மகவருள் படலம்
 
காமத்தை வளர்க்கக்கொண்ட வீணையை முறித்தல்
 
901“பண்ணே, நீ ஓர் முலையாய்,
  கீதம் பாலாய்ச் சுரந்தேன்;
கண்ணே காத்த கனிவால்
  ஊட்டி, காமக் குழவி,
பெண்ணே அறியா, வளர்த்தேன்;
  பெரிதாய்க் கணையால் சுடும் என்று
எண்ணேன்; இதற்கே இனம் செய்து
  இருந்தாய் நீ!“ என்று ஒடித்தாள்.
49
   
ஐம்பொறிகளை ஒறுக்கத்துணிதல்
 
902“வாயே, கரமே, செவியே,
  மருளும் கண்ணே, மூக்கே,
போயே வினை கொண்டு உள்ளே
  புகும் ஐம் பகையாம் பொறிகாள்,
தீயே கொணர்ந்தீர் என உள்சிறை
  செய்து ஒறுப்பேன்; ஒறுத்தற்கு
ஓயேன், ஓயேன்!“ என, உள்
  ஊக்கம் காவல் கொண்டாள்.
50
   
மன்மதன்உருவை யமனாக எழுதுவேன் எனல்
 
903“மீனே கொடியாய், விதுவே
  குடையாய், வேலை முரசாய்,
கானே உமிழ் பூ கணையாய்,
  கழையே தனுவாய் உருவம்
நானே எழுதி, நாமம்
  வேள் என்றேன். என் உயிரைத்
தானே உண்டான்; இனி, கொல்
  சமன் ஆக்குவன் நான்!“ என்றாள்.
51
   
காந்தரி, கண்ணீர்பெருக்கிக் கசடறுத்தல்
 
904“நின்னை மறந்தாய், நெஞ்சே;
  நெடுங் கோல் நீதி வல்லோன்
தன்னை மறந்தாய், நெஞ்சே;
  தழலத் தழல் கீழ் உலகு உய்த்து,
என்னை மறந்தாய், நெஞ்சே;
  இனி, முன் விழைந்தது எல்லாம்
பின்னை மறப்பாய், நெஞ்சே!“ என்னா,
  பெரிது ஆர்த்து அழுதாள்.
52
   
 
905கண் நீர் ஆடிக் கழுவும்
  கசடு அற்று, உணர்ந்த ஞானத்
தெண் நீர் ஆடித் தெளிந்தாள்:
  தெளி உள் நிறை தே அருளின்
தண் நீர் ஆடிக் குளிர்ந்தாள்;
  தவறா அற மா புணரிக்கு
உள் நீராடி உயர்ந்தாள்; உரு
  வேறு இயல் வேறு ஆனான்.
53
   
காந்தரி கன்னிமரியின் வரத்தால்நன்னிலையடைதல்
 
906உள்ளம் கெட உள்குடியாய்
  உறைந்த குணுங்கு ஓட்டிய பின்,
கள்ளம் கெட மெய்ஞ்ஞானம்
  காட்டிக் கடந்து ஏகினும், கான்
வெள்ளம் கெட மல்கு அருள் சேர்
  வியன் வான் கிழத்தி நிழலால்
வள்ளம் கெட உள் வரம் எய்
  திய அம் மடந்தை ஒசிந்தாள்.
54
   
 
907இவ்வாறு, எவ்வாறு உள்ளம் கெட எப்
  பொருளோ உதவிற்று,
அவ்வாறு அன்னாள் அகற்றி,
  அட்டு ஐம் பொறியைப் புதைத்து,
வவ்வு ஆறு ஒரு மாறு இன்றி,
  பல நாள் வானோர்க்கு அரசாள்
செவ் ஆறு உளத்துத் திறன் செய்து,
  அறம் சேர் கதியே சேர்ந்தாள்.
55
   
இருவரும்பெத்திலேமை அணுகுதல்
 
908அப்பால் நடந்தார் அண்டத்து
  இரு அம் சுடர் ஒத்து அன்னார்;
எப்பால் அனைத்தும் இயலும்
  தயையால், எதிர்கின்ற எவர்க்கும்
ஒப்பால் அடையா மரபால்
  உயிராய் உடலாய், துயர் செய்
வெப்பால் அயர்கின்ற உயிர்கள்
  விரிவாய் நிழற்றிப் போனார்.
56
   
 
909என் பா நிகரா இன்பால்
  இவை ஆங்கு ஆங்கால் இவரீஇ,
மின்பால் வெயில் செய் மிடை விண
  விண்ணவர் ஈர் ஐயாயிரர் சூழ்ந்து
அன்பால் அணுகும் தன்மைத்து,
  ஐம் வைகலும் வைகிய பின்,
பொன்பால் உயர் பெத்திலேம்
  ஆம் பொலி மா புரம் அண்மினரே.
57
   
பெத்திலேம் நகரத்தார் சூசை, மரிக்குச்செய்த
நிந்தையைக்கூறத்தொடங்குதல்
 
910ஓடையாய்ப் பெரிது ஒலித்துப்
  பெயர்ந்த வெள்ளம் ஒழுகிய பின்
கோடை ஆய் வற்றும் என,
  வழியில் கொண்ட கூர் நயமே
மாடையாய் இலங்கு நகர் வந்து
  மாற்றி, மருவியது ஓர்
பீடை ஆய், உணங்கு அன்னார் வருந்தும்
  பெற்றி பெரிது எனவே.
58
   
 
911எரி மாலை தாங்கு உடலால்
  பகல் செய் விண்ணோர் இரு புடையில்
புரி மாலை காண்டல் இலாப்
  பொலிவான் மாட்சிப் புலமையினோர்
உரி மாலை காண்டல் இலா,
  எளிமை போர்த்த உருத் தோன்றத்
திரி மாலை கண்டவர் தாம் செய்த
  நிந்தை செப்பல் உற்றாம்:
59
   
இருவரும்பெத்திலேமை அடைதல்
 
912மண் சிறையை ஒழித்தவர் தம்
  வருத்தம் காணா, வழி முடுகி,
தண் சிறை செய் கடல் மூழ்கிப் பருதி
  அங்கண் தாழ்ந்து ஒளிப்ப,
ஒண் சிறை மொய் அளிகள் அழ
  முளரி தன் தாது உடன்று அடைப்ப,
கண் சிறை செய் கங்குல் உறீஇ
  நகரில் சென்றார் கருணை வலார்.
60
   
சூசை உறைவிடம்தேடித்திரிதல்
 
913சாதியினால் நிகர்க்கு அரிய
  மலர் மென் தாளின் தகுதி நலாள்
வீதியினால் எய்திய நோய் ஆற்ற
  வெஃகி, வெயில் மிடைந்த
ஓதியினால் உளத்து உயர்ந்தோன்,
  ஒதுங்கும் தன்மைத்து உறையுள், அருள்
சோதியினால் அவிர் முகத்தில்,
  உறவோர்க் கேட்டுத் துருவினன் ஆல்.
61
   
வறியவர்க்கு உறவினர்உளரோ? (கவிக்கூற்று)
 
914அடைப்பதற்கே அருங் கடலாம்
  அவா உள் பொங்கி, ஆக்கம் இவண்
கிடைப்பதற்கே உறவு கிளை
  தேடும் பாலால், கிளர் நிரப்பில்
படைப்பதற்கே அரிய பொருள்
  கொண்டார்க்கு அல்லால், பயன் பயவா,
துடைப்பதற்கே அரும் வறுமையவர்க்கு
  ஒன்று உண்டோ சுற்றம் அதே?
62
   
அருட்செல்வரை மதியாத அறிவீனர்
 
915நஞ்சு எஞ்சாக் காஞ்சிரங் காய் அழகு
  என்று எண்ணி நச்சுவர் போல்,
விஞ்சு எஞ்சா வினை பயக்கும்
  பொருளே வெஃகி, விழி கடந்த
மஞ்சு எஞ்சா அருட் செல்வம்
  எண்ணா மூடர், வறியர் எனா
நெஞ்சு எஞ்சாத் திருவோரை,
  எவரோ என்னா நீக்கினர் ஆல்.
63
   
சூசையின்வருத்தம்
 
916பொன் அன்ன பொலிந்த நகர்
  புடைகள் தோறும் புகுந்து இன்னார்
மின் அன்ன விரைந்து இரிய,
  உரும் என்று அன்னார் விடைந்து உடற்ற,
பின், அன்ன முகில் உறை
  பெய் அன்ன சூசை பெரிது அழுது,
முன் அன்ன நகர் உதவி உணர்ந்த
  பாலால் முழுது உளைந்தான்.
64
   
 
917“நான் செய்த குறை தானோ?
  நகரே செய்த நவை தானோ?
தான் செய்த விதி தானோ?
  தரணி காக்கத் தற்பரன் ஈங்கு
ஊன் செய்த உடலொடு எழ இடம்
  ஒன்று இல்லை உலகில்!“ எனா,
தேன் செய்த உயர்த்தோன் அரற்றி
  விம்மித் திரிவான் ஆம்.
65
   
நிந்தையிலும்மகிழ்ச்சி
 
918இகழுவர் என்று இகழ்வு இன்றி
  அருள் உற்று, இன்னார் இகழ்ந்தாரும்
புகழுவர் என்று ஆசி நலம்
  புகன்று வாழ்த்தி, புரை எண்ணா
நிகழுவரே; நெகிழுவரே; வணங்கிக்
  கேட்கின் நிந்தை உறீஇ
மகிழுவரே, மருட்டும் அவா அரிந்து
  வாய்ந்த மாட்சி நலோர்.
66
   
இரக்கம்காட்டுமாறு கேட்ட சூசை, இகழ்ச்சிவுரைகேட்டு வருந்துதல்
 
919தன் உயிர் சேர் துயர் கண்டு
  மகிழ்ந்த நல்லோன், தன் உயிரின்
இன் உயிர் சேர் துயர் ஆற்றா,
  விரும்பி எங்கு இரிந்து இரப்ப
‘மன் உயிர் சேர் உறவு எமக்குச்
  சேரா என்னில், வறியர் எனாத்
துன் உயிர் சேர் இரக்கம் எமக்கு
  இலது ஏன்?‘ என்னாச் சொலல் உற்றான்.
67
   
 
920“அடுத்து இரப்பார்க்கு ஆர்வம்
  உற அளித்த நன்றி, அஞர்க் கடலே
மடுத்து இருப்பக் கரை அன்றோ?“
  என்று கூப்பி வணங்கீ இரு கை
எடுத்து இருப்ப, காய் முகனோடு
  எள்ளும் தன்மைத்து எவர் எவரும்
கடுத்து இருப்ப, கண் அருவி
  கடுக நொந்தான் கடிக் கொடியான்.
68
   
வான்தரும்வித்து
 
921“துன்பு உற்ற கால் ஒருவர்க்கு
  இரங்கிச் செய்த துணை உறுதி
இன்பு உற்ற கால் ஒருவர் மறந்தால்,
  அஃதே இவர்க்கு இறுதி
பின்பு உற்ற கால் உயர் வான் தரும்
  வித்து“ என்பான். “ பெரிது உவப்ப
முன்பு உற்ற கால் மொழிவாய்
  ஞானம்!“ என்று முனி நகைத்தார்.
69
   
சூசையின்பணிவுரை
 
922“நலம் செய்வான் விருப்பு உற்றார்
  நேரம் தேடார். நசை அற்றார்
சலம் செய்வார், கிலம் செய்யார்
  வணிகர் ஆக்கம் வரல் வெஃகி
அலம் செய்வார் போல், உயர் வீடு
  இயற்றும் நன்றி அமைவதற்கே
தலம் செய்வார், அறிவு உற்றார்“
  என்று தாழ்ந்து பணிவான் ஆம்.
70
   
கையிறையும்எண்ணிக்கையும்கொடுத்தல்
 
923பால் நேரப் பாடிய பண்
  கோகிற்கு இன்பம் பயவாப் போல்,
வேல் நேரப் பாய் துயர் கொண்டு,
  இவற்றைக் கொன்னே விளம்பி, இவர்
நூல் நேரப் பாய் நெடிய மறுகிற்கு
  எல்லாம் நொந்து ஒழுகில்,
கோன் நேரப் பாவிய கையிறையும்
  எண்ணும் கொடுத்தனரே.
71
   
வளன்மரியாளிடம்தன் துயரைக்கூறுதல்
 
924செய்முறை யாவையும் திருந்தி,
  திறம்பா நீதிச் செழுந் தகவோர்,
கை முறையாம் இறை தந்து,
  மலர்த்தாள் நல்லாள் கடி வருந்த,
மொய் முறையால் கடல் ஒக்கும்
  நகரம் எல்லாம் முடுகிய பின்,
மை முறையால் இரவின் நடு
  மருவக் கண்டு, வளன் சொல்வான்:
72
   
 
925“நிலத்து இயல்பால் துளி நல்
  நீர் திரிந்த தோற்றம் நிகர், என, சேர்
குலத்து இயல்பால் கிழமை நிலை
  திரிகும் என்றார்; குறை கிளர் என்
கிலத்து இயல்பால் கிளைத்தன
  இக் கேதம் எல்லாம் கிடைத்து உளைய,
நலத்து இயல்பால் தகை நல்லாய்,
  வருந்தி எண்ணால் நகவு ஆனாய்!
73
   
 
926“முன் செய்கை பயத்த துயர்
  அகற்றி எம்மை முயன்று அளிக்கும்
தன் செய்கை தளிர்ப்பத் தாழ்ந்து,
  இறைவன், இங்கண் தான் மகன் ஆய்,
நல் செய்கை ஒன்றும் இலா
  அடியன் தன்னை நண்ணிய கால்,
மல் செய்கை வீங்கு வயத்து
  உயர்ந்தோனேனும் வருந்தானோ?
74
   
பெத்திலேம்குகைக்குச்செல்வோம்எனல்
 
927“உடை நகர்க் கண் வாழ் அரசன்
  வறுமை நாடி உதிப்ப, சீர்
மிடை நகர்க் கண் பதி அல்லது
  என்றோ இன்னார் விலகி, எமக்கு
இடை நகர்க் கண் இடம் இன்றி
  இரிந்த தன்மை, இமிழில் இனிப்
புடை நகர்க் கண் கண்ட முழை
  புணரப் போகின் புரிவு“ என்றான்.
75
   
இருவரும்வானவர் புடை சூழக்குகைக்குள்செல்லுதல்
 
928இத் தலை இவளும் நன்று என்று, பேர் ஒலி
மொய்த்து அலை பெருங் கடல் நிகர் முற்று ஊர் கடந்து,
அத் தலை, இருமையோர், அமரர் செய் ஒளி
மைத்து அலை நடு நிசி மயங்க, போயினார்.
76
   
 
929‘காய் ஒளி காண்கிலான் கையில் காண்கின், எல்
தோய் ஒளி மணி நலம் தோன்றுமோ? இவர்
ஆய் ஒளி தெரிவதோ அறிவு இலார்க்கு?‘ எனா,
வேய் ஒளி அமரர் சூழ் விரிப்பப் போயினார்.
77
   
 
930“துறவினால் இரவலர் ஆகித் தோன்றினார்,
உறவினாரினும் உறவு எனினும், ஓர்வரோ
அற வினா அகன்றனர்?“ என்ன அண்டனர்
திற வினா இயம்பிடச் செறிந்து போயினார்.
78
   
 
931“பூரியர்கணும் உள பொருள் செய் செல்வம் நீத்து,
ஆரியர் விரும்பிய அருளின் செல்வம் ஆய்,
சீரியர் வழி இதே!“ என்ன, சேண் தள
வீரியர், விருப்பு எழீஇ விளம்பிப் போயினார்.
79
   
 
932எல் எனச் சுடர் அவிழ், ஈர் ஐயாயிரம்,
வில் எனக் கவின் உரு விரி, விண்ணோர் உறீஇ,
அல் எனப் பகல் என அறிகிலாது, வான்
செல் எனக் களிப்பு எழீஇச் சிறந்து போயினார்.
80
   
 
933கோள் ஐ வாய்ப் புகழ் தரக் கோல வானவர்,
பாளை வாய்க் கமுகு பாய் பலவின் காய் அறச்
சூளை வாய்ப் பொய் எனத் துளித்த தேன் செயும்
மூளை வாய்த் தண் பொழில் கடந்து முன்னினார்.
81
   
 
934கள் உடைக் கயத்து எழும் கமலப் பொய்கையும்,
புள் உடைக் கனியினால் பொலிந்த சோலையும்
உள் உடைப் புடை கடந்து, உளத்தில் உன்னிய
எள் உடைப் புற நிலை இமிழில் எய்தினார்.
82
   
குகையின்தோற்றம்
 
935உயரிய வரை பகிர் உறுப்பு போன்று எனப்
பெயரிய கல் மிசைப் பெருங் கல் சேர்த்திய
துயர் இயல் தோன்று இடம், விலங்கு துன் இடம்,
அயரிய இடம் ஒரு முழை, அஃது, ஆம் அரோ.
83
   
 
936வீசு அறை வளி மழை விளிப்ப வாய் திறந்து,
ஏசு அறை கிழவி தீ எரி முகத்தொடு,
பாசறை பரிப்பு நோய் பதி பயிற்றிய
ஆசு அறை உரு என் ஆம் முழை அஃது ஆம் அரோ.
84
   
நன்மை நிறைந்த கடவுள்தேர்ந்துகொண்ட இடம்
 
937கலங்கு எழும் திரை எறி கடல் எனா நகர்
புலம் கெழு மிடை மனுப்புழங்கலாமையும்,
விலங்கு எழும் இடம் எனா வெறுத்த அம் முழை,
நலம் கெழும் இறையவன் பிறப்ப நாடினான்.
85
   
வானவர்குகையை விளக்குதல்
 
938ஒப்பு உடை உயரினோர் உவந்து புக்க பின்,
அப் புடை விளக்கிட அருத்தி காண் மணித்
துப்பு உடை உருக் கொடு சூழ்ந்த வானவர்
வெப்பு உடை விருப்பொடு விளக்கினார் அரோ.
86
   
குகை மலர்வனவாய்மகிழ்தல்
 
939ஆவு அருள் தீது உள அகமும் வந்து அடை
தே அருள் புக்க பின் சீர்த்த பான்மையால்,
நோவு அருள் முழை இவர் நுழைந்த கால், அலர்க்
கா அருள் வனப்பொடு களித்தது ஆம் அரோ.
87
   
சூசையும்மரியும்நகரத்தவரை வாழ்த்துதல்
 
940தணிவு அருஞ் சினத்தொடு தகைத்து அகற்றினார்,
அணிவு அருங் குணத்தில் ஈங்கு அமலன் நாடிய
பணிவு அரு மிடி நலம் பயக்கின்றார் எனா,
துணிவு அரும் அன்பு எழுந்து, ஆசி சொற்றினார்.
88
   
 
941அரும் பயன் நஞ்சினை ஆக்கும் பாம்பு எனா,
விருப்பவர் நயன் செயப் பகைக்கும் மேல் அலார்.
நெருப்பு அடத் துமிப்பரை நிழற்றும் கா எனா,
பெரும் பகை செய்வரைப் பேணும் மாட்சியார்.
89
   
மரியாள்விருப்பப்படி சூசை தனிந்திருத்தல்
 
942“எஃகு எனப் பாய்ந்து உளம் இரிந்த வான் துயர்
அஃகு எனக் கண்படற்கு அமைதி“ என்றனள்.
வெஃகு என, துணைவியே விலகி, தானும், “நல்
இஃது“ என, தனித்து இறை இறைஞ்சி நின்றனன்.
90
   
 
943அய்யனை இறைஞ்சிய அமையத்து ஒண் தவன்,
பொய் அனை உடல் நிலை மறந்து பொற்பு உறீஇ,
மெய் அனை உளம் வளர்ந்து, ஏவல் மேவி, விண்
பெய் அனை அருவி கண் பிளிர்ந்து, இன்பு ஓங்கினான்.
91
   
திர்மகன்பிறப்பு
கன்னி கடவுளின்குமாரனைப்பெறுதல்
 
944பொதிர் தரும் களி பொழிந்து, வாய்ந்து அருள்
முதிர் தரும் கணாள் முழந்தின் நின்று, இவண்
எதிர் தரும் பொருவு இன்றி இன்பு உற,
கதிர் தரும் சுதன் அசையக் கண்டனள்.
92
   
 
945திரு முகம் செறி சுடர்ச் சிறப்பினால்,
ஒரு முகம் செறி ஒளிகள் ஆயிரம்
தரு முகம் பகல் தருக காலம் ஆய்,
குரு முகம் கொளும் குணக்கு ஒத்தாள் அரோ.
93
   
 
946உலகம் மூன்றினும் உவமை நீக்கிய,
இலயை மூன்றினும் இழிவு இல் கன்னியாய்,
அலகு இல் மூன்றினுள் நடுவ மைந்தனை,
நிலவு மூன்றினும் நிறப்ப ஈன்றனள்.
94
   
பளிங்கு உமிழ்ந்த கதிரொளி - கன்னி ஈன்ற மகவு
 
947வாய்ப் படா நுழை பளிங்கின் வாய் கதிர்
போய்ப் படா ஒளி படரும் போன்று, தாய்
நோய்ப் படாது, அருங் கன்னி நூக்கு இலாது,
ஆய்ப் படா வயத்து அமலன் தோன்றினான்.
95
   
கடவுள்அவதரித்த காலம்
 
948மாதம் மார்கழி வைகல் ஐ ஐந்து ஆய்,
ஏது இலா நிசிக்கு இருத்தை மூ ஐந்து ஆய்
ஆதி நாள் என, ஆதி நாதனைக்
காதல் நாயகி களிப்பின் நல்கினாள்.
96
   
 
949தீபம் உற்று மேல் உலவு செஞ் சுடர்
சாபம் உற்ற உழி, சாபம் தீர்த்து எமை
ஆபதத்து, இறை, அளிப்ப, தாய் மடி
தாபதத்து எழீஇத் தரையில் தோன்றினான்.
97
   
நாதன் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்
இராக்காலம் குறகுதல்
 
950தோன்றினான் என நசை உள் தூண்டினாற்
போன்று, வாவு தேர் முடுக்கிப் போய் ஒளி
கான்று, இராசிவம் களிப்ப, மாலி எல்
ஈன்று, இரா அன்று குறுகிற்று என்னவே.
98
   
பேய்கள் தீயில் விழிதல்
 
951கதிர் செய் தேர் எழ, கடிய கோல் நிசி
பொதிர் செய் கார் இருள் புதைப்பப் புக்கல் போல்,
பிதிர் செய் பேய் எலாம் பெயர்ந்து தீ உற,
எதிர் செய் ஆதி ஈங்கு இலங்கினான் அரோ.
99
   
தீமை நலிதல், நன்மை மலிதல்
 
952பேயும் போயின; அமரர் பிந்தினர்;
தீயும் போயின; அறங்கள் தேறின;
நோயும் போயின; நூற்கள் தேர்ந்தன,
தோயும் ஓகையில் துளங்க வையமே.
100
   
வானின் மகிழ்ச்சி
 
953இரவில் மீன்களும் இரவி பின்றையும்
பரவினால் எனப் பரப்பும் தம் கதிர்
புரவின் ஏழு மடங்கு ஒளிர்ந்து, அப் பொற்பினை
விரவின் காணக் கண் விளக்கல் மானுமே.
101
   
மரங்களின் மகிழ்ச்சி
 
954பாய்ந்த வான் தரு, பருவம் இன்றியும்,
ஈய்ந்த தீம் கனி இயையப் பூத்தலும்,
வேய்ந்த நாயகன் விளைத்த நன்றியால்
வாய்ந்த ஓகையின் முறுவல் மானுமே.
102
   
குகை, பெரு மகிழ்ச்சியுற்ற தோற்றம்
 
955பொதிர் செய் மாட்சி கொண்டு உயர்ந்த பூ எலாம்
கதிர் செய் வானம் நேர் களித்தது ஆம் எனில்,
எதிர் செய் பாப் புகழ்ந்து இசைக்கும் தன்மையோ,
முதிர் செய் மாண்பு உடை முழையின் தோற்றமே?
103
   
 
956வான் உலா வனப்பு எண் இல் வானவர்
மீன் உலாவு அடி இறைஞ்சி, மீது பெய்
கான் உலா மலர்க் கந்த மாரியால்,
தேன் உலா மழை திளைத்து ஓர் பால் எலாம்.
104
   
 
957பண்இன் ஓதையும், பண்ணின்பா இசை
தண்இன் ஓதையும், தாழ்ந்து வாழ்த்தினர்
விண்இன் ஓதையும் வழங்க, வேட்டு உளங்
கண்இன் ஓகையின் களித்து ஓர் பால் எலாம்.
105
   
 
958பொன்னின் ஒள் உரு பொருந்தி, பூணொடு
மின்னின் ஒள் நுதல் மின்னி, வீழ்தரத்
துன் இன்பு உள் எழத் தொழுது போற்றலின்,
இன் இன்பு ஆர்ந்தன இனிது ஓர் பால் எலாம்.
106
   
 
959சந்த நல் சுதை, நானச் சாயலின்
வந்த நல் சுதை, மணம் கொள் காழ் அகில்
வெந்த நல் புகை கலந்து, வீங்கின
கந்த நல் சுவை கனிவு ஓர் பால் எலாம்.
107
   
 
960மெய்த் திறத்து எழுந்து உதித்த வேந்தனைக்
கைத் திறத்து எழுந்து இறைஞ்சும் காதலால்,
மொய்த் திறத்து எழும் கடலின், மொய்த்த ஆர்ப்பு
இ்த் திறத்து எழுந்து, எல்லை இல்லையே.
108
   
மிக்க யேலும் கபிரியேலும் திருமகனைத்தாய்மரிக்குக் காட்டல்
 
961சொக்கு அளாவு உருத் தோன்றிய தோன்றலை
மிக்க யேலொடு காபிரியேல் விழைந்து
ஒக்க ஏந்தினர்; ஒக்கவும் தாய் மரீ
மக்கள் நாதனை மாண்பு எழக் காட்டினர்.
109
   
சூரியனைக்கண்ட சந்திரன்
 
962பொதிர் கொள் பூ மணம் போல் மகவு ஈன்றனள்,
கதிர் கொள் சேயொடு கண்கள் கலந்த கால்,
எதிர் கொள் வெஞ் சுடர் காண் முழு இந்து எனா,
முதிர் கொள் இன்ப முகத்து விளங்கினாள்.
110
   
திருமகன்அளித்த முதல்ஆசி
 
963தன்னை ஈன்றன தாய் தனை நோக்கலோடு,
“அன்னை, நீயும் என் சாயலின் ஆகு“எனா,
மின்னை வீறிய தோன்றல், விளம்பினான்,
என்னை ஆள்பவள் இன்பு அலை மூழ்கவே.
111
   
வானவர்தாய் மரியிண்கையில் திருமகனை ஆளித்தல்
 
964தந்தை ஈன்றன தாயும், தன் சேயனை
இந்தை நேர் நுதல் தாழ்ந்து இறைஞ்சிட்ட பின்,
சிந்தை ஓங்கு அமரர், அவள் செங் கையில்
முந்தை தோன்றலைத் தந்து, முன் ஏற்றினார்.
112
   
மரியாளின் மட்டற்ற மகிழ்ச்சி
 
965காந்தள் நேரிய செங் கரத்து ஏந்தினள்;
ஏந்த, மார்பில் இறுகவும் சேர்த்தனள்;
வாய்ந்த பூம் பதம் நீவி வணங்கினள்;
ஆய்ந்த நூல் கடந்து ஆர் உணர்வு எய்தினாள்.
113
   
மரியாள் மகனை ஏந்தி இறைவணாம்தந்தையோடு பேசுதல்
 
966காவி மேல் கமழ் கஞ்சம் அமைந்து எனா,
ஆவி அம் மகவு அம் கையில் ஏந்தினள்;
ஓவி மாழ்கிய மன் உயிர் ஓர்ந்து, அருள்
மேவி, முந்தையை நோக்கி விளம்புவாள்:
114
   
 
967“உனக்கும் ஆகி, எனக்கும் ஓர் பிள்ளை ஆய்,
தனக்கு நேர் இழந்து ஆர் தகவோன் தனை
நினக்கு நான் இவண் நேர்தலின், மற்று உயிர்க்கு
எனக்கு நேர் அருள் ஈந்து அளிப்பாய்“ என்றாள்.
115
   
 
968“ஊக்கி வாழ உணர்ந்து அறம் ஆதியில்
போக்கினார் புரை பொங்கி, மலிந்த தீச்
சீக்கி வாழ்வு இட எய்திய சேய் முகம்
நோக்கினால், சினம் நூக்கு அரிதோ?“ என்றாள்.
116
   
 
969“மறம் செய் வேடம் எனா, மனு வேடமே
நிறம் செய் தெய்வதம் மூடிய நீர்மையால்
அறம் செய் தான் எமது ஆர் துகள் மூடலின்
திறம் செய் காய்ந்த சினத்து இடம் ஏது“ என்றாள்.
117
   
 
970“தாய் விழைந்த நலம் தரு சேயனே,
நீய் விழைந்த துன்பு ஊட்டிட, நேமியே
மீய் விழைந்த நலம் மிடைந்து ஊட்டி நீ,
தீய் விழைந்த செயிர் செகுப்பாய்“ என்றாள்.
118
   
திருமகன் புன் ழுறுவல்
 
971என்ன, நல் உயிர் காத்த மருந்து எனா
மன்ன நல் அருள் வாய்ந்தனள், இன்னணம்,
சொன்ன நல் உரை தேன் சுவையிற் சுவை
அன்ன உண் குழவி நகை ஆடினான்.
119
   
தாயின் அன்பு முத்தம்
 
972நகை செய் தன்மையின், நம்பு எழீஇத் தாய், துகட்
பகை செய் நெஞ்சமும் பற்றலும் ஒன்று உற,
முகை செய் மேனி தழுவி முத்து இட்டலும்,
குகை செய் இன்பு எழக் கோலம் இட்டு ஒத்ததே.
120
   
திருக்கிழந்தை பாலுண்ணல்
 
973தெருள் சுரந்த திரைப் புவி ஆர்ந்து உணப்
பொருள் சுரந்து உயிர்க்கு உண்டி பொழிந்தனன்,
மருள் சுரந்த வடுக் கெட மைந்தன் ஆய்,
அருள் சுரந்து அமுது ஆய் தர நுங்கினான்.
121
   
சூசை அணைத்தையும் பரவசக காட்சியில உணர்தல
 
974வேழ்வி மந்திரத் தீய்க் கொடி வேடமாய்,
கேழ்வி ஒண் தவன், காட்சி கிளர்ப்பினால்,
வாழ்வில் நின்றஉழி, வாழ்ந்த இவை யாவையும்,
தாழ்வு இல் இன்பு உறக் கண்டு அருள் தாங்கினான்.
122
   
கன்னித்தாய் ,சூகையை அருகில்அழைத்தல்
 
975வேதம் நின்ற உருத் தகு மேன்மையான்,
காதல் நின்று இவை காட்சியின் காண்கினும்,
நாதன் நின்ற நலம் வழியால் உண,
சீது அணிந்தனள், ‘வா‘என, சென்று உளான்.
123
   
சூசை குழந்தையை நோக்குதல்
 
976இந்து நேர் நுதல், மீன்கள் நேர் விழி,
  இண்டை நேர் முக நீர்மையால்,
கந்தம் நேர் நளிர், தாது நேர் உடல்,
  காட்டு நாதனை, அம்புயச்
சந்தம் நேரிய கன்னி நேர் கையில்,
  தாமம் நேரிய முத்து என,
சிந்து நேர் நயம் மூழ்கு சீர்மையில்
  தேற நோக்கினன், சூசையே .
124
   
சூசையின் பேரின்பம்
 
977வீழ்ந்து வீழ்ந்து, அகல் நெற்றி பாரிடை
  மேவலோடு உற வீழ்ந்தனன்;
தாழ்ந்து தாழ்ந்து, இரு தாமரைக் கழல்
  தாழ்தல் ஆர்தல் இல் தாழ்ந்தனன்;
சூழ்ந்து சூழ்ந்து, உள இன்பு அறா, மழை
  தூவ நீண் விழி வாழ்ந்தனன்;
வாழ்ந்து வாழ்ந்து, உயர் வான் உளோர் மனம்
  வாய் வியப்பு உற ஓங்கினான்.
125
   
மரியாள் திருமகனைச் சூசையின் கையிற் கொடுத்தல்
 
978அன்பு உறக் கடல் என்று எலா உயிர்
  ஆண்டு அளித்து அருள் நாயகி,
துன்புறத் துணை ஆய் மாண்பு அருள்
  துற்று மார்பு உடை மாதவன்
இன்புறத் துணை ஆதல் ஆம் என,
  “இன்று எழுந்து உறை நாதனை
உன் புறத்து இடை ஏந்துக“ என்று, அலர்
  ஒத்த செங் கரம் நீட்டினாள் .
126
   
சூசை திருமகனை ஏந்தி பேரானநத முறதல்
 
979விண் புலத்து உயர் ஏக ஆணையின்
  வேந்தர் வேந்து எனும் தேவனை,
உள் புலத்து வணக்கம் மிக்கு உற
  உற்று எடுத்திட நாணினான்,
மண் புலத்து இணை அற்ற மாது அறை
  வாய்ந்த சொல் கொடு தேறினன்;
கண் புலத்து உறு மாரியோடு, இரு
  கைத் தலங்களில் ஏந்தினான்.
127
   
 
980கைத் தலத்தில் எடுத்து மார்பொடு
  காதல் ஓங்க அணைத்தலும்,
முத்தம் இட்டலும், நோக்கில் தீட்டலும்,
  உற்ற நீரில் நனைத்தலும்,
சித்தம் முற்றலும், நாள் மலர்க் கழல்
  சென்னியின் மிசை வைத்தலும்,
இத் திறத்திலும் உள் மகிழ்ந்து உறும்
  இன்பம் எல்லையும் இல்லையே.
128
   
முனிவன் இன்புறக் கணட திருமகன் இன்பம் எங்கும்பரவுதல்
 
981கோதை வாகையை நீழல் ஆர் அடி
  கோதை ஆக அணிந்த கைத்
தாதையான் தனை நோக்கும் அன்பொடு,
  தாவு உளத்து உலவு இன்பதின்
ஓதை ஆர்கலி ஓட ஓர் நகை
  உற்ற பாலகன் ஒண் முகப்
பாதையால் களி எய்தி, மொய்த்தன
  பாரோடு உம்பர்கள் பால் எலாம்.
129
   
திருப் பாலனும் கைத்தாதையும்
 
982வேது அணிந்தன பாலன் வீ அணி
  வாகையான் தனை வீக்கலால்,
போது அணிந்தன கோடு சூழ் படர்
  பூத்த பொற்கொடி போலுமே.
மீது அணிந்தன நீவி போர்த்து, அவிர்
  மேனியைத் தவன் வீக்கலும்,
சீது அணிந்தன மேகம் ஒண் சுடர்
  செவ்வி மூடிய போலுமே.
130
   
 
983தத்து எரிந்தன மீன்கள் சூடிய
  தன்ம நாயகி, தன் முகத்து
ஒத்து எரிந்தன கண் களிப்பு எழ
  உற்று நோக்கிய நோக்கு அறா,
மொய்த்து எரிந்தன சேய் முகத்து ஒளி
  முற்றும் உண்டனள், செஞ் சுடர்
துய்த்து எரிந்தன திங்கள் தேறிய
  தோற்றம் ஒத்தது இலங்கினாள்.
131
   
தாயின் கையில் சேயினை அனித்தல்
 
984மீன் வரம்பு என மின்னு நீண் விழி
  மீண்டு இமைப்பு இல காண் வளன்,
வான் வரம்பு என வாம ஓவியம்
  மான நின்றனள் என்று, ஒரீஇ,
தேன் வரம்பு என இன்பு
  தேறிய ஆவி ஆயின சேயனை,
கான் வரம்பு என விண்ட தாயது
  கஞ்ச அம் கையில் ஈந்தனன்.
132
   
சூசையின் பூங்கொடி நிழலில் திருமகன் துயில்தல்
 
985காம்பு இல் அம் கிளர் கால் பெயர்ந்தன
  காலை, அங்கு அலர் பேர்ந்தது ஓர்
ஆம்பலம் கிளர் பூ இருஞ் சினை
  யாக நின்றன மாதவன்
சாம்பி, அம் கிளர் தாள் துணர்த் துணைத்
  தார் அது என்று அணி ஓகையால்
ஓம்பி, அம் கிளர் வாகை ஒண் குடை
  ஊச நல் நிழல் நீடினான்.
133
   
 
986ஊசல் அம்புலி உற்றது ஒத்தென,
  ஒள் இரண்டு வெண் சாமரை,
காசு அலம்பிய மேனி காட்டிய
  காதல் வானவர் வீசவே,
பாசு அலம் புரி பாழி, பற்றிய
  பள்ளி பண்பொடு வீங்கினான்,
ஆசலம் புரி ஆசையால் நிறை
  ஆகுலக் கடல் தூர்த்தனன்.
134
   
சூசை , திருமகனைப்பாடிப் பரவுதல்
 
987விண்ணே புரக்கும் அருள் துஞ்சான்,
  விரி செவ் இதழ்த் தாமரைத் தவிசின்
கண்ணே அன்னப் பார்ப்பு அன்ன,
  கன்னி கரத்தில் துஞ்சியகால்,
உள் நேர் உணர்வு உய்த்து, உயர் வேதத்து
  உரை மந்திர வாய் மொழித் தவத்தோன்,
பண் நேர் பால் நேர் மாங் குயில் நேர்
  பாடி, படர் நல் புகழ் உற்றான்:
135
   
 
988“இருளே அணுகா மறைவு அணுகா
  இரவிக்கு ஒளி ஆம் திரு விழியை
மருளே அணுகா மூடுகின்றான்;
  வானும் மண்ணும் வழுவாது ஆள்
அருளே மருளா, இவ் உலகில்
  அயர்வு மாற, அயர்வு இல்லான்,
தெருளே மருளா, மனம் துயிலா,
  திளை நான் களிப்பத் துயில்கின்றான்.“
136
   
 
989“களித்த நாளில் அரும்பும் தென்
  காலே, இனிது ஈங்கு அரும்புதியே!
துளித்த நானத் தேன் அரும்ப,
  துணர் நாள் மலர்காள், அரும்புதிரே!
விளித்த நாகு மாங் குயில்காள்,
  விளை தேன் பாவை அரும்புதிரே!
அளித்த நாதன் நான் கனிய,
  அன்பு துயிலா, துயில்கின்றான்.
137
   
 
990“கண் பட்டு உறங்கக் கண்டேனோ!
  கருணாகரனே, களிக் கடலே,
புண் பட்டு உளையும் நெஞ்சிற்கு ஓர்
  பொருவா மருந்தே, அருள் அன்பே,
மண் பட்டு அலையும் கடல் அன்ன
  மருள் என் நெஞ்சிற்கு உயிர் நிலையே,
எண் பட்டு உயர்ந்த செல்வ அரசே,
  எம் மேல் இரங்கும் தயை இதுவோ!“
138
   
 
991“வான் தோய் நயங்கள் பயந்தோய் நீ;
  மண்தோய் துயர் நீத்து அளித்தோய் நீ;
தேன் தோய் இன்பத்து அமைந்தோய் நீ;
  சேண்மேல் புகழப்படுவோய் நீ;
நான் தோய் உணர்வின் உய்ர்ந்தோய் நீ;
  நரன் என்று ஆக அவதரித்தே,
ஊன் தோய் உடல் கொண்டன அன்பின்
  உணர்வு இட்டு, எனக்குப் பணியாயோ!
139
   
 
992“கோ வீற்று இருந்து மகிழ்வோய் நீ;
  குலையா வயத்து ஒப்பு இகழ்ந்தோய் நீ;
நா வீற்று இருந்த புகழ் மிக்க
  நணுகாக் காட்சிக்கு இறையோய் நீ;
பூ வீற்று இருந்து நாம் வாழப்
  பூ வந்து, இடர் உற்று, அழுவோய் நீ;
ஆ வீற்று இராயோ என் இதயத்து!
  அதற்கே உறுதி புரியாயோ!“
140
   
 
993“நூல் வாய்ப் புகழ் மேல் உயர்ந்தோய் நீ;
  நோய் வாய் மருந்தின் கனிவோய் நீ;
கோல் வாய்க் கோடா நீதி நெறி
  கொண்டு எவ் உலகும் புரந்தோய் நீ;
வேல் வாய்க் குருதி பாய்ந்து இறப்ப
  மெய் கொண்டாயோ? இதை அறியா,
கால் வாய் இலை போல் தியங்கிய என்
  கருத்திற்கு உணர்வை உணர்த்தாயோ?“
141
   
 
994நீர் பாய் உலகிற்கு உயிரோய் நீ;
  நிமிர் வீட்டு உலகிற்கு உயிரோய் நீய்,
சீர் பாய் பாவிற்கு உரையோய் நீ;
  திறன் கொண்டு ஆள்வார்க்கு அடலோய் நீய்,
ஏர் பாய் இரவிக்கு ஒளியோய் நீ;
  எம் மேல் இரங்கிப் பிறந்தனை. நாம்
சூர் பாய் துகள் அற்று உய்வதற்கு உன்
  துணைத் தாள் தொழும் பண்பு உரையாயோ?
142
   
 
995“தேறும் தயையின் முனிவோய் நீ;
  சினத்திற்கு அருள் செய் கனிவோய் நீ;
கூறும் கலை அற்று உணர்வோய் நீ;
  கூறும் தொனி அற்று உரைப்போய் நீ;
மாறும் பொருள் யாவிலும் நின்றே,
  மாறா நிலை கொள் மரபோய் நீ;
ஈறும் தவிர்ந்த உன் புகழ்க் கடல் ஆழ்ந்த
  எனக்கே கரை காட்ட அருளாயோ?
143
   
 
996“ஒளி நாக்கொடு வான் சுடர் புகழ,
  ஒளி நாக்கொடு பல் மணி புகழ,
களி நாக்கொடு பல் புள் புகழ,
  கமழ் நாக்கொடு கா மலர் புகழ,
தெளி நாக்கொடு நீர்ப் புனல் புகழ,
  தினமே புகழப்படுவோய் நீ
அளி நாக்கொடு நான் உனைப் புகழ
  அறியா மூகை; உணர்த்தாயோ?
144
   
 
997என்றும் போற்றப்படுவோய் நீ;
  எங்கும் நிழற்று ஓர் குடையோய் நீ;
முன் துன் பொழுது அற்று உளளோய் நீ;
  முக்காலத்து ஓர் பொழுதோய் நீ;
குன்றும் தன்மைத்து உரை பின்ற,
  குணியா அருள் செய்தாய்; அதற்கே
ஒன்றும் தேறா என் இதயத்து
  உணர்வின் காட்சி அருளாயோ?“
145
   
 
998என்றான் அழுதான் உள் உருகி;
  இன்பக் கடல் ஆழ்ந்து அன்று ஆழ்ந்தான்;
குன்றா இறையோன் தயைக் கடலுள்
  குளித்தான்; நீந்திக் கரை காணான்;
சென்றான் என்ன மெய் மறந்தே,
  சிறிது ஓர் கால் நின்று உணர்ந்தவை, வான்
நின்றார் கண்டு உள் அதிசயிப்ப,
  நிகர் இல் அன்பால் மீண்டு உரைப்பான்:
146
   
 
999அறம் தாய் தந்தை சுற்றமும் மற்று
  அனைத்தும் நீயே; கதி நீயே.
பிறந்தாய், உலகிற்கு உயிர் அன்னோய்;
  பிறந்து, எம் துயரும் எம் பகையும்
துறந்தாய்; எங்கள் சிறை தீர்த்தாய்;
  துகள் பூட்டிய வீட்டு உயர் வாயில்
திறந்தாய். இவை யாவரும் அறியத்
  திறன் செய்து, அருள் செய்து, இரங்காயோ?
147
   
 
1000“குருவாய் வந்தோய், ஒளிப்பாயோ?
  கோது ஆர் இருள் தீர் வெஞ் சுடரின்
உருவாய் வந்தோய், ஒளியாயோ?
  உயர் வான் நிகரே மண் கனியக்
கருவாய் வந்தோய், இக் கருணை
  கண் கொண்டு எவரும் களித்து அறியத்
தருவாய் வந்து, ஓய் இல அன்பின்
  தகவோய், திருவோய்!“ எனத் தொழுதான்.
148
   
திருமகன் வானவர் உள்ளத்தில் கட்டளையிடல்
 
1001துஞ்சும் தன்மைத்து, எவ் உலகும்
  துணை அற்று ஆள்வோன், இவை கேட்டு,
விஞ்சும் தன்மைத்து ஓங்க வளன்,
  விழைவே விளைக்கும் விழி விழித்தான்;
எஞ்சும் தன்மைத்து உதவிய தான்
  இயைந்த தன்மை உலகு உணர்த்த,
அஞ்சும் தன்மைத்து எதிர் இறைஞ்சும்
  அமரர்க்கு உரையாது, ஏவல் இட்டான்.
149
   
காட்சிப் படலத்துக்கு முன்னுரை
 
1002ஏவும் பாலால் விண்ணவர் போய்
  இடையர் வந்து ஏற்றிய ஆறும்,
துாவும் பாலால் ஒளி பகலில்
  துளங்கு மீன் தோன்றிய ஆறும்,
மேவும் பாலால் விரைந்து இறைஞ்ச
  வேந்தர் மூன்று எய்திய ஆறும்,
ஆவும் பாலால் வளன் உணர்வு ஒத்து
  ஆய தன்மை உரை செய்வாம்.
150
   
வானவர் இறைவனை வணங்க ஆயர்களை ஆழைத்தல்
 
1003இன்ன வாயில் இன்ன தன்மை
  இன்ன யாவைவும் ஆகையில்,
பொன்ன நாடு துன்னும் உம்பர்
  பொன் உருக் கொடு ஆங்கு போய்,
மின்னல் நேரும் அன்னை
  ஈன்ற வேத நாதனைத் தொழ,
உன் அலாத கோவர் இன்பம்
  உண்ண, உற்று, அழைத்தனர்.
1
   
ஆயர்கள் இறைவனை வழிபடல்
ஆயர் இறைவனடி பணிநது மகிழ்தல்
 
1004கொழுந்து உறும் குளிர்ந்த முல்லை
  கொண்ட கோவர் கூட்டமும்,
எழுந்து உறும் குடத்தியாரும்
  ஏகி, ஆய காட்சியால்,
விழுந்து, உறும் களிப்பு விஞ்சி,
  வேத நாதன் மேல் பதம்
தொழுந் தொறும் தொழுந் தொறும்
  துளங்குகின்ற தோற்றமே.
2
   
முல்லை மலர்மாலைகொணர்ந் துநிற்றல்
 
1005மாலை மேவு வேங்கை பற்றி வண்டு உணாது என, மன
மாலை மேவு வேங்கை பற்றி வண்டு உணாது என மன
மாலை ஆக, வீங்கு உவந்து, வாசம் ஆரும் முல்லை ஆர்
மாலை ஆக ஈங்கு வந்து, வாசம் ஆரும் முல்லையார்.
3
   
இறைவனைப் போற்றத தொடங்குதல
 
1006பஞ்ச அரங்கில் இன்பு அரங்கு
  பான்மையால் அடை வரத்து
அம் சலம் குழி்ந்து, உவந்து
  அமிழ்ந்து, அமிழ்ந்த உரம் தனில்
விஞ்ச இன்பம், நெஞ்சு அடங்கு இல்
  மேவல் ஆர்ந்த தம் உயிர்
உஞ்சல் ஆடி, வாயின் வாயில்
  உற்று உரைத்தல் உற்றனர்.
4
   
உள்ள முருகி இறைவனை போற்றுதல்
 
1007“எண் உளே அடங்கல் இன்றி ஏந்து மாட்சி பூண்டு, வான்
விண் உளே பொலிந்து உவந்த விண்ணவர்க்கு வேந்தனே,
புண் உளே மருந்து நீவிப் போன ஆட்டை மீட்கவோ
மண் உளே எழுந்து வந்து மண்ணன் என்று உதித்தனை?
5
   
 
1008“ஒண் தலங்கள் அண்ட
  உம்பரும் தொழும் பராபரா,
விண் தலம் கலந்து இலங்கு
  வெண் களங்கன் ஒப்பு எனா,
மண் தலங்கள் எங்கும் யாரும்
  வாழ, ஈர வெண் குடை
கொண்டு, அலங்கல் கொண்ட தேறல்
  கொண்ட அன்பு கொற்றவா!“
6
   
 
1009“மணிக் கலத்து அகத்து
  அமைத்த வான் அமிர்த மார்பினோய்,
பிணிக் குலத்து அகத்து உதித்த
  பெற்றி ஆய்ந்து வாழ்த்திடப்
பணிக் குலத்து அகத்து அடங்கு
  இலால், பணித்த நின் பணி
அணிக் குலத்து அகத்து அணிந்த
  அன்பு பேர்கு இல் ஆகுமே.“
7
   
அன்னையையும் சூசை முனிவனையும் வாழ்த்துதல்
 
1010“இரவி வேய்ந்த கஞ்சம் ஈன்ற
  இலகு முத்தம் ஏய்த்து, வெல்
புரவில் வேய்ந்த சேயை ஈன்ற
  பொருவு இல் அன்னை, வாழுதி!
சுருதி வேய்ந்த மாட்சி பூண்ட
  துணைவன் ஆன்மா தவத்து
உருவில் வேய்ந்த வேந்த,
  வாழி என்று உறுதிசொற்றினார்
8
   
காணிக்கை வைத்த பூமாலைகளின் தோற்றம்
 
1011இடத்து இடத்து அடர்த்தி உற்ற
  இக்கு உடைத்த இன்பு சொற்
குடத்தியர்க்கு அமைத்த பற்றல்
  கூர்ந்து, தோன்றல் தாள்மிசைத்
தடத் துணர்க்கு அமைத்த தேறல்
  தாங்கு மாலை சாத்தலும்
முடித்த திங்களைத் தொடுத்து
  உடுக்கள் உற்றல் ஒத்ததே.
9
   
பசுவின் பாலைக் காணிக்கை வைத்த தொற்றம்
 
1012ஏதம் இன்றி மாலி ஈன்ற காந்தி என்று, தோன்றலைக்
கோது அகன்று உயிர்த்த கோதை தாள்முன் அன்ன கோவலர்
சீத இன்பமோடு இரங்கு தேன் அமிழ்தம் ஈகலும்,
பாதம் ஒன்று சோமன் ஈன்ற பால் நிலாவை மானுமே.
10
   
ஆயர் வானின்பம் பெற்றார்
 
1013பால் நிலத்து அமைத்த அன்பு பதுமம் நேரு கண் செய,
தேன் நிலத்தினாரை நோக்கு சிறுவன், இன்பு காட்டலால்,
மேல் நிலத்தினாரின் ஒத்த விரியு காட்சி உற்று, உளம்
வான் நிலத்தின் ஆர்ந்த இன்பு மலிய வாழ மாந்தினார்.
11
   
கன்னித்தாயும் சூசையும் ஆயர்க்கு விடைகொடுத்தல்
 
1014கன்னி ஆய தாயும், ஓங்கு காவலானும், அன்பு உற,
இன் இறாலினும் கனிந்த இன்ப அம் சொல், ஓதலால்,
உன்னம் மேவும் ஈர அன்பு முன்னம் உள் உறாமையால்,
மின்ன மாரி தூவல் ஒத்த வீழும் நாட்ட மாரியே.
12
   
ஆயர் வீடு திரும்புதல்
 
1015ஏவல் ஆகி, மூவரை இறைஞ்சி, ஏங்கி ஏகினர்,
ஆவல் ஆகி, ஆங்கு வைத்த ஆவி அல்லது இல்லதால்,
மேவல் ஆகி, ஆவியாக வேய்ந்த அன்பு இலாது எனின்,
ஓவல் ஆகி, வெற்று உடல்கள் ஊரை உற்றல் ஒத்ததே.
13
   
தாய் , மகனை வாழ்த்துதல்
 
1016ஏகு ஆணை ஏக எங்கும் ஏகன் ஆகி ஆள்பவன்,
மாகம் மேவு மாடம் நீக்கி, மாடு மேவு உழைக்கு உறைந்து,
ஆக்ம் மாடை வேந்தர் நீக்கி, ஆயரைத் தெரிந்தது என்று,
ஓகை ஆக, ஓகனோடும் ஓங்கு தாயும் வாழ்த்தினாள்.
14
   
ஆயர் நாள்தோறும் குகை்க்கு வருதல்
சாந்தி ஐயமும் கன்னித்தாய் பதிலும்
 
1017முன் அருந்திய தீம் சுவை முல்லையார்,
பின் அருந்திடப் பெட்பு உறீஇ, நாள்தொறும்,
மின் அருந்திய மெல் அடியாள் கரத்து
அன்ன அருந் திருச் சேய் தொழ, அண்ணுவார்.
15
   
ஆயர்க்குத் திருமகன்இன்பம் தேக்குதல்
 
1018அண்ணி, நீர் தவழ் தீ என அம்புயக்
கண்ணி தாள்மிசை பெய்தஉழி, காதலன்,
விண்ணின் நீர்முகில் மின் என நோக்கலோடு,
உள் நிலாவொடு, இன்பு ஓர் மழை தூவினான்.
16
   
ஆய்ச்சியர் இண்பம்
 
1019தூவி ஓடிய வாரி துவற்றொடு,
காவில் ஓடிய முத்து என, காதலால்
நாவில் ஓடிய நல் புகழ் சிந்துவார்,
ஏவி ஓடிய கோல் விழி ஏந்தினார்.
17
   
சாந்தி என்னும் இடைச் சிமரியாளிடம் பேசத் தொடங்குதல்
 
1020ஏந்தி ஓங்கு உளத்து இன்ப நெடுங் கடல்
நீந்தி நீந்தி, நிலைக் கரை காண்கு இலா,
காந்தி வேய்ந்தனளைக் கனிந்து ஓதுவாள்,
சாந்தி நாமம் தரித்த குடத்தியே;
18
   
 
1021“குடத்தி வாய் மொழி கோது என, கோதையாய்,
உடற்றி நீ ஒருவாது, அருள் ஓர்ந்து கேள்;
மடத்து யாது எனும் கிள்ளை வகுத்தன,
இடத்து யாவரும் கேட்பது இல் ஆவதோ?
19
   
சாந்தியின் வினாக்கள்
 
1022“ஆவதே முனர் ஆயது போல் அறிந்து,
ஈவதே நசை பின்ற அளித்திடும்
கோ அதே மிசை ஆள் தனிக் கோலினான்,
நோவதே இனிது என்று, உதித்தான் கொலோ?
20
   
 
1023“கொல்லும் வேலொடும் கூர் நெடும் வாளொடும்
வில்லும் வாளியும் ஆழியும் வில் செய,
ஒல்லும் ஆழி உருட்டிடக் கோன் துணை
செல்லும் வீர வெஞ் சேனை இல் ஆயது ஏன்?“
21
   
 
1024“ஆய வான் மணி ஆர்ந்து அணி உச்சியால்
காய நெற்றி கடந்து உயர் மாடமும்,
தூய பொன்னொடு சூழ் சுடர் பூணும், இத்
தேய வேந்தர் தம் செல்வம் ஒன்று இல்லது ஏன்?
22
   
 
1025“இல் அதே இல, இவ் வழி வந்தது ஏன்?
செல்ல வான் வழி செய்ய வந்தான் எனில்,
வல்ல வேடம் அணிந்து, மறைவு அற,
வெல்ல வான் உரு வேய்ந்தின், நன்று அல்லதோ?
23
   
 
1026“ஓவு உண்டு ஆய உருக் கொடு, என் உளத்து
ஆவு உண்டாயின ஐயம் இதே; இனி,
தூவு உண் தாதுவ தூய் மலர் வாய் திறந்து,
ஏவு உண்டு ஓதுதி, ஆய் இழையாய்!“ என்றாள்.
24
   
தாய் மரி விடை கூறத் தொடங்குதல்
 
1027என்ற வாசகம், எந்தை மனுக் குலம்
சென்ற வாய் அருள் காட்டிய சீர் உணர்வு
ஒன்றல் ஆகி உருகிய தாய், புனல்
மின் தவா விழி தூவி விளம்பினாள்;
25
   
தாய் மரியின் விடை
 
1028“அம்பினால் அபயர் செயும் அத் துணை
நம்பினார் தனி நல் செய்கை ஈடு இலார்; பை
கொம்பில் ஏறும் இடைத் துவளும் கொடி;
எம் பிரான் வலிக்கு இத் துணை வேண்டுமோ?
26
   
 
1029வேண்டும் ஓர் வினை, வேண்டும் என்றால் முடித்து
ஆண்டும் ஓர் தனிக் கோல் அரசான் எரி
தூண்டும் ஓர் சினம் தோன்று உழி, அப் பகை
தாண்டும் ஓர் வலி தாங்குவர் யாவரோ?
27
   
 
1030“யாவரும் கடிது அஞ்சலொடு எஞ்சுவான்,
மீ வரும் துளி மேதினி மொய்த்ததும்,
தீ வரும் துளி ஐம் புரம் தீந்ததும்,
தூ வரும் பலவும் தொகை சொற்றவோ?
28
   
சாந்தி தான் கேட்ட வேதவுரையை் கூறுதல்
 
1031“சொல் தவிர்ந்த அருள் தொழில் கால் இது“என்று
உற்று அவிர்ந்த உடு முடியாள் உரைத்து,
இற்று அவிர்ந்த இடைச்சி உணர்ந்த பின்,
பற்று அவிர்ந்த உரைப் பயன் கூறுவாள்;
29
   
 
1032“கூறுவாள் செயும் கொள்கையின், என் உளம்
பீறு வாள் எனப் பின்னை ஓர் ஐயமும்
தேறு வாய் மொழி கேட்டிடச் செப்புவேன்,
ஈறு வாய் இல எந்தையின் அன்னையே!“
30
   
 
1033“அன்னை தந்தை இலான், அறை நூற்படி,
என்னை இங்கு அளித்தோன் வரும் எல்வையின்,
மின்னை ஒன்றிய வேடம் எடுத்து, அவன்
தன்னை யாவரும் தாழ இறைஞ்சுவார்.“
31
   
 
1034“அஞ்சுவார் அவன் முன் உலகு
  ஆள்பவர்;
எஞ்சுவார் அவனை இறைஞ்சுவார்“
  எனசாந்தி தான் கோட்ட வோதவுரையை கூறதல்
விஞ்சும் ஆரணம் ஆக
  விளம்பினார்
துஞ்சு மா தவரே? எனச்
  சொல்லினாள்.
32
   
மரியாள் விளக்கம்கூறத் தொடங்குதல்
 
1035சொல்லக் கேட்டனள், “தொன் மொழித் தன்மையும்
வெல்ல, கேட்பு அரும் வெஞ் சினத்து, எல்லை நாள்
ஒல்ல, கேட்டனர் உட்கு உற, ஆவதைப்
புல்லக் கேட்கில், யான் புகல்வேன், என்றாள்.
33
   
 
1036தாள் எழும் கமலம் சுடர் தாவிய
கோள் எழும் கதிர் கொண்டு என, கேட்டலும்,
வாள் எழுந்த கண் மாதொடு யாவரும்,
சூள் எழுந்து, “உறச் சொல்“் என, சொல்லுவாள்:
34
   
திருமகனின் இரு வருகைகள்
 
1037மல் செய்கை முதிர்ந்து உயர்ந்தோன், இரு கால் இங்கண்
  வந்து உதிப்பான் என, மறையால் அறிந்தேம்; அன்பின்
நல் செய்கை தளிர்ப்பதற்கே முன்னர்த் தோன்றி
  நயன் தருவான்; மீண்டு அரிய திறத்து நீதி
பல் செய்கை காட்ட, இரு வினையால் யார்க்கும்
  பயன் தர, நீய் முன் உரைத்த வண்ணம் எய்தி,
முன் செய்கை அருள் செய்கை இக்கால் ஆய், பின்
  முனிச் செய்கை உலகு அஞ்சத் தோற்றுவிப்பான்.
35
   
இந்து புண்ணை ஆற்று மருந்து போல
நம்பாவந்தீர்க்க வந்த காலம்
 
1038“மண் கனியப் பொன் பொழிந்த மழை ஒத்து, ஆர்வம்
  வழங்க உரிப் பொழுது என இன்று இறங்கிச் சேய் ஆய்,
கண் கனியப் பொற் கோலால் அரிதின் தீட்டிக்
  கதிர் தவழும் ஓவியம் நல் உயிர் பெற்று அன்ன,
விண் கனியக் கவின் பூண்ட வடிவம் சூட்டி,
  விழைவு இயற்றும் குழவி என இங்கண் தோன்றி,
புண் கனியக் குளிர்ந்து ஆற்றும் மருந்து போன்றான்,
  புலவர் எலாம் வருந்தினும், தம் புகழின் மிக்கோன்.
36
   
இங் இரக்கத்தின் காலத்தில் உக்கோர்க்காகத்
தன் உயிரை ஈவான்
 
1039“அழுது, ஆர்ந்த துயர்க் கரத்தில் பிறந்து, கைக்கும்
  அரந்தையின் பால் அருந்தி வளர்ந்து அருள் வளர்த்த
பொழுது, ஆர்ந்த வஞ்சகத்தார் பகை செய்து ஆர்ப்ப,
  பொறை ஏராய்ப் பூட்டி, செம்புனல் சேறு ஆக
உழுது, ஆர்ந்த ஆர்வ விதை வித்தி, பின்னும்
  உரிய வர நீர் இறைத்து விளைந்த இன்பம்
வழுது ஆர்ந்த வையகத்தார் உய்தற்கு ஈவான், மணிக்
  கலத்து ஊடு அமுது ஏந்தும் அருள் மொய் மார்போன்.
37
   
அவதரித்த இறைவன் பொறை , மிடி, தாழ்வு கொண்டதன் காரணம்
 
1040பொய் பொதுளும் ஐம் பொறி பின் மனமும் செல்லப்
  போக்கிய கால், பொருள் புகழ் இன்பு எவரும் வெஃகி,
மை பொதுளும் வினை பொதுள விளைந்த பாவ
  மருள் சீய்க்கப் பொறை மிடி தாழ்வு உரியது அல்லால்,
கை பொதுளும் கனி விடம் என்று, ‘ஒருவுக‘என்றான்
  கனிவு என்னத் தான் அருந்திப் பொன்றல் போல,
மெய் பொதுளும் மறை தந்தோன் விலகும் தீமை
  விழைந்து உற்றால் உலகிற்கும் பொருந்தும் பாலோ?
38
   
நருத் தீர்பபு
உலக முடிவில் நிகழ்வன
 
1041“இக் காலம் தயைக் காலம் என்று தோன்றி,
  எளியன் எனத் திரிந்து, இனியது எவர்க்கும் கூறி,
முக்காலம் கடந்து உணர்த்து, இச் சுருதி நல் நூல்
  மொழிந்து அருளைக் காட்டிய பின், முதிர்ந்த நீதி
அக் காலம் குறுகிய கால், தீர்வை தீர்க்க,
  ஆங்கு இவன் தான் மூ உலகம் கலங்கிக் கூச,
மிக்கு ஆலம் கால் உருவத்து எய்தா முன்னர்
  விடும் தூது என்று எய்தும் எலாம் சொல்லும் பாலோ?
39
   
 
1042“தேர் எழுந்த செஞ் சுடரோன் இருண்டு மாழ்க,
  தெண் கதிர் கால் திங்கள் முகத்து இரத்தம் சேப்ப,
தார் எழுந்த வம்பு அலரோ மணியோ நாறும்
  தாரகைகள் அங்கண் விட்டு இரிந்து வீழ்க,
போர் எழுந்த கதத்து உடன்று திரைகள் தாவ,
  புயல் பாய்ந்து பொங்கிய நீள் புணரி ஆர்ப்ப,
பார் எழுந்த பருப்பதங்கள் நடுங்கிப் பேர,
  படர் நிலத்தோர் கடை யுகம் என்று அஞ்சா நிற்பர்.
40
   
 
1043“கடுகியன இடிச் சூல் கொள் கருங் கார் மொய்ப்ப,
  கணகணெனக் கடுஞ் செந் தீ் மாரி தூவ,
வடுகி எனப் பெய்த அழல் திரண்டு ஆங்கு ஓட,
  மண்டு இருண்ட புகை அள்ளும் தன்மை மூய்ப்ப,
முடுகியன சாப மழைத் திரளின் விம்ம
  முகில் கீறி இடி இடித்த இடிகள் தாக்க,
கிடுகிடெனப் பார் உலகம் நடுங்கி ஆட,
  கிளர் துயர் கொண்டு உயிர் அனைத்தும் மாழ்கும் அன்றே.
41
   
 
1044“வெம் பர மா சினத்து எரிந்த மண்ணோர் எல்லாம்
  வெண் பலி ஆயின பின்னர், வயத்திற்கு எஞ்சாது
உம்பரம் ஆள் தனிக் கோலான் ஏவும் தன்மைத்து,
  உம்பர் பலர் விடும் கணையில் விரைந்து சென்றே,
அம்பரம் நான்கு ஓடி, எழும் கடலும் காரும்
  அதிர்த்த அரவம் எஞ்சி விஞ்சக் காளம் ஊதி,
“எம் பரம்ா இறைவன் இடும் தீர்வை கேட்ப
  எழுமின்!“ என, எழுந்திருப்பர் மக்கள் எல்லாம்.
42
   
இறந்தோர் அனைவரும் உயிர் பொற்றொழிதல்
 
1045“ஏவுகின்ற வயத்து, உள்ள உலகம் மூன்றும்
  எழில் பட, முன் ஒன்றும் இலாது, உள ஆக்கின்றோன்,
மேவுகின்ற திரு உளம் ஆய், சொல்லல் ஆற்றா
  மிடல் தன்னால், அடலை எனப் புழுதி என்னாத்
தூவுகின்ற உடல் எல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து
  இத் தொல் உலகம் தொடங்கிய நாள் தொடங்கி இங்கண்
தாவுகின்ற மனுக் குலத்தோன், ஒருவன் நீங்கா,
  தம் உடலைப் போர்த்து எழுந்து கலந்து நிற்பார்.
43
   
நல்லோரும் தீயோரும் தணித்தனியாகப் பிரிக்கப்படுதல்
 
1046“குல முறையும் இன முறையும் ஒன்றும் பாரா,
  குணத் தொகையால் வெறுபட, வினையைச் செய்த
நல முறையும் பார்த்து இரு பால் பகுப்ப வானோர்,
  நம்பி தனது இல்லாளை, மகனைத் தன் தாய்,
பல முறையும் மூதுனனைத் தம்பி, ஓர் தூர்
  பற்றிய பல் கிளை தம்முள் பிரிந்து நிற்கும்
வல முறையும் கண்டு, அலறித் தளர்ந்து நோக,
  வானவர் ஈண்டு எவரையும் ஓர் இடத்து இட்டு உய்ப்பார்.
44
   
இறைவன் வீற்றருத்தல்
 
1047“இடி உண்ட முகில் ஒரு பால் மின்னி விம்ம,
  இகல் முரசும் பல் பறையும் ஒரு பால் ஆர்ப்ப,
கொடி உண்ட வான் தளங்கள் ஒரு பால் முன்ன,
  கோக் கணம் போல் மற்று அமரர் இரு பால் சூழ,
துடி உண்ட ஒலிக்கொடு சூழ் வெரு உய்த்து ஒல்கிச்
  சுடர் தவழும் தூய் முகிலில் பொலிந்து தோன்றி,
முடி உண்ட அரசர் அரசு எனமேல் நிற்பான்,
  முருகு முகை முகத்து இங்கண் நிற்கும் இன்னான்.
45
   
இறைவன் தீயோர் சொய்த குற்றகளை
அனைவர்க்கும் வெளிப்படுத்தல்
 
1048“குன்று எழுந்த செஞ்சுடர் போல் முகில் மேல் தோன்றும்
  குணத் தொகையோல் வலத்து இறைஞ்சி, உயர வானோர்ச்
சென்று எழுந்த நல்லோரை முகமன் நோக்கி,
  தீ அலகை இனத்தினுடன் இடத்தில் அஞ்சி
நின்று, எழுந்த துயர் அழற்று மனத் தீயோரை
  நெடும் வேல் கண்ணால் சுளித்து நோக்கி, நோக்கும்
நன்று எழுந்த வினைப் பயத்தால், விளக்கு இட்டு அன்ன,
  நவை எல்லாம் எல்லார்க்கும் தோற்றுவிப்பான்.
46
   
 
1049“முன் செய்கை அனைத்தும் அவண் தோன்றி, தீமை
  முயன்றதும், உள் விரும்பியதும், உரைத்த சொல்லும்,
நல் செய்கை நன்றாய்ச் செய்யாமல் செய்த
  நவையும், ஒளித்து இருள் தேடி இரவில் செய்த
தன் செய்கை யாவும், அன்றே நடுங்கிக் கூச,
  தரணி எலாம் முற்று அறிய, தவம் பயக்கும்
மல் செய்கை உறுதியினால் இமிழில் இக்கால்
  மறைய அவை துடையாதால், தோன்றும் அன்றே.
47
   
மெய்நெறியை வெறத்தவருக்கு
 
1050“மின்னி வீழ் உரும் அன்ன களித்து நோக்கி,
  வெரு உய்க்கும் முகத்து ஆர்த்து, விமலன், சொல்வான்:
துன்னி வீழ் புனல் அன்ன நிலையாச் செல்வத்
  தொகுதி விழைந்து அறம் நீத்த பாவிகாள்! விண்
சென்னி வீழ் துளி ஆதி சூழ்ந்த யாவும்
  திளைப்பத் தந்தனன் நான் ஆய், என்னை நீக்கி,
வன்னி வீழ்ந்து எரி வஞ்சப் பேய்கள் தம்மை
  வரக் கடவுள் என்று எண்ணித் தொழுதது என்னோ?
48
   
 
1051“நூல் வழியே வந்த மறை நீக்கி, காமம்
  நுழை வழி ஆம் கதை பலவும் சுருதி என்றீர்.
கோல் வழியே கோட்டம் இல் என்னைப் போற்றும்
  குணத்தவரைக் குலம் இலரே என்றீர் நீங்கா,
வேல் வழியே இரத்தம் உக அவரைக் கொன்றீர்
  வீட்டில் அவர் என்னுடன் வாழ்ந்து உவப்ப, தீமை
கால் வழியே வணங்கிய தீ வஞ்சகத் தேவர்
  கணத்தொடு நீர் ஊழித் தீ முழுகி வேவீர்!
49
   
மொய்ந் நெறியும் , அந்நெறியில் ஓழுகாதவர்க்கு
 
1052நண்ணாது நின்றஉழி நான் தெரிந்த நீரோ,
  நல் மறை நூல் உணர்ந்து, உணராதவரைப் போன்றீர்
உண்ணாதும் ஈயாதும் பொருள் ஈட்டிட்டீர்;
  உளபிறர் கைப்பொருள் கொண்டீர்; இகழ்ந்தீர்; பொய்த்தீர்,
எண்ணாது தாய் தந்தை இறைஞ்சீர்; கேளீர்
  எதிர்த்து உடன்று பகைத்தீர் பொய் ஆணை இட்டீர்
கண்ணாது பிறர் மனை போய்க் காமத்து ஆழ்ந்தீர்;
  கதி வழி எய்தாரொடு தீ நரகில் தாழ்வீர்!
50
   
பாவிகள் பதறி அழுது துயரில் ழூழ்குதல்
 
1053“என்றான் ஆர்த்து அசனி அனான் என்ற தன்மைத்து,
  எவ் உலகும் அதிர்த்து அஞ்ச ஆர்ப்பார் அன்னார்:
குன்றாது ஆங்கு உள செல்வம் இழந்தோம்; நொந்தோம்!
  குலைகிற்போம்; கரை காணா மருண்டோம்; கெட்டோம்!
பின்றாது ஆர்த்து எரி வேவோம்; அந்தோ,
  அந்தோ! பேறு இல்லார் குலம் இல்லார் அவரை என்றோம்;
பொன்றாதார் வாழ அவர், பொன்றாது, அந்தோ,
  புகைச் செந் தீய் வேவோம் நாம், அந்தோ!“ என்பார்.
51
   
 
1054“துடித்திடுவார்; உடல் பதைப்பார்; மோதி வீழ்வார்;
  சுழல்கிற்பார்; புரள்வார்; நொந்து அழுவார்; சோர்வார்.
கடித்திடுவார் தம் உடலை; முனிவார்; ஆர்ப்பார்;
  கலுழ்கிற்பார், குருதிகள் தாவிடத் தாம் தம்மை
அடித்திடுவார்; உடல் கீறி ஊன் உண்டு ஆற்றார்.
  அயர்ந்து ஏங்கித் தயங்குகிற்பார்; துயரின் வெள்ளம்
குடித்திடுவார், தீக் கடலை நீந்தார் நீந்தார்.
  குன்றாது எஞ்ஞான்றும் எரி பொன்றா வேவார்.
52
   
நல்லொர் இறைவனைத் துதித்தல்
 
1055“வானகத்தே பேர் உவகை பயக்கும் பாலால்
  வடிவ முகத்து இவன், நல்லோர் தம்மை நோக்கி,
கானகத்தே துயர் உண்டீர்; நிந்தை உண்டீர்;
  கசடு அற்றீர்; அறம் பூண்டீர்; இனி எஞ்ஞான்றும்
மீன் அகத்தே மீன்கள் என ஒளிர்ந்து என்னோடு ஓர்
  வீட்டிடை வீற்றிருந்து ஆள, எந்தை ஆசி
மால் நகத்தே பெற்றோரே, வம்மின்!“ என்னா,
  வரக் கடலில் மூழ்கு உவப்பின் தொழுவார் நல்லோர்.
53
   
பூமி பிளக்கவெ,பாவிகல் நரக்கில் வீழ்ந்து அற்றுதல்
 
1056“மற நெஞ்சீர், போய்த் திரு என் முகத்து அகன்றே,
  மண்ணையுடன் ஊழித் தீய் போமின்! என்னா,
அற நெஞ்சாரொடு வானோர் புகழ்ந்து சூழ
  ஆங்கு இவ தான் வானின் உயர் செல்லும் காலில்,
புறம் நெஞ்சு ஈர்து அன துயரோடு, இவற்றைக் கண்ட
  பொதிர் தீயோர், அயர்ந்து ஏங்கிப் புலம்பிச் சீற,
திற நெஞ்சு ஈர்ந்து எனப் புவி உள் பிளந்த வாயில்
  திரண்டு உருண்டு ஆர்த்து அலறித் தீ நரகில் வீழ்வார்.
54
   
 
1057“சுற்றத்தார் வேண்டும் அன்றோ, மறை உள் கொள்ளா,
  சுற்றத்தோடு ஈங்கு, அந்தோ, என்றும் வேவோம்!
செற்றத்தால், முந்தையர் தீ் வழியை நீங்கா,
  சிதைந்து இவரோடு, அடர்ந்து எரி தீ ஆழ்ந்தோம், அந்தோ!
குற்றத்தால், உலகு இயற்கை பிறழாது, அண்ணிக்
  கொண்ட பயன் இதோ, அந்தோ, அந்தோ! இன்பப்
பெற்றத்தால் இதோ கெட்டோம் அந்தோ! என்று,
  பின், தாம் நச்சு உயிர் பொன்றாது, என்றும் வேவார்.
55
   
நல்லோர் இறைவனைத்துதித்தல்
 
1058“அன்று, இன்னான் இரு வினைக்கும் பயன் உய்த்து எய்தற்கு,
  அரசு ஒக்கும் வடிவு ஒக்கப் பொலிந்து தோன்ற,
இன்று அன்னான் நீதி முறை பிறழா நேர் சென்று
  இருபற்று அற்று ஒழுகும் நெறி எவர்க்கும் காட்டச்
சென்று, இன்னாப் பயத்த பொருள் புகழ் இன்பு எல்லாம்
  செகுத்து, எம்மை அளிப்பதற்கே எளிய வேடம்
நன்று என்னா, முகை முகத்துக் குழவி ஆனான்;
  நவைக்கு இறுதி, நவை கொண்டோர்க்கு உறுதி ஆனான்.
56
   
நம் துண்பத்தை்த் தானே உண்டு நமக்கு மருந்தாகி
நற்பலன் இவன்
 
1059“இன்பு அருந்தி, நாம் உண்ட விடத்தைத் தீர்க்க
  இயல்பு ஆம் கைப்பு என, நாமே உண்டால் நன்றே,
துன்பு அருந்தி, தான் மருந்து நமக்கே ஆகி,
  துயர் துய்த்த பயன் எல்லாம் நமக்கே ஈவான்,
அன்பு அருந்தி, அமுது ஏந்தும் மணிக் கலத்தின்
  அன்னான்“ என்று இறைஞ்சினள் தாய், துயர் முன் இன்பம்
பின்பு அருந்திக் கேட்டு எவரும் வணங்கி நிற்ப,
  பேர் அறிவு ஓங்கிய சாந்தி தொழுதுசொல்வாள்:
57
   
சாந்தியின் உருக்கம்
 
1060வழுது ஆயின இன்பு உண நான், மனம் உள்
பழுது ஆயின பாவியினால், இறைவா,
அழுதாய்கொல்? உளைந்து அயர்வாய்கொல்?“ எனாத்
தொழுதாள் அழுதாள் பினை சொற்றுவள் ஆல்:
58
   
 
1061“மறம் மேவினர் கை வசம் ஆகுப, ஈங்கு
உற மேவிய காதல் உள் ஆயினையோ?
திறம் மேவிய சீவனியே, அமுதே,
அறமே, அருளே, கருணாகரனே!
59
   
 
1062“சிந்தா ஆகுல வேலை உடைத்த செயிர்
தந்த ஆகுல ஆசை தகைத்த கரை
உந்து ஆகுப, நீ உலகு ஓர் மகனாய்
வந்து, ஆகுல மா கடல் மூழ்குவதோ?“
60
   
 
1063“தேன் தோய் நயம் நாம் உண ஆம் செயிர் தீர்
வான் தோய் அமுது ஒத்த மருந்து இடவோ,
ஊன் தோய் உடல் நோய் உறு கைப்பு அயில்வாய்?
கான் தோய் மலரே, உயிர் செய் கனியே!“
61
   
 
1064“மண்ணோர்கள் வருந்து இல வாழ்வு அயி்ற,
விண்ணோர் தொழும் ஓர் தனி வேந்து என நீ,
புண் நோக உடல் துயர் பூத்திடவோ?
கண் ஓர் மணியே, கனிவு ஆர் உயிரே!“
62
   
 
1065“பை நாகம் எனாப் பல மின்னல் எழீஇ,
கை நாகம் எனாக் கடிது ஆர்த்து, நிறை
பெய் நாகம் எனா, பிதிர் வந்தனை; கல
மை நாகம் எனா உருகோம் மனம் நாம்!
63
   
 
1066“அற ஈடும் இலார் அறிவு ஈடும் இலார்
திற ஈடும் இலார் இடை சேர் பயனால்,
உறவு ஈடும் இலா உறை வீடும் இலாப்
புற ஈடும் இலாப் பிணி பூத்து அழுவாய்!
64
   
 
1067“புகை ஆடிய காடு எனும் இப் புவியே,
பகை ஆடியது அல்லது, பண்பு உளதோ?
நகை ஆடுவர்; நாளி எனக் கஞறி
மிகை ஆடுவர்; நின் விழைவு ஆற்றுவரே!“
65
   
 
1068“பிணி ஆசையில் எய்தினையோ? பிணியே
அணி ஆசையின் மேல் நிறை ஆக்குவரே!
கணியா அருள் மா கை கருத்து இதுவோ?
மணி ஆர் அணியே, மறையின் திருவே!“
66
   
 
1069“இடி மொய்த்தன எல்வை, இருங் கரிகள்
பிடியைத் தழுவிப் பிணி ஆற்றுவன,
மடி உற்று இளங் குஞ்சுகள் மாழ்கும் என,
முடி மொய்த்து, உறை முன், பெடை தாங்குவன.“
67
   
 
1070“நெடு மூ உலகு ஆக்கிய நீ எனினும்,
சுடு சூழ் அழல் ஆற்றிடவும், சுழலப்
படு விண் மழை தாங்கிடவும், பரிவு -அற்
றிடும் ஒன்று இலது, ஆம் அரு மாய்கை, இதே!
68
   
 
1071“பொய்யா விதியோய், பொருவா அருளோய்!
உய்யா உலகு என்னில், உனக்கு இழிவோ?
அய்யா, பயன் நிற்கு இதன் ஆகுவதோ?
கொய்யா வலியே, குறையாத் திருவே!
69
   
 
1072“விடியா இருள் முடிய மேதினி மேல்
முடியா ஒளி முற்றிய செஞ் சுடரே,
அடியாள் உயிரே, அணியே!“ என, மென்
கொடி ஆடு என, நொந்து குழைந்து அழுவாள்.
70
   
சாந்தியின் உரைகேட்டு உருகிய பிற ஆயர்கள் திருக் குழந்தையை நோக்கிக்கூறதல்
 
1073அழுவார் எவரும்; அயர்வார் எவரும்;
தொழுவார்; புகழ்வார்; துணர் மெல் அடி மேல்
விழுவார்; சிர மேல் கொளுவார்; மிடைவார்;
எழுவார்; நணுவார்; பெயரார் இனிதே.
71
   
ஆயர்கள் திருக் குழந்தையை நோக்கிக்குறதல்
 
1074“இன்றே நினை எள்ளினர், எல்லையின் நாள்
அன்றே அறிவார், அழுவார், அருளைக்
கொன் தேடினர் வன்னி குளிப்பவரே!“
என்றே தொழுவார் இளையோர் சிலரே.
72
   
 
1075“மெய் ஆகிய நின் விதியே விழையா,
பொய் ஆகிய புன் கதை பூத்த பயன்,
மொய் ஆகிய நாள் மொழிவார்! என நீர்
மை ஆகிய கண் வடிவார் சிலரே.
73
   
ஆயர் களின் பத்திச் செயல்கள்
 
1076சிலர் நீதி, செழுந் திறல் பாடுவரே
சிலர் ஆர்வ இருந் திரு ஓதுவரே
சிலர் தீது செயும் பகை செப்புவரே.
சிலர் தேடிய தீமை கலுழ்குவரே.
74
   
 
1077சிலர் தாள் இணை சென்னியில் ஏற்றுவரே.
சிலர் ஏற்றிய சே அடி நீவுவரே.
சிலர் பூ அணி சீறு அடி சூடுவரே.
சிலர் வாள் விழி முத்து அணி சேர்க்குவரே.
75
   
வண்டுகள் பாடித் தேன்மழை பொழிதல்
 
1078சிலர் செய் துதி சீரியதோ அது என,
அலர் வைகிய தேன் அளி பாடுவன.
பலர் பெய் கமழ் நீர்ப் பனி கோதது என,
மலர் மல்கிய தேன் மழை தூவுவன.
76
   
மயில்கள் ஆடக் குயில்கள் பாடுதல்
 
1079திரு முற்று உறை சிந்திய கார் இது என,
வரு பல் சிகி வால் சிறகு ஆடுவன.
பருவத்து இருள் நீக்கிய பானு இது என,
குரு நல் குயில் கொம்பு உயர் கூவுவன.
77
   
வண்டு பாடக் கிளிகள் பேசுதல்
 
1080விரை மாறு இல தேன் விளை பூ இது என,
நிரை தேன் நிறை வண்டொடு பாடுவன.
கரை நீத்த அமுதின் கடலே இது என,
உரையால் துதி ஒண் கிளி பேசுவன.
78
   
இடையடுற்ற இன்பத்துக்கு எல்லை இல்லைஎனல்
 
1081இவ்வாறு இமிழ் எல்லையும் இல்லை என,
அவ்வாறு அணுகு ஆயரும் அன்பினொடு,
செவ் ஆறு உளம் மேவிய சீர் பல நாள்
வவ்வு ஆறு உரை வவ்விய ஆறு அதுவோ?
79
   
சூசை , இடையர்கஞக் வேத விதிகளைக் கூறினான் எனல்
 
1082செல்லைத் தாராய்ச் சூடிய
  குன்றில் திரிகின்ற
முல்லைத் தாரார், இத் தலை பல் நாள்
  முறை எஞ்சாது,
எல்லைத் தாராய் ஏந்திய
  எந்தை தொழ, அம் பூ
வில்லைத் தாராய் வேய்ந்தனன்,
  அன்பு ஆர் விதி சொல்வான்.
80
   
இடையர்கள் வேதவிதி கேட்டுஒழிகினார் எனல்
 
1083சொல்லும் தன்மை பொன் மொழி மாரித் துளி வெற்பில்
புல்லும் தன்மை தண்பட உள்ளம், பொலிவு எய்திச்
செல்லும் தன்மைத்து, ஏழ் மடி ஓங்கத் தெளி ஞானம்
ஒல்லும் தன்மைத்து, ஒள் அறம் உற்றே கதி உற்றார்.
81
   
திருமகன் அருளிய விரத்தால் சூசை பேசினான்எனல்
 
1084மை விண் மேல் ஆள்வோன்,
  தனை ஏந்தும் வளன் ஓங்க,
மொய் விண் நேர் உள் தூவிய
  ஞான முறை எல்லாம்,
பெய் விண் நீர் உண்டே மலை
  ஆறாய்ப் பிளிர்வு அன்ன,
மெய் விண்டு, அம் பூவாய் வழி
  கால்வான், வினை தீர்த்தான்.
82
   
அக்குகையை அடைத்தவர் குறைகள் நீங்கினார் எனல்
 
1085செல் வாய் நின்ற அம் முழை சென்றார் எவர் உண்டோ,
வில் வாய் விண்ட பூங் குழவிக்கண் விளை ஞானம்
வல் வாய் உண்ட மா தவன், நல் நூல் மறை கூறும்
சொல் வாய், மல்கும் தூய் அறம் உற்றார்; துகள் தீர்ந்தார்.
83
   
இயேசு , மரீ , சூசையைத் தரிசித்தவர் நலன் உற்றார்
 
1086புன்மை கொண்டார் அவ் வழி போய், அப் புடை ஆர்ந்த
இன்மை கண்டால் எள்ளுவர்; எள்ளாது இவர் நிற்கும்
தன்மை கண்டே, நூல் வடிவோன் சொல் தகை கேட்டால்,
நன்மை கொண்டே, நல் புகழ் ஓதி நடை கொள்வார்.
84
   
 
1087பார் ஆர் கங்குல் பானு ஒளி
  முன்னர் பரவு உண்டோ?
ஏர் ஆர் வில் செய் முச் சுடர்
  அன்னான்இவரைக் கண்டு,
ஆர் ஆர், உள் ஆர் ஆசு
  இருள் நீங்காது, அவண் உண்டோ?
தேரார் உண்டோ? தேர்ந்து
  அடைவார்க்கு ஓர் சிதைவு உண்டோ?
85