னைத் தனக்குமிகவும் அந்தரங்கனான விபீஷணாழ்வானிடங் கொடுத்து ஆராதித்துவரும்படி நியமித்து அனுப்பினான்; *அங்ஙனமே அவ்வரக்கர்பெருமான் அவ்வமரர்பெருமானை அவ்விமானத்துடனே எழுந்தருளப்பண்ணிக் கொண்டு இலங்கைநோக்கிச் செல்லும்பொழுது, இடைவழியில் உபய காவேரியின் மத்தியிலே பெருமான் புடைபெயராது விமானத்துடனே நிலை நின்றருளினான்; அவ்வாறு திருமால் திருவுள்ளமுவந்து தங்கிய இடமே ஸ்ரீரங்க மெனப்படுவது. (ஸ்ரீவைகுண்டம் திருப்பாற்கடல் சூரியமண்டலம் யோகிகளுடைய உள்ளக்கமலம் என்னும் இவையனைத்தினும் இனிய தென்று) திருமால் திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்குமிட மானதுபற்றி, "ரங்கம்" என்று அவ்விமானத்திற்குப் பெயர்; திருமால் இங்கு ரதியை (ஆசைப்பெருக்கத்தை) அடைகின்றன னென்க. ரங்கம் என்னும் வடமொழி, அகரம் மொழிமுதலாகி முன்வரப்பெற்று "அரங்கம்" என நின்றது. இங்கு "அரங்கம்" என்பது - விமானத்தின்பெயர் திருப்பதிக்குஆனதோர் ஆகுபெயர் (தானியாகுபெயர்). இனி, திருமகளார் திருநிருத்தஞ்செய்யுமிடமாயிருத்தலாலும், ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திருவுக்கு (மேன்மைக்கு)க்கூத்துப்பயிலிடமாயிருத்தலாலும், ஆற்றிடைக்குறை (நதியினிடையேயுயர்ந்த திடர்) யாதலாலும், திருவரங்க மென்னும் பெயர் வந்த தெனினுமாம். திரு என்பதற்கு - மேன்மையான என்று பொருள்கொண்டால் திருவரங்கம் என்ற தொடர் - பண்புத்தொகையும், மேன்மையையுடைய என்று பொருள்கொண்டால் இரண்டாம்வேற்றுமையுருபும்பயனும்உடன் தொக்க தொகையுமாம். அரங்கத்துமாலை யென்ற தொடர் - அரங்கத்தினது சம்பந்தமான மாலை யென்று விரித்து அரங்கத்தின் விஷயமான பிரபந்தமென்று பொருள்கொண்டு ஆறாம்வேற்றுமைத்தொகையாகவும், அரங்கத்தைப்பற்றிய மாலை யென்று விரித்துப் பொருள்கொண்டு "இரண்டாம் வேற்றுமையுருபும்பொருளுந்தொக்கதொகையாகவும் உரைக்கத்தக்கது; அரங்கத்தின்மேற் சாத்திய மாலை யென்று விரித்துப் பொருள்கொண்டு ஏழனுருபும்பயனுந்தொக்கதொகை யென்பாரும் உளர். திருவரங்கம் என்ற தொடரில், வகரவொற்று - உடம்படுமெய்; (நன் - உயிரீற்றுப்புணரியல் - 12) அரங்கத்துமாலை யென்ற தொடரில், அத்துச்சாரியையின் முதல்அகரம், மவ்வீறுஒற்றழிந்துநின்ற அகரத்தின்முன் கெட்டது. மாலா என்னும் வடமொழி, மாலை யென விகாரப்பட்டது; "ஆவீறு ஐயும்" என்றார் நன்னூலார். மலர்கள்கொண்டு தொடுக்கப்பட்ட பூமாலைபோலச் சொற்கள்கொண்டு தொடுக்கப்பட்ட பாமாலை யாகிய பிரபந்த மென்க; எனவே, மாலை யென்பது - இங்கு உவமையாகுபெயராம்.
* இராமபிரான், திருவவதாரத்தைமுடித்துக்கொண்டு தன்னடிச்சோதிக்கு எழுந்தருளும்போது, வந்து தன்னை வணங்கித் தனது பிரிவை யாற்ற மாட்டாதுநின்ற விபீஷணனுக்கு இக்ஷ்வாகுகுலதெய்வமும் தனதுதிருவாராதனமூர்த்தியு மான திருவரங்கநாதனைத் தந்தருளின னென வரலாறு கூறுதலு முண்டு. |