுது என்று, நின்ற நரர்,
  பூசை கொண்டு கொண்டு துதிபின்,
ஓவியம் பொருந்த வெறு ஆய் உடம்பு நின்று, உயிர்
  ஓவுகின்று பின்று செலவே,
கோ இனம் பொருந்து இனவர் கோள் ஒளிந்து இரிந்த முறை
  கோசின் நின்று அகன்று பெயர்வார்.
144
   
 
438மாசை உற்று உருண்ட உருள் தேர் உருட்டி வந்த வழி
  மாசை உற்று ஒளிர்ந்தது அனைய,
ஆசை அற்று எழுந்த தவர் போக, முற்று இடங்கள் தொறும்
  ஆரணத்து அநந்த நயன் ஆய்,
பூசை உற்ற உம்பர் இசை பாடல் உற்று அகன்ற வழி
  போய், ஒளித் தகும் தம் உறையுள்,
நாசரெத்தை என்ற நகர் தாம் அடுத்து, அடைந்து உறைவர்,
  நான் அடுத்து இறைஞ்சும் அவரே.
145
   
 
439ஏதம் அங்கு ஒழிந்தது என நோவு அணங்கு ஒழிந்து, நிறை
  ஏசு இல் இன்பு அடைந்து, கடவுள்
பாதம் அங்கு எழுந்தது என ஞானம் அங்கு இலங்க இவர்
  பாழி வந்து அடைந்த பொழுதே
ஓதம் அங்கு எழுந்தது என ஊரில் நின்று அடங்கலரும்
  ஓடி வந்து அடர்ந்து மழைகொள்
சீதம் அங்கு அதிர்ந்தது என வாய் மலர்ந்து அறைந்த புகழ்
  சேண் அழுந்த மண்டும் ஒலியே.
146
   
சூசையும்மரியும்நசரேத்தை அடைதல்
 
440அருகு மண்ட வந்து கொழு விழி உவந்து அருந்து நயன்
  அளவு அகன்று வந்து மிடைய, பெருகு மண்டு
எழுந்த துகள் வெளியில் மண்டி, மண்டும் இருள்
  பெருகல் இன்றி அங்கு குளிர முருகு மண்ட,
மன்றல் மழை அனைய, வம்பு உமிழ்ந்த மலர்
  முடுகு கின்ற மைந்தர் உளமே
பருகு மண்டு அநந்த அருள் அரிது சிந்துகின்ற இருவர்
  பதி அமைந்து எழுந்து புகுவார்.
147
   
 
441விதி எழுந்து ஒளிர்ந்த மறை வடிவு அணிந்து அநந்த தவன்
  விருது அணிந்து அடைந்தது என, வான்
மதி எழுந்து ஒளிர்ந்த அடி மரி எழுந்து அடைந்தாள் என
  மனம் எழுந்து உவந்த முறையால்,
நிதி எழுந்து ஒளிர்ந்த உலகு உளர் எழுந்து அடர்ந்து வர,
  நிறைய மண்டுகின்ற நசை செய்
பதி எழுந்து ஒளிர்ந்த நகர் புகுவர், இன்பு உமிழ்ந்து புவி
  பரிவொடும் புரந்த இவரே.
148
   
 
442தகவு அடைந்த எந்தை திரு அடிகள் அங்கு இலங்க வழி
  தர வரம் கொள் அங்கண் இருவர்
புக, மருங்கு எழுந்த மறை புக, நிறைந்து அடர்ந்த அருள்
  புக, அறம் செறிந்து புகவே,
முகம் மலர்ந்து உவந்து அமரர் குடி அமைந்து உறைந்த நகர்
  முதிர் அநந்தம் உண்ட முறைகள்,
அகம் மலிந்து உணர்ந்த தமிழ்க் கலை வருந்துகின்ற தொடை
  அளவின் நின்று அடங்க முறையோ?
149
   
சூசையும்மரியும்நசரேத்தில் ஒரு சிறுமனையில் வாழ்தல்
 
443இற்றை இனிது ஆயின பின்,
  மற்றையவரும் தொடர,
கற்றை மலி சோதி கருள் முற்று
  முகில் புக்கு அனைய,
நிறத்து இயல் நில்லாமை என வெறுத்த
  சிறிது ஓர் மனையுள்
அறத்தின் இயல் மாண்பு உரிமை
  பெறத் தகவர் புக்கு உறைவார்.
150
   
 
444புக்க இவரோடு புடை மிக்க
  நலம் யாவும் உறீஇ,
சொக்கு அவிழும் வான் உலகர்
  ஒக்க நசை தூண்ட உறீஇ,
மீட்பது இனி எந்தை உற வேட்பது
  செய் வீடு இது எனில்,
கோட்பு அது இல நூல் முறையின்
  கேட்பது இனி வாழ்த்து உளதோ?
151
   
 
445மங்குல் இடை மாலி என அங்கு நுழைவார் எனினும்,
எங்கும் உளர் காண உளம் பொங்கு நசை பூத்து வர,
தெள் அரிய சேடர் மிசை உள்ளமொடும் ஊரும் விழி,
கள் அவிழு கான் அலர்கள் விள்ள அளி வீழ்வது போல.
152
   
 
446திங்களை உரிஞ்சு ஒளியை மங்கு அரிய தாளின் நலாள்
நங்கையரை ஞானம் மிகு தங்க உரை சாற்றலொடு,
மாலை மது வாகை வளன் நூலை அறை நூழை உரை,
ஆலை மது ஆக நிறை வேலை மடு விட்டது போல்.
153
   
நசரேத்து ஊராரின்புகழுரை
 
447“இவ் உலகு உள் ஆய பொழுது, அவ் உலகம் ஆவல் உற,
செவ் ஒழுகு தேவன், அருள் வவ்வு இரு மைந்தர் இனை
சேர்த்து மணம் ஆக்கல், இவர் நீர்த்த மணம் நேரியதோ?
தோற்றது எனவோ?“ என உள் ஆர்த்து அறைகுவார் சிலரே.
154
   
 
448“துப்பு ஒளிறு செஞ் சுடரோடு
  ஒப்பு ஒளிறும் ஒள் மதியம்
எப்பொழுதும் மீ திரிய
  அப்பொழுதில் ஆண்டகையும்
இவ் எழிலை ஒக்கும் என
  அவ் எழிலை ஆக்கினனோ?
கு எழில் கொல்?
  வான் எழில் கொல்? வவ்வல் அரிது.“ என்று அறைவார்.
155
   
 
449“மன்னரது மன்னன் இனிது உன்ன அரிய ஒண் தவமே
துன்னலொடு, துன்னு பயன் இன்ன மகர் காட்டும் என,
தாவிது அது சந்ததியின் மேவி இவர், வேய்ந்து உறவே
ஏவினன் அநந்தன்.“ என ஆவி அறைவார் சிலரே.
156
   
 
450“பொழுதும் இவர் பூண் இருமை
  எழுது மறை காட்டும் என,
எழுது மறை ஒன்று எனினும்,
  பழுது இல் இரு கல் எழுத
வேண்டியது நீதி என மாண்ட
  மறை காட்டும் இவர்;
மீண்டு இவரைக் காட்டு மறை;
  ஈண்டு அறிதும் என்று அறைவார்.
157
   
 
451“பொய் வினை பிரிந்த நயன்,
  மெய்வினை உணர்த்தும் இவர்
செய் வினை, அளிக்கும் என
  நொய் வினை குறித்த பரன்,
மண் உலகும் வான் உலகும்
  நண்ணும் உறவோடு உற நாள்
அண்ணும் என, இன்ன மணம்
  எண்ணும்,“ எனும் ஓர் சிலரே.
158
   
 
452முனிய அளி மொய்த்த துணர் குனிய உமிழ் தேறலினும்
கனிய இவை ஓதுதலின் இனிய இரு போதும் உறீஇ
நனை வரும் இரண்டு பெயர் வனைவு அரும் மணம் பெறலால்
புனைவு அரும் அநந்தம் உறீஇ, அனைவரும் மகிழ்ந்தனரே.
159
   
 
453தேன் கொடியை ஏந்தினனும் பூங் கொடியை வென்றவளும்
தாம் குடி இருந்து, மறை ஆம் கொடி படர்ந்து வளர்
அரிய கொழுகொம்பு அனையர், புரிய அரிது ஈர் அறமும்
உரிய முறையோடு அணையல் விரிய அறைவாம் இனியே.
160