பக்கம் எண் :

60

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

யின ‘ஒழியாது மல்கு கருவேச’ என விளித்தார். அலை எழுந்தும் விழுந்தும் மாறுதல்போல  என் மனமும் காதலால் எழுந்தும் கவலையால் விழுந்துந் தடுமாறிச் சுழல்கின்றதென்பார் ‘ அலைமாறு போல மனமா லுழன்று விடவோ ’ என்றார்.

(51)

52. உருவாகி நிற்றி ; அருவாகி நிற்றி ;
        உயிரோடெ வைக்கும் உறவாய்,
    மருவாகி நிற்றி ; மலராகி நிற்றி ;
        மறையாகி நிற்றி ; மறையின்
    பொருளாகி நிற்றி ; உனையான றிந்து
புகழ்கின்ற வாறும் அறியேன் ;
    கருவாபு ரிக்குள் உறைதேவ தேவ !
        கதியேதெ னக்கு மொழியே.

கருவாபுரியில் எழுந்தருளிய திருமால் முதலிய தேவர்களுக்குத் தேவனே ! திருவுருவங்கொண்டு நிற்கின்றாய்; அரூபியாயும் நிற்கின்றாய்; சித்துப்பொருள்களோடு எப்பொருளுக்கும் உறவாய் விரவி, மலரும் வாசனையும் போல நிற்கின்றாய் ; வேதமாகி நிற்கின்றாய்; வேதத்தின் பொருளாகி நிற்கின்றாய்; நீ இவ்வாறு நிற்றலால் நான் உன்னை ஐயமறவுணர்ந்து, உன்னை வாழ்த்தும்வகையையும் அறியேன் ; (உன்னை வாழ்த்துதற்கு இயலாதேனும் எனக்கு உன்னையன்றித்) துணையேது? கூறியருளாய்.

    நிற்றி-நிற்கின்றாய். (முன்னிலை ஒருமை நிகழ்கால வினைமுற்று.  நில்-பகுதி, து-சாரியை,  இ-விகுதி. லகரம் றகரமானதும் உகரம் கெட்டதும் சந்தி.)

    உருவும் அருவுமாகவும், உலகத்தோடு முயிர்களோடும் ஒன்றியும் ஒன்றாமலும், மலரும் மணமும்போலவும், வேதமேயாகவும் வேதத்தின் பொருளாகவும்-இப்படி    இன்னது என்று துணியப் படா இயல்பினையாதலின் உன்னை அறிவதரிதாயுள்ளது. ஆதலின் ‘ அறிந்து புகழ்கின்றவாறும் அறியேன் ’ என்றார்.

(52)