பக்கம் எண் :

88

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

பொருளில் கூறுமிடத்து ‘ மூவின மேய்த்தல்’ என வருவது கொண்டறிக.

    இங்ஙனம் சொற்கள் ஒரேவகையாய் நின்று இருபொருள் பயத்தலின் இச்செய்யுள் செம்மொழிச் சிலேடை யணியுடைத்தால் காண்க.

(79)

80. அண்ட கோளமும் அகில லோகமும்
        மண்ட செந்தழல் வடிவ மானவன்
    முண்ட கக்கழற் கருவை மூர்த்தியைக்
        கண்ட கண்ணிணை களிது ளங்குமே.

    அண்டகோளகைக்கு அப்புறத்திலும், எல்லா வுலகங்களுக்கு அப்புறத்திலும், (தாவி ஒளி) நிறைந்த செவந்த தீப்பிழம்பின் வடிவா யமைந்தவனாகிய, தாமரை மலர்போன்ற திருவடிகளையுடைய, திருக்கருவையி லெழுந்தருளிய இறைவனைத் தரிசித்த இரண்டு கண்களும் ஆனந்தக் களிப்பி லழுந்தும்.

    அகிலம்-எல்லாம். மண்டு-நிறை.  முண்டகம்-தாமரை.  திருமால் பன்றி  யாகவும், பிரமன் அன்னமாகவும் சென்று திருவடியுந் திருமுடியுங் காணாது  வருந்த அவர்களுக்கிடையே சோதித்தம்பமாய் நின்றோனாதலால் செந்தழல் வடிவமானவனென்றார்.

(80)

ஒன்பதாம்பத்து.

முதற்சீரும் ஈற்றுச்சீரும் மாச்சீர்களாகவும்
இடை மூன்றும் பெரும்பாலும் விளச்சீர்களாகவும் வந்த

கலிநிலைத்துறை.

81. துளங்கு நெஞ்சமே! துயருறா
        வகையொன்று சொல்வேன்:
    வளங்கொள் செந்தமிழ்க் கருவையம்
        பெரும்பதி மருவி
    விளங்கு பானிற மேனியன்
        திருவடி தொழுதால்
    அளந்து காண்பருந் துறக்கவாழ்
        விம்மையின் அளிப்பான்.