பக்கம் எண் :

98

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

ஏதோ ஒரு காரணம்பற்றி இறைவன் பெயரைப் பேசினாலும், உள்ளன்பின்றிப் பேசப்பட்டதாகலின் இறைவன் பெயர் அவர்கள் நாவிற் பொருந்தாதென்பார், ‘நாவினில் இருந்திடா ’ எனத் தன்வினை வாய்பாட்டாற் கூறினார்.  நாயகனைக் காண்டலும் உள்ளம் நெகிழும் கற்புடை மகளிர்போல, இறைவன் வடிவாக எதைக் காணினும் உள்ளம் நெகிழும் அன்பர்க்குப் பிறவிநோய் தீர்ந்து பேரின்பம் கிட்டுதல் ஒருதலை என்பார் ‘ காண்டலும் தீர்ந்தது விடாயே ’ என்றார்.

(86)

87. விடக்கை, மும்மலக் குழிசியை,
விளிந்தபின் தீண்டாத்

    துடக்கை, நோய்க்கணம் துணங்கையிட்
        டாடுறும் அரங்கை,
    நடக்கும் சூத்திரப் பாவையை
        நான்சுமந் துழலல்
    கடக்க நீக்கியென் றாளுவை ?
        கருவைஉத் தமனே!

    திருக்கருவையில் எழுந்தருளியிருக்கும் மேலோனே!  ஊன்மயமானதும், (ஆணவம் மாயை கன்மம் என்னும்) மூன்று மலங்கள் (நிறைந்த) பாண்டம் போல் வதும்,  உயிர் நீங்கியபின் தொடவும் தகாத அசுத்தமாவதும், பிணிக்கூட்டம் (களிப்பு மிகுதியால்) துணங்கைக் கூத்தாடுவதற்கிடமான அரங்கம் போல்வதும்,   (ஒருவர் நடத்த) நடக்கும் சூத்திரப்பாவை போல்வதும் (ஆன இவ்வுடலை) நான் சுமந்து வருந்தியலைதல் ஒழிய (இதை) மாள்வித்து (என்னை நீ) என்று ஆண்டருள்வாயோ ?

    விரைவில் ஆண்டருள வேண்டும் என்பது கருத்து.

    விடக்கு-மாமிசம். குழிசி-பாண்டம்.  விளிதல்-சாதல்.  துடக்கு-அசுசி.  கணம்-கூட்டம்.  துணங்கை-ஒருவகைக் கூத்து (28-ம் செய்யுளுரை காண்க).  அரங்கு-கூத்துமேடை.