காசை சேர் படலம்
 
 
1675“இந்து இணை குனி வில் சிந்த, ஈர்க்கு அடை பகழி சிந்த,
கந்து இணை கரங்கள் சிந்த, கரிய நெய் மூளை சிந்த,
பந்து இணை சிரங்கள் சிந்த, பல் உயிர் உடலம் சிந்த,
சிந்தனை எவரும் சிந்தச் சிந்தின குருதிச் சிந்தே.
23
   
 
1676“ஆயின தன்மைத்து, அங்கண் ஆயிரம் உருமின் பாய்ந்து,
பாயின இடங்கள் தோறும் பரப்பினான் பிணத்தின் குப்பை
வீயின பகைவர் அங்கண் விழுந்த ஆயிரரும் அன்றி,
ஓயின அமர் விட்டு ஓடி, உடல் குறை இலரும் உண்டோ?
24
   
சஞ்சோன் ஆண்டவனை வாழ்த்தித் தாகம் தணித்தல்
 
1677“புறத் துணை கடந்த வல்லோன்
  போர்க்களத்து ஒருவன் நின்று,
திறத் துணை வரைத் தோள் வீங்கி,
  திசை திசை சுளித்து நோக்கி,
மறத் துணை துணை என்று உற்ற
  வஞ்சகர் ஓடக் கண்டே,
‘அறத் துணை பெற்றால், பெற்றது
  அழிவு உண்டோ இடையில்?‘ என்றான்.
25
   
 
1678“கார்த் திரள் அனைய ஆர்த்த
  கதத்தொடு கனலும் விம்மிப்
போர்த் திரள் இயற்றினான், உள்
  புலத்து எழும் தாகம் ஆற்றா,
சூர்த் திரள் பயத்த தண்டம்
  சுனையின் ஊற்று என, என்பின் வாய்
நீர்த் திரள் ஓட, சால்பின்
  நிமலனை வாழ்த்தி உண்டான்.
26
   
இரவில் காசை நகருட் புகுந்த கஞ்சோனை
ஒழிக்கப் பகைவர் திட்டமிடல்
 
1679“மலை மூழ்கும் திண் தோளான்,
  மன்னார் வைகும் அந் நகருள்
அலை மூழ்கும் சுடர் போய் ஓர் நாள்
  புக்கான் என்று அறிந்து, அன்னார்
விலை மூழ்கும் மணிக் கோட்டக்
  கதவம் பூட்டி, விடிந்தன பின்
கொலை மூழ்கும் உயிர்ப் பழியைக்
  கொள்வது என்னக் கூர்த்து உவந்தார்.
27
   
 
1680“தன் தொழில் செய்து ஆயின பின், அன்னான்
  போக தாம மணிக்
கல் தொழில் செய் வாய்க் கதவம் அடைத்தது
  என்னக் கண்டு, ‘ஒன்னார்
புன் தொழில் செய் வலி இதுவோ!‘ என்ன
  நக்கு, பொற் கதவம்
மல் தொழில் செய் புயத்து, எடுத்து அம் மலை மேல்
  உய்த்தான், மயிர்த் திறத்தான்.
28
   
சஞ்சோன், தாலிலை என்னும் விலைமாதின் வலையுள் படுதல்
 
1681“போர் முகத்து நிகர் இன்றிப் பொலிந்த
  வெற்றி புனைந்து உயர்ந்தோன்,
கார் முகத்து மணிக் கூந்தல் வலைப் பட்டு,
  ஓர் ங் கவின் நல்லாள்
ஏர் முகத்து வயம் குழையச் சிதைந்த
  தன்மை இனிக் கேட்டோர்,
பார் முகத்துப் பெண்மையின் ஓர் பழியும்
  கேடும் இலை!“ என்பார்.
29
   
 
1682“கடம் புனைந்த வளை உருட்டும் பெருஞ் சீர்ச்
  செங்கோல் கடி வளமும்,
சடம் புனைந்து பெண் ஆசைச் சழக்கில்
  கோலும் என்று உணரான்,
விடம் புனைந்த நலம் பொறித்த விலைமாது
  என்னும் தாலிலை ஓர்
நடம் புனைந்த அரிவையின் மேல் நவை உற்று
  எஞ்ச நசை வைத்தான்.
30
   
 
1683“காது அளவு நீண்டு உலவும்
  களிக் கண் மாமை கனிந்து உண்ட
போது அளவு காதல் உளம் கோட்டி,
  அன்னாள் புணரியின் ஆழ்
கோது அளவு மனம் மூழ்கி, நிலையும்
  கொள்ளாக் குழைந்து, அலை தன்
தீது அளவு மனம் மயங்கிச் சிறைப்பட்டு,
  அத் தீச் சிறை விள்ளான்.
31
   
பீலிதேயர் தாலிலையை வசப்படுத்தல்
 
1684“அண்ணிப் பற்று அன்பு அறிந்த அரிகர்,
  பொன் சால்பு அளித்து, அன்னாள்
நண்ணி, பற்று அரும் திறத்தின் நிலை கேள்
  என்ன நனி கேட்டார்.
எண்ணிப் பத்து அங் கை இடும் எல்வை,
  நட்பும் இயல் பிறப்பும்
கண்ணிப் பற்றாது, என்னை கடிதின்
  செய்யாள் பெண் பிறந்தாள்?
32
   
தாலிலையிடம் சஞ்சோன் தன் வலிமையின்
இரகசியத்தை வெளியிடல்
 
1685“கோல் கலந்த கண் விருப்பம்
  குளிரக் காட்டி, கொல் அகத்தாள்,
பால் கலந்த நஞ்சு அன்ன
  பணித் தீம் சொல்லால், ‘பகைக்கு எஞ்சா
மேல் கலந்த வலி நிலை எங்கு?‘ என்றாள்,
  காதல் வெறுப்பு ஆற்றா
மால் கலந்த அன்பின், ‘தலை
  மயிர்க்கண்‘ என்றான், மதி கெட்டான்.
33
   
பகைவர் சஞ்சோனை சிறை வைத்தல்
 
1686“முதிர் சூலும் பெண் காதின் மொழியும் நில்லா
  முறையில், அவள்
கதிர் சூழும் உதயத்து அன்று ஒன்னார்க்கு எல்லாம்
  காட்டிய பின்,
பொதிர் சூழும் பின் இரவில் இன்பத்து அன்னாள்
  பூ மடி மேல்,
எதிர் சூழும் கேடு உணரான், துஞ்ச, மயிர் ஈர்ந்து,
  இமிழ்த்தனரே.
34
   
 
1687“மின்னினால் என எரிக் கண் விழித்து,
  யாக்கை விடல் தேற்றான்
உன்னினாள்; கொலை நட்பில் வஞ்சித்தாள்
  என்று உளத்து எஞ்சி,
துன்னினார் பழம் பழியார்; உவப்பில்
  ஆர்த்துச் சுடு நகைச் சொல்
பன்னினார்; விழி குடைந்தார்;
  பல் நாள் கோறச் சிறை வைத்தார்.
35
   
சஞ்சோன் பகைவரை வீழ்த்தி அழித்தல்
 
1688“பல் நாளில் பல் நகையில்
  பழியின் ஆசைப் பற்று அமர்ந்த
பின் நாளில், பகைத்தன நாடு
  ஒருப்பட்டு, ஒன்னார் பெரிது உவந்து,
முன் நாளில் செய்த ஓர் மண்டபத்தில்
  வைகி, ‘முன் கொணர்க!‘என்று,
அந் நாளில் திறம் சிகையோடு உடைச்
  சஞ்சோனும் ஆங்கு அடைந்தான்.
36
   
 
1689“மண் கவிழ்ந்த வானம் என,
  வரைந்த மாமை மண்டபத்தின்
கண் கவிழ்ந்த சிகரம் தாங்கு
  அடுத்த இரு பொற் கம்பம் இடை,
கண் கழிந்த சிகைத் திறத்தோன்
  நிற்ப, நக்கு, கதம் காட்டி,
‘விண் கழிந்த தெய்வம் அனோய்,
  இன்றே காட்டு உன் மிடல்!‘ என்றார்.
37
   
 
1690“பகை விளைத்த வினை உதைப்ப
  நிற்பார் உண்டோ பாரில்?‘ எனச்
சிகை விளைத்த திறம் மிக்கோன்,
  இரு தூண் தன் கைத் திறத்து ஒடித்து,
நகை விளைத்த மேல் சிகரம்
  வீழ்த்தி, எண் இல் நள்ளரொடு
மிகை விளைத்த தானும் தன்
  வினைப் பட்டு ஒன்னார் வென்று ஒழிந்தான்.
38
   
வானவர் உரைத்த்தைக் கேட்டு மூவரும் காசை நகரை நெருங்குதல்
 
1691“இத் திறத்தில் இவை எல்லாம்
  இந் நாட்டு இவ் ஊரிடத்து ஆகி,
மெய்த் திறத்தின் கடவுள்
  நலம் விளங்கிற்று“என்ன, விண்ணவன் தன்
கைத் திறத்தின் தாள் தொழுது நிற்ப,
  அன்னார் கனிந்து எழுந்து,
மைத் திறத்தின் கலந்த மதிள் காசை
  மூது ஊர் மருவுகின்றார்.
39
   
காசைநகரை அடைதல்
 
1692திலம் குன்றா நிழல் தேன் பூப்ப, நீர்ப்
புலம் குன்றா மழை பொய் இல தூவ, மேல்
நலம் குன்றா நகர் நாடு நயந்து எழ,
வலம் குன்றாதவர், மா நகர் எய்தினார்.
40
   
 
1693புறத் துறைப் புலம் போய், நகர் வாயிலோர்
திறத் துறைப் புலம் புக்கனர்; தேர்ந்த நூல்
உறு அத் துறைப் புலமும் கடந்து, உள் நகர்க்கு,
அறத் துறைப் புலம் ஆயினர், எய்தினார்.
41
   
நகருல் ஆற்றிய புதுமைகள் (இறந்த ஓர்
அன்னை உயிர் பெற செய்தல்)
 
1694வேலை மா மணிப் பீடிகை வீதியும்,
சாலை பூம் புகை வீதியும் தாண்டி, நல்
பாலை யாழ் இசை பாடினர் வீதியுள்
மாலை மாடத்து அழும் குரல் கேட்டனர்.
42
   
 
1695திரி சுமந்து இல தீபம் ஒத்து, ஆவி போய்,
அரி சுமந்த அணைக் கிடந்த அன்னை சூழ்
வரி சுமந்த இள மயில் மான, ஐந்து
எரி சுமந்த கணார் அழுது ஏங்கினார்.
43
   
 
1696ஆங்கு நான நெய்ப் பூ அளகம் கெட,
வீங்கு நோயின் நிலத்தின் விழுந்து, அடித்து
ஏங்கும் ஓதையைக் கேட்ட இணர்க் கொடி
ஓங்கு சூசை உளத்தில் இரங்கினான்.
44
   
 
1697“கொம்பு இலாக் கொடி போல், இளங் கோதையார்
பம்பி ஆர்த்து அழும் பாசறை நோக்கு என,
நம்பி, நாதனை வேண்டலின், நல் உயிர்
எம் பிரான் இடும் ஏவலின் மீண்டதே.
45
   
 
1698தாய் எழுந்து, வரம் தரு கை பெறாது,
ஆய் எழுந்த வியப்பில், அனைவரும்
தூய் எழுந்த களிப்பொடு துள்ளி, வான்
மீது எழுந்த விமலனை வாழ்த்தினார்.
46
   
 
1699விண் உளோர் பணி வேலையைக் கொள்பவர்,
மண்ணுள் ஓர் மிடி மாண்பு உற, அந் நகர்க்
கண் உளோர் வறியோர் என, கை இரந்து,
எண்ணுள் ஓர் பகல் மூன்று இருந்தார் அரோ.
47
   
ஒரு பொண்ணின் முடை நோயை நீக்குதல்
 
1700வருந்திக் கையொடு கால் வழங்காதனள்,
பொருந்திக் கைக் கொடை உய்த்து, அவர் பூ முகம்
திருந்தித் தீட்டிய தே அருள் கண்டு, “என் நோய்
இருந்து இற்று ஆற்றும் மருந்து இலையோ?“ என்றாள்.
48
   
 
1701“அணங்கு தேவ மகன் முகத்து ஆறும்“என்று,
அணங்கு பேய் உற ஆர் தவத்தோன், அறைந்து,
அணங்கு தீர்ந்து, அவள் வாய்ப் புகழ்க்கு அஞ்சினர்,
அணங்கு மின் என ஆங்கு ஒளித்தார் அரோ.
49
   
 
1702மாலை வாய் மணம் போலவும், வாசப்பூஞ்
சோலை வாய் நிழல் போலவும், தூய் அறச்
சாலை வாயினர் தாங்கிய முப்பகல்
காலை, வாய்ந்தது காசு அறக் காசையே.
50