முடிச்சூட்டு படலம்
 
 
3501புக்க அனந்த நர தேவன்,
  பொலி வானவர் தம் நிலை கடந்தே,
தொக்க சிந்தை நிலை கடந்த
  சுகத்தில் பிதா வீற்று இருந்து ஆளும்
மிக்க சுடர் சூழ் ஆசனத்தில்
  வீழ்ந்தான்; தொழுதான், உளம் தூண்டி,
மக்கள் தம் மேல் அருத்தி எழீஇ,
  வரையா அன்பான், உரை கொண்டான்:
19
   
 
3502“மன்னா இன்ப வினை ஆற்றா
  மக்கட்கு இரங்கி மகன் ஆனேன்.
அன்னார் வாழ உயிர் நொந்தேன்,
  அயர்ந்தேன், நிந்தை பட்டு இறந்தேன்
முன் நாள் பிதா நீய் பணித்தது எலாம்
  முடித்தேன், பகைப் பேய் வென்றேன், வென்று,
இன்னார்க் கொணர்ந்து, ஈங்கு ஆண்டு உவப்ப,
  இதோ மீட்டு, இன்று உன் அடி சேர்த்தேன்.
20
   
 
3503“நமர் என்று இரங்கி, அன்பு மிக,
  நான் மீட்டு அளித்த நரர் குலமே
நுமர் என்று, இரங்கி அருள் நோக்காய்,
  நூறாப் பழிப் பேய் அக் குலத்தார்
தமர் என்று ஆள்வது இனி நன்றோ?
  தயைக்கு என் இனத்திற்கு இரங்கிப், பேய்
அமர் என்று, அவர் வென்று, ஈங்கு எம்மோடு
  ஆள அருள் செய்க“ எனத் தொழுதான்.
21
   
பிதாவின் அன்பும் சுதனின் வேண்டுதலும்
 
3504களி கூர்ந்து, ஆர்வத்து அரு மகனைக்
  கனியத் தழுவி, கண் கடந்த
ஒளி கூர்ந்து உயர் தன் ஆசனத்தின்
  உகப்பில் அருத்தியோடு இருத்தி,
அளி கூர்ந்து, “ஏதோ, என் மகனே,
  அமைவ கேள்“ என்று, அவன் கூற,
நளி கூர்ந்து, ஆற்றா அருள் ஏந்தும்
  நளின நெஞ்சான், மீட்டு உரைத்தான்:
22
   
 
3505“நின் பால் இருந்து, உன் பணியால் நான்
  நிலப் பால் இறங்கும் வேலை, இவன்
தன் பால் இருந்து, நீ, தந்த
  தேன் துளிக்கும் பூங் கொடியின்
மின் பால் இருந்து, நிழல் ஒதுங்க,
  விரும்பி அரிதாய் எனை வளர்த்தான்,
உன் பால் இருந்து தொழும் வளன் தான்
  உலகில் நிகரா உளத் தூயோன்.
23
   
 
3506“பூத்தான் அரிய வரம் எல்லாம்;
  புவனத்து என் தாய் உற்ற துயர்
நீத்தான்; பிற நாடு அடைந்து, அடும் கோல்
  நிருபன் வஞ்சத்து என் உயிரைக்
காத்தான், பிரியா அன்பு இயக்கி,
  கலுழ்ந்தான், கனி நான் சுவை அருந்த
ஏத்தான், உளைந்தான், வேர்த்து உழைத்தான்,
  எட்டாக் கருணைக் கரை கண்டான்.
24
   
 
3507“உன்னோடு ஒன்றாய் மூ உலகம்
  ஒருங்கு நிழற்றும் வயத்து எனக்கும்,
என்னோடு, என்னைக் கன்னி வழாது
  ஈன்றாட்கும் தான் நிழல் செய்த,
மின் ஓடிய வான் மணி ஒப்ப
  விரி பூங் கொடியோன் தகு மாட்சி,
நின்னோடு இனி யான் என் உரைப்ப,
  நினைவும் கடந்த காட்சி நலோய்?
25
   
 
3508“இன்னான் இன்ன தகவு உளனாய்,
  என்னோடு உடல் கொண்டு ஈங்கு அடைந்தான்,
பல் நாள் தொடர்ந்த பழி அற, நான்
  பாய் செங் குருதி தந்து இறப்ப,
என்னால் ஆய பயன் காட்ட,
  இவனே மக்கட்கு அரசன் எனா,
மின் ஆர் மணி ஆர் முடி சூட்டல்
  வேண்டும், ஐயா!“ எனப் பணிந்தான்.
26
   
பிதாவாகிய இறைவன் சூசை முனிவரைத் தழுவுதல்
 
3509ஆய்ந்தே இமிழின் சொன்னவை கேட்டு
  ஐயன், வான் மேல் பேர் உவகை
தோய்ந்தே, எவரும் மகிழ்ந்து, ஓயாத்
  துதிகள் துவைப்ப, “ நன்று!“ என்றான்,
வாய்ந்தே மகிழ்ந்து தொழா நின்ற
  வளனை நோக்கி, ஆசி நலம்
ஈய்ந்தே, மீளா அன்பு அருளால்,
  “ எழுக“ என்று இறுகத் தழுவினனே.
27
   
இறைவன் சூசை முனிவர்க்கு ஏழு மணிகள் புறத்தில்
ஒளிவிடும் முடியைச் சூட்டுதல்
 
3510வான் புறத்து இலகும் செஞ் சுடர் காண
  வந்து என வனைந்த வாள் மகுடம்,
தான் புறத்து ஒரு வேறு ஏழ் சுடர் பூண்ட
  தன்மை ஏழ் மணி ஒளி இயக்கம்,
மீன் புறத்து அகற்றும் செல்வ வீட்டு உவகை
  மிக அளவு இன்றி, அம் முடியைக்,
கான் புறத்து அலர் கோல் சூசை தன் தலைமேல்
  களிப்பு எழ, முதலவன், புனைந்தான்.
28
   
திருக்குமரன் முடிச்சூட்டுதல்
 
3511ஆர்த்தன தேவ மகிழ்வு ஒலி அரவம்;
  ஆர்த்தன தொடர் துதித் துழனி;
ஆர்த்தன தேவ வீணை வாய் அமலை;
  ஆர்த்தன இனிய பா இசைகள்;
ஆர்த்தன பொலிந்த சோபன வகுளி,
  ஆர்த்தன அதிசய குமுதம்;
ஆர்த்தன உவப்பில், ஆர் ஒளி மகுடம்
  அருந்தவற்கு அருட் சுதன், புனைந்தான்.
29
   
தேவ நேயன் முடிச்சூட்டுதல்
 
3512ஆர்த்தன பல்லாண்டு; ஆர்ந்தன உவகை;
  ஆறு அறுநூற்று மூ ஐம்பூச் ,
சீர்த்தன மதுவின் த்தன, சூசை
  சேர்த்த கைக் கொடியில் அம் மலரால்
கோர்த்தன ஆறாறு அணிகளே கடவுட்
  குளுஞ் சுடர்ப் பதத்து அவை, வானோர்,
நீர்த்தன இன்பத்து அணிய, மா தவற்கே,
  நேயனும், ஒளி முடி புனைந்தான்.
30
   
சூசையை ஆசனத் திருத்தி இறைவனாம் பிதா பேசுதல்
 
3513புனைந்த மா மகுடம் பொழி ஒளி பெருகிப்,
  பொற் பதம் பாய்ந்து உறப் போற்றிச்,
சுனைந்த பா உவமை நாண, மிக்கு உவகை
  சுவைத்து, அவன் துதித்து முன் நிற்ப
இனைந்த மா மகனது இருக்கையின் அருகே,
  இலங்கு மீன் மணியொடு நிரைத்து
வனைந்த ஆசனத்தில் பொலிந்து உற, இறையோன்,
  வளன் தனை இருத்தியே உரைத்தான்
31
   
 
3514தாவிது என்பவற்கே சாற்றிய வண்ணம்,
  தவிர்கு இலாது அரசு உனக்கு அளித்தேன்.
தூவி மின் பிலிற்றும் சுடிகை சூழ் பயிற்றித்
  துளங்கும் ஏழ் மணிகளோ, உன்னை
மேவி நின்றவர்க்கு வேண்டுவ வெறுப்ப
  விரும்பி நீ அளிக்கும் ஏழ் வரங்கள்
ஏவி இன்று உனக்குத் தந்தது காட்ட.
  இனி இவற்று உரிமை கேள்“ என்றான்:
32
   
முதல் மணி - கற்பு நலம் தரும் வரம்
 
3515“களங்கம் உற்றது கண்டு இந்து தேய்த்து ஒளிறும்
  கழலினாள் கன்னிமை காத்து,
துளங்கம் முற்றிய செஞ் சுடரின், உன் கற்பும்,
  துகள் அறக் காத்தனை என்னா,
உளம் கண் உற்று அழற்றும் விரக நோய் அறக், கற்பும்
  உரி நலம் தர வரம் தந்தே,
விளங்க முன் பதித்த முதல் மணி தந்தேன்,
  வெண் கொடி ஒத்த உளத்தூ யோய்!
33
   
இரண்டாம் மணி - வினை விலக்கும்வரம்
 
3516“போய், வினை கொணரும் பொறிகள் ஐந்து அடக்கி,
  பொலம் தவ வேலியைக் கோலி,
தூய் வினை உளத்தில் துகள் புகாக் காத்துச்,
  சுடர் விளக்கு ஆயினாய் என்னா
தீய் வினை வரு முன் காக்கவும், வந்த
  தீது நேர்ந்து ஒழிக்கவும் உணர்த்தி,
காய் வினை விலக்கும் வரத்தை இவ் இரண்டாங்
  கதிர் மணி காட்டும், மா தவனே!
34
   
மூன்றாம் வரம் - தேவதாயின் அன்பை அருளும் வரம்
 
3517“பருதியே உடுத்துப், பனிச் சுடர் இயக்கிப்,
  பரமனைப் பயந்த தாய் தன்னைக்
கருதியே கருத்துக் கடந்த அன்பு அருளால்
  காத்து அரிது ஓம்பினாய் என்னா,
சுருதியே வடிவாய்த் தோன்றிய தாயின்
  தொடர்பு அருள் உதவி சார்பு எய்தத்
தருதியே என மூன்றாம் மணி தந்தேன்,
  தயைக் கடல் கடந்து அருள் மிக்கோய்!
35
   
 
3518கனம் பழுத்து இரிந்த உரும் என விண்ணின்
  கடிந்த பேய், கொண்ட தொல் பகையால்
மனம் பழுத்து இயற்றும் வஞ்சனை நாண,
  வழு இலா வென்றனை என்னா
சினம் பழுத்து எதிர்த்த குணுங்கு இனம் ஓடிச், ெ
  சல்ல நின் நாம வேற்கு அஞ்சத்
தனம் பழுத்து எரி நாலாம் மணி, வரமே
  தந்தது ஆம், வெற்றி அம் கொடியோய்!
36
   
ஐந்தாம் மணி - பிள்ளை வரம்
 
3519“தே அருள் திளைத்த நிரப்பினால், கன்னி
  சினையை உற்று ஈனினும், ஈன்ற
மேவு அருள் மகவை மகன் என இனிதாய்
  விருப்பொடு வளர்த்தனை என்னா,
நோவு அருள் புதல்வர் இலாக் குறை தீர்த்து,
  நுண் தகைச் சந்ததி அளிப்ப,
கா அருள் கமழ் பூங் கொடி நலோய், ஐந்தாம்
  கடி ஒளி மணி வரம் தந்தேன்.
37
   
ஆறாம் மணி - நோய் தீர்க்கும் வரம்
 
3520“விருந்தினைக் கண்டார் முகத்து, அளவு இன்றி
  வினை செய மிடைந்த நோய் அருந்தி,
திருந்தினை பொறையின் உள் முறை எல்லாம்,
  திரு மணிக் குன்று ஒத்தாய் என்னா
மருந்தினைப் போன்று வருந்தினார் வருத்தம்
  அறுத்து, உளம் குளிர்ப்ப நல் வரமே
அருந்தினை என, ஆறாம் மணி அளித்தேன்,
  அரும் பொறை அருள் அரசு உடையோய்!
38
   
ஏழாம் மணி - இறப்போர்க்குத் துணையாம் வரம்
 
3521“தாயொடு புதல்வன் இரு புடைத் தாங்கி,
  தகும் துயர் ஆற்றும் அருள் இயக்க,
தீயொடு தீந்த தளிர் உடல் நீக்கிச்,
  சென்று தூது உரைத்தனை என்னா,
நோயொடு மெலிந்த உடல் கெடும் எல்வை,
  நொந்தவர்க்கு உதவ நீ, ஒளியின்
வாயொடு மலர்ந்த கடை மணி வரமே
  வகுத்தது ஆம், வான் தொழும்மரபோய்.
39
   
பிதா ஆசியளித்தல்
 
3522“தேன் பயில் மதுரத்து இனிதின் நீ வளர்த்த
  திரு மகன் அளித்த மன் உயிர்கட்கு
ஊன் பயில் உடலால் உறும் கசடு அகற்றி,
  உரிய நல் அற நெறி நிறுத்தி,
மீன் பயில் வான் வீட்டு அவ் உயிர் சேர்த்தி,
  விழைந்து அரசு ஆள, இன்று உனக்கே
நான் பயில் வரங்கள் வகுத்தி“ என்று, ஆசி
  நல்கினான், பொது அற முதலோன்.
40
   
தேவசுதன் வாழ்த்தும் வரமும்
 
3523“கரை கொன்ற அருள் கொண்டு, அவ் உலகு உறை கால்,
  களிப்பில் உன் உரை மறுக்கிலன் நான்
திரை கொன்ற நயம் கொள் இவ் உலகிலும், நீ
  செப்பும்உரை மறுக்கு இலாது, என்றும்
நிரை கொன்ற நசை கொள் மன் உயிர்க்கு இரங்கி,
  நீ எனைக் கேட்பவை அளிப்பேன்,
புரை கொன்ற வளம் கொள் நல்லோய்!“ எனத்தேவ
  புதல்வனும், ஆசியைத் தந்தான்.
41
   
தேவநேயன் அருளிய வரம்
 
3524“மீன் நிலம் முடியாள் திருமண நாளில்,
  வினை அறு நேயமாம் நானே,
தேன் நிலம் துணர் கொய் இக் கொடி தந்தேன்;
  சேர்ந்து உனை அண்டின யாரும்,
கான் நிலம் கொடியின் நீழலில் உய்யக்
  கருணை செய்வேன் எனத், தேவ
வான் நிலம் காதல் ஆம் பிரான், ஆசி
  வகுத்து அருள் வெள்ளமும் பொழிந்தான்.
42
   
சூசை முனிவர் திரியோக கடவுளை வணங்குதல்
 
3525நல்கிய ஆசி நயத்து உயர் சூசை,
  நறுமையின் பிரிவு இலாது ஒன்றாய்,
மல்கிய செல்வத்து உரிய ஓர் கடவுள்
  வழங்கும் ஆள் மூன்றையும் வணங்கி,
“பில்கிய நயனில் உம் வயம் காட்டப்
  பிழைத்த இத் தொழும்பனை நோக்கி,
அல்கிய புன்மை வளம் படச் செய்தற்கு,
  அருச்சனை உமக்கு!“ எனப் பணிந்தான்.
43
   
சூசை முனிவர் உலகின் அருள் அரசர் (கவிக் கூற்று)
 
3526அன்னான் அன்று அடை அன்ன வரங்களினால்,
உன்னா வண்ணம் அருந் தயை ஓம்பி, வழாப்
பொன்னால் நாறு உலகில் புக உய்த்த உயிர்,
என்னால் ஈங்கு அளவு ஏற்றுவது ஏலுவதோ?
44
   
 
3527தாயே ஒக்க, அருந் தயை, ஒக்கும்; அறா
நோயே ஒக்க, மருந்தினை ஒக்கும்; நுழை
பேயே ஒக்க, அரண் பிணைவு ஒக்கும்; உயிர்
மீயே ஒக்க, விடாத் துணை ஒக்கும்; இவன்.
45
   
 
3528தாக்கி வெம் பகை தந்த சவத்தை இவன்
நோக்கி, நண் பகல் முன் இருள் நூறுவ போல்
போக்கி, அம் புவி பூத்தன புன்கண் எலாம்
நீக்கி, இன்ப நிழல் கொடியால் பரிவான்.
46
   
 
3529நொந்தால், ஆதரவு ஆம்; உறு நோய் ஒழியா
வந்தால், நாள் ஒளிவு அன்று மருங்கில் உறீஇ,
செந் தாரால் நிழல் செய்து, வழித் துணையாய்க்
கந்தாம்வான் கதியின் கரை ஏற்றுவன் ஆல்.
47
   
 
3530பின்றாத ஓர் நசையால் பெயராது அணுகி,
குன்றாத ஓர் அருள் கொள் இவன் நம்பினருள்,
பொன்றாத ஓர் துயர் பூத்து, ஒழியா மெலிவின்
நின்றார், ஓர் ஒருவர் நிலம்மீது உளரோ?
48
   
 
3531எண் என்று ஆயின திக்கு இவை யாவும் உற,
விண் நின்ற ஆர் ஒளி விஞ்சிய மா முடி சூழ்,
மண் நின்று ஆள் பல மன்னவர் மன்னவனே
கண் நின்று ஆயின காதை உரைத்திடுவாம்.
49
   
உரோமை அரசன் லெயுபோல் மாட்சிமை
 
3532அயப் போது அலர் வேலி அணிந்து, அழியா
நயப்பு ஓகை ரோமையின் நாடு இனிது ஆள்,
வியப்போடு வணங்கு இகல் வெம் படை வெல்,
லெயு போல்து எனும் நாம வெள் வேல் இயலான்.
50
   
 
3533கோடாது தனித் தகு கோன்மையினான்,
வாடாது அழல் தாமரை மாலையினான்,
வீடாத நிழற் குடை வேலியினான்,
ஓடா அடல் தானை உடைக் கடலான்.
51
   
 
3534தவர்க்கும் கடிது ஆம் தகவு உற்று, இகல்கின்
தவர்க்கும் கனி நன்று இடும் அன்பு இயலான்;
உவர்க்கும் கடல் சூழ் உலகிற்கு உளர்ஆம்
எவர்க்கும் தயை ஏந்திய தாதை இனான்.
52
   
 
3535முயலே கடந்தான் முரணால்; அருள் தாய்
இயலே கடந்தான், இயை அன்பு இயலால்;
புயலே கடந்தான், புரி வான் கொடையால்;
மயலே கடந்தான், மலி காட்சியினால்.
53
   
 
3536தன் தாள் இகலோர் தொழுது ஆம் தகை மேல்,
ஒன்றாய் உலகு ஆள் உயர் வான் இறையோன்
முன் தான் தொழுது, ஏவல் முடித்தலின் ஆம்
குன்றா நிறை வேட்டு, உயர் கொள்கையினான்.
54
   
சூசை முனிவர் மீது பக்தி செலுத்திப் பயனடைதல்
 
3537அனையான் அவியாத அருத்தி எழீஇ,
நனை ஆர் கொடியோனை நயந்து அணுகி,
வனையா வழிபாடு வனைந்து தொழ,
புனையா உயர் பாடு புனைந்தனன் ஆல்.
55
   
 
3538தண் அம் கொடி தந்த நிழற்கு அணுகும்
வண்ணம் கொடு, வாய்ந்த வளம் கொடு, சூழ்
தெண் அம் கடல் சேர்ந்த செகத்து, ஒருவன்
எண்ணம் தவிர் மாட்சியை ஏந்தினன் ஆல்.
56
   
 
3539உற்றான் நிறை சீர் வளம்; உற்ற பகை
இற்றான், உயிர் ஈன்உற எய்திய நோய்
அற்றான், நெடிது ஆவிய சந்ததியைப்
பெற்றான், விரி பூ நிழல் பெற்றமையால்.
57
   
பகைவர் நஞ்சுணவை வைத்தமையை அரசற்குக் காட்சியில் கூறல்
 
3540நெஞ்சில் தகவுற்ற, இழிவு ஆர் நிகரார்
எஞ்சித்தகு போர் வெல ஈடு இலதால்,
வஞ்சித்து வெல்வாம் என வந்து, ஒரு நாள்
நஞ்சு இட்டு உயிர் ஈறு இட நாடினர் ஆல்.
58
   
 
3541ஈண்டு, ஆங்கு உதவத் தனி எய்தி, வளன்,
வேண்டார் வினை மாயை விளம்பி, அதைத்
தீண்டாது என, எண் திசை காத்து வழாது
ஆண்டான் உயிர், அன்பொடு காத்தனன் ஆல்.
59
   
அரசன் சூசை முனிவர்க்குக் கைம்மாறு செயக்கருதுதல்
 
3542மை மாறிய அன்பு வலித்த வளன்
மெய் மாறு உயிர் காத்த வினைக்கு இனி ஓர்
கைமாறு இடு தன்மை கணித்தனன் ஆல்,
பொய் மாறிய மாண்பு உயர் பூபதியே.
60
   
வேந்தர்க்கு ஓலைபோக்குதலும் அவற் வருகையும்
 
3543ஒல்லென்று உலகு எங்கணும் ஓலைகள் விட்டு,
எல் என்று ஒளி மேவிய தன் குடைக் கீழ்
நல் என்று உறை நாடர் விளித்தனன் ஆல்,
செல் என்று முழங்கிய திண் முரசான்.
61
   
 
3544கோலைப் பொருவக் கடுகு ஒற்றர் கொணர்
ஓலைக் கதை கேட்டு, உணரத் தொழுதே,
வேலைப் படை வேந்தர் எலாரும் எழீஇ,
காலைக் கடியக் கடிது எய்தினர் ஆல்.
62
   
 
3545மஞ்சு அஞ்சுக வன்னி விழிக் களிறும்,
மஞ்சு அஞ்சுக மேல் வளர் தேரும், நிலா
மஞ்சு அஞ்சுக வாள் அபயரும் உறீஇ,
அஞ்சம் சுகமாய் வதி நாடு அதிரும்.
63
   
 
3546கூடு ஆர் முகில் ஆர்த்தன கோடை என,
கூடார் தொழு கோ முரசின் குரலே,
கூடு ஆர் பறவைக் குலம் அஞ்சி எழ,
கூடு ஆர் படையால் புவி கூசினதே.
64
   
 
3547புண் கீறின வேலினர் சூழ் பொதுள,
மண் கீறின, வல் உருள் தேர்கள் திரள்;
விண் கீறின, வெண் கொடியும் குடையும்;
கண் கீறின, பல் படை கால் ஒளியே.
65
   
 
3548நீர் ஏந்திய நித்தில நீண் குடையும்,
சீர் ஏந்திய செய்ப் பவளக் குடையும்,
நேர் ஏந்திய நீல மணிக் குடையும்,
ஏர் ஏந்திய நல் இருள் ஏந்தினவே.
66
   
 
3549தண் தாரின் நறாச் சரி தேன் துளியும்,
விண் தாரையின் வேழம் உகும் கடமும்
பண் தாவிய பாய் வய மாக் குரமே
கொண்டு ஆய துகள் குவை நீத்தனவே.
67
   
 
3550மலை நேர் இரதம், வளி நேர் பரி, வான்
கலை நேர் குடை, வான் கனம் நேர் கரி, நீர்
அலை நேர் அபயர் அடி நேர் தொழுதே,
நிலை நேர் வலி நேர் அரசு அண்டினர் ஆல்.
68
   
 
3551பரி பூட்டிய தேர் பல ஏறு அரசர்,
கரி பூட்டிய தேர் கடிது ஓட்டும்அரசர்,
எரி பூட்டிய தேர் மிசை எய்தும்அரசர்,
அரி பூட்டிய தேர் அரசு அண்டினர் ஆல்.
69
   
வந்து கூடிய அரசர்கள் இராயன்னை வணங்குதல்
 
3552பொங்கு ஆர்கலி மேல் பொலி வெஞ் சுடர் போல்,
அங்கு ஆர் அரசர் கடல் மீது அவிர,
சிங்காசன மேல் ஒரு சிங்கம் என,
மங்கா ஒளி மன்னன், எழுந்தனனே.
70
   
 
3553விண் திக்கில் விளங்கிய வெஞ் சுடரை
அண்டி, கிளர் மீன் அடி ஏத்துவ போல்,
மண் திக்கில் எலா முடி மன்னவர் வந்து,
எண் திக்கில் இராயனை ஏத்தினரே.
71
   
 
3554அன்னார் அவை, ஆரணர் ஆர் அவை, மெய்
மன்னார் அவை, மந்திரிமார் அவை, மற்று
ஒன்னார் தொழும் ஓங்கு அயில் ஓங்கு அவை, சூழ்
பொன் ஆர் அடி பொற்பு உற நண்ணினரே.
72
   
 
3555வயிர் செய் ஒலி மற்று ஒலி மாறிய பின்,
செயிர் செய் பகை தீர்த்த சிறந்த முகத்து,
அயிர் செய் இனிது ஓர் உரை ஆய்ந்து அறைவான்,
உயிர் செய் அமிர்து ஏந்திய மார்பு உரியோன்:
73
   
அரசன் வெயுபோல்து, ‘நிலையாமை‘பற்றி அவையோரிடம் கூறுதல்
 
3556“இன்றே உள்ளோர் அன்று அவர் மாள்வார்;
  இது அல்லால்
பொன்றார் உண்டோ பூதலம் எங்கும்?
  புகழ் விஞ்சக்,
குன்றா மின்னும் காசு ஒளி கொள் மா
  முடி கொண்டே
நின்றார் உள்ளும், பொன்று உயிர் நீங்காத
  எவன் உண்டோ?
74
   
 
3557“ஒன்னார் அஞ்சும் வண் சிலை அஞ்சா, உரி நல் நூல்
சொன்னார் சொல்லும் பா உரை அஞ்சா, சுடர் மொய்ப்ப
மின் ஆர் மன்னர் கோல் ஒளி அஞ்சா, விரியாப் பூ
அன்னார் சேடு அஞ்சா, விளிவு, என்னா அறியார் யார்?
75
   
 
3558“மேலார் கீழார் யாவரும்
  ஒன்றாய் விளிவாரேல்,
கோலால் ஓங்கு ஆங்காரம் உளத்தே
  கொள்ளுவான் ஏன்?
சேல் ஆர் முந்நீர் சூழ் புவி ஆண்டே,
  செயிர் மொய்க்கும்
பால் ஆய்ந்து, என் கோல் நீக்குதல் நீங்காப்
  பயன் ஆம் ஆல்.
76
   
சூசை முனிவர்க்கு முடிசூட்ட எண்ணியதன் கருத்தைக்கூறுதல்
 
3559“வீடாச் செல்வன், நோய் அற என்றும் விளியாதான்,
கோடாக் கோலன், தண் அருள் மாறாக் குடை வல்லான்,
வாடாத் தண் பூ வாகை அணங்கான், வளர் அன்பான்,
ஈடு ஆடாத் தன்மைத்து எமை, அன்னான், இனி ஆள்வான்.
77
   
 
3560“அன்னான் என்னான் அன்ன அறைந்தால்,
  அருள் ஆர்ந்து,
மின் ஆர் விண்ணும் மண்ணும் ஒருங்கே,
  வினை தீர்ப்ப,
தன்னால் தான் ஆண்டு, ஓம்பி நிழற்றும்
  தயையாற்கே,
மன்னா நிற்கும் தண் நிழல் செய்த வளன்
  அன்றோ?
78
   
 
3561“நஞ்சு இட்டு எஞ்சா வஞ்சனை நல்கும் வினை நீக்கி,
எஞ்சித் துஞ்சாது என் உயிர் காத்தான் இவன் என்னா,
மஞ்சிற்கு எஞ்சாத ஆர் அருள் பெய்த வளம் ஓர்ந்து, என்
நெஞ்சில், துஞ்சா மின் முடி சூட்டல், நினைவு உற்றேன்.
79
   
 
3562“பின்றாது ஓம்பி, நோய் பசி பேராப்
  பகை பொன்றப்
பொன்றா அன்பால் ஆண்டு எனை உம்மை,
  பொலி இன்பம்
குன்றா வீட்டு உய்ப்பான், மலர் குன்றாக்
  கொடிக் கோமான்“
என்றான், நின்றார் உள் உருகப்பேர்
  இயல் வல்லான்.
80
   
வேந்தன் மகிழ்ச்சியும் வேண்டுதலும்
 
3563உள்ளிய துறவின் சொன்ன
  உரை இதோ என்ன அஞ்சி,
“தெள்ளிய வான்மேல் ஆள்வோன்
  சென்று எமை ஆளல் நன்றேல்,
விள்ளிய கொடியோன் ஏவும்
  விடைப் பணி நீ தந்து, எம்மை
அள்ளிய குறை தீர்த்து ஆள்வது
  அமைதி“ என்று உவப்பின் நேர்ந்தார்.
81
   
அரசன், சூசை முனிவர்க்கு முடிசூட்டு விழாபற்றி முரசறையுமாறு வீரகுன்றனிடம் கூறுதல்
 
3564கோ முரசு அரசன், வீர குன்றனை முகத்து நோக்கி,
மா முரசு ஒழிப்பச் சொல்லும்: வளன் முடி பத்தாம் நாளில்
பூ முரசு ஆர்ப்பச் சூடப், பொற்பு உற நகரம் பூண,
வே முரசு அறைவி“ என்றான் விரைந்து அவன் தொழுது போனான்.
82
   
வீரகுன்றன் முரசரைத்தல்
 
3565வார் பிணி முரசும் யானை வளர் எருத்து ஏற்றிப்பைம்பொன்
தார் பிணி மார்பன் வான் மேல் தவழ் கொடி மனை மூதூரில்,
கார் பிணி வரை மேல் மின்னிக் கதித்து இடி முழங்கினாற் போல்,
பார் பிணி ஒழிய, ஓதை படர் முரசு அறைவித்தானே!
83
   
 
3566“கேண்மினே; கேண்மின்; இன்பம் கிளைத்த சொல் கனியக்
  கேண்மின்!
வாண்மினே; பசி நோய் வஞ்சம் மறப் பகை ஒழிய
  வாண்மின்,
பூண்மினே; வியல் வான் வேந்தன்
  புவி மிசை முடியைச் சூடல்
பேண்மினே! நகரம் எங்கும்
  பெரு நகை அணிமின் ஈண்டே!
84
   
 
3567“வான் அரசு ஆகில், இப் பார் வான் உலகு ஆகப் பூண்மின்!
பான் அரசு ஆகில், கங்குல் பட்டு ஒளி பரவும் அன்றோ?
கோன் நர தேவன் ஏவல் கொண்ட மா வரத்தோன் இங்கண்
தான் நரபதியாய், ஒவ்வாத் தயை தளிர்த்து, எம்மை ஆள்வான்.
85
   
 
3568“தே உலகு உரிய வண்ணம், திருவிழா ஒன்பான் நாளின்
பூ உலகு இயற்றி, பின் நாள், பூங் கொடிச் செல்வக் கோமான்,
யா உலகு அனைத்தும் வாழ, யாணர் மா மகுடம் சூடல்
மேவு உலகு எழுக!“ என்ன, வியல் முரசு அதிர்ப்பச் சொன்னான்.
86
   
மக்களின் மகிழ்ச்சி
 
3569தார் புனை முரசின் பேழ் வாய் தழங்கு குரல் கேட்ட காலை,
கார் புனை மனை மூது ஊரில், கதத்த காற்று அதிர்ந்து வீச
நீர் புனை புணரி பொங்கி நெருங்கு அலை மயங்கிற்று என்ன,
நார் புனை உவப்பில், யாரும் நடந்து இரிந்து எதிர்ந்து ஓயாரே.
87
   
தெருக்கள் தோறும் அலங்காரம் - நவ நாள் கொண்டாட்டம்
 
3570கன்னி அம் குமரி வாழை
  கமுகொடு மயங்க நாட்டிச்,
சென்னி அம் தளிரும் பன்னம் சேர்ந்த தீம்
  கனியும் பூவும்
பின்னி அங்கு இடங்கள் தோறும்
  பெருக மொய்த்து எவணும் நாற,
மின்னி அந் நகர், வண்டு ஆர்க்கும் விரி
  மலர்க் காவிற்று ஆமே.
88
   
 
3571நெட்டு ஒளி மாடத்து உச்சி நேர் இடை விடாது நீலப்
பட்டு ஒளிப் பந்தர் பாய்த்தி, பத்தியின் பயிற்றிக் கோர்த்த
கட்டு ஒளி மணிகள் நாறக், கதிர்ப் பகற்கு அஞ்சா மின்மீன்
விட்டு ஒளி பூத்த வான் போல் வியென்ன மா நகரம் அன்றே.
89
   
 
3572செம் பொடி, மணியின் தூசி, செம் பொனின் தூசி, சுண்ணத்து
அம் பொடி சிந்துரத்தோடு, அயிர் மணல் முத்தம் மீதின்
பைம் பொடி அலரும் சிந்த, படர்ந்த வான் மிரண்டு மீன்கள்
தம் பொடி மிதித்தல் ஆகும், தகும் ஒளித் தெருவின் தோற்றம்.
90
   
 
3573தெருத்தொறும் ஒழுங்கின் பாய்ந்த
  திரு ஒளிப் பளிங்குத் திண்ணைப்
பருத்தொறும் பசும் பொற் பாவை
  பவள நீண் குறட்டில் ஏற்றி,
உரு தொறும் இரவில் வில் வாய்
  ஒளி மணித் தீபம் மின்ன,
கருத்து உறும் எல்லைக்கு ஏலாக்
  கவின் நகர் கேழ்த்தது அன்றே.
91
   
 
3574நகும் மணிப் பாவையாக,
  நங்கையர், மாலை தாமம்
தகு மணி நிரைத்து வாய்த்த
  சாளரத்து ஒசிந்து நோக்க,
தொகு மணிப் பறைகள் ஆர்ப்பும்
  சுட்ட அகில் புகையும் சொல்ல,
மிகு மணி விழாவைக் காண
  விண்ணவர் வந்தது ஒத்தார்.
92
   
 
3575இச் செவி மதர்க் கண் கையால் ஈறு இல முகந்து மாந்த,
மெய்ச் செவி இனிய யாழில் விளை இசை மதுவை மேய்ந்து,
கைச் செவி வளை வில் வீச, களித்த மின் ஆடிப் பாடி
எச் செவி மிக்கது என்பது ஈடு இலா வியந்து நிற்பார்.
93
   
பத்தாம் நாள் - பளிங்கு மண்டப ப் பொலிவு
 
3576பண் நிற வாய் வண்டு ஆர்க்கும்
  பனிப் பூ நாற, படர் மழை மின்
தெண் நிற வாய்ப் பூம் புகையுள்
  மணி வில் வீசும் தெரு எல்லாம்
விண் நிற வாய் மலர்ந்து, இவ்வாறு
  ஒன்பான் நாளும் விழா அணி கண்டு,
ஒண் நிற வாய் இரவி எழீஇ,
  விழைந்த நல் நாள் உதித்ததுவே.
94
   
 
3577பொன் பரப்பில் பவளத் தூண் நிறுத்தி, மற்று ஓர்
  புறம் படிகக்
கல் பரப்பிச் சுவர் ஏற்றி, கவிழ்ந்து வான் போல்
  கதிர் மணியின்
நல் பரப்பில் சிரம் கூட்டி, நிலைக் கண்ணாடி
  நக நிரைத்து
வில் பரப்பிக்கதிர்ப் பதி போல், வேய்ந்தது ஆங்கு
  ஓர் மண்டபமே.
95
   
 
3578கலை ஈன்ற முறை ஒல்காது, அங்கண் நாப்பண்,
  கதிர்ப் பொன்னால்
உலை ஈன்ற அரி முந் நான்கு எருத்தின் தாங்க,
  ஒளி அல்கா
மலை ஈன்ற இனமணியால் குறட்டை ஏற்றி,
  வானோர் சேர்
நிலை ஈன்ற எழில் காட்ட, நிமிர்ந்தது
  ஓர் சிங்காசனமே.
96
   
சூசை முனிவரின் உருவம்
 
3579கண் கனிய மின் தெளித்துக்,
  கதிரால் வீக்கிப், பான் உயிராய்,
மண் கனியக், கனி வானோர்
  களிப்பின் செய்த வடிவாக,
புண் கனிய மருந்து அன்னோன்
  உருவம் அங்கண் பொலிந்து, உயிர் போல்,
விண் கனிய, எண் கனியத் திரு வில்
  வீசி வேய்ந்தது அன்றே.
97
   
 
3580வான் பூத்த சுடர்க் குழவி மான
  வாய்த்த திரு மகவை,
மீன் பூத்த பூங் கொடியோடு ஏந்தி, கண்டார்,
  வினை தீர்ப்ப
கான் பூத்த வாய் மலர்ந்து, உள் குளிர்ப்ப நோக்கும்
  களி மலர்க் கண்
தான் பூத்த தயை தளிர்ப்ப, உயிராய் உள்
  தங்கினது என்பார்.
98
   
சூசையின் தி,ருவுருவின் மேல் மாலைகள்
 
3581விரி மாலைத் தாமத்து விரி பூங் கோலான் மேல், சுடரைச்
சொரி மாலை பூ மாலை, சுடர் பொன் மாலை, துகிர்க் குளும் தீ
எரி மாலை, மணி மாலை, முத்த மாலை இவை ஒருங்கு, ஓர்
உரி மாலை தலை கூட்டிக், கதிர் நீப்பு ஒப்பப் பரப்பினரே.
99
   
அரசன் சூசை முனிவரை வணங்குதல்
 
3582செல் நாக முழக் கொடு பல் பறைகள்
  ஆர்ப்பத், திரு மணி யாழ்
புன்னாக வண்டு இசையால்
  புகழ்ந்து பாட, தொழப் பொருநர்,
பொன் நாகம் அணி முகில் பூம்
  புகை சூழ் தேக்கும் மண்டபத்தில்,
மின் நாக மணி மார்பன்,
  மிளிர் தாள் ஏத்தி விரைந்து உற்றான்.
100
   
 
3583அலை வரம்பு அற்று ஓடுவ போல்,
  நகர எல்லாம் அடர்ந்து உறீஇ, வான்
நிலை வரம்பு அற்று உம்பர் மிசைப்
  பல்லாண்டு ஓதி நிற்ப, மறைக்
கலை வரம்பு அற்று உணர்ந்தோர் தம்
  கருமம் ஆற்றி, மாதவற்கே,
விலை வரம்பு அற்று அமைத்த முடி,
  வேந்தர் வேந்தன், தொழுது அணிந்தான்.
101
   
 
3584படி வணங்கு அரசன் அடி வணங்க, எழ விழ மறு
  படி வணங்க, நிமிர் கிளை வணங்க, எனை குருசிலர்
அடி வணங்க, மறையவர் வணங்க, அணி அணி படை
  யவர் வணங்க, அனையவர் வணங்க, விரை விரி புகை
முடி வணங்க, மலர் மழை வணங்க, விரி கொடி குடை
  முனர் வணங்க, முரசு ஒலி வணங்க, முழவொடும் எனை
துடி வணங்க, இசை குழல் வணங்க, மிசை அமரர்கள்
  துதி வணங்க, முடிவு இல வணங்கும் இரு உலகு எலாம்
102
   
வானக நகர்மோ!
 
3585மழை வழங்க இடி ஒலி முழங்கல் நிகர், பல பறை
  வயில் அடங்கல் ஒலி மிக முழங்க, முதலவன் மணி
மழை வழங்க, முடி அணி அணிந்த எனையவர் நிதி
  மழை வழங்க, நிறை கலை அணிந்த மறையவர் துதி
மழை வழங்க, இவர் மது மலிந்த நறவு இடு மலர்
  மழை வழங்க அவர் புழுகு இயைந்து கமழ் பல புனல்
மழை வழங்க, வெளி மிசை வழங்கு மழை மெலிவு உற,
  மணி வழங்கு நகர், மிசை வழங்கு நகர் பொருவுமே.
103
   
அழுகை ஒலி அமர்ந்த இடங்கள்
 
3586நக வளர்ந்த அறம், நக மலிந்த தவம், வினை அழ,
  நக மிடைந்த திரு, நக மிகுந்த கொடை மிடி அழ,
நக வளர்ந்த கலை, நக அனந்த மறை வெளிறு அழ,
  நக நிவந்த முயல், நக இயைந்த பொறை, பிணி அழ,
நக வளர்ந்த நயம், நக அலர்ந்த தயை, பகை அழ,
  நக முதிர்ந்த வளம், நக உயர்ந்த களி, துயர் அழ,
நக வளர்ந்த நரர், நக மகிழ்ந்து அமரர், வெறி அழ,
  நக நலங்கள், நக நகம் எழுந்தது அழ நரகு எலாம்.
104
   
மகிழ்ச்சி மிதந்த இடங்கள்
 
3587குழல் எழுந்த இமிழ் இசை இசைந்த குரல் இணை இல,
  குயில் ஒழிந்த வயிரியர் கனிந்த துதி இணை இல,
கழல் எழுந்த அணி நக நயந்த நடம் இணை இல,
  கடல் பிரண்டது என மறுகு அடர்ந்த குழு இணை இல,
அழல் எழுந்த மணி குளிர விண்ட ஒளி இணை இல,
  அருள் அலர்ந்த முகம் நக முயன்ற கொடை இணை இல,
நிழல் எழுந்த நிலை நிறை அமைந்த அமுது இணை இல,
  நிழல் எழுந்த கொடி வளன் உமிழ்ந்த வரம் இணை இல் ஆல்
105
   
 
3588முகை அணிந்த அணி மது உமிழ்ந்த மணம் அளவு இல,
  முருகு உமிழ்ந்த சுதை கலவை சிந்துரமும் அளவு இல.
புகை அணிந்த மனை தொறும் எழுந்த கொடி அள இல,
  பொறி நுகர்ந்த நயம் மனம் நுகர்ந்த நயம் அளவு இல.
நகை அணிந்த நகர் நனி குவிந்த பயன் அளவு இல,
  நவை கொணர்ந்த வினை அற ஒழிந்த குறை அளவு இல,
தகை அணிந்த அருள் மிக வளர்ந்த நலம் அளவு இல,
  தவம் அணிந்த திரு வளன் உமிழ்ந்த வரம் அளவு இல் ஆல்.
106
   
அரசன் செய்த தானம்
 
3589செல் மழைக் கொடையான் அரசர் கோன், கோவில்
  ் சென்று புக்கு, அந்தணர்க்கு ஆதி
நல் மழை நெய் பால் அமுது அளித்து, எவர்க்கும்
  நசை அற வான் பொருள் வழங்கி,
வில் மழைப் போரில் மீண்டு எதிர் பகைவர்
  வெம் படை காண்பது மறுத்தோன்,
பொன் மழைக் கொடையால், இடு எனும் சொல் இப்
  புவனியில் கேட்பது மறுத்தான்.
107
   
அரசன் தேரை எழுந்தருளச் செய்க எனல்
 
3590கை விளை கொடையின் பொழுது எலாம் இனிதின்
  கடிந்து, வெங் கதிர் கடிந்து ஒளிப்ப,
நெய் விளை சுடர் வாய்த் திரு மணித் தீபம்
  நிறைந்து ஒளி மணிகளோடு எறிப்ப
மை விளை கங்குல் நுழைந்து இருள் உலகில்
  மல்கினது அந் நகர் அறியா
மெய் விளை ஒற்றர் உரைப்ப, ஈண்டு அரசன்,
  “விரி மணித் தேர் எழ!“என்றான்.
108
   
தேரின் அமைப்பு
 
3591அடி என வெள்ளி உருளை பொன் அச்சு இட்டு,
  அவிர்ந்து எழும்மரகத மலையில்
கொடி என வெண் முத்து ஆரமே தவழ,
  குடி என மணி உருக்கிளம்ப,
கடி எனப் பசும் பொற் பரப்பில் வம்பு அலராய்க்
  கதிர் மணி பூப்ப, மேல் ஒளி வான்
முடி எனச் சிகரம் வயிரத் தூண் தாங்க,
  முனிப் பதிக்கு அமைத்தது ஓர் இரதம்.
109
   
சூசையின் திருவுருவைத் தேரில் ஏற்றுதல்
 
3592ஒற்றை ஆம் ஆழித் தேர் நலம் நாண,
  ஒற்றை நல் மாமையில் வனைந்த
கற்றை ஆர் இரதத்து உயிர் என, பகல் செய்
  கதிர் என, கடி ஒளி வடிவம்
முற்றை ஆர் மணி பொன் முத்து அலர் வழங்க,
  முரசு இனம் முகிலினும் முழங்க,
மற்றை யாவரும் சூழ் மன்னனோடு இறைஞ்ச,
  மறையவர் ஏற்றினர் தொழுதே.
110
   
தேரோட்டம்
 
3593கள் உற மலர்ந்த கடி முகை பரப்பி
  கதிர் உற விளக்கிய தெருவில்
தெள் உற விளங்கி, வான் தெரு இரவி
  திரிவதே போன்று, பேர் உவகை
உள் உறத் தொழுவார் நசை அளவொடு மெல்
  உருண்டு கண் கூசுவ பேணி
அள் உற மணிப் பூம் புகை முகில் சூழ,
  அருள் உற நடந்ததே இரதம்.
111
   
குடை, சாமரை, பொன் மணி பொடிகள், தீபங்கள் இடுதல்
 
3594புல் பதிக் குழாத்தின் நிரைத்தன பிச்சம்;
  புயல் குழாத்து எழுந்தன புகைகள்;
அல் பதித்திங்கள் பொழி கதிர்க் குப்பை
  அணிக் குழாத்து இரட்டின கவரி;
தன் பதி பெயர்ந்து வீழும் மீன் குழாத்தின்
  தனத் துகள் மணித் துகள் சிந்த,
பொன் பதிச் சுடர்கள் குழாத்து எரி மணி வாய்
  பூப்ப நண்பகல் விளக்கு அளவோ?
112
   
பாடல், ஆடல்முதலிய காட்சிகள்
 
3595பண் கவர் குரலால், பண் இசைக்கு, இசைப் பாப்
  பாடலும், ஆடலும், ஒளி மீன்
மண் கவர் சுடர் வாய் மணித் தெருத் தொறும் எல
  வாய்த்தலும், மற்று அழகு அனைத்தும்
கண் கவர் வனப்பின் கண்டனர் கணியாக்
  களிப்பொடு வியந்து கை விதிர்ப்ப,
எண் கவர் தயையின் பார்த்து எனச் சூசை
  விழித்த கண் வினை அருள் அளவோ?
113
   
சூசையின் திருவுருவைக்கண்டு மக்கள் கூறிய மகிழ்ச்சியுரை
 
3596“பணி நிலா வீசும் மணித் திரள் பூத்து
  பகல் செயும் கைக் கொடி நோக்கீர்!
அணி நிலாப் பிறையை மிதித்து எழுந்து ஒளி செய்
  அடி நல்லாட்கு அன்றியே, அன்னாள்
மணி நிலாப் பிறை போல் ஈன்ற தன் தேவ
  மகற்கும் அன்பு அருள் நிழல் செய்த
துணி நிலாக் கொடியே; இந் நிழல் கொண்டார்
  சுடுந் துயர்க்கு அஞ்சவோ?“ என்பார்.
114
   
 
3597“மறை அணி தவத்தோன் அரசு உறீஇ, தானே
  மறைக்கு அணி ஆயினான்!“ என்பார்.
“பிறை அணி பதத்தைத் தான் அணிந்து, அன்ன
  பிறைக்கு அணி ஆயினான்!“ என்பார்.
“பொறை அணி குறைகள் தீர்ப்ப இன்று அரசு ஆய்,
  பொறைக்கு அணி ஆயினான்!“ என்பார்.
“இறை அணி முடி கொண்டான், இனி நாம் இவ்
  இறைக்கு அணி ஆகுதும்!“ என்பார்.
115
   
 
3598“தான் செய்த தவம் செய் அரசு இதோ? நாமே
  தவப் பயன் பெற்றனம்!“ என்பார்.
“கான் செய்த கொடியோன் புனை முடி காணக்
  கண் பெற்ற பயன் பெற்றாம்!“ என்பார்.
“ஊன் செய்த பிறப்பில், உரு இல வானோர்க்கு
  உயர் பயன் பெற்றனை!“ என்பார்.
“வான் செய்த உவகை பெற்றனம், உன்னை
  மன்னன் ஆப் பெற்ற நாம்!“ என்பார்.
116
   
தேர் சுற்றி வந்து நிலை நிற்றல்
 
3599“பன் அரும் உவப்பொடு பலவும் கூறியே,
பொன் அருங் கொடியினோன் இருக்கை போற்றி, முன்
மன்னரும் வியப்புற வனைந்த கோயில் வாய்,
மின் அருங் கொடிஞ்சித் தேர் விளங்க நின்றதே.
117
   
கோவிலுள்சூசையின்திருவுருவை வைத்தல்
 
3600செய் முறை அனைத்தையும் திருத்தி வேதியர்
கை முறை தொழப்பறை கறங்க, யாவரும்
மெய்ம்முறைத் துதியொடு விழுந்து போற்ற, நேர்
நை முறை கோயிலுள் உருவம் நாற்றினார்.
118
   
 
3601மிடி வினை பசி பிணி வெறுப்பு நோய் பகை,
மடி வினை அடைந்த பல் அரக்கர் வண்ணமே,
அடி வினை என்று கீழ்க் கிடத்தி, அஞ்சிய
கடி வினை முகத்திடைக் காட்டி நின்றவே.
119
   
 
3602நால் மணி யானைகள், நவின்ற தீயவை
கால் மணி பட மிதித்து, உயர் தம் கை தொழ,
வால் மணி பூத்தது ஓர் மரகதக் கிரி
நீல் மணி எருத்து உயர் சுமந்து நின்றவே.
120
   
 
3603பைம்மணி மலையின் மேல் பணி செய் பாவையாய்,
வெம் மணி உருக் கொடு வேய்ந்து, எண் விண்ணவர்,
கை மணி தொழச், சிலர் சிலர் கலாநிதித்
துய் மணிக் குறட்டினைச் சுமந்து தோன்றினார்.
121
   
 
3604வையகத்து அரசர் கோன் வெற்றி வாகையாம்,
ஐ அகத்து இரு தலைப் பறவை ஆகிலம்
மொய் அகத்து அலர்ந்த பொற் சிறகின் மொய்ம்பு மேல்,
மெய் அகத் தவத்து அரசு உயர் விளங்கினான்.
122
   
 
3605மண் பட உலகு எலாம் விற்ப வாய்த்தன
விண் படம் என, மணி விளங்க, ஓர் ஐ வில்
உட் பட வளைத்த மா முடி ஓர் வானியாய்,
புள் படப் பறந்த வான் பொருநர் ஏந்தினார்.
123
   
 
3606மின் தவழ் மணி வரை வேய்ந்த ஆசனம்
முன் தவழ் திரு ஒளி முகிழ்த்த, ஐ வில் கிடை
பின் தவழ் அணிக் கொடு வியவர் பெற்றியால்,
பொன் தவழ் பாவைகள் போற்றி நின்றவே.
124
   
பாவைகளின் தன்மையும் இடமும்
 
3607சார் வயின் படாத் தயை தானம் அன்பு அருள்,
ஓர் வயிற்று உதித்து அன நால்வர் ஓர் முகத்து,
ஏர் வயின் கரத்து அணி எண் இல் ஏந்துபு,
நேர் வயின் தென்கிழக்கு இறைஞ்சி நின்றவே.
125
   
 
3608பேர் விளை காட்சியின் பிறந்த பாவைகள்,
சீர் விளை ஞானமும் நிறையும் சீலமும்,
ஏர் விளை தாயொடு, இன் அமிர்தம் ஏந்தி எல்
ஆர் விளைவு உற வட கிழக்கு அமைத்தவே.
126
   
 
3609வாட்டிய உடற்கு உயிர் வளர்ந்த மாட்சியைக்
காட்டிய முகம்நகை கதிர்ப் பொற் பாவைகள்,
ஈட்டிய கனி கொணர்ந்து எனத்தென் மேல் திசை,
பூட்டிய கற்பொடு, தவம் பொலிந்தவே.
127
   
 
3610பெண் உருக் காட்டி, உள் பெருகும் ஆண்மையில்
வண் உருக் காட்டு பொற் கவசம் மார்பு அணிந்து,
ஒண் உருத் தொடை கொணர் பொறையும் ஊக்கமும்,
விண் உருக் கொடு வடமேற்கு வேய்ந்தவே.
128
   
சூசை முனிவரின் திருவடியில் அனைவரும்விழுந்து வணங்குதல்
 
3611தண் வாய்க் கொடியோன், இன்னணம்
  தன் தவத்து ஈர் உலகின் அரசு எய்தி,
மண் வாய் இன்ன நிலை பெற்று,
  மணி வாய் முகத்து வீற்றிருக்க,
பண் வாய் மணிப் பூங் குரல் முரலப்
  பனிப் பூங் குரல் வாய் துதி துவைப்ப,
விண் வாய் மணப் பூம் புகை மொய்ப்ப,
  விள்ளா இன்பத்து அடி தொழுதார்.
129
   
வானவர் கொணர்ந்த மாலையின் தன்மையும் கூற்றும்
 
3612மன்னக் களிப்போடு இவை ஆகி,
  வான் வாழ்வான் இங்கு அரசு உற்றான்
என்னக், காண அவ் வுலகின்
  இறைவர் மொய்த்தார் என வானோர்,
மின்னக் கதிர் வாய் உருக் காட்டி,
  வியந்து யாரும் கை விதிர்ப்ப,
பொன் நற் கலத்தில் மதுப் பெய் பல்
  புனையல் கொணர்ந்து, இவ் உரை கொண்டார்:
130
   
 
3613“வான் மேல் மகுடம் புனை நாளில்,
  வர மா தவன், தன் கொடி பூத்த,
தேன் மேல் தளம்பும், ஆறு அறு நூறு
  சேர்ந்த மூ ஐந்து திரு மணிப்பூ,
நூல் மேல் முறை நையா தொடுத்த
  நுண் மண் ஆறு ஆறு அணி இது“ என
மீன் மேல் விளங்கும் வளன் பதத்தில்
  விரும்பிச் சாத்தி, மீண்டு உரைத்தார்.
131
   
 
3614“நாம்பா அணிப் பூங் கொடி பூத்த
  நறும் பூ அனைய சொல் மலரால்
காம்பா அணி வில் வீசிய தன்
  கன்னித் துணைவி களித்து இசைத்த
தேம்பா அணி இஃது; இதை அணிவார்
  திரு வீட்டு உயர்வார்! அவ் இருவர்,
சாம்பா அணித் தம் மைந்தனோடு ஆர்
  தயையின் காப்பார்!“ என மறைந்தார்.
132
   
முனிவரின் வணக்கம்
 
3615திருவாய் மணித் தேன் மலர் சேர்த்த
  தேம்பாவணியைத் தொழுது ஏந்தி,
மருவாய் மணிப் பூம்வயல் நாடு
  வடு அற்று உய்ய ஈங்கு உற்றேன்,
உருவாய் வேய்ந்த என் இறையோன்
  உடன் மூவரின் பொற் பதத்து அணிய,
வெருவு ஆய்ப் புன் சொல் அஞ்சிய பின்,
  விருப்பம் தூண்ட, தொழுது அணிந்தேன்.
133