பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்433

 

மேற்கண்டேன்; வேறினி யென்?, அண்டர்பிரான் சீரடியா ராயினார்" என்று கொண்டு "அவர் கொள்கைக் குறிவழி நிற்பேன்" என்று போந்த சரிதமும் இங்கு நினைவு கூர்தற்பாலது. "பஞ்சத்துக்கு ஆண்டி" என்ற பழமொழியும் காண்க. இங்கு அடியார் என்றது அங்கு வந்தவர்களை.

எல்லாம் - எல்லாரும். முற்றும்மை தொக்கது.

இரண்டு பொழுதும் எய்தி உண்க என - என்று கூட்டுக.

பறை நிகழ்த்தி - சொல்லாற் சாற்றி - பறைநிகழ்த்தி அதனுடன் சொல்லால் சாற்றுவித்தும். நிகழ்த்தியும் சாற்றியும் என்று உம்மைத் தொகையாகக்கொண்டு பறைநிகழ்த்தல் பொது அறிவிப்பு - சொல்லாற் சாற்றுவித்தல் சிறப்பு அறிவிப்பு என்றலுமாம்.

சோறிட்டார் - (அதனால்) வறுமை தொலைத்திட்டார் - என்று காரண காரியமாகப் பொருள்படக் கூறியபடி. வழிபடுவார்க்குக் காலநிலைமையால் வரும்வாட்டம் தீர்ப்பதற்காகக் காசு பெற்றபடியால் அவ்வாறே சோறிட்டு அதனால் வறுமையால் வரும் வாட்டம் தொலைத்திட்டார் என்க.

தொலைத்து - இட்டார் - வறுமை தொலைத்துச் சிவானந்தம் பெற இட்டார் - வைத்தார் - என்ற குறிப்பும் காண்க. சோறிட்டார் - என்பதனை வினையெச்சமாகக் கொண்டுரைப்பதுமாம்.

எய்த உண்க - என்பதும் பாடம்.

259

1525.

ஈசர் மிழலை யிறையவர்பா லிமையப் பாவை திருமுலைப்பால்
தேச முய்ய வுண்டவர்தாந் திருமா மகனா ராதலினாற்
காசு வாசி யுடன்பெற்றார்; கைத்தொண் டாகு மடிமையினாற்
வாசி யில்லாக் காசுபடி பெற்று வந்தார் வாகீசர்.

260

(இ-ள்.) இமையப்பாவை...ஆதலினால் - பார்வதி யம்மையாருடைய திருமுலைப்பாலினை உலக முய்யும் பொருட்டு உண்டருளியவர் திருமகனாராவர் ஆதலினால்;ஈசர் மிழலையிறையவர் பால் - ஈசராகிய மிழலைநாதரிடத்து; வாசியுடன் காசுபெற்றார் - வாசிபடச் செல்லும் காசு பெற்றார்; வாகீசர் - திருநாவுக்கரசர்; கைத்தொண்டாகும் அடிமையினால் - கைத் திருத்தொண்டு செய்யும் அடிமையாவர் ஆதலினால்; வாசி இல்லாக் காசுபடி பெற்றுவந்தார் - வாசிபடுதலில்லாத காசு படியாகப் பெற்றுவந்தனர்.

(வி-ரை.) ஈசர் மிழலை இறையவர்பால் பெற்றார் என்றும், பெற்றுவந்தார் - என்றும் கூட்டுக. ஈசர் - இறைவர் என இரு தன்மையாற் கூறியதும் இக்கருத்து. தந்தவர் ஒருவர் - பெற்றவர் இருவர் என்பார் வினைமுற்றுக்கள் இரண்டு வைத்தும், ஈசர் இறைவர் என்றதனை ஒருகால் கூறிவைத்தும் ஓதினார்.

திருமாமகனார் ஆதலினால் - "யாவர்க்குந் தந்தைதா யெனுமவரிப் படியளித்தார், ஆவதனா லாளுடைய பிள்ளையாராய்" (திருஞான - புரா - 69) என்பதனால் பால் ஊட்டிய முறையினால் மகன்மை முறையினராவர் என்று குறிக்கத் திருமாமகனார் என்றார்.

வாசியுடன் காசு பெற்றார் - என்க. வாசி - வட்டம். வாசியுடன் காசு பெறுதலாவது வட்டங் கொடுத்து மாற்றிப் பண்டம் தேடும் நிலையிலுள்ள காசு பெறுதல்.

கைத் தொண்டாகும் அடிமை ஆதலினால் என்க. கைத்தொண்டு - உழவாரத்திருத்தொண்டு. ஆகும் அடிமை - செய்யும் ஏவலாளர்.

மகனாராதலின் காசுவாசிபடப் பெறுதலும், தொண்டாகும் அடிமையாதலின் வாசியில்லாக் காசு பெறுதலும் என்னையோ? எனின், இறைவர் நாயன்மார்களுக்கன்றி, வழிபடுமடியார்க்களிக்கக் காசுவைத்தாராயினும், அவ்வந் நாயன்மாரை வழிபடுகின்ற அடியவர் அவ்வத் தன்மையுட்பட்டோராவர்; அந்த அடி