2 படிக்க விருப்பந்தான்.... பள்ளியில் வகுப்பில்லை!
தமிழர்கள் இருட்டுக் கிடங்கில் குடி புக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்குமுன் அவர்கள் ஒளி தழுவிய வெளியில் நல்வாழ்வு நடத்தியவர்கள். ஆயிரத்து ஐந்நூறு யாண்டின் முற்பட்டதான இறந்தகால நிழற்படத்தை உற்று நோக்குங்கள். தமிழர்கள் எல்லோரும் படித்தவர்கள். ஆயிரத்தொருவர் புலவர். பதினாயிரத்தொருவர் பாவாணர். பல்கோடி தமிழ் மக்களும் படித்தவர்கள். அவர்கள் ஒளியுலகில் நல்வாழ்வு நடத்தி இன்புற்றுக் கிடந்தார்கள். அதன் பிற்பட்ட காலத்தில் தமிழர்களின் நிலை மாற்றமடையத் தொடங்கியது. “ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆம் செல்வம் மாறிடும் ஏறிடும்”-அன்றோ? மாறியே விட்டது. பிறக்கும்போதே ஒருவன் உயர்ந்தவனாம். ஒருவன் தாழ்ந்தவனாம். தமிழர்கள் அனைவரும் தாழ்ந்தவர்களாம். அவர்கள் உயர்ந்த சாதியார்க்கு அடிமையாயிருந்து காலந்தள்ள வேண்டுமாம். |