திருவைத்தரும் பதிகம். "வீட்டுக்கு வாயிலெனுந் தொடை" என்றது காண்க. போற்றால் - போற்றுதலினால் - துதித்தலினால். உலகு ஏழின் வரும் துயரும் - உலகில் உயிர்கள் எழுவகைப்பட்ட பிறவிகளிலும் வரும் துன்பமும். ஏழு - பிறவிகளின் வகை. ஏழுலகங்களில் என்று உரைப்பதுமாம். துயரும் - உம்மை பிணி மாயையே யன்றித் துயரமும் என எச்சவும்மை. சிறப்பும்மை என்றலுமாம். ஏழின் - முற்றும்மை தொக்கது. போமாறு - தமக்கே யன்றி அத்திருப்பதிகத்தினைப் போற்றும் யாவர்க்கும் என்க. போதல் - இல்லையாதல். எதிர் - சந்நிதியில் நேரே. நின்று - விண்ணப்பம் செய்யும் முறை. புகன்றனர் - விண்ணப்பித்தனர். திருப்பதிகம் விண்ணப்பித்தல் என்பது பழங் கல்வெட்டுக்களிற் காணும் வாசகம். புகன்றனர் - புகலாக - சரணாக - அடைந்து கூறினார் என்ற குறிப்பும்பட நின்றது. ஆல் உறுதிப்பொருள் தந்து நின்றது. பிணி மாயை மாறும் நிலைக்கேற்ப யாப்பின் சந்தமும் மாறிய தெய்வக் கவிநயம் காண்க. "இனிச் சூலை மடுத்தாள்வம்" எனத் திலகவதியார் பெற்ற அருளைக் கூறிய யாப்பினையே தொடர்ந்து அக்சூலையுடன் நாயனார் இறைவர் திருமுன்பு புக்கு உணர்வு பெறும்வரை கொச்சகக் கலிப்பவாகிய ஒரே சந்தத்தில் யாக்கப்பட்டது; பின்னர் நாயனார் உணர்வுபெற்றுத் திருப்பதிகம் பாடி அந்தச் சூலையே அருட்சத்தியாக மாறப்பெற்ற நிலை அவர் அருளிய அந்தத் திருப்பதிகத்தின் சந்தத்தில் யாக்கப்பட்ட ஆசிரிய விருத்தமாகும் என்ற நுட்பமும் காண்க. பதிகத்துக்கேற்ற சந்தமாக வகுத்தல் ஆசிரியரது மரபுமாம். 221-ல் உரைத்தவை பார்க்க. 70 பதிகம் பண் - கொல்லி திருவதிகை வீரட்டானம் திருச்சிற்றம்பலம் | கூற்றா யினவா றுவிலக் ககிலீர்! கொடுமை பலசெய் தனநா னறியேன்; ஏற்றா யடிக்கே யிரவும் பகலும் பிரியா துவணங் குவனெப் பொழுதும்; தோற்றா தென்வயிற் றினகம் படியே குடரோ டுதொடக் கிழடக் கியிட வாற்றே னடியே! னதிகைக் கெடில வீரட் டானத் துறையம் மானே! |
1 | போர்த்தா யங்கொரானையினீ ருரிதோல்! புறங்கா டரங்கா நடமாடவல்லாய்! ஆர்த்தா னரக்கன் றனைமால் வரைக்கீ ழடர்த்திட் டருள்செய் தவது கருதாய்! வேர்த்தும் புரண்டும் விழுந்தும் மெழுந்தாலென்வே தனையானவிலக் கியிடாய்! ஆர்த்தார் புனல்சூ ழதிகைக் கெடில வீரட் டானத் துறையம் மானே! |
10 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு - மருளும் பிணிமாயை அறுத்திடுதலும், உலகேழின் வருந்துயரும் போமாறு வேண்டுதலும் இப்பதிகக் கருத்தாகும் என்பது ஆசிரியர் காட்டிய குறிப்பு. இது "வயிற்றினகம்படியே குடரோடு தொடக்கி முடக்கியிட", "சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்" எனவரும் திருப்பதிகப் பகுதிகளாலறியப்படும். ஆற்றேன் - அலுத்தேன் - அயர்ந்தேன் . (ஆதலின்) சூலை தவிர்த்தருளாய்! வேதனையான விலக்கியிடாய்! துன்பே கவலை பிணியென்றிவற்றை நணுகாமற்றுரந்து கரந்துமிடீர்! துணிந்தே - வயந்தே - உமக்காட் செய்து வாழலுற்றால் அஞ்சேலு மென்னீர்; தம்மை அடைந்தார் வினைதீர்ப்பதன்றோ தலையாயவர்தங் கடன்! அடியார் படுவதிதுவேயாகில் என்போலிகள் உம்மை இனித்தெளியார்; கெடிலக் கரை அதிகை வீரட்டானத் துறை அம்மானே! அன்பே அமையும் என்று பதிகக் கருத்துக்களைத் தொடர்புபடுத்துக. |