பக்கம் எண் :

179

"சங்கரனை நாரணனைச் சந்ததமுந் தொழுவதுவும்
 திங்க ளிரவிமற்றைத் தெய்வந் தொழுவதும்
 கொங்குலவுஞ் சீரகத்தார் கொற்றவர்கள் தென்னிலங்கைப்
 பங்குதருங் காவிரிப்பூம் பட்டணத்தான் பசும்பையிது."

(பசும்பையெழுபது - 1)

                    கொல்லியம்பாவை

(51)



தாணு முலகிற் கடன்முர சார்ப்பத் தரந்தரமாய்ப்
பூணு முலைமட வார்சேனை கொண்டு பொருதுமலர்ப்
பாணர் முதலெவ ரானாலுங் கொல்லியம் பாவைமுல்லை
வாணகை யாலுள் ளுருக்குவ துங்கொங்கு மண்டலமே.

     (கு-ரை) எல்லோருக்கும் காமமயக்கத்தைச் செய்யும் மன்மதன்
முதலிய யாவராயினும் எதிர்வந்தால் தனது முல்லையரும்பு போன்ற
புன்முறுவலைக் காட்டி உள்ளத்தையுருகச் செய்து வருத்தும்
கொல்லப்பாவை என்னும் தெய்வம் கொல்லிமலையில் உள்ளது.

     கொல்லிப்பாவை பற்றிய செய்திகள் சங்கநூல் முதலியவற்றிற்
கூறப்படுகின்றன.

"பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்
 கருங்கட் டெய்வங் குடவரை யெழுதிய
 நல்லியற் பாவை."

                                   (குறுந்தொகை 89)

"வல்வில் லோரிக் கொல்லிக் குடவரைப்
 பார்வையின்."

                                   (குறுந்தொகை 100)

                     குறிஞ்சித்தேன்

(52)



முத்தீட்டு வாரிதி சூழுல கத்தினன் மோகமுறத்
தொத்தீட்டு தேவர்க்கு மற்றுமுள் ளோர்க்குஞ் சுவைமதுரக்
கொத்திட் டியபுதுப் பூத்தோறு முறுங்குறிஞ்சிச் செந்தேன்
வைத்திட் டியகொல்லி மாமலை யுங்கொங்கு மண்டலமே.