சோகு தோல்விப் படலம்
 
சூசை மரியோடு போராட பேய்கள் எழுதல்
 
2127கா மலி அலர்க் கோலானும்,
  கன்னி அம் துணைவியாளும்,
தாம், மலி தவத்தின் இஞ்சி
  தளர்ந்து, இடைக்கது விட்டு, எஞ்ச,
தீ மலி குணுங்கு எலாம்
  ஏழ் செயிர்க்கு உரி அணிகள் ஏழாய்,
பூ மலி நடுக்கின் கூச,
  புதவு ஒழிந்தன, போர் ஓர்ந்தே.
1
   
நால் வகை போய்ப் படைகள் - அச்சம், ஆங்காரம்,
கோபம், ஆசை
 
2128வெரு எனும் மதத்த யானை
  வெள்ளமே, வளர் ஆங்காரத்
தரு எனும் கொடிஞ்சி ஓங்கச்
  சமைத்த தேர் இரட்டி, கோபச்
செரு எனும் கலினப் பாய்மா
  தேரினும் இரட்டி, ஆசை
உரு எனும் எண் இல் காலாள்
  உடைய, பேய்ப் படைகள் தோற்றம்.
2
   
பேயின் ஆயுதங்கள் - காம்ம், சீற்றம், குரோதம், உலோபம்
 
2129தீய் விளை காமம் அம்பாய்,
  சீற்றமே வயிர வாளாய்,
நோய் விளை குரோதம் வேலாய்,
  நொறிக் கரத்து உலோபம் எஃகாய்,
வாய் விளை பொய் நீண் கோலாய்,
  மடி நெடுங் கதையாய் ஏந்தி,
பேய் விளை சமரில் கைக்கொள்
  பெரும் படைக் கலங்கள் அன்றோ.
3
   
பேய்க்கரசன் புறப்படுதல்
 
2130நீர் அணி உலகம் ஆட, நெடுங் கடல் ஒடுங்கிப் பொங்க,
கார் அணி வானம் விம்ம, காரணம் அறியா மாக்கள்
சூர் அணி உளத்தின் கூச, சுடு நரகு அலகை யாவும்
பேர் அணியாகச் செல்ல, பேய்க்கு அரசு எழுந்தது அன்றோ?.
4
   
வானவர் வருதல்
 
2131எழுந்து, அழல் இடி ஏறு அன்ன
  ஏழ் எரி வாய் கொண்டு ஆர்த்து,
கொழுந் தழல் விழிகள் தும்மி,
  குணுங்கு இனத்து அரசன், நெஞ்சத்து
அழுந்து அழல் முனிவின், மற்ற
  அலகையோடு எழுவ கண்டு,
விழுந்து அழல் உளத்து இல்லை என்ன,
  விண்ணவர், இரங்கி நொந்தார்.
5
   
 
2132“ஐ வகைப் பொறியின் மொய்த்த
  ஐம் பகை கொலையின் சூழ்ந்து,
மெய் வகைத் திறத்தில் ஈனம்
  விளைந்து, உளம் தெளியா மாக்கள்,
பொய் வகைச் சடத்தில் ஆண்மை
  பொலிந்த பேய் திரண்டு செய்யும்
மை வகைச் சமரில், நிற்பர்
  வையகத்து எவரோ?“ என்பார்.
6
   
 
2133“திக்கு எலாம் நடுங்கி,
  ஞானம் தெருள் தவம் அறத்தின் சீலம்
மிக்கு எலாம் ஒதுங்கி நீங்க,
  வெகுண்ட இத் தன்மை பாரில்
புக்கு எலா வெறிகள் சேர் கால்,
  பொய் கொலை களவு காமம்
தொக்கு எலாம் பரந்து, மாக்கள்,
  தொகையில் ஆர் உய்வர்?“ என்பார்.
7
   
வானவர் மகிழ்ந்து, வெற்றிக்கு மலர்மாலை ஏந்தி நிற்றல்
 
2134“செவ் வினை நாட்டப் பாரில்
  சிறுவனாய் உதித்த நாதன்,
இவ் வினை அனைத்தும் நீக்கி
  இரங்கு இலான் கொல்லோ?“ என்ன,
நவ் வினை விடா நல்லாளும்
  நறுங் கொடியோனும் வெல்ல,
வெவ் வினை உணர் பேய் நோக்கும்
  வினவு எனக் கண்டு நக்கார்.
8
   
 
2135“அருள் முகத்து உதித்த நாதன்
  அவன் என அறியா வண்ணத்து,
இருள் முகத்து உவந்து, வெற்றி
  எளிது என உணர் பேய், சோதி
தெருள் முகத்து இரவு ஒத்து, ஆற்றா
  சிதைவு உறீஇ, வெரு உற்று எஞ்சி,
மருள் முகத்து எரியில் வீழ்ந்து
  மாள்வன ஒருங்கும்“ என்பார்.
9
   
 
2136“மன்று அலர்க் கொடியின் வாசம்
  மண்ணையை மருட்டும்“ என்பார்:
“துன்று அலர்க் கோதை கன்னி
  சுட, வெறி முரியும்“ என்பார்;
என்று, அலர்ச் சுடிகை சூடி,
  இரு விசும்பு எங்கும் நிற்பார்;
நின்று, அலர்த் தொடைகள் ஏந்தி,
  நிகர்த்த பேய்த் தோல்வி காண்பார்.
10
   
பேய்கள் போர் தொடுங்குதல்
 
2137கான் மலி கொடியின் கன்னி
  கடி மலர் எனக் கை ஏந்தும்
வான் மலி மகவின் மாமை
  வடிந்த தேன் உணும் வண்டு ஒப்ப,
தேன் மலி கொடியோன் இன்பம்
  திளைப்ப உள் சுவைத்த காலை,
கூன் மலி சடத்த பேய்கள்
  குணித்த போர் தொடங்கிற்று அன்றோ.
11
   
பேய்களை ஒரு வல்லமை தள்ளுதல்
 
2138ஈங்கு ஒரு விழா அணி என்ன மூவரே
வீங்கு ஒரு மகிழ்வு அருட் சுவை விள்ளாமையில்,
ஆங்கு ஒரு காவதம் அகல நின்ற, பேய்,
ஓங்கு ஒரு வயம் தடுத்து ஒருவிற்று என்னவே.
12
   
பேய்கள் சீறுதல்
 
2139“அஞ்சல் ஏது? அப் புறத்து அணுகு இலாத் திறத்து
எஞ்சல் ஏது? இரந்த இரு மைந்தர் ஈடு இவண்
விஞ்சல் ஏது? உலகு எலாம் வென்ற வஞ்சனை
துஞ்சல் ஏது? என வெறி சுளித்துச் சீறின.
13
   
பேய்களின் அச்சமும் மயக்கமும்
 
2140மின் உள இடியின் ஆர்த்து, அழல் கண் விட்டு, அதிர்
பின் உள குணுக்கு இனம், பெரிது உதைத்தலின்,
முன் உள வெறி எலாம் முழங்கி, அப் புறம்
கொன் உள வயம், செலாக், குலைய நின்றவே.
14
   
 
2141காலொடு பிணித்த பல் உழுவை, காய் கதச்
சாலொடு, தொடர் கடித்து அலறித் தாவின
பாலொடும், அப்புறம் பாயல் ஆற்று இலா
மாலொடு வெகுண்ட பேய், சமர் வளர்த்தவே.
15
   
பேய்கள் கொண்ட தோற்றம்
 
2142பரி உரு, தகர் உரு, பகடு உருப், பகைக்
கரி உரு, கரத்து உரு, கவி உருக், கதத்து
அரி உரு, கரடி, கோட்டு அரிகள் நாய் வரி
திரி உருத் தோற்றின, சினந்த பேய்களே.
16
   
பேய்களின் முழக்கம்
 
2143ஈட்டமும் வேறும் ஆய், ஏந்தும் வேல் எலாம்
வாட்டமும் வெருவும் ஆய், வையம் ஆட, உள்
கோட்டமும் வினைகளும் குணித்த பேய்கள் போர்
ஆட்டமும் முழக்கமும் அளவு அற்று ஆயதே.
17
   
பேய்கள் எறிந்த ஆயுதங்கள்
 
2144ஒளி முகத்து இடமும் நீர் உலகும் நீறும் என்று,
இளி முகத்து, எங்கணும் எரி செந் தீ எழ,
சுளி முகத்து அதிர்ந்த பேய் தொடுத்த வேல் எலாம்,
வெளி முகத்து இடையின் நீறு ஆக வீழ்ந்தவே.
18
   
 
2145சுரதமே கவசமாய், தேவ தூய் தயை
இரதமே எழுந்த அவ் இருவர் தம் புடை,
விரதமே கது விடாப் புரிசை மேல் பட,
பிரதமே வெறி உறப் பிதிர்ந்த வேல் எலாம்.
19
   
கலங்காத இருவர்
 
2146புறத்து அளவு அகல் திருப் புதல்வன் ஆண்மையால்
அறத்து அளவு உயரினோர் அழிவு உற்று எஞ்சிட,
திறத்து அளவு அறிவு உள பேய்கள் செய்த தீ
மறத்து அளவு அமர் வகை வரைவு இல் ஆயதே.
20
   
மரியும் சூசையும் மனங் கலங்காதிருத்தல்
 
2147உள்ளிய சமர் எலாம் ஒழிந்து, உளம் கெட,
எள்ளிய குணுங்கு இனம் ஏங்கி விம்மவும்,
தெள்ளிய மரபினோர் செரு எண்ணாது, உளம்
விள்ளிய மகிழ்வு அறா விளங்கினார், அரோ.
21
   
பேய்கள் பயங்கர உருவும் பேரும் காட்டுதல்
 
2148மின்னி, அம்புயக் கண் ஆதி
  வென்ற ஐம் பொறியைக் காத்தோர்,
வன்னி அம் பகையின் பொங்கி,
  வஞ்சக வெறிகள், ஆர்த்து,
துன்னி அம்பு உயிர்த்த தீயால்
  துகள் உறா, கது விடாத
கன்னி அம் புரிசை சூழ்ந்த
  கதவு அடைத்து; அரணைப் போன்றார்.
22
   
 
2149கருவினால் கலங்க, தெண் அம் கயம்
  கெடத், தெளிவு அற்று அன்ன,
செருவினால் கலங்க, உள்ளம்
  தெளிவு அறப், பங்கம் ஆம் என்று,
உருவினால் கலங்கத் தோன்றி
  உடன்ற பேய், உளத்தில் அன்னார்
வெருவினால் கலங்க, தம்முள்
  விளைத்தன அரும் போர் அன்றே.
23
   
பேய்கள் பொருத போர் வரலாறு
 
2150கடம் மாறு இல வெஞ்சின வேழமொடும்,
  கனம் ஈரும் கொடிஞ்சி விமானமொடும்,
இடம் மாறி உகண்டன வாசியொடும்,
  எரி ஊறிய வெங் கதம் ஆர் விழியால்,
விடம் மாறு இல வெஞ்சிலை ஆதியொடும்,
  விளை போர் உரி வாள் வளைவேல் கவரும்
தடம் மாறு இல வண் கர வீரரொடும்,
  சல ராசியின் தோன்றியது, ஓர் படையே.
24
   
 
2151புழு வாய் வழி கண் வழி கை வழியும்,
  புனல் ஒத்த எரித் திரள் ஊற்று உற, நீள்
மழு வாய் வழி வேல் வழி வில் வழியும்
  மலி அக்கி புகைப்ப, மதத்த உவா
கெழு வாய் வழி பாய் பரி வாய் வழியும்
  கிழிபட்ட கனத்து இடி யொத்து எரி தீ
விழும் வாய் வழி மண் வழி வான் வழியும்
  வெரு உற்று அழலச் சமர் காட்டினவே.
25
   
 
2152மேகங்கள் மெலிந்து அற வேகும் எனா,
  மேகம் துறுகின்ற இடி வேகும் எனா,
மாகங்கள் அடங்கிலும் வேகும் எனா,
  வானின் திரி வெஞ்சுடர் வேகும் எனா,
நாகங்களொடும் புனல் வேகும் எனா,
  நால் வம்பலொடும் கடல் வேகும் எனா,
வேகங்கள் உணர்ந்து உளம் வேகும் எனா
  வேகம் கொடு, வெந் திசையோர், பொருவார்.
26
   
 
2153தொடை உற்ற எயிற்று அழல் ஈட்டிய பேய்,
  தொட ஒற்றைச் சரத்தை அடல் தனு கோர்த்து,
இடை உற்ற சதச் சரம் ஆகி, விடும்
  இடை ஆயிரம் ஆய், வெளியில் படரும்,
கடை உற்ற சரத் தொடை கோடியும் ஆய்,
  ககனத்தில் அழற்றிய மாரி எனா
மிடை உற்ற அழல் கிளர் நீத்தம் எனா,
  விரி திக்குகள் முற்றும் எரிந்தன ஆம்.
27
   
 
2154களி வீசிய மும் மதம் வீசிய மால்
  கரி வாரினர் அந்தரம் வீசினரே,
வெளி வீசிய சிந்துரம் ஆர்த்து அலற,
  விசையோடு சுழன்று சுழன்று உலவ,
துளி வீசிய மேகம் ஒடுங்கிடவும்,
  சுடரோன் வெருவிக் கடிது ஓடிடவும்,
வளி வீசிய ஊழியில் ஏறோடு வீழ்
  மழை போல் நிலம் ஆடவும் வீழ்ந்தனவே.
28
   
 
2155சிறையோடு பறந்த பறம்பு எனவோ,
  திறலோடு படர்ந்த விசும்பு எனவோ,
உறையோடு கலந்து இரு விண்டு இடை ஊர்
  உருளோடு திரிந்த இரதம் திரளே?
மிறையோடு விரிந்தன பொய் எனவோ,
  விரைவோடு படர்ந்து பொதிர்ந்து பொர,
கறையோடு மிடைந்து எரியும் தழலக்
  கதமோடு சரம் தொடு வெஞ் சமரே?
29
   
 
2156தொடை ஒன்று சரம் சதம் ஒன்று இடுவார்;
  துறுகின்ற இரதம் கொடு எதிர்ந்து, இரிவார்;
புடை நின்று மிடைந்து திரிந்து, அகல்வார்;
  பொதிர்கின்று புழுங்கி உடன்று எரிவார்;
இடை நின்று சுழன்று எவணும் தழலால்
  எரிகின்ற இடி என்று சரம் தொடுவார்;
மிடை நின்ற இரதம் கொடு இழிந்து எழுவார்;
  மிலைகின்று புரண்டு புரண்டு உருள்வார்.
30
   
வடுவன், பேய்களின் மாயப்போர்
 
2157ஒரு புடையில் இற்றை யாவும் இவரலின்,
  உருவமுடன் உட்கு வீச அணி அணி
இரு புடையில் உற்ற சோகும் ஒலி தர,
  எதிரும் எதிர் உற்ற யாவும், அற, அமர்
தரு புடையில் முற்றி வேகும் அழல் எழ,
  தகுதி இல கற்ற மாய வினையொடு
வரு புடையில் மற்ற யாரும் இணை அற,
  வடுவனொடு மைத்தன் வீர அமர் செய்வார்.
31
   
மைந்தனும் வடுவனும் எதிர்த்தல்
 
2158கரிகளை நிகர்த்த வீர முனிவொடு
  கடிய கதம் மொய்த்த நாளி முகமுடன்
அரிகளை இசைத்த தேரின் எழ, எழுது
  அழலு சரம் மைத்தன் ஏவி வருகையில்,
எரிகளை நகைத்த கோபம் எரி நெடிது
  எயிறுகள் துதைத்த சீய முகமொடு,
வரிகளை அமைத்த தேரின் உயர் எழும்
  வடுவன் எதிர் உற்று, உலாவ மலைகுவார்.
32
   
மைந்தன் போர்
 
2159அழல் எழ வளைத்த சாபம் நிமிர் இல
  அரை நொடி முடித்து இலாது விடு கணை
நிழல் எழ மருட்டு வானம் இருள் உற,
  நிரை எதிர்த்த கூளி அணி அணி
புழல் எழ உரைத்த வாளி வழி வழி
  புனல் என இரத்தம் ஓட, மலை முதல்
சுழல் எழ உயிர்ப்பு வீசி, மெலிவு இல,
  சுனக முகன், முட்டி நீடு முனைகுவான்.
33
   
வடுவன் வில் அறுபடல்
 
2160நெடு மலை திரட்டி நீள அமைவன
  நெடிய சிலை உற்ற வீர வடுவனும்,
கொடு மலை சுருட்டி ஆய இரு புயக்
  குவடு எழ வளைத்த சாப மழை விட,
தொடு மலை உயர்த்த நேமி உருவவும்
  துறு விசையின் மைத்தன் ஏவு கணையொடு,
கடு மலை இழைத்த சாபம் இறுவது,
  கடிதில் அவன் நக்கு நீடு குமுறவே.
34
   
வடுவன் எறிந்த மேகச் சக்கிரத்தை அறுத்தல்
 
2161சினமொடும் உடற்றி, நீடு கையில் இடிச்
  சினை முகில் பறித்து நேமி என எறிந்து,
இனமொடும் எதிர்த்து கூளி வெரு உற
  இடியொடு சுழற்றி வீச, வடுவனே,
மனமொடு பழுத்த தீயை உமிழ்வன
  வடிய கணை, மைத்தன் ஏவி எழுதினன்,
கனமொடும் எரித்த ஏறு துகள் எழ,
  கடல் திரை சுருட்டி ஓடி மெலியவே.
35
   
வடுவன் சூலம் எறிய மைந்தன் அவன் முன் குதித்து விழுதல்
 
2162புடவியை அனைத்தும் வேரோடு அசைவன,
  புதவு அழல் கொளுத்து சூலம் இரு கையில்
தடவி இறுகக் கடாவி, உழுது அன
  சடை வடுவன், இட்ட காலை, எதிர்வன
நடவிய வயத்த தேரும், வெறி இனம்
  நகுவ, அழல் பற்றி நீற, முகில் புழை
இட விரையின் மைத்தன் மீதில் எழ, இடி
  என முனர் குதித்து வீழ உறுமினான்.
36
   
மைந்தன், வடுவனை தேரோடு வானில் எறிந்து வீழ்த்துதல்
 
2163உறுமி உரும் ஒத்த வீரன், வடுவன் உந்து
  உயரும் இரதத்தை வாரி, முகில் அறர்
துறு மிசை சுழற்றி வீசு விசையொடு
  துறுவி அழல் பற்றி வேக எறி தர,
தெறும் இடி இனத்து வேக இன முகில்,
  திசை திசை அனைத்தும் வேக, இரு விழி
இறும் எரி அழற்றி வேக, எரி மழை
  என விழும், சினத்த சீய வதனனே.
37
   
இருவரும் இதாயுத்த்தால் பொருதல்
 
2164அழல மத கரி,அழல வய பரி,
  அழல உருளொடு திகிரிகள்
அழல வரி சிலை, அழல முனி கணை,
  அழல வடி அயில், அழல வாள்,
அழல இரு விழி, அழல மற மனம்,
  அழல இரு செவி, அழல வாய்,
அழல அடையலும், அழலும் இருவரும்
  அழலும் இரு கதையொடு பொர.
38
   
 
2165திரிவர்ர; உகளுவர்ர; அணுகி அகலுவர்;
  திமிர இரு புயம் உறுமுவர்ர;
பிரிவர்ர, மிடைகுவர்ர; புரள வெருளுவர்ர;
  புரள உருளுவர்ர; குருதிகள்
சொரிவர்ர; உளைகுவர் சுழலும் கதையொடு
  சுசியின் வெருளுவர்ர; தொனி எழ
முரிவர்; எரிகுவர்; முனிய அதிர்குவர்;
  முனையில் எதிர் இலர் முனைவரே.
39
   
மாயப் போரில் சில காட்சிகள்
 
2166உயர மத கரி சுழல எறிகுவர்ர;
  உழுவை உருவொடும் உகளுவர்;
பெயர அவர் கவர் வயிர நெடு வரை
  பிளவ உரம் உழுது எறிகுவர்,
அயர இரிகுவர்; குருதி மலி அன
  அலையுள் முழுகுவர்; சினம் மலி
துயர முகமொடு, தசையை உணஉண,
  உதிரம் உமிழுவர் சொரியவே.
40
   
 
2167முறை இல் ஒலியொடு, முரசு முருடொடு
  முழவு கடமொடும் ஒலி எழும்,
பறையின் ஒலியொடும், இரத உருளொடு,
  பரிகள் கரியொடும் ஒலி எழ,
கறையின் ஒலியொடும், உவணி அயிலொடு,
  கதைகள் சினலயொடு, சிலை பொழி
உறையின் ஒலியொடும், முகிலின் ஒலியொடும்
  உவரி ஒலி மெலிவன எனா.
41
   
 
2168பிழையின் வழி வழி துயரின் மலியன
  பெரு வில் வழி வழி கணை; அதன்
புழையின் வழி வழி குருதி மலியன
  பொறையின் வழி வழி புனல் என;
மழையின் வழி வழி இடியின் மலியன
  படையின் வழி வழி எரி; மனத்து
உழையின் வழி வழி வெகுளி, மலியன
  உரையின் வழி வழி இணை இலா.
42
   
பேய்கள் வருந்தி மெலிதல்
 
2169இனைய அடையலும், நரக வெறி இனம்,
  இயல இடை இடை அடல் அமர்,
அனைய வலியொடு, புரிய, வளனுடன்
  அரிய துணைவியும் வெரு உறா,
சினை அசனி, முகில் மெலிய எரி வெறி,
  சினவி எழ எழ, அரிது இடர்
புனைய உளைவன; புகைய வெருவன;
  பொருதல் வெறிது என மெலிவன.
43
   
பேய்ப் போரைக் கண்டவர்
 
2170இன்ன யாவையும், உளத்து இரங்கி, மூவரும்,
மின் இலா அமரரும், விழித்து உற்றார் அலால்,
துன்னி ஆர்கலி உடை சூழ்ந்த பார் உளோர்,
அன்ன யாவையும் ஒருங்கு அறிந்து இல் ஆயினார்.
44
   
போயின் பேர் பற்றி சூசை இரங்கிக் கூறுதல்
 
2171பொன் வளர் வயிர நல் பொருப்பின் போன்று, உளம்
மின் வளர் உணர்வினால் விளங்கும் மாதவன்,
கொன் வளர் வஞ்சகக் குணுங்கின் மாயை கண்டு,
இன் வளர் இரக்கம் மிக்கு, எண்ணி ஓதினான்.
45
   
 
2172“ஒழுங்கிய மருப்பினை ஒலுக்கி, எந்தையான்
மழுங்கிய வயத்த பேய், வஞ்சம் மாறு இலா,
புழுங்கிய கடை யுகம் பொருவப், பார் எலாம்
விழுங்கியது என, முனை விளைத்த ஈடு இதோ?
46
   
 
2173“மின் முதல் முகிலொடு விசும்பு யாவையும்,
பொன் முதல் மணி கிளர் புணரி யாவையும்,
கல் முதல் ஈங்கு எலாம் கனன்று சுட்டு எனா,
புல் முதல் சிதைந்தது ஓர் பொருள் இங்கு ஆயதோ?
47
   
 
2174“விண்ணின் மேல் வைத்த நன்று இழந்த வெம் பழி,
மண்ணின் மேல் வைத்த மன் உயிரின் வைத்த பேய்,
கண்ணின் மேல் வைத்த மாசு என்னக் காட்டிய
எண்ணின் மேல் வைத்த உட்கு இயற்றும் மாயமே.
48
   
 
2175“மாற்று அரும் வஞ்சக மாய வித்தையால்,
ஆற்று அரும் வெருவுடன் அகம் கலங்கவே,
போற்று அரும் பழி வெறி புரை புகுத்தலால்,
தேற்று அரும் அழிவு உறீஇச் சிதையும் பார் எலாம்.
49
   
 
2176“இத்திறத்தினால் அன்றோ, இருள் விரும்பிய
மைத் திறத்து அடல் கொளும் மண்ணை, கங்குலில்
பொய் திறத்து உகுத்த தீக் கனவைப் பூத்து, அவர்
மெய்த் திறத்து உணர்வு அற விளைக்கும் தீமையே?
50
   
 
2177“ஆசை செய் சேயர்க் கொன்று அலக்கண் செய்குவேன்;
மாசை செய் நலம் அற மிடி வகுக்குவேன்,
பூசை செய்து எனை வணங்கு இலாத போது‘ எனா,
ஓசை செய் உவரி போல் உரைக்கும் பேய்களே.
51
   
 
2178“ஒலித்தலால் எவன் செயும் உவரி? பேய் இனம்,
கலித்தலால் எவன் செயும், கடவுட் சார்ந்த கால்?
சலித்தலால் எவன் செயும்? பிணித்த தன்மையின்
வலித்த நாய், கடிக்குமோ, மருவு இலாமையே.
52
   
 
2179“பிணிப்பு அருங் குணத்தொடு, பிணி பெயர்த்து, அறக்
குணிப்பு அரு நலம் தரும் கொள்கை பேசும் ஆல்,
துணிப்பு அருந் தம் துயர் துடைக்கல் ஆற்று இலா,
தணிப்பு அரு நரகு அழல் தழலத் தாழ்ந்த பேய்.
53
   
 
2180“சுட்டு, இடை நரகு உழி புதைத்த சோகு, வான்
நட்டு இடை தளர்ந்தனர்க்கு உறுதி நல்கலே,
நெட்டு இடை நெறிகளில் உதவி நேடினர்க்கு,
அட்டு இடை கரவர் வந்து அமைதல் போலுமே.
54
   
 
2181“வெம்பிய வஞ்சனை விளங்கு இலாமையால்,
பம்பிய புரை புனைந்து, ஏய்த்த பார் உளோர்,
நம்பிய வெறியொடு நரகில் வீழ்வர்“ என்று,
அம்பிய கொடியினோன் அழுது இரங்கினான்.
55
   
திருக்குமாரன், சூசைக்குப் பேய்களை வெல்லும் வரம் அளித்தல்
சூசை பேய்களை ஒடுக்கிய முறை
 
2182நல் திறத்து, நரர்க்கும் இனைந்த பின்,
செல் திறத்து ஒலி சீறிய பேய் கெட,
வில் திறத்து வியன் தவம் ஏந்தி, அம்-
பின் திறத்தில் அறத் தொடை ஏற்றினான்.
56
   
 
2183கடி நடுக்கிய, கள் அவிழ் கான் அலர்க்
கொடி நடுக்கிய கோடு இல மா தவன்,
படி நடுக்கிய வெம் பழிப் பேய் எலாம்
அடி நடுக்கிய ஆண்மையின் நோக்கினான்.
57
   
 
2184நோக்கினான், கழுது ஆண்மையை நூறினான்;
தாக்கினான், அற வெஞ்சரப் பல் தொடை
போக்கினான், கடி போக்கிய வேல் எலாம்
நீக்கினான், நிமிர் வச்சிர நெஞ்சினான்.
58
   
 
2185மேவி வான் தொழும் தன் தவ வில்லினால்
தூவினால் எனக், கெட்டு அதிர் சோகு எலாம்
ஓவி நாண, ஒருங்கி இரு கால் கொடு
பூவில் தேய்த்தது போல ஒடுக்கினான்.
59
   
சூசை திருமகனை நோக்கிக் கூறுதல்
 
2186“புரிந்த நின் தயைப் பொற்பொடு, அஞ்சேன், ஐயா!
விரிந்த மன் உயிர் வேண்டி, இப் பேய் எலாம்
எரிந்த தீப் புதைத்து ஓட்டு“ என, இன் ஒளி
சொரிந்த பூ முகத் தோன்றலை வேண்டினான்.
60
   
திருமகன் பேசத் தொடங்குதல்
 
2187மீன் முகத்து உணர் காட்சியின் மேன்மையான்,
ஊன் முகத்தில் ஓர் ஆண்டு உரையாத பின்,
கான் முகத்து அலர் வாய் கனி விண்டு, உரை,
வான் முகத்து அமுது ஊறி, வழங்கினான்.
61
   
எந்தை அப்பா எனல்
 
2188மின்னித் தாரகை நோக்கு என, வெண் மலர்
துன்னித் தாங்கிய சூசையை நோக்கினான்;
கன்னித் தாய் கமலக் கரத்து ஆசனத்து
உன்னி, தான், இனிது, “எந்தை“ என்று ஓதினான்.
62
   
சூசை வியந்து திருமகனை போற்றுதல்
 
2189சிந்தை நீடு எழச் சீர்த்து, இவை கேட்டனன்:
“முந்தை நீ; உள மூ உலகிற்கு எலாம்
தந்தை நீ; தனிக் கன்னி தனயன் நீ;
‘எந்தை!‘நீ எனை, என்றனையோ!“ என்றான்.
63
   
பேய்கள் நரகில் வீழ்தல்
 
2190அருளின் மா கடல் மூழ்க அருந் தவன்,
மருளின் மா கடல் மூழ்கிய மண்ணைகள்,
வெருவின் மா கடல் மூழ்கி, விழுந்து, எரி
இருளின் மா கடல், மூழ்கின, என்னவே.
64
   
 
2191கெலிப் படக் கனி எந்தை கிளைத்த சொல்
கலிப் படக், கலங்கிக் கடி ஈட்டமே,
வலிப் படக் கனம் கால் இடி மான ஆர்ப்பு
ஒலிப் படக், கனல் ஊடு உற வீழ்ந்ததே.
65
   
வானவர் மலர் பாரி பொழிதல்
 
2192எல்லின் மாரியும், ஏந்திய வான் புகழ்ச்
சொல்லின் மாரியும், தூய் மலர் மாரியும்,
செல்லின் மாரியின், வானவர் சிந்தலின்,
வில்லின் மாரியின் நாதன் விளம்பினான்:
66
   
திருக்குமாரன் சூசைக்கு வரம் அளித்தல்
 
2193“எந்தை, நீ தவத்து ஏந்திய வில்லினால்,
நிந்தையாய் வெறி வென்றனை; நின் பெயர்ச்
சிந்தையால் அவை யாவரும் சீக்கவும்,
வந்தையாய், வரமே வகுத்தேன்“ என்றான்.
67
   
 
2194.என்ற நாதனை ஏத்தி, வியப்பு உளத்து
ஒன்ற நீடு துதிப்ப, உணர்வு எலாம்
குன்ற, ஆசியைக் கூறினன் கூளியை
வென்ற மா தவத்து ஆண்மையின் வீரனே.
68
   
முன்னுரை
 
2195செல் முகத்து இடிச் சினத்து ஒலி முழங்கிய வெம் போர்
கொன் முகத்து எரிக் குணுங்கு இனம் இயற்றிய காலை,
பொன் முகத்து ஒளிப் புரிசை மாநகரில் ஆயவை நாம்
சொல் முகத்து இவண் தொடையொடு தொடருதும் உரைத்தே.
1
   
எரோதன் மூவரசர் மொழிகளை ஆராய்தல்
 
2196புராதனம் தரும் புகழ் மறை
  யூதர் நாடு அளித்துத்
தராதரம் தரும் தடத்த தோள்
  உரும் உமிழ் தனுக் கை
நிரோருகம் தரும் நீண்ட தார்
  கரிக் கொடி தாங்கும்
எரோதன் என்று அருஞ் சடத்த
  கோன் எருசலேம் ஆண்டான்.
2
   
 
2197ஆள ஆசையால் அல்லவைக்கு அஞ்சிலான்; தன் கோல்
நீள அசையால் நீதிக்கோல் கோட்டிய கயத்தவன்;
காள ஆசையால் கலங்கிய வெருளினான்; உணர்வும்
மாள, ஆசையால் மயங்கிய சிந்தையின் கொடியான்.
3
   
 
2198மன்னு நீர் உயர் மன்னவர்
  மூவர் வந்து உரைப்ப,
மின்னு நீர் நவ மீன்
  உயர் உதித்தலும், வேந்தன்
என்னும் நீர் உலகு இனிது அளித்து
  ஆள்பவன் பிறந்து ஆங்கு
உன்னு நீர் கடந்து உதித்தலும்
  கேட்டு உளம் மருண்டான்.
4
   
 
2199மருள் கொள் நெஞ்சினான் மறை வலோர்
  யாரையும் விளித்துத்,
“தெருள் கொள் நன் மறைச் செப்பம்
  ஆய்ந்து, உலகு அளித்து ஆள்வோன்
இருள் கொள் இந் நிலத்து எவ்விடத்து
  உதிக்குவன்?“ என்னா,
வெருள் கொள் நெஞ்சு அற, “வெத்திலத்து
  உதிக்குவன்“ என்றார்.
5
   
 
2200என்ற வாசகம் எறி வை வேல் என உளம் போழ்ந்து,
குன்ற மார்பிடைக் கொண்ட வெங் கொடுமையை மறைத்து,
சென்ற மூவரைச் செப்பி, “நீர் வணங்கி மீண்டு, அங்கண்
நின்ற யாவையும் நீர் சொலப் போவல் யான்“ என்றான்.
6
   
 
2201மீன் முகத்து அவர் மேவி
  மீண்டிலர் எனக் கண்டும்,
கான் முகத்து அலர் முல்லையார்
  கண்டதும், கடந்த
நூல் முகத்து உயர் சீமையோன்
  உரைத்ததும் நுதலிக்
கோன் முகத்து அஞர் குவிந்து எழ
  வெருவினைக் கொண்டான்.
7