பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்137

ஒவ்வொரு கண்ணும்
வீங்கிப் பெருத்து
இருளில்
எங்கும் ஒரே ரணகளம்
ஒவ்வொரு கண்ணும்
ஒளிக்கீற்றுக்காய்த்
துழாவிக்கொண்டிருந்தது
கண்கள்
எங்கு பார்த்தாலும்
கண்கள்
ஒவ்வொரு கண்ணும்
தான்தான்
முதலில் ஒளிக்கீற்றுக்காய்
பிறந்ததாய்ப்
போரிடத் துவங்கிற்று
கும்மிருட்டில்
ஒவ்வொரு கண்ணும்
இன்னொரு கண்ணைத்
தேட ஆரம்பித்தது
எப்படியும்
ஒரு மந்திர ஒளிக்கீற்றில்
ஒரு கண் துலங்கும் என
அண்டப் பெருவெளியில்
எக்கண்ணுக்கும் படாமல்
மாயமாய் மறைந்தது
ஒளிக்கீற்று