பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

39

30. தானை எண்திசை ; முக்கணும் முச்சுடர் ;
        தழைசடை கதிர்க்கற்றை ;
    மேனி வெங்கனல் ; ஆடிடம் உலகெலாம்
        வெந்தொழி புறங்காடு ;   
    சேனை வெங்கொலைப் பேய்க்கணம்: என்னின், அத்
        திருக்களா அமர்ந்தோனை
    வான நாடரும் பூதலத் தடியரும்
        வணங்குவ தெவ்வாறே !

    (உடையாக) உடுக்கும் ஆடை. எட்டுத்திக்குகள் ; மூன்று கண்களும் சோமசூரியாக்கினிகளாகிய மூன்று ஒளி; தழைத்த சடை சூரியனுடைய கிரணத் தொகுதி; திருமேனி கொடிய நெருப்பு ; ஆடியருளும் திருவரங்கம் உலகமெல்லாம் வெந்து ஒழியும் மயானம்; சூழ்ந்தசேனைகள் கொடிய கொலைத்தொழிலையுடைய பேய்க்கூட்டங்கள் : ஆயின், அத் திருக்களாநிழலில் எழுந்தருளினவனை, விண்ணுலகத்திலுள்ள தேவரும் நிலவுலகிலுள்ள அடியவரும் வணங்குவது எவ்வகை ! (அரிது)

    தானை-ஆடை. புறங்காடு-சுடுகாடு.

    அஷ்டதிக்குப் பாலகர், சூரியன் சந்திரன் அக்கினி முதலிய எல்லாம் நின் ஆடையினும் உறுப்பினும் அடங்குதலின் வான நாடர் நின்னை வணங்குமா றெவ்வாறென்றார். உலகம் எல்லாம் வெந்து நீறான சுடலையே நீ எக்காலத்தும் இடையறாது நடஞ்செய்திருக்குமிட மாதலாலும், கொலைத்தொழிலுடைய பேய்க் கணங்கள் என்றும் உன்னைச் சூழ்ந்திருத்தலாலும் உன்னடியராய் இவ் வுலகத்துள்ள மக்கள் உன்னை வணங்குவ தெவ்வா றென்றார்.

    எனவே, ‘தேவரும் மக்களும் முற்றஉணர்ந்து வழிபடுதற் கரிய பெருமை உடையை நீயாதலின், மக்களிற் கடைப்பட்டேனாகிய யான் உன்னை வழிபடுதலிற் பிழைத்தேனாயினும் பொறுத்தருள்’ என்றாராம்.