உத்தானப் படலம்
 
 
3476மெலிவன உயிர் உணும் அயர்வு அஞர் சிலுகு இடர்
  பாசறை யாவும் ஒழிந்து மறைய,
நலிவன உடல் உணும் மிடி பசி மடி பிணி
  ஆகுலம் யாவும் அகன்று பெயர,
மலிவன பகையொடு பழி மலி வெறி இன
  மாறு இல மாயை மடிந்து சிதைய,
பொலிவன பல நலம் மருகுவ, ஒளியொடு
  பூதல மீதில் எழுந்தது இறையே.
80
   
இரட்சகர் திருக்கூட்டமுடன் மரியன்னைக்குக் காட்சியளித்தல்
 
3477வானகம் முதல் எவ் உலகும் வாழ்ந்து உவப்ப,
மீன் நக உரு உற்று எழுந்த மெய்த் திறலோன்,
தேன் அக மொழியாள் தன்னைச் சீர்த்து உயிர்த்தாள்,
தான் நக, மற்று சவையோடு ஆங்கு எழுந்தான்.
81
   
 
3478ஒளி முகத்து இரு மா சுடரோடு ஒத்து, இருவர்
தெளி முகத்து இலங்க எடுத்த சீர் உடலை,
களி முகத்து அவளே கண்டாள்; கண்டு, அடி வீழ்ந்து,
அளி முகத்து இறைஞ்சி, அயின்ற நோய் ஒழிந்தாள்.
82
   
மரியன்னை இன்பக் கடலுள் மூழ்குதல்
 
3479உணங்கிய முல்லைக்கு உயிர் பெய் நீர்த் துளி போல்
அணங்கு இயல் உள்ளம் மலர, அக் காட்சி
இணங்கிய தன்மைத்து, இழி தேன் இணர் ஏற்றி
வணங்கிய இன்பம்கடல் நீர் வளம் ஆற்றா.
83
   
 
3480மாய் அளவு அரிய மகனைக் கண்டு அயின்ற
நோய் அளவு இன்பம் நுகர, மற்ற நல்லோர்
மீ அளவு உடுப் போல் விளங்கக் கண்டு உவக்கும்
தாய், அளவு இல வாழ் தகையின், புகழ் அறைந்தாள்.
84
   
 
3481ஆயதும் அறைந்து, அவ் அவையைக் காட்டிய தன்
சேயது மொழி கேட்டு, “இது நீ செத்து அடைந்த
நோயது பயன்!“ என்று இரங்கி நொந்து அழுத
தாய், அது நமக்கு ஆம் என, நோய் தாங்கினள் ஆல்.
85
   
இரட்சகர் சில நாள் இவ்வுலகில் மோட்ச பேரின்பம்
நிலவச் செய்தல்
 
3482இந் நிலைப் பலவும் பல நாள் இயைந்து, அன்னார்,
தம் நிலை செல்லாத்தரித்த கால், இவண் வீட்டு
அந் நிலை சென்றது அன்ன, ஆனந்தம்
செந் நிலை வடிவம் காட்டிச் செலுத்துவரே.
86
   
நாதன,் சூசை முனிவருடன் விண்ணுலகம் ஏகும் செய்தியை
மரியன்னையிடம் கூறுதல்
 
3483அன்பு அருந்திய ஆண்டகை மாய்தலால்
துன்பு அருந்திய யாவரும், தொய்யலின்
பின்பு அருந்திய காட்சியின் பெற்றியால்,
இன்பு அருந்தலில் எல்லை ஒன்று இல்லை ஆல்.
1
   
 
3484நீத நல் நெறி தந்து, அருள் நேமியான்
நாதன், இன்னணம் நாற்பது நாள் இருந்து,
ஆதவன் திரி அந்தர மேல் செல
காதல் உண்டு, கருத்தும் உண்டான் அரோ.
2
   
 
3485விதி எழுந்த மெய் வேத நல் நாதனும்,
துதி எழுந்த கைத்தாதை அம் சூசையும்,
மதி எழுந்த பதத்தினள் வாழ்த்தினர்,
“நிதி எழுந்த விண் நேடுதும் நாம்“என்றார்.
3
   
வருந்திய மரியன்னைக்கு ஆசியளித்து மலையை அடைதல்
 
3486புண் குடைந்த வேல் போல் உரை கேட்டு, “நான்
விண் குடைந்த இடிப்பட, மின்னின், நீர்
கண் குடைந்த வில் காட்டிப்போதீர் எனா
பண் குடைந்த சொலாள், பணிந்து ஏங்கினாள்.
4
   
 
3487“எல்லின் வேந்து அகன்று ஆம் இருள் ஈர்த்து அவிர்
அல்லின் வேந்து என, நாம் அகன்று ஆகுலம்
புல்லின், யாவரும் போற்றுதி நீ“ எனாச்
சொல்லின் ஆசி தந்து, ஓர் வரை துன்னினார்.
5
   
 
3488களி அழுந்திய காட்சி உளோர்களும்
ஒளி அழுந்திய உம்பரும் முன்பு உறத்,
தெளி அழுந்திய சீடரும் பின்வர,
வெளி அழுந்திய வெற்பினைத் துன்னினார்.
6
   
இயேசு சீடர்க்கு ஆசி தரல்
 
3489விரை கிடந்த வெற்பு ஏறி, விண் வேந்தனும்
கரை கிடந்த கடல் கடந்த இன்பு உற,
நிரை கிடந்தனர், ஆகுலம் நீத்து அற,
சுரை கிடந்த சொல் ஆசி தந்தான் அரோ.
7
   
சூசையை நோக்கி கூறுதல்
 
3490மேவி மீ எழு முன், விரைத் தாமரை
வாவி மீ எழும் வான் கதிர் போன்று, அருள்
தூவி மீ எழச்சூசையை நோக்கி, உள்
ஆவி மீ எழும் அன்பொடு, கூறினான்:
8
   
 
3491“புண்ணைக் காக்கும் மருந்தினைப் போன்று உளோய்,
கண்ணைக் காக்கும் இமைக்கு இணை காதலால்,
மண்ணைக் காக்கும் எனை மண்ணிடை காத்தலால்,
விண்ணைக் காக்கு அரசு ஆக விளங்குவாய்.
9
   
 
3492“ஒழிவு அருந் தவ தாவிதற்கு ஓதிய
மொழி வரும்படி, முற்று அவன் கோத்திர
வழி வரும் சுதன் நீ, மணும் வானமும்,
அழிவு அருந் தகவோடு, அரசு ஆளுவாய்.
10
   
 
3493“நான் அளித்த மனுக் குலம் நன்று உற,
கோன் அளித்த முடிக் குடம் சூடி நீ,
வான் அளித்த வளம் கொடு வாழ, வில்
மீன் அளித்த விசும்பு உயர்வாய் என்றான்.
11
   
திருக்குமாரனும் சூசையும் பரலோகத்திற்கு எழுந்தருளல்
 
3494பொருளில் வீங்கிய தாள் வளன் போற்றலும்,
தெருளில் வீங்கிய சேனைகள் வாழ்த்தலும்,
அருளில் வீங்கிய ஆண்டகை பால், வளன்,
மருளில் வீங்கிய வையம் விட்டு ஏறினான்.
12
   
 
3495வெளி பொதிர்ந்த கணங்களுள் வேய்ந்த நல்
ஒளி பொதிர்ந்த இரு சுடர் ஒத்து, இவர்,
களி பொதிர்ந்த கணங்களின் நாப்பணே
நளி பொதிர்ந்த நயம் கொடு ஏறினார்.
13
   
 
3496வான் வழங்கு தளங்கள் வகுப்பு எலாம்,
மீன் வழங்கும் உருக் கொடு வேய்ந்து உறீஇ,
தேன் வழங்கு தெரியல் வழங்கிட,
கோன் வழங்கு வளம் கொடு ஏறினார்.
14
   
கதிரவன் தோற்றம்
 
3497வில் எழுந்தது காண விரும்பி, அன்று
எல் எழுந்து, இணை தோற்று என, நாணலின்
மெல் எழுந்து சிவந்தது. மிக்கு அவர்,
சொல் எழுந்த சுடர்க் கொடு ஏறினார்.
15
   
இருவரும் மேகத்தினூடே எழுந்து போதல்
 
3498மிகை விரிந்த வியப்பு, இமையாது, இவண்
தொகை விரிந்து நின்றார் துயர் தீர்ப்ப, வான்
முகை விரிந்த மணி முகில் மூடி, அவ்
வகை விரிந்த வில் வாகனத்து ஏறினார்.
16
   
நல்லோர்க்கு வான் வீட்டு வாயிலைத் திறத்தல்
 
3499விண் திக்கு, இரிந்த உரும் அன்ன
  வீழ்ந்த வஞ்சப் பேய் வினையால்,
உண்ட, இக்கு ஒழுகும் கனி ஒன்றால்
  உள தீது அடைத்த வான் வாயில்
மண்டிக் குமுறும் அலைகள் தவழ்
  வையம் அளித்த அருள் பயத்தால்
எண் திக்கு உறை மன் உயிர்க்கு எல்லாம்
  எந்தை அன்றோ திறந்திட்டான்.
17
   
 
3500அடைத்த வாயில் திறந்தானை
  அணுகி, அணுகும் அணங்கு எல்லாம்
உடைத்த வண்ணத்து, உளத்து எஞ்சா,
  ஒத்த நெறி நின்றார் அல்லால்,
படைத்தது இவறிப், படைத்தானைப்
  பகைப்பார் இங்கண் புகார் என்னா,
துடைத்த நோய்க்கு ஓர் மருந்து அன்னான்,
  தொடர் நல் குழுச் சூழ்வரப் புக்கான்.
18