பக்கம் எண் :

86

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

யும் முன்னமே அனைத்தும் எய்தும்’ என்றார்.  ‘ அறையும் முன்னமே’ என்றது விரைவும் தெளிவும் பற்றி.  மெய்த்துறவு, அவனடியைப் பற்றினன்றி நிகழா தென்பதனை ‘பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்-பற்றுக பற்று விடற்கு’ என்ற நாயனார் திருவாக்கினும் காண்க.

(77)

78. எய்தி என்செயும் கருவை எம்பிரான்
        கொய்யும் நாண்மலர்க் கொன்றை வேணியான்
    செய்ய பாதம்என் சென்னி வைக்கவே
        வெய்ய கூற்றுவன் வீசு பாசமே.

    திருக்கருவையில் எழுந்தருளிய எமது பெருமானும் கொய்தற்குரிய அன்றலர்ந்த கொன்றை மலர்மாலையையணிந்த சடாமுடியை யுடையவனுமாகிய இறைவன், தனது செவந்த திருவடியை, எனது சிரத்தில் சூட்டுதலால், கொடிய இயமன் வீசாநின்ற பாசம், என்னையடைந்து யாதுசெய்யும்?  (யாதும் செய்யமாட்டாது.)

    நாள்மலர்-புதியமலர்-அன்றலர்ந்தமலர். வேணி-சடை.  கூற்றுவன்-காலத்தைக் கூறுபடுத்துபவன்-காலன்-யமன்.

    கொய்யும் நாண்மலராவது, கொய்யப்படும் தன்மையையுடைய நாண்மலர்.  கொய்யும்-செயப்படு பொருளைச் செய்தது போலக் கிளந்த வழுவமைதி.

    மலநீக்கத்தில் திருவருட்பதிவு செய்தன னென்பார் ‘செய்யபாதமென் சென்னிவைக்க’ எனவும், அத் திருவருட்பதிவு வாய்ந்த என்னிடத்து இயமனுக்கு வேலை இல்லையென்பார் ‘கூற்றுவன் பாசம் எய்தியென்செயும்’ எனவுங் கூறினார்.  இச் செய்யுள் பூட்டுவிற் பொருள் கோள் உடையது.

(78)

79. பாசம் நீக்கிமூ வகைப்ப சுக்களை
        மாசில் முத்தியாம் வனத்தில் மேய்த்திடும்
    ஈசன் மின்னைநேர் இடைச்சி காதலன்
        ஆசில் பால்வணத்(து) அண்டர் நாதனே.