பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்199

 

சிறப்புப் பற்றிக் கூறுவதுடன் அக்கெடிலத்தின் தொடர்பு பற்றியே வீரட்டத்தைக் கூறுவது காண்க. -(5) திரிபுராந்தகம் - ஒருதலம். -(7) திருவேட்டி - திருவேட்டீசுரன்பேட்டை (சென்னை) என்பர். -(10) அயோகந்தி - அயவந்தி; திருச்சாத்தமங்கையின் திருக் கோயிலின் பெயர். ஆன்பட்டி - திருப்பேரூர் (கொங்கு நாடு); இப்பெயர் பழங் காலத்துக் கல்வெட்டுக்களிற் கண்டது. இப்பதிகம் பன்னிரண்டு திருப்பாட்டுக்கள் கொண்டது.

1410. (வி-ரை.) புல்லறிவிற் சமணர். "புன்மையேபுரி" (1344). "புல்லறிவோர்" (1360). அறிவின் புன்மையாவது "நல்ல நினைப்பொழிய நாள்களிலாருயிரைக், கொல்ல நினைப்பதுவும் குற்ற" மற்றும் எண்ணுவதுமாம். புல்லறிவிற் பல்லவனும் என்று கூட்டியுரைப்பதுமொன்று. பல்லவனும் - உம்மை முன்னர்ப் பொல்லாங்கு புரிந்தோனாகிய அவனும் என இழிவு சிறப்புப் பற்றியது. சோழர்களுட் பல்லவர் மரபினர் அந்நாளில் சோழநாட்டை ஆண்டனர். "உரிமையாற் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கம் செய்யும்" (குறிஞ்சி - கோயில் - 4) என்பது நம்பிகள் திருவாக்கு. இவர்கள் காடவர் எனவும் பெறுவர். மேல்வரும் பாட்டில் "காடவனும்" என்பதும் காண்க.

பழவினைப் பாசம் பறிய - சமணர் சொற்கேட்டு அரசன் அவஞ்செய்தமை அவனது பழவினைப் பாசத்தாலாகியது; இப்போது அது நீங்கும் காலம் வந்து நீங்கவே.

அல்லல் ஒழிந்து - அல்லல் - சமண் சார்பாலாகிய துன்பநிலை. பாசம் பறிந்து ஒழிந்ததாதலின்உண்மையுணர்ந்து துன்பத் தொடக்கினின்றும் நீங்கினான் என்க.

அங்கு - (பாடலிபுத்திர நகரிலிருந்து) திருவதிகையில்.

ஆண்ட அரசினைப் பணிந்து - அமணர் மொழிகேட்டு அறியாமையால் அவரிடத்து அபசாரம் செய்தமையாலே அக் குற்றத் தீர்வின் பொருட்டு அவரை வணங்கி மன்னிப்புக் கேட்டு.

வல் அமணர்தமை நீத்து - கடக்கக்கூடாத வலிய அமணரின் தொடக்கினையும் விட்டு - சமண சமயத்தையும் விட்டு.

மழவிடையோன் தாள் அடைதலாவது - சைவ சமயம் புகுந்து சிவனுக்காளாதல். சிவநெறி யடைவதற்குக் குரு வழி காட்டவேண்டியிருத்தலின் ஆண்ட வரசினைப் பணிந்து அவர் வழிப்படுத்துதலால் விடையோன் றாள் அடைந்தார் என்பதாம்.

145

1411.

வீடறியாச் சமணர்மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த
காடவனுந் திருவதிகை நகரின்கட் கண்ணுதற்குப்
பாடலிபுத் திரத்திலமண் பள்ளியொடு பாழிகளுங்
கூடவிடித் துக்கொணர்ந்து குணபரவீச் சரமெடுத்தான்.

146

(இ-ள்.) வெளிப்படை. முத்திநெறியினை அறியாத சமணர்களுடைய மொழிகள் பொய் என்று கண்டு மெய்யினை உணர்ந்த காடவ அரசனும், பாடலிபுத்திரத்தில் இருந்த சமணர் பள்ளிகளையும் பாழிகளையும் ஒருங்கே இடித்துக் கொண்டு வந்து, திருவதிகை நகரில், நுதற்கண்ணுடைய சிவபெருமானுக்குக், குணபரவீச் சரம் என்ற திருக்கோயிலைக் கட்டினான்.

(வி-ரை.) வீடறியா - முத்தி நெறியினை அறியாத. பொருளல்லாவற்றைப் பொருளென்றுணரும் மருளினையுடைய. வீடு - வீடு அடையும் நெறியைக் குறித்தது. வீடு அறியாமையின் பிறந்துழல்பவர் என்பதாம். வீடு - தமது சமயக் கொள்கைகள் வீடுகின்ற - அழிகின்ற - தன்மையை அறியாத என்ற குறிப்புமாம். வீடு -