மகன் நேர்ந்த படலம்
 
(பிறமரங்கள்)
 
1168மீன் பரப்பு என முகை விண்ட மற்றையும்
வான் பரப்பு என விரி வனத்தில், எங்கணும்
தேன் பரப்பு எனக் குளிர் செலவைச் சென்று, செல்
கான் பரப்பு அனைத்தையும் கடந்து போயினார்.
43
   
மூவரும்ஓரிடம்தங்குதல்
 
1169வீங்கு தம் குலம் மெலிவு உறாத் தாங்கு உயர் நீரார்
ஓங்கு தம் குணத்து ஒத்த, சூழ் நிலத்தில் தாழ் விழுதே
தாங்கு தொன் மரத்து அடி மணல் திண்ணையில் தங்கி,
ஆங்கு வெங் கதிர் சாய்ந்த பின், நின்று செல்வு அயர்ந்தார்.
44
   
மருத நிலம்அடைதல்
 
1170விண் விளக்கு ஒளி வேந்தனைப் பொற்பு உறத் தெளித்து,
கண் விளக்கிய கவின் மணி மேனியைப் பூண்டு,
மண் விளக்கிட வந்த நாதனைப் புகழ்ந்து உம்பர்,
பண் விளக்கு இசை பாடி, போய் மருதமே சேர்ந்தார்.
45
   
மருதநில வருண்ணை
மருத நில ஓசைகள்
 
1171ஆறு பாய் ஒலி, அடல் தகர் பாய் ஒலி, நெறிக் கொம்பு
ஏறு பாய் ஒலி, எருமை நீர் பாய் ஒலி, கரும்பின்
சாறு பாய் ஒலி, சங்கு ஒலி, வயிர் ஒலி, மற்ற
மாறு பாய் ஒலி மயக்கு உறீஇ எதிர்கொண்டு ஆர்த்தனவே.
46
   
அணையில்தேங்கிய நீரின்முழக்கம்
 
1172உறை செய் கார் அணி உயர் மலை முலை பொழி பாலாய்,
நறை செய் தேனொடு நனி மலி புனல் வயல் பாயச்
சிறை செய் கால் அது சிலைத்தலே இவர் அடி சேர்ந்தோர்
குறை செய் நோய் அறக் கூவுவு கூப்பிடல் போன்றே.
47
   
குளத்து மடையில்ஆமை மறைதல்
 
1173நடிப்ப நாள் மலர், நறும் புனல் தடத்தில், ஆங்கு, உழுநர்
இடிப்ப நீல் நிறத்து உழும் பகடு உரப்பலால், எழு மீன்
துடிப்ப, ஆமைகள் தூம்பு இடைத் தலை சுரித்து ஒளித்தல்,
உடிப்ப மூவரே இடர் உலகு ஒளிக்குவ போன்றே.
48
   
வயல்வரப்பில்எறிந்த தாமரையின்வாட்டம்
 
1174கேழ்த்த பூ வயல் கிழிபடச் சிலர் அவண் கீறி
வீழ்த்த தாமரை மெலிவொடு வரம்பின் மேல் வாடல்,
நீழ்த்த மாண்பு இவர் நிழல் அடி, வணங்கு இலார் நீக்கி,
வாழ்த்த மாண்பு இலர், வருந்தி உள் வாடுவ போன்றே.
49
   
உழவர்விதை விதைத்தல்
 
1175புரிந்த ஓகையில் பொருவு இலா இவர் அருள் போன்று,
பிரிந்த மேதி தன் பிள்ளையை உள்ளலின் கனைந்து
சொரிந்த பால் உண்டு துஞ்சிய ஓதிமம் வெருவி
இரிந்தது ஆக, ஆர்த்து, “எழுக“என வித்தினர் சிலரே.
50
   
நடவும்களை பறித்தலும்
 
1176இங்கண் பா இயாப்பு இசை
  பயன் விரித்து உரைத்து என்ன,
அம் கண் மாதர் கட்டு
  அவிழ்ததுச் செந் நெல் முடி நடுவார்.
திங்கள் நாண் முகத்து இவர்க்கு
  இணை அல எனச் சினந்தே,
அங்கண் ஆம்பலோடு அலர்
  எலாம் களை எனப் பறிப்பார்.
51
   
வயல்கள்விளைந்துகிடந்த காட்சி
 
1177படி ஒருங்கு இவர் பயத்த
  நன்று இயல்பு என, ஒரு பால்
நெடிது ஒருங்கு செந் நெல் வளர்ந்து,
  இவர்த் தொழுது, ஒரு பால்
கடிது ஒருங்கு கை கூப்பு எனக்
  கதிர் நெறித்து, ஒரு பால்
அடி ஒருங்கு உற வளை
  தலை விளைந்தன, அகணி.
52
   
உழவர்நெற்பயிரை அறுத்தல்
 
1178மீன் இருங் கொடி வேந்து தன் அருள் வளம் காட்ட,
தேன் இருந் தலைக் கரும்பு உறழ் ஆடிய செந் நெல்,
வான் இரும் புலத்து அரிவை தான் அணி இள மதி போல்
கூன் இரும்பினில் குறைத்து, அரி பகுத்தனர் ஒரு பால்.
53
   
விளைந்த நெல்லை சேர்க்கும்முயற்சி
 
1179குறைக்குவார் சிலர்; கூ மகள் குழல் எனச் சேர்த்தி
இறுக்குவார் சிலர்; இவள் புணர் முலை எனப் பல போர்
நிறைக்குவார் சிலர்; நீல் நிறப் பகட்டினால் தெளிப்ப
உறுக்குவார் சிலர்; உறைந்த வை நீக்குவார் சிலரே.
54
   
மூவரும்வயல்நிலம்கடந்து செல்லுதல்
 
1180மாரி மல்கிய மதி தொறும் மும் மழை பொய்யா,
வேரி மல்கிய விளை புலத்து எனைப் பகல் தோறும்
பூரி மல்கிய தொழில் எலாம் பொருந்தி, இம் மூவர்
சீரின் மல்கிய செல்வ நாட்டு அலர்ப் பணை கடந்தார்.
55
   
எருசலேம்அடைதல்
 
1181காரி வாய் என நிறுவிய கழுகு உயர் காவும்,
நாரி வாய் என நனி நரல் தெங்கு எழும் காவும்,
பூரி வாய் வளை புலவர் போல் அரம்பையின் காவும்,
வேரி வாய் மலர்க் காவும், நீத்து, அணி நகர் மிடைந்தார்.
56
   
சோலையில்தங்கி நகர்மதில்காணல்
 
1182விருந்தினார் முகம் விரும்பினர் கண்டு என மலர்ந்து,
வருந்தினார் முகம் கண்டு அழுநீர் என மதுப் பெய்து,
அருந்தினார் முகந்து அவா அறக் கனி மலி காவில்
பொருந்தினார்; முகம் பொலி நகர்ப் புரிசையைக் கண்டார்.
57
   
எருசலேமுக்கு உரிய புகழ்
 
1183மின்னிய முகில் சூழ் பொன் மலை தழுவி
  வேய்ந்து என, விசும்பினைத் தாவும்
கன்னிய புரிசை சூழ் தரத் தோன்றி,
  கசடு உறும் எரோதன் என்ற அரசன்
துன்னிய கொடுங் கோல் துயர் செய உளைந்து
  தொள் மறை வழு இல காத்து,
மன்னிய வளம் கொள் எருசலேம் என்னும்
  மாநகர் தோன்றியது அன்றே.
58
   
மாளிகை மீது கொடி ஆடிய தோற்றம்
 
1184அல் உமிழ் இருளின் இருண்ட நெஞ்சு அவன் செய்
  அரந்தையின் வெவ் அழல் ஆற்ற
வில் உமிழ் பசும் பொன் மாடங்கள் நெற்றி
  விரித்த பூங் கொடிகள் தம் ஈட்டம்,
எல் உமிழ் மூவர் வருகை கண்டு, அரசன்
  இயற்றிய வஞ்சனைக்கு அஞ்சி,
“நில்லுமின் நின்மின்!“ என இடை விடாது
  நீண்ட கை காட்டுவ போன்றே.
59
   
தேவாலயத்தின்மீது கொடி ஆடிய தோற்றம்
 
1185மண், புடை வான மன்னனை வணங்கி
  வளம் பெறும் பசிய பொற் கோயில்
விண் புடை தீண்டி மின் மணிக் கோட்டின்
  மீது ஒளிர் பதாகை நின்று ஆடல்,
“ஒண் புடைக் கொடிகாள், நில்லுமின், நின்மின்;
  உயிர் அருந் துயர் அற வந்த
எண் புடை காக்கும் அருள் புரி நாதன்
  இவன்!“ என அமர்த்திடல் போன்றே.
60
   
கோபுர வாயிலின்சிறப்பு
 
1186சுதை நலம் ஞாயில் முலை நிறை வரைந்து,
  துகில் என அகழியைச் சூடி,
புதை நல இருள் கொள் முகில் நெடுங் கூந்தல்
  பொறுத்து, உயர் கோபுர முகத்தில்,
ததை நலம் கொணர் இம் மூவரைக் காணத்
  தடம் விழி திறந்து எனத் திறந்த
வதை நல மணிகள் குயிற்றிய வாயில்
  அரு மறை வடிவினோர் புக்கார்.
61
   
தெருக்களின்சிறப்பு
 
1187நூலினும் வழுவாச் செம்மையின் ஒழுகி,
  நோக்கினும் அகன்று ஒளித்து ஓடி,
நூலினும் மலி சீர்ச் சிறப்பு அணித் தெருவில்,
  நுண் மணிக் கொடிஞ்சி வண் தேரும்,
காலினும் காலின் பாய் பரிமாவும்,
  கடாம் கழி கரிகளும் நெருங்க,
காலின் உம்பரும் சூழ் யாவையும் நீக்கி,
  கதி புரி வேந்தர் போயினரே.
62
   
திருமகவை ஏற்றி இருவரும்நடந்து செல்லுதல்
 
1188அகில் அடும் புகையும் வாச பூம் புகையும்
  அடர்ந்து நல் இருள் செயும் தெருவில்,
முகில் அடும் குன்றில் துணை மயில் திரிந்த
  முகம் என இருவரே நடந்து,
துகிலொடும் ஏந்தும் குழவி அம் முகிலுள்
  தோன்றிய மதி எனத் தோன்றி,
இகல் அடும் இன்பத்து எவரும் உள் குளிர,
  இளங் கதிர் பரப்பியே போனார்.
63
   
வீதிகளின்அமைத்திருந்த தோரணங்களின்தோற்றம்
 
1189தேன் நலம் பயின்று, நறா மழை துளித்து,
  சீர் கெழு தூங்கு இசை திருத்திப்
பால் நலம் பயின்று பாடிய வண்டின்
  பல் இனம் ஊசல் ஆடுதற்கே
கான் நலம் பயின்ற மலர்கள் தோரணத்தின்
  கதிர் மணித் தோரணம் தயங்க,
வான் நலம் பயின்ற வேந்து வந்தமையால்,
  வான வில் வீழ்ந்து எனப் போன்றே.
64
   
மாதர்மார்பணியின்று மன்மதன்வீழ்தல்
 
1190தூமம் மேய்ந்து இருண்ட குழலினார் மார்பில்
  துளங்கிய முத்து அணி வடம் மேல்
காமனே களிப்பு உற்று ஊசல் ஆடியக்கால்,
  கசடு அறும் இவர் வரக் கண்டு,
வீமமே உற்று நடுக் கொடு வழுவி
  வீழ்ந்து, உளத்து அழற்று அழல் ஆறி,
தாமம் மேய் அளி போல் குளிர உள் களித்து,
  தயவொடு தீது அறப் புகழ்ந்தார்.
65
   
கடைத்தெருவின்சிறப்பு
 
1191விடும் திரை கொழித்த விம் ஒலி போன்ற
  விற்பவர் கொள்பவர் ஒலியும்,
நெடுந் திரை கொழித்த திருத் திரள் போன்ற
  நிதியொடு நிற மணி பலவும்,
படும் திரை கொழித்த மயங்கு அலை போன்ற
  பரி கரி ஈட்டமும் அமைவின்,
கடுந் திரை கொழித்த கருங் கடல் போன்ற
  கடை வழி போயினார் மாதோ.
66
   
மூவரும்வானவர்சூழ்ந்து வரக்கடை வீதியைக்கடத்தல்
 
1192மோயிசன் தன் கைச் சூரலின் பிரிந்த
  மொய் கடல் வழி விடுத்து அன்ன,
மீ இசை தளங்கள், யாவரும் காணா,
  மிடைந்து சூழ் வந்து செய் நெறியால்
போய், இசை பொருள் சேர் நசை எனும் திரையுள்
  புக்கிலர் மூழ்கிலர் கடந்து,
சேய் இசை சுடர் போன்று அக் கடல் நீக்கி,
  செயிர் இருள் சீக்க ஆங்கு உதித்தார்.
67
   
கதிரவன்மறைந்ததும், மூவரும்குடிசையிற்புகுதல்
 
1193உதித்தனர் என்ன, ஆயிரம் கதிரோன்
  உவமையில் தோற்று என, ஒளித்துக்
குதித்தனன் கருந் தண் புணரியுள் புதைப்ப,
  கோதையும் கொடுந் தவத்தவனும்,
புதித் தனம் இழைத்த மணிக் கலத்து உயிரைப்
  புரி அமுது ஏந்திய போன்றே,
விதித்த நன் மறையின் நாதனை ஏந்தி,
  விருப்பொடு சிறு மனை புக்கார்.
68
   
மூவரசர்வைத்த காணிக்கைப்பொருளை சூசை கோவிலிற்சேர்த்தல்
 
1194கோண் நிகர் உணர்வில் கைப் பொருள் தந்து
  குறும் புகழ் கோடலே சிறிய
வாணிகர் தொழில் ஆம.் ஈங்கு மாறு உணரார்
  வழங்கும் ஒன்று ஆயிரம் ஆகச்
சேண் நிகர் பயனை விளைக்கும் என்று உள்ளி,
  செல்வர் மூன்று அளித்த வான் நிதியம்,
பூண் நிகர் மறை நூல் அணி வளன், இருளின்
  போர்வை போர்த்து ஆலயத்து அளித்தான்.
69
   
காலையில்திருக்குழந்தையைத்தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லுதல்
 
1195விண் திறம் துதைந்த பூசனை அன்றே
  விழிப்பதற்கு அருத்தியோடு, உயர் வான்
கண் திறந்து என்ன, கதிரவன் முந்நீர்
  கடிந்து எழும் காலையில், இனிதாய்ப்
பண் திறம் துவைப்ப ஆர்க்கும் நல் சுடர் செய்
  பசிய பொற் கோயிலை விருப்பம்
கொண்டு, இறந்து, இருவர் கோது அறு பலியாய்க்
  குழவியை ஏந்தி, எய்தினரே.
70
   
தேவாலயம்மூவரையும்வரவேற்றல்
 
1196மேல் நிலா எறிக்கும் குரு மணி குயிற்றி,
  விழுத் தக நிரை நிரை தீட்டி,
பால் நிலா எறிக்கும் பளிங்கு உயர் கோயில்
  பற் பல சாளர விழிகள்
வான் நிலா எறிக்கும் மகவினை நோக்க
  மலர்ந்த பின், “வம்மின்“ என்று அழைப்ப,
தூ நிலா எறிக்கும் மணிக் கதவு அகற்றி,
  சுருதி வாய் திறந்து, இவர், புக்கார்.
71
   
திருமகனைக்கடவுளுக்கு நேர்ந்து வணங்குதல்
 
1197தேக்கிய புகையும் வாமத்
  தெருட்சியும் மருளின் நோக்கிற்கு
ஆக்கிய விருந்தின் விம்ம,
  அணி மணிக் கோயில் புக்கு,
வீக்கிய துவங்கட்கு ஒன்று
  ஆம் மெய்யனை, வினையின் தீய்மை
போக்கிய பலி என்று ஆகப்
  போற்றி வைத்து, இருவர், நின்றார்.
72
   
குருநாதனாகிய சீமையோன்வருகை
 
1198வாய்மையோர் புகுங் கால், கோவில்
  வணக்கு உரி பணியில் வைகும்
தூய்மையோர் என உள் கோட்டம்
  துறந்தனர் அவையின் மூத்தோன்,
மேய்மையோடு உயர்ந்த வேதம்
  மேல் படர் கொழுகொம்பு அன்னான்,
சீய்மையோன் என்னும் வாய்ந்த
  சீர் கெழு முனியும் வந்தான்.
73
   
சீமையோன்செய்து வந்த வேண்டுதல்
 
1199உணங்கிய மரத்திற்கு ஆர்ந்த
  உயிர் வரு மாரி போன்றும்
இணங்கிய இருளைச் சீக்கும்
  இரவியே போன்றும், நாதன்
இிணங்கிய வினைகள் தீர்ப்பப்
  பிறந்து இவண் மனு ஆய், காண,
வணங்கிய முனிவன், நாளும்
  வரம் தர வேண்டுவானே.
74
   
கடவுள்சீமையோனுக்கு உரைத்த செய்தி
 
1200“வம்பு அலர்ச் சுனையின் நீருள்
  வலம்புரி பிறத்தல் போன்றும்,
கொம்பு அலர்த் தருவின் உச்சி
  குவளையே பூத்தல் போன்றும்,
அம்பு அலர்க் கன்னி விள்ளாது
  அளித்தது ஓர் மகவாய், நாதற்
கம்பு அலர்க் கண்கள் பூப்பக்
  காண்பை“ என்று இறைவன் சொன்னான்.
75
   
சீமையோன்கோவிலுக்கு விரைந்து வந்த காரணம்
 
1201நம்பிய இன்ன வாய்மை
  நல் உயிர் ஆக நின்றான்;
அம்புய மலரின் சாயல்
  அவதரித்து உதித்த நாதன்,
கொம்பிய வினைகள் தீர்ப்பக் கோயில்
  வந்து அடைந்தான் என்ன,
பம்பிய காட்சி தோன்றி,
  பறந்து என அன்று வந்தான்.
76
   
சீமையோன்மகி.ழ்ந்து வணங்குதல்
 
1202விண்டன மலர் போல் விண்ட
  விரும்பினான் வெய்தென்று எய்திக்
கண்டனன்; கனிந்த கண்ணால்,
  கறவை காண் கன்றின் வெஃகி
உண்டு, அன உருவில் குன்றா
  உயர் குணத்து இறைவன் தாளைக்
கொண்டனன் தலையில் சூடி;
  குணக் கடல் குளித்துத் தாழ்ந்தான்.
77
   
சீமையோன்உற்ற பேரின்பம்
 
1203தொழுது, தன் உளத்து இன்பு ஆற்றா,
  துணை அடி மலரை ஏற்றி,
அழுது, தன் கண்ணீர் ஆட்டி,
  அருள் கொழுந் துகிலின் நீவி,
முழுது தன் கண்கள் கையால்
  முகக் கவின் முகந்து உண்டு, ஆர்வத்து
இழுது தன் சுவையின் காய்த்த
  இருங் கனி சுவைத்து, விள்ளான்.
78
   
 
1204பார் உடம்பு உயிராய் வந்த
  பரமனைக் கரத்தில் ஏந்தி,
ஈர் உடம்பு உயிர் ஒன்று ஆக
  எழுந்த அன்பு உவப்பின் பொங்கி
சேர் உடம்பு இரண்டு ஒன்றாகச்
  சேர்த்துபு தழுவி, அன்பின்
நேர் உடம்பு எழீஇ, வீடு உற்ற
  நிலைமையின் பாடல் உற்றான்.
79
   
சீமையோன்திருமகனைப்புகழ்ந்து பாடுதல்
 
1205“பாற் கடல் என் உள்ளப்
  பதும மலர் அரும்ப,
நூல் கடலே, ஈங்கு உதித்தாய்
  , நும் மலர்க் கண் முத்து அரும்ப!
நும் மலர்க் கண் முத்து அரும்ப,
  நோய் செய் வினை செய்தேம்;
எம் மலர்க் கண் முத்து அரும்ப,
  இன்று வினை தீர்த்தாய்!
80
   
 
1206“வினை தீர்ப்ப எய்தி, வினை கொண்டாய்; பாவப்
புனை தீர்ப்ப, ஈங்கு மனுப் பூட்சிச் சிறை கொண்டாய்!
பூட்சிச் சிறை கொண்ட புல் என் உயிர், போய், உன்
காட்சிச் சிறை கொண்டு, கண்டேன் கதி நிலையே!
81
   
 
1207“கண்டேன் கதி நிலையே;
  கண்டு, உயிர் என் பூண்பல் இனி?
உண்டேன் உயிராய் அன்பு;
  உன் அடியைச் சூடினேன்!
உன் அடியைச் சூடி உனை
  அணுகான், தன் வினையே
தன் அடியைச் சூழ்ந்து உதைப்ப,
  சுட்ட எரி வீழ்ந்து ஆழ்வானே!
82
   
தேவாலயம்வானுலகமாயிற்று
 
1208ஆசை எழும் இன்னவை அருந் தவனும் பாடி,
ஓசை எழும் வீணை குழல் யாழொடு இசை பாட,
பூசை எழும் பூம் புகை பொலிந்து இனிதின் நாற,
மாசை எழும் ஆலயமும் வான் உலகு போல்வு ஆம்.
83
   
மக்கள்புரிந்த அருச்சனை
 
1209கொங்கு அடரும் பூ மழையும் பா மழையும் கூர்ப்ப,
சங்கு அடரும் வாய்த் தரள வெண் குடைகள் தாங்க,
திங்கள் தரும் தீம் கதிரின் சேர் கவரி பொங்க,
அங்கு அடரும் யாவரும் அருச்சனையின் மிக்கார்.
84
   
 
1210ஒருவர் அடி ஏற்றி மலர் ஒள் ஒலியல் சூட,
ஒருவர் அகிலோடு மலர் ஊறு புகை காட்ட,
ஒருவர் புகழும் தொடை உணர்ந்த இசை பாட,
ஒருவர் வியப்போடு உருக, வாழுவர் ஒருங்கே.
85
   
மாலை மணிகளுக்கிடையே திருமகன்தோற்றம்
 
1211வான் தவழும் மீன்கள் திரள் பூத்தது என, மல்கிக்
கான் தவழும் மாலையொடு கல் மணிகள் கண் பூத்து,
ஊன் தவழும் யாக்கை உடை நாயகனை நோக்க,
மீன் தவழும் வெண் மதியின் மெய்யன் உரு மிக்கான்.
86
   
பத்தியிற்சிறந்தவர்திருமகனைப்போற்றிப்பகிர்ந்த உரைகள்
 
1212“தும்மிய பொறிச் சுடர் துதைந்து எரியு செந் தீ
விம்மிய இருள் புகை விளைத்த நரகு எய்தா,
பம்மிய வினைப் பகை பரிந்து உயிர்கள் காப்ப,
பொம்மிய துயர்க்கு, இறைவ, பொன்றுவை கொல்!“ என்பார்.
87
   
 
1213“தீய் வினை செய் நாம் மகிழ,
  உம்பர் தொழு செல்வா,
நீய் வினை செய் மெய்க் கொடு
  நிலத்தில், உலவாயோ?
வீய் வினை செய் மெய் உளைய,
  விண்ணில் எமை உய்க்கும்,
தாய் வினை செய் உன் தயையை
  யார் அறிவர்?“ என்பார்.
88
   
 
1214“தீய அமை தீயர் எரி சென்று எரிவர் என்றால்,
காய அமை ஓர் குறை நின்கண் அமைவது உண்டோ?
தூய அமை வீட்டு உவகை தோய்ந்து மனு வாழ்தல்
ஆய அமைதிக்கு, நயன் யாது நினக்கு?“ என்பார்.
89
   
தேவதாயைத்துதித்தல்
 
1215“வெவ் வினை அறுத்து உயிர் விளைத்த கனி ஆக,
உய் வினை எமக்கு அருள உற்றன பிரானை,
எவ் வினையும் அற்ற முறை ஈன்ற அருள் தாயே,
மை வினையை நாம் கழிய வாழி நனி!“ என்பார்.
90
   
சூசை முனியைப்புகழ்தல்
 
1216“ஆரணம் எழுந்து படர் கொம்பு அனைய மார்ப,
காரணன் ஓர் மைந்தனை வளர்த்திடு கைத் தாதைப்
பூரண வரத்து, அமரர் நிற் புகழ, இன்ப
வாரணம் அமிழ்ந்தி, நனி வாழி நெடிது!“ என்பார்.
91
   
சீமையோன் குரு, வரும்பொருள்உரைக்கத்தொடங்குதல்
 
1217ஏமம் சால் இன்பத்து அங்கண்
  இன்னவை ஆகி, மூத்தோன்,
சேமம் சால் வரங்கள் மிக்கு,
  தெளிந்த முப் பொழுதும் தாவி,
வாமம் சால் காட்சி வாய்ந்த
  வரும் பொருள் உணர்த்தும்தாயும்
சோமம் சால் கொடி வல்லோனும்
  துயர் உறச் சொற்றினானே.
92
   
சீமையோன் குரு கூறிய தீர்க்கத்தரிசனம்
 
1218“திருக் கிளர் இன்ன தோன்றல்
  சிலர்க்கு உயிர் சிலர்க்குக் கேடாய்,
செருக் கிளர் பகைவர் ஏவும்
  சினக் கணைக் குறி என்று ஆவான்!
உருக் கிளர் நெஞ்சம் போழ்தற்கு
  உறுகண் வாள் உருவப் பாய்ந்து,
தருக் கிளர் தரும தாயே,
  தளர்ந்து இடர் குளிப்பாய்!“ என்றான்.
93
   
மரியும்சூசையும்துயருள்மூழ்குதல்
 
1219என்றன கடுஞ் சொல் வாளால்
  இரு செவி முதல் ஈர்த்து, அங்கண்
நின்றன இருவர், நோக,
  ‘நிலத்தில் எம் வினைகள் தீர்ப்பச்
சென்றன நாதன், தன் தூய்
  செம் புனல் சிந்தி மாள்வான்
பின்று என உளத்தில் ஓர்ந்தார்,
  பீடை நீண் புணரி தாழ்ந்தே.
94
   
திருக்குழந்தை தன்அகவலைக்காட்டுதல்
 
1220நூல் நிலம் காட்சி மூத்தோன்
  நுதலி ஆங்கு உரைத்த சொல்லை,
தேன் நில முகையின் நின்ற
  திரு நரதேவன் கேட்டு,
கான் நில முகை விண்டு அன்ன
  கனிந்த புன் முறுவல் கொட்டி,
மீன் அம் சென்னி சாய்த்து,
  விழைந்து அதற்கு அமைந்தான் மன்னோ.
95
   
கன்னியர்தலைவி அன்னம்மாள்திருக்குழந்தையைத்தரிசித்தல்
 
1221இன்னியம் ஒலிக்கும் கோயில்
  இவை இவர்ந்து, அங்கண் வைகும்
கன்னிய மாதர்க்கு எல்லாம்
  கனிந்த கைத் தாயாய், மீன் செய்
மின்னிய முடியாள் தன்னை
  விரும்பி முன் வளர்த்த மாட்சி
துன்னிய அன்னம் என்பாள்
  துன்னி வந்து இளவற் கண்டாள்.
96
   
 
1222தேன் தும்மு மாலை சேர்த்தித்
  திரு அடி பணிந்து, நம்மால்
ஊன் தும்மு வேல்வாய் பின் நாள்
  உறுந் துயர் உணர்ந்து நொந்து,
வான் தும்மு மின்னின் மின்னு
  மகவினை நெடிது வாழ்த்தி,
கான் தும்மு முகப் பூந் தேன் உண்
  கண் கனிந்து, இமைத்தல் செய்தாள்.
97
   
 
1223ஏற்றினாள் இளவல் தாளை;
  இணை அறும் கன்னித் தாயைப்
போற்றினாள்; இருவர் மாட்சி
  புடையில் வந்து எவரும் கேட்பச்
சாற்றினாள்; இன்பு உட் பொங்கித்
  தாரை நீர் தாரையாகத்
தூற்றினாள்; பெருக்கு உற்ற இன்பத்
  தூய் கடல் அமிழ்ந்தினாளே.
98
   
பழைய வேத முறைமைப்படி சூசையும்மரியும்கோவிலுக்குப்
புறாக்களைக்கொடுத்து திருக்குழந்தையை மீட்டல்
 
1224எடுப்பு அரும் இன்ன யாவும்
  இன்பமும் துயரும் ஆக,
கெடுப்பு அரும் மாட்சி பூத்த
  கேழ் கொடித் துணையும் தாயும்
தடுப்பு அரும் மறையின் வாய்மை
  தவறு இலாது, இரு கபோதம்
கொடுப்ப, அரும் உலகை ஆளும்
  குழவியை மீட்டிட்டாரே.
99
   
குருக்களின்ஆசிபெற்று அகல்தல்
 
1225மண்டு அருந் தவத்து மூத்தோன்
  வரைவு இல ஆசி ஓத,
பண்டு அரு மறையோர் யாரும்
  பரிவு எழீஇ முகமன் கூற,
அண்டரும் புடையில் சூழ,
  அணி முகை மகவை ஏந்திக்
கொண்டு, அருந் தகவினோர், பொற்
  கோயில் நின்று ஏகினாரே.
100